ஈரோடு சங்கமம் 2010 - எனது பார்வையில்...

|

சென்றவருடம் ஒவ்வொரு நிகழ்வையும் செல்பேசியில் கதிர், ஆரூரன், பழமைபேசி அண்ணா என எல்லோரிடமும் பேசி சந்தோசித்த நாம் இந்த வருடம் கலந்துகொள்ளப் போகிறோம் என எண்ணும்போதே மனதிற்குள் மெல்லிய சந்தோச உணர்வுகள் தலைத்தூக்க, எதிர்ப்பார்ப்புகள் என்னுள் எழ ஆரம்பித்தன.

ஈரோடு ஒன்றும் நமக்கு புதிதல்ல, ஆறு மாதங்கள் பார்த்த வேலை, ஜூனியரோடு பதிவர்களை சந்தித்த அனுபவம் என இருக்க கிளம்பினேன். மாலை ஐந்து மணிக்கு ‘பங்காளி’ என பாசத்தோடு பேருந்து நிலையத்திலேயே சங்கவியை சந்தித்தேன்.

அப்பாவை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துவந்திருந்தார். அவரோடு மருத்துவமனைக்கு சென்று சந்தித்து வணக்கம் சொல்லி சிற்றுண்டி முடித்து ஆட்டோவில் விழா நடக்கும் சாயம் & கெமிக்கல்ஸ் மண்டபத்திற்க்கு கிளம்பினேன். ஆட்டோ நெருங்கவதற்குள் எதிரிலேயே வரவேற்க கதிர் வந்தார். ஆட்டோவை பாதியிலேயே அனுப்பி அவருடன் மண்டபம் செல்ல, தாமோதர் அண்ணா, ஆரூரன், ஜாஃபர், பாலாசி, ராஜா என எல்லோரையும் சந்தித்தேன்.

முட்டை தோசை, கறிக்குழம்பு என அற்புதமான இரவு உணவு. உணவின் சுவையோடு பரிமாறிய அன்பும் கலந்து இருந்ததால் தேவாமிர்தம். முடித்து, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஷண்முகா லாட்ஜிற்கு சங்கவி, கா.பா, ஸ்ரீராமோடு சென்றோம். அங்கு ஏற்கனவே தங்கியிருந்த குடந்தையூர் வலைப்பூவை வைத்திருக்கும் சரவணன் தங்கியிருந்த அறையில் சங்கவியும் நானும் இணைந்து கொண்டோம்.

சரவணன் புதிதாய் வலைப்பூவுக்கு வந்த அதீத ஆர்வத்துடன் இருந்தார். நிறைய பேசினோம், நெடு நாட்கள் பழகிய உணர்வு. காலையில் கிளம்பி அம்மா மகி கிரானி அவர்களை சந்திக்க, இன்ப அதிர்ச்சி. எல்லா வலைப்பூக்களையும் படிக்கும் அவர் எனது எழுத்துக்களைப் படித்து எல்லா விவரங்களையும் தெரிந்து வைத்திருந்து வாஞ்சையாய் பேச ஆரம்பித்தார்.

மீண்டும் மண்டபம், காலை உணவு. இட்லி, தோசை தக்காளி குருமாவோடு இதுவரை கேள்விப்படாத முட்டை பூரி. ரசித்து ருசித்து சாப்பிட்டோம். விழா இனிதே ஆரம்பிக்க புகைப்படம் எடுக்க ஆயத்தமானேன். ஆரூரன் ‘பிரபா இதைப் படியுங்களேன்’ என ஒரு துண்டுச்சீட்டை நீட்ட படித்தேன். ‘சரி, இந்த தமிழ் வணக்கத்தை படித்துவிடுங்கள்’ என அன்புக்கட்டளையிட அதை படித்தலோடு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.

நிகழ்ச்சிகள் பற்றிய தெளிவான விவரங்கள் கதிரின் இடுகையில். இன்னும் சில விவரங்கள் பங்காளி சங்கவியிடமிருந்து.

அய்யா முருகன் அவர்கள் பேசும்போது குறிப்பெடுத்துக்கொண்டிருந்த பரிசல் அண்ணாவைக் கவனித்தேன். என்ன அழகாய் தொகுத்த்திருக்கிறார் என்பதை இங்கு பாருங்கள்.

நிறைய எழுதலாம். நீளம் கருதி விழாத்துளிகளாய் கீழே…

சுறுசுறுப்பான ஜாஃபர், பாலாசி, ராஜா, கணபதி ஆகியோரைப் பார்க்கும்போது நமக்கும் உற்சாகம் பற்றிக்கொள்ளும்போல் இருந்தது. தேனிக்களைக்கூட இவர்களுக்கு உதாரணம் சொல்ல இயலாது, அதற்கும் மேல்.

கண்டிப்பு, மெலிதான கடுமை, அவ்வப்போது சிரிப்பு என இருந்த கதிர். விழா நாயகர் அல்லவா, சரிவர முடிக்கவேண்டுமே என கவனத்தில் இருந்தார்.

கலகலக்க வைத்த கந்ததாமி அய்யா, எல்லா நிகழ்வுகளையும் கேமிராவால் சுட்டுக்கொண்டிருதார். இவரின் பகிர்வினை இங்கே பாருங்களேன்...

ஸ்டார் ஆஃப் த ஷோ என் இனிய ஜாக்கி அண்ணா, ’டேய் மச்சி’ என ஆரம்பித்து சொந்த உறவாய். என்ன ஒரு கைத்தட்டல் அவர் பேசும்போது… அவர் பேசினால் எல்லோரும் கவனிக்கிறார்கள் என்பதே அவரின் வெற்றி.

கனிவாய் சீனா அய்யா, அம்மா, கார்த்திகை பாண்டியன், ஸ்ரீராம். கலக்கலாய் பரிசல் அண்ணா, வெயிலான்.

புகைப்படம் எடுப்பது எப்படி என எனக்கு சொல்லித்தந்த கார்த்தி, சுரேஷ். நிறைய கற்றுக்கொண்டேன் பாஸ். விரைவில் உங்கள் ஜோதியில் ஐக்கியமாகிறேன்.

இயல்பாய், ஆளுமையோடு ஆரூரன், பாசத்தோடு தாமோதர் அண்ணா.

ஒரு ருபாய் சாப்பாடு வெங்கடேசன் அண்ணா கடையில் பரோட்டா இரவு உணவு, இரவு கதிரின் வீட்டில் தங்கி காலையில் டிஃபன் முடித்து இந்த இடுகையினை இட்டு மனம் நிறைய சந்தோஷங்களை மட்டும் நிரப்பிகொண்டு கிளம்பும் நான் உண்மையில் பாக்கியசாலி.

இறுதியாய் எல்லோருக்கும் எனது நன்றியைச் சொல்லி, இதையெல்லாம் ஏதுவாய் செய்த வலையுலகத்திற்கு தலைவணங்கி, இது போன்ற நிகழ்வுகளில் எப்போதும் கலந்துகொள்ள இறைவன் அருள் புரியவேண்டும் என இறைஞ்சி பயணிக்கிறேன்...

(எனது மற்றும் கதிரின் கேமிராவினால் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இங்கு பாருங்களேன்...)

கதையின் கதை...

|

இளங்கலை கணிப்பான் பொறியியல் முடித்த சமயத்தில் எழுதவேண்டுமென ஆர்வம் மிக அதிகமாய் இருந்தது. சட்டைப் பையில் பேனாவும் மடித்து வைக்கப்பட்ட ஒரு தாளும் எப்போதும் இருக்கும். ஏதேனும் தோன்றினால் உடன் குறிப்பெடுத்து வைக்கவேண்டுமல்லவா?

நிறைய யோசித்து ‘பிளாக்மெயில்’ (முந்தைய இடுகை) என்று பல தாள்களை வீணாக்கி, மாற்றங்கள் செய்து ஒரு வழியாய் எனது முதல் சிறுகதையை எழுதி முடித்தேன். கையெழுத்துப் பிரதியான அதை பலரிடம் கொடுத்து படித்து கருத்து சொல்லச் சொல்ல வந்த விமர்சனங்களைப் பாருங்களேன்...

‘இதெல்லாம் ஒரு கதையா?’ ஒரு சீனியர்.

‘படிக்க எல்லாம் பொறுமை இல்ல, அப்படியே படிச்சி காட்டு மச்சி’. ஆர்வமாய் படித்துக்காட்ட, ’நீ பிறவிக் கலைஞன் - டா, இனிமே வாழ்க்கையிலயே கதை அது இதுன்னு படிச்சி காட்டாத’ அறைத்தோழன்.

பக்கத்தில் இருந்த இன்னொருவன் ஆரம்பித்தவுடன் தூங்கி, முடிக்கும்போது முழித்து வாயோர எச்சிலைத் துடைத்து ‘கதை சூப்பர்-டா’

‘இது சமூக நாவல் மாதிரி இருக்கு, க்ரைம், ப்ளாக்மெயில்-னு ட்ரை பண்ணுடா’ பால்ய நண்பன் மணி.

‘கவிதை சூப்பரா இருக்கு’(பாவி மக்கா படிச்சிப் பாக்காமயே வழக்கமா தர்ற கவிதைன்னு டெம்ப்ளேட் விமர்சனமா?)-வெங்கடேசன்.

படித்து பாருங்கள் எனச் சொல்லி கொடுத்து, அடுத்த நாள் எப்படி இருக்கிறது எனக் கேட்டதற்கு, ’அற்புதமா இருக்கு. எழுத்தாளரா வரவேண்டியன் நீ... அப்படியே மறக்காம கரெண்ட் பில் கட்டிடு’ கடைக்கார மாமா...

‘இந்த ஆர்வத்த படிப்பில காட்டியிருக்கனும்’ மாமா.

’நல்லாருக்கு, எங்கிட்ட இருக்கட்டும், நீ தொலைச்சிடுவே’ வருங்கால டைரக்டாக ஆவதற்கு ஆயத்தமாயிருந்த இப்போது எனக்கு அந்த காப்பியை அனுப்பி வைத்து எழுத உதவிய என் நண்பன் வேல்முருகன்.

படிச்சிட்டீங்கல்ல!... நீங்க என்ன சொல்றீங்க?

ப்ளாக் மெயில்... நிறைவுப் பகுதி

|

முதல் பகுதியான இதை படித்துப் பின் படியுங்களேன்...

மாலினிக்கும் எனக்கும் என்ன உறவு என்பதை மாபுத்திசாலியான நீங்கள் யூகித்திருப்பீர்கள் என்று எனக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் ஒருமுறை மெதுவாய் என் காதில் சொல்லுங்களேன்... எஸ்... கரெக்ட். என் முன்னால் காதலி.

கல்லூரியில் எம்.சி.ஏ கடைசி வருடம் படித்த சமயம் பி.எஸ்.சி கம்ப்யூட்டரில் சேர்ந்தாள். சூப்பர் சீனியர் என்ற முறையில் அவர்களின் வகுப்பினை பார்வையிட(ரேகிங் செய்ய என்றுதானே என உள்ளுள் நினைக்கிறீர்கள், சரிதான். ஒரு விஷயத்தைக்கூட உங்களிடம் மாற்றிச்சொல்ல முடியாது போலிருக்கிறது) சென்ற போதுதான் அவளை முதன் முதலில் பார்த்தேன்.

அழகென்றால் அப்படி ஒரு அழகு. வர்ணித்தால் நீங்கள் பொறாமைப் படுவீர்கள். இன்று நீங்கள் பார்க்கும் பெண்கள் எல்லோரையும் அவளுடன் ஒப்பிட்டு ஏமாந்து போவீர்கள் என்பதால் அழகு என்பதோடு விட்டுவிடுகிறேன். பார்த்தவுடன் எங்களுக்குள் ஏற்பட்ட ஹார்மோன்கள் மாற்றததினால் காதல் பொசுக்கென பற்றிக்கொள்ள, அடுத்து வந்த ஆறு மாதங்கள் என் வாழ்வின் மறக்க இயாலாத சொர்க்கமாயிருந்தன.

படித்தது திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரி என்பதால் திருச்சி சென்று சினிமா, முக்கொம்பு, உச்சிப்பிள்ளையார் கோவில், ஸ்ரீரங்கம் என எல்லா இடங்களையும் சுற்றினோம். நிறைய கடிதங்கள், புகைப்படங்கள், அப்புறம் .... சொல்ல வெட்கமாக இருக்கிறது... அய்யய்யோ ரொம்ப தப்பா நினைக்காதீர்கள் நிறைய முத்தங்கள் எனத்தான் சொல்ல வந்தேன்.

கடைசி செமெஸ்டரில் ப்ராஜெக்ட் விஷயமாய் மெட்ராஸ் சென்றுவிட பிரிவு தாளாமல் பசலை நோயால்...அடிக்க வராதீர்கள் அதிகமாய் சொல்லவில்லை, கடிதத் தொடர்பிலிருந்தோம். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பார்த்துவிட்டு சென்றேன்.

திடீரென பத்து நாட்களாய் எந்த தகவலும் இல்லாததால் கல்லூரிக்கு வந்து பார்க்க, அவள் கல்லூரிக்கு வருவதில்லை எனவும், குடும்பமே ஊரை காலி செய்துவிட்டு சென்று விட்டதாகவும் கிடைத்த தகவல்கள் என்னை நிலை குலையச்செய்தது.

எவ்வளவோ முயன்றும் எந்த ஒரு தகவலும் கிடைக்காது போக, ஏற்பட்ட சோகத்தில் வெறித்தனமாய் படித்து, வங்கித் தேர்வில் தேறி, வேலையிலும் சேர்ந்து... மீதிக் கதைதான் உங்களுக்குத் தெரியுமே... சரி, நிகழ்வுக்கு வருவோம்.

மாலினி என்னை எப்படி இருக்கிறாய் எனக்கூட கேட்கவில்லை. ’எப்படி என்னைக் கண்டுபிடித்தாய், உடனே போய்விடு, ஏன் இப்போது வந்தாய், அவர் வருகின்ற நேரம்’ என படபடவென பேசி என்னை அனுப்புவதிலேயே குறியாய் இருக்க, கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றேன்.

என்னை பார்த்த பார்வையில் சத்தியமாய் பழைய மாலினி இல்லை. ‘ரொம்ப வசதியாய்தான் இருக்கிறாய் போலிருக்கு, பழசெல்லாம் மறந்து விட்டாயா’ எனக் கேட்டேன்.

‘அய்யோ, என்னை புரிந்துகொள்ளுங்கள், ப்ளீஸ், இப்போ உடனே கிளம்புங்கள்’ என அவள் மன்றாட ஆரம்பிக்க சட்டென சில விஷயங்களை முடிவு செய்தேன்.

’மாலினி, நீயும் நானும் ஒன்றாய் எடுத்துக்கொண்ட போட்டோக்கள், கடிதங்கள் எல்லாம் என்னிடம் பத்திரமாய் இருக்கின்றன. அதையெல்லாம் உன் கணவரிடம் காண்பித்தால் உன் கதி என்ன தெரியுமா?’ என சினிமா வில்லன் போல் பேச, அவளும் சி.க போல (அதாங்க, சினிமா கதாநாயகி) அப்படியெல்லாம் செய்துவிடாதீர்களென கெஞ்ச ஆரம்பித்தாள்.

‘சரி, எனக்கு அவசரமாய் பணம் தேவைப்படுகிறது, ஒரு லட்சம் ரூபாயைக் கொடுத்துவிடு, கடிதங்களையும் போட்டோக்களையும் கொடுத்துவிடுகிறேன்’ என சொல்ல சட்டென ஒத்துக்கொண்டாள். எனது முகவரியினைக் கேட்டு அவசர அவசரமாய் தொலைபேசி அருகே இருந்த தாளில் குறித்துக்கொண்டாள். (விவரமாய் எனது பேங்க் முகவரியைத்தான் கொடுத்தேன் என உங்களுக்கு சொல்ல வேண்டுமா என்ன?) கண்டிப்பாய் இன்னும் இரு வாரத்துக்குள் செக்காக அனுப்பி வைப்பதாய் சொன்னாள்.

உடன் அங்கிருந்து விலக, சட்டென கதவை சாத்திக்கொண்டாள். நீங்கள் நினைக்கலாம், என்னடா ஒரு வங்கியில் வேலை பார்ப்பவன் இவ்வளவு அற்பனாய் நடந்து கொள்கிறானே என. எல்லாம் என் பண முடை பாஸ்.... அத்தோடு என்னை தவிக்க விட்டு சென்ற அவளுக்கு கொடுக்கும் தண்டனையாக மனதிற்கு ஒரு சமாதானம். அதுவுமில்லாமல் என்னைப் பார்த்து எப்படி இருக்கிறாய் எனக் கூட கேட்காமல் விரட்டியடிக்க எத்தனித்ததற்கு தண்டனை, கடைசியாய் கடனையெல்லாம் அடைத்து சீட்டாடும் பழக்கத்தில் இருந்து நிரந்தரமாய் விடுதலை.

வழக்கத்துக்கு மாறான அதீத சந்தோசத்துடன், சீட்டி அடித்தபடி பணப்பிரச்சினை எல்லாம் தீர்ந்துவிட்டது என உற்சாகமாய் ஆட்டோ பிடிப்பதற்காக சாலையை நோக்கி நடந்தேன்.

வழக்கமான ஒரு வாரத்துக்குப் பின் வங்கியில் மதிய உணவெல்லாம் முடித்து கொஞ்சம் ஓய்வாய் இருக்கையில் ப்யூன் வந்து என்னைப் பார்க்க ஒரு பெண் வந்திருப்பதாய் கூற, கொஞ்சம் ஆச்சர்யப்பட்டு ஆர்வமாய் வெளியே வர, அங்கு மாலினியைப் பார்த்து கொஞ்சம் அதிர்ச்சியோடு சந்தோசித்தேன்.

அருகே சென்று மெலிதாய் புன்னகை செய்து அருகே அமர்ந்து, ’என்ன மாலினி நேரிலேயே வந்துவிட்டாய், பணமாய் கொடுத்துவிடலாமென முடிவு செய்துவிட்டாயா?’ எனக்கேட்டேன்,

தலையாட்டி, ‘வா எனக்கூட கேட்கமாட்டீர்களா?, எல்லாம் தயாராக இருக்கிறது, சரி கடிதம் புகைப்படங்களைல்லாம் எங்கிருக்கின்றன?’ எனக் கேட்டாள்.

’வீட்டிலா வைக்க முடியும்? இங்குதான் இருக்கிறது. இதோ எடுத்து வருகிறேன், அருகிலிருக்கும் ஓட்டலுக்கு சென்று காபி சாப்பிட்டுக்கொண்டே பேசலாம்’ என சொல்லி உள்ளே சென்றேன்.

ஒரு காபியில் சக்கரை கம்மி என சொல்லிவிட்டு கவரை கொடுக்க, புகைப்படங்களையெல்லாம் மேலோட்டமாய் பார்த்துவிட்டு தனது கைப்பையில் வைத்துக்கொண்டு, ‘சரி, திரும்ப உன் சீட்டுக்கு சென்று நீங்கள் லோனாக எடுத்து வைத்திருக்கும் ஐம்பதாயிரத்தை எடுத்து வந்து கொடுத்துவிட்டு இந்த கவரை வாங்கிக்கொள்’ எனச் ஒருமையில் சொல்ல ஏகமாய் வேர்த்தேன்.

என்ன விளையாடுகிறாயா எனக்கோபமாய் கேட்க, ‘பொறுமை மிஸ்டர் ராஜா, இந்த கடிதங்களையும், புகைப்படங்களையும் உன் மனைவியிடம் காட்டாமல் இருக்கத்தான் அந்த ஐம்பதாயிரம். மெட்ராஸில் என்னைப் பார்த்தாயே, அது என் தற்காலிக வீடு. என்ன பார்க்கிறாய், நான் ஒரு காஸ்ட்லி கால் கேர்ள். இப்போது ஆளை மாற்றிவிட்டேன், நாளை மும்பைக்கு பறக்கப் போகிறேன்’.

‘அவர் வரும் நேரத்தில் நீ வந்ததால்தான் உன்னை அவசரமாக போகச் சொல்ல நேரிட்டது, ஆனால் வசமாய் நீ என் வலையில் சிக்கிக் கொண்டாய். அப்புறம் இன்னுமொரு தகவல் நீ ப்ராஜெக்ட்டுக்கு சென்றவுடம் என் அப்பா ஒரு சீட்டுக்கம்பனியில் பணத்தையெல்லாம் இழக்க இரவோடிரவாய் வேறு ஊருக்கு சென்று, கொஞ்ச நாளிலேயே அப்பா தற்கொலை செய்துகொள்ள, அம்மாவும் அவரைத் தொடர்ந்து சென்றுவிட, எல்லாம் தலைகீழாய் மாறி.... சரி, இதெல்லாம் உனக்கெதற்கு, பணத்தை எடுத்துவா’

’எப்படி உன்னைப்பற்றி எல்லாம் தெரிகிறது எனப் பார்க்கிறாய? நேற்றே இங்கு வந்து உன்னைப்பற்றி எல்லா விவரங்களையும் தெரிந்து கொண்டேன், மனைவி சொல்லே மந்திரம் என வாழ்பவன், புதிதாய் ஒரு வீடு வாங்குவதற்க்காக உன் மனைவி கேட்ட ஐம்பதாயிரம் லோன் இன்றுதான் கிடைத்தது என்பது வரை. உன் மனைவி கேட்டால் பணத்தை வழியில் தொலைத்ததாய் சொல்லி சமாளி’

சொல்லி முடிக்க தலையெல்லாம் எனக்கு கிர்ரென சுற்ற, சனியனை எடுத்து பனியனுக்குள் விட்ட கதையாய்... சொல்லுங்க பாஸ்... எனக்கு இது தேவையா?

வெற்றுரை பேசாதீர்... இனியாவது.

|

இன்றைய பொழுது எனக்கு கொஞ்சம் துயரமாகவே விடிந்திருக்கிறது. ஆம், வெற்றுரை பேசாதே! என என் சகோதரி கடைசியாய் ஒரு இடுகையிட்டு மனத்தினை கனக்கச் செய்திருக்கிறார். எல்லோரும் இதுபோல் முடிவெடுக்க இருக்கும் சூழலில் தான் வலையுலகம் இருக்கிறது. ஆனாலும் இன்று அவர் எடுத்திருக்கும் முடிவு அதிர்ச்சியையும், ஒரு வெறுப்பையும், ஒரு வார்த்தையில் சொல்லவேண்டுமானால் ‘ச்சை’ என நொந்து கொள்வதாயும் இருக்கிறது.

கண்டிப்பாய் அவர்களை திரும்ப வரவேண்டும் எனவோ முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவோ கேட்கப்போவதில்லை. ஏனென்றால் வயதில் மட்டும் தான் நான் மூத்தவன். அவர்களுக்குத் தெரியாததல்ல, யோசிக்காமல் முடிவெடுப்பவர் அல்ல என் அன்பு சகோதரி. அதே நேரம் சில நேரங்களில் அவருக்கு இங்கிருக்க தோதுவாய் எதுவும் இல்லையே எனக்கூட எண்ணியிருக்கிறேன்.

ஆயிரம் சோகங்கள் உள்ளுள் இருந்தாலும் ‘கலகல’ வென இருக்கும் என் ப்ரிய சகோதரி பாரதி கண்ட புதுமைப் பெண். ஆயிரம் வியாக்கியானம் பேசினாலும் பேதமை காட்டும் இந்த உலகில் அவர் தனித்திருத்தலே பலருக்கு காதில் புகை வருவதாயிருக்கும்.

தனித்திருத்தல் என்ற வார்த்தையினை எந்த பொருளில் வேண்டுமாலும் எடுத்துக்கொள்ளலாம். நான் சொல்ல வருவது இப்படித்தான் இருக்கவேண்டும், இதுதான் நியதி, இப்படித்தான் செய்யவேண்டும் என போலியாய் ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தி, நம்மை சிறைப்படுத்திக் கொண்டு ஏன் செய்கிறோம், எதற்கு செய்கிறோம் என வாழ்வின் பொருள் விளங்காமல் வாழும் சூழலில் இப்படித்தான் என பட்டென உள்ளவற்றை சொல்லும் குணமுடையவர் என்ற பொருளில்.

நிறைய எதிர்ப்புக்களை, கருத்து மோதல்களை சந்தித்த நீங்கள், இவ்வாறெல்லாம் ரௌத்ரம் பழகி, உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தி, உண்மையைச் சொல்லி உங்களை ரணப்படுத்திக்கொண்டு நேர விரயத்தோடு வாழ்வதைவிட அதை நிகழ்வினில் பயன்படுத்தி இன்னும் உபயோகமாய் வாழ்வினை நீங்கள் அர்த்தமாக்கிக் கொள்ளலாம், கொள்வீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்.

என்னை அண்ணா என விளிக்கும்போதெல்லாம் சகோதர வாஞ்சையில் என் அடிமனதில் சந்தோஷம் பொங்கும். என் வாழ்வில் மற்றவரின் அறிவு, திறமை, வாழும் முறை என பிரம்மித்த இருவர்களில் இவரும் ஒருவர். ஒரு முறை கூட பேசியதில்லை, மடல், பஸ், சாட் என மட்டும்தான் அவரோடு எனக்கு பழக்கம். நிறைய என் ஆசான் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

துயரத்தில் இருக்கும் தருணங்களில் அவர் சொல்லும் ஆறுதல்கள் மயிலறகால் வருடுவதுபோல் இருக்கும். சில நாசூக்காக நச்சென்று இருக்கும். கொஞ்ச நேரம் சாட் செய்தாலே கவலைகள் மறந்து எல்லாம் இலகுவாய் ஆனதுபோல் இருக்கும்.

வலையுலகை விட்டு சென்றாலும் எங்கள் வாழ்வுலகில் சகோதரியாய், ஒரு அன்னையாய், தோழியாய் இருக்கிறீர்கள், இருப்பீர்கள் என்பதால் உங்களால் அண்ணாவென விளிக்கப்பட்ட நான் மனம் கனத்து பிரியா உங்களுக்கு பிரியா விடை தருகிறேன், ஒரு சின்ன வேண்டுகோளோடு.

ஆம் சகோ, இன்னும் நிறைய எழுதுங்கள், உங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள், அறிவுறுத்துங்கள். நண்பராய், தகப்பனாய் ஆசானாய் அய்யா, சகோதரனாய் நான், நண்பர்களாய் பலர் என எல்லோரும் உங்களோடு என்றும் இருக்கிறோம். எல்லாம் உங்களுக்கு கிடைத்து அமைதியான, அழகான வாழ்வு கிடைத்திட எல்லாம் வல்ல இறையவனை வேண்டுகிறேன்.

அண்ணன்,
பிரபாகர்.

ப்ளாக் மெயில்...

|

அத்தியாயம் ஒன்று :

(இது தொன்னூற்று இரண்டில் எழுதிய எனது முதல் கதை. இந்த கதைக்கே ஒரு கதை இருக்கிறது, அது இதனைத் தொடர்ந்து...)

இது தேவையா என எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? என்போல் தலையில் கைவைத்து உட்கார்ந்திருக்கிறீர்களா? இல்லையா? குட். நீங்களெல்லாம் பாக்கியசாலி. சரி, அப்படியே இந்த துரதிஷ்டசாலியின் கதையினைக் கொஞ்சம் கேளுங்களேன் பாஸ்...

முதலில் என்னைப் பற்றிய விவரங்களிலிருந்து ஆரம்பிக்கிறேன். ராஜாராமன், வயது முப்பத்தைந்து, மாநிறம். அழகாய் சுப்ரஜா, நான்கு வயது மகள் நல்லவேளையாய் அம்மாவின் சாயலாய் இல்லாமல் முழுக்க என்னைப்போல் இன்னும் கொஞ்சம் கலராய். நிறைய சொத்துக்களோடு வாக்கப்படப் போகிறவள். ஆனால் என்னைப்போல் அவன் இருக்கமாட்டான், கண்டிப்பாய் பெரும் அதிர்ஷ்டசாலி.

ஏன் சொல்கிறேன் என்றால் என் மனைவி நல்ல கருப்பாய் பூசிய உடம்புடன் கழுத்து நிறைய நகைகளுடன்... உங்களுக்குப் புரிவது எனக்குத் தெரிகிறது. கரெக்ட், எல்லாம் சில ஆதாயங்களுக்காக செய்த தியாகம் பாஸ். திருமணத்தின் போது சுமராய் இருந்தவள், சுப்ரஜா பிறந்ததுக்குப்பின் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாத உணவுப்பழக்கம், எல்லா வேலைகளுக்கும் ஆள் என இருந்ததால் மேற்சொன்னவாறு ஆனதால். ரொம்ப போரடிக்கிறேனா? விஷயத்துக்கு வருகிறேன்...

பேங்க்-ல் வேலை, ஆனாலும் வீட்டில் மதுரை. அவளின் ஏராளமான சொத்துக்களுக்கிடையில் என் வழியாய் வரும் வருமானங்கள் கொசு. சம்பளம் வந்தவுடன் அப்படியே கவரை அவளிடம் கொடுக்க, என் செலவுக்கென ஒரு சொற்பத் தொகையினை பரிதாபப்பட்டு தருவாள். மேற்படி தேவைப்பட்டால் அவளிடம் கெஞ்சித்தான் வாங்க வேண்டும்.

பாஸ், என்னிடம் இருக்கும் ஒரு பெரிய கெட்ட பழக்கம்... மொதல்ல ப்ராமிஸ் பண்ணுங்க, என் வைஃப்கிட்ட சொல்ல மாட்டேன் என, அப்போதுதான் சொல்லுவேன். ஓகே.... உங்களை நம்பறேன். சீட்டு பைத்தியம் நான். திருச்சியில் இருந்தாலும் மாதம் ஒருமுறை ஏதாவது சொல்லி மெட்ராஸுக்கு சென்றுவிடுவேன். சேர்த்து, கடன் வாங்கிய பணத்தோடு இரண்டு நாட்கள் மவுண்ட்ரோடில் உள்ள ஒரு லாட்ஜில். முன்பதிவு செய்த ரயிலில் ஞாயிறு இரவு கிளம்பி வழக்கத்துக்கு சென்று விடுவேன்.

எனக்கு நேரமே சரியில்லை, கொண்டு வந்த பணம் எல்லாம் காலி. கடந்த நான்கு மாத தொடர் தோல்விகளால் மொத்தக்கடன் ஐம்பதாயிரத்தை தாண்டியிருந்தது. மதியம் தான் ஆகிறது, இரவு வரை என்ன செய்வது? கண்டிப்பாய் காசில்லாமல் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்.

அறைக்கு வந்து கிளம்பி, தம்மோடு ஒரு டீ சாப்பிட வெளியே வந்த போதுதான் சிக்னலில் வெகு அருகில் நின்றிருந்த அந்த மாருதியைப் பார்த்து அதிர்ந்தேன், காரில் டிரைவர் இருக்கையில் இருந்தது மாலினி, என் மாலினி. வேறு யாராவது இருக்குமா என கூர்ந்து கவனிக்க கன்னத்தில் சிறிய மச்சத்துடன்...அவளேதான்!... மெருகு கூடி இன்னும் அழகாய் இருந்தாள். பச்சையில் வண்டி கிளம்ப உடனடியாய் எண்ணைக் குறித்துக்கொண்டேன்.

ஆர்.டி.ஓ-வில் இருக்கும் நண்பனை தொடர்புகொள்ள அவன் ஏன் பார்க்க வரவில்லை, மறந்துவிட்டாய் என்றெல்லாம் பேசி கழுத்தறுக்க, கடைசியாய் அந்த கார் பற்றிய விவரங்களை வாங்கிக்கொண்டேன். அடையாறில் இருந்தது அந்த முகவரி...

பணக்காரர்கள் மட்டுமே வசிக்கும் பகுதி என்பது ஆட்டோவில் அந்த இடத்தை நெருங்கும்போதே தெரிந்தது. பெரிய பங்களா டைப் வீடு, கேட்டிலிருந்து நிறைய உள்தள்ளி இருந்தது. கார் நிறுத்த, தோட்டம் என நிறைய இடங்களோடு விசாலமாயிருந்தது.

கேட்டில் ஆள் யாரும் இல்லை, மெதுவாய் திறந்து உள்ளே சென்று அழைப்பு மணியை அடித்தேன். சற்று கழித்து ‘கோன்’ என கேட்டவாறு திறந்த மாலினி என்னை பார்த்ததும் உடன் அடையாளம் தெரிந்து கொண்டு அதிர்ந்தாள்.

இரண்டாம் பகுதியைப் படிக்க இங்கு அழுத்துங்கள்...

(தொடரும்)

சங்கமத்துக்கு வாரீயளா?...

|

துண்டு போட்டு வருவதாய் சொல்லி பயணச்சீட்டு எல்லாம் எடுத்து தயாராகி வருகிறேன், உங்களையெல்லாம் சந்திப்பதற்காக மிக மிக ஆவலுடன்...


சங்கமம் தலைப்பே நம்மை சங்கமிக்கக் கவர்கிறதல்லவா? ஆரூரன், கதிர், பாலாசி, அகல்விளக்கு ராஜா, வால் பையன், இனிய நண்பர் பைஜூ என ஏற்கனவே பார்த்த அன்பு உள்ளங்களோடு, இன்னும் கலந்து கொள்ளும் எல்லோரையும் பார்த்து அறிமுகம் செய்துகொள்ள ஆவலாய் நாட்களை எண்ண ஆரம்பித்திருக்கிறேன். வாருங்கள் நண்பர்களே, சந்திப்போம்.

இது சம்மந்தமாய் கதிரின் அழைப்பினை கீழே தந்திருக்கிறேன். ஏற்று எல்லோரும் வாருங்கள்...

இனிய நண்பர்களுக்கு,

வருகின்ற 26.12.2010 அன்று ஈரோட்டில் ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக நடைபெறவுள்ள பதிவர்கள் சங்கமம் நிகழ்ச்சிக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

நிகழ்ச்சி குறித்த விபரங்கள் அனைத்துப் பதிவர்களுக்கும் சென்றடைய, 
*சங்கமம் 2010 குறித்து தங்கள் வலைப்பக்கத்தில் இடுகையாக வெளியிடவும்
*சங்கமம்-2010 இலச்சினையை தங்கள் வலைப்பக்கத்தில் வெளியிடவும்  அன்போடு வேண்டுகிறேன்.

சங்கமம் குறித்த விபரங்களுக்கு... 



(http://erodetamizh.blogspot.com/2010/12/2010_07.html) 

சங்கமம் 2010 – அன்போடு அழைக்கின்றோம்


நன்றி

அன்புடன்
- ஈரோடு கதிர்



சந்திக்க விழையும்...
இரா. பிரபாகர்...

ஊழல் - சிறுகதை...

|

எங்கும் ஊழல் எதிலும் ஊழல்... பத்திரிக்கைகளைத் திறந்தால் ஸ்பெக்ட்ரம், கார்கில் வீடு ஒதுக்குதல், குடும்பத்துக்கு நிலம் ஒதுக்குதல் என பக்கத்துப் பக்கம் நாறிக்கிடக்க அதையெல்லாம் பார்த்த ராகவன் கொதித்துப்போயிருந்தார்.

டிவியிலும் அது சம்மந்தமான செய்திகளே வர, நொந்து போய் காப்பி கொடுக்கவந்த மனைவியின் மீதும், பாடத்தில் ஏதோ சந்தேகம் கேட்கவந்த மகனின் மீதும் தேவையில்லாமல் எரிந்து விழுந்தார்.

நேராய் குளியலறைக்கு சென்றவர் சில்லென தண்ணீரில் சூடு குறைய குளித்து கொஞ்சம் மனம் லேசாகி வந்தார். வரவேற்பறையில் காத்திருந்த அந்த நபரை புன்னகைத்து கொஞ்சம் காத்திருக்கச் சொல்லி பூஜை அறைக்குள் நுழைந்து மனமுருக பூஜித்து மனம் லேசாகி வந்தார்.

‘மன்னிச்சிக்குங்க, ஆபிஸ் விட்டு வந்ததும் குளிச்சி பூஜை செய்யலைன்னா வேலையே ஓடாது’ என்றவர் ‘காபி கொடுத்தாங்களா?’ எனக் கேட்க

‘ஆச்சுங்க, வந்த உடனே அம்மா கொடுத்தாங்க, இந்தாங்க நீங்க கேட்டது இருக்கு’ என ஒரு கவரைக் கொடுக்க,

‘என்னய்யா, எல்லாம் சரியா இருக்குல்ல? இனி கவலைப்படாத, செவ்வாக்கிழமைக்குள்ள பர்பெஃக்டா முடிச்சிக்கொடுத்திடறேன், ஆபிஸ்ல வெச்சி வாங்கறது நம்ம ரெண்டு பேருக்குமே நல்லதில்ல அதான் வீட்டுக்கு வரச் சொன்னேன்’ எனச் சொல்லி ‘பாக்கியம் இத பத்திரமா பீ்ரோவில வை’ என்றார்.

கசியும் மௌனம் - பிறந்தநாள் வாழ்த்து...

|

(கசியும் மவுனம் வலைப்பூவின் மூன்றாமாண்டு பிறந்தநாள் வாழ்த்து)

கசியும் மவுனத்தில்
கருத்தாய் கவிதைகள்
கண்ணுற்ற நண்பர்
கண்டிடச் சொல்ல
கண்டேன், வியந்தேன்...

ஈரோடு கதிரென
எழுச்சியாய் இடுகைகள்
இணைந்தேன் மகிழ்ந்தேன்
அன்றலர்ந்த நட்பு
ஆலமர விழுதாய்...

கண் தானம்பற்றி
கருத்தாய் எழுதி
மண் பெருமையை
மனிததோடு நினைந்து
மரம் நடுதலை
மகிழ்ந்து பகிர்ந்தீர்

உம்மால், உமது நட்பால்
மனம் நிறைந்து
இன்னும் பல
இனிதாய் எழுத
இறையை வேண்டுகிறேன்...

பிரபாகர்..

மன்மதன் அம்பு ஆடியோ ரிலீஸ்... செய்திக்கோர்ப்பு...

|

மன்மதன் அம்பு ஆடியோ ரிலீஸுக்கு சென்றிருந்தேன்... இது போன்ற நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியின் வாயிலாய்தான் பார்த்திருக்கிறேன், இதுதான் நேரடியாகப்பார்க்கும் ஆடியோ வெளியிடும் முதல் நிகழ்ச்சி.

மனதைக் கவர்ந்த விஷயங்கள் :

கமல்ஹாசன் இன்னும் இளைமையாய் இருப்பது

கமலைப் பற்றி மனதில் இருந்த பிம்பம் அப்படியே இருக்கவும், இன்னும் சில விஷயங்களில் எண்ணியதை விட இன்னும் பிரமிப்பு கூடும்வண்ணம் கமலின் பங்களிப்பு இருந்தது.

கமல் பாடிய நீல வானம்... நீயும் நானும் அற்புதமாய் இருந்தது. அவரே பாடக் கேட்க. நேரில் கேட்க.. டிவைன்.

தேவிஸ்ரீ பிரதாத்தின் துள்ளல்...

ரசிகர்கள் எட்டுபேரை (இருபாலரும் பாதிபாதியாய்) அழைத்து இசையை வெளியிட்ட விதம்..

கமலும் திரிஷா இருவரும் கவிதைப் பாட்டினைப் படிக்க ஆஹா!... கோபி சொன்னதுபோல் தமிழோடு திரிஷா இன்னும் அழகு கூடி மிளிர்ந்தார்.

கே.எஸ் ரவிக்குமாரின் பேச்சு, பங்காற்றியவர்களை நினைவுகூர்ந்த விதம்.

ஜோடி நம்பர் ஒன் குழுவினரின் நடனங்கள்...

மனதை நெருடிய விஷயங்கள் :

டிவியில் எடிட் செய்யப்பட்டு வழங்கப்படும் நிகழ்ச்சிகளைப்பார்த்து அற்புதம் என நினைத்து, தொகுத்த தீதி மற்றும் கோபியின் சொதப்பல்கள்.(ஒளிபரப்பின்போது இருக்காது)

சூப்பர் சிங்கர்களை கமர்சியலாக்கி, அவர்களைப் படுத்துவது.

கமலே வெட்கப்படும் அளவிற்கு தொகுப்பாளர்கள் அவரைப் புகழ்ந்து தள்ளியது (கமல் இதைக் குறிப்பிட்டு சொன்னார்)

உதயநிதியை வானளவிற்கு புகழ்ந்து தள்ளியது

விழாவினை ஏழு மணி என சொல்லி ஏழு இருபதுக்கு தாமதமாய் ஆரம்பித்தது.

கொசுறு :

எங்களுக்கு முன்னால் ஏதோ ஒரு பேனரை வைத்துக்கொண்டு அவ்வப்போது மறைத்து கேமிரா இந்த பக்கம் வருமா என ஆர்வக்கோளாறாய் இளைஞர்கள்.

அறுபதைக் கடந்த ஒருவர் அருகில் அடித்த கமெண்ட்டுகள், ரசித்து அவர் செய்த முகபாவங்கள்

திரிஷா ஆன்ட்டி என ஒருவர் கத்த குபீர் சிரிப்பலை...


டிஸ்கி : 

இதுதான் வாழ்வில் பார்க்கும் முதலும் கடைசியுமான ஆடியோ ரிலீஸ்...

விகடம் 1.1.2

|

அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள். தொலைக்காட்சியின் முன் இல்லாமல் குடும்பத்தோடு சந்தோஷமாய் கோவில், நண்பர்களை வரவழைத்து, நண்பர்களின் வீடுகளுக்கு சென்று உண்மையாய் தீபாவளியை கொண்டாடுபவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த சிறப்பு வாழ்த்துக்கள், வணக்கங்கள். (சிரத்தையாய் நெட்டில் இருப்போருக்கும்தான்...)

*****
இந்த சம்பவத்திலும் கதாநாயகன்(ர்) என் சித்தப்பாதான். பள்ளி விடுமுறைக்கு அவரின் மகள் சுவேதா தன் சித்தியின் வீட்டிற்கு சென்றிருக்கிறாள். சித்தியின் வீடு ஊரிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால் பஸ்ஸிலிருந்து இறங்கி நடந்துதான் செல்லவேண்டும். மகள் சென்று ஒரு மாதத்திற்கும் மேல் ஆனதாலும், பள்ளி திறப்பதற்கு நாள் நெருங்கிவிட்டதாலும், அழைத்துவர சென்றிருக்கிறார்.

மகளைப் பார்க்கும் ஆர்வத்தில் வேகவேகமாய் சித்தப்பா செல்ல, தொலைவில் அவர் வருவதைப் பார்த்து சுவேதா அழ ஆரம்பித்திருக்கிறாள். பார்த்து நெடு நாட்களாகிவிட்டதால் பாசத்தில் அழுகிறாள் என எண்ணி சித்தப்பா மேலும் பதைபதைப்பாய் செல்ல, பக்கத்தில் சென்றவுடன் ’ஏன் வந்தீங்க, நான் உங்ககூட வரமாட்டேன்’ என இன்னும் சப்தமாய் கதறி அழ மனுஷன் நொந்து நூடூல்ஸாகிப் போனாராம்.
*****
இது நடந்து மூன்று வருடங்கள் இருக்கும். சிங்கையில் இருந்து மனைவியுடம் ஸ்கைப் -பில் சாட் செய்வது வழக்கம். அன்று அழைத்த போது மூன்று வயதிலிருந்த என மகன் விஷாக், கம்ப்யூட்டரில் விளையாடிக்கொண்டிருக்க, எனது அழைப்பைப் பார்த்து பார்த்து, ஏற்று ஹெட் போனை காதில் மாட்டிக் கொண்டிருக்கிறார். ’நான் சொல்லுப்பா’ என ஆரம்பிக்க, ‘அப்பா நான் விஷாக், அம்மா இல்லை’ என சிரித்துச்சொல்ல சந்தோஷத்தில் அதிர்ந்தேன்.

‘தம்பி, உங்களுக்கு அக்சப்ட் பண்ணத்தெரியுமா? எனக் கேட்க, ‘ஓ தெரியுமே, அம்மா சொல்லிக்கொடுத்தாங்க’ எனச் சொன்னார்.

’அம்மா பாத்ரூமில் இருக்கிறாங்க, நான் கம்ப்யூட்டர்ல விளையாடிட்டிருக்கேன்’ என சொல்லிவிட்டு, ‘அப்பா தனியாவா இருக்கீங்க?’ எனக்கேட்டார்.

‘ஆமாம்பா...’ என்றவுடம், ‘உங்களுக்கு பயமா இல்லையா’ எனக் கேட்டார்.

‘இல்லை சாமி’ எனச் சொன்னேன்.

‘இல்லப்பா, எனக்கு பயமா இருக்கு அதான் கேட்டேன்’ எனச் சொன்னார்.
*****

நண்பேன்டா...

|

இப்போல்லாம் நீங்க வடிவேல் உதை வாங்கறத நிறைய காமெடியில பாத்திருப்பீங்க, ரசிச்சுகிட்டிருப்பீங்க. நாமெல்லாம் தொன்னூத்தி ரெண்டுலேயே அனுபவத்துல பாத்தாச்சு.

பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சைன்ஸ்ல கடைசி செமெஸ்டர், மெயின் எக்ஸாம் எல்லாம் முடிஞ்சுடுச்சி. நல்லா படிக்கிற ஆல் பாஸ் ஜீனியஸ்லாம் எஸ்கேப் ஆக அரியர் இருந்த நாங்க ஒரு பதினைஞ்சு பேர் மட்டும் ரூமிலே, ஹாஸ்டல்லே தங்கி மேத்ஸ் அரியர முடிச்சோம்.

ஹெச்.ஓ.டி நல்லா ஹெல்ப் பண்ண என் பேப்பர் எல்லாருக்கும் சர்குலேட் ஆக, பாஸ் மார்க்குக்கு மேலேயே எழுதினதால மெயின் பேப்பர் நெட்வொர்க் கண்டத்தையும் மறந்து சந்தோஷமா இருந்தானுங்க. (நெட்வொர்க் பேப்பருக்கு நடந்த கூத்த தனியா எழுதறேன்.)

புல் தண்ணி, சந்தோஷம். வழக்கம்போல நான் ஒதுங்கியிருக்க, ஸ்னாக்ஸாவது சாப்பிடுடான்னு கம்ப்பல் பண்ணி, நிறையா வாங்கி, பெப்சி நாலஞ்சி பாட்டலோட கொடுத்தானுங்க...

சாயங்காலமா எல்லாரும் போதையையும் மீறி பேயடிச்ச மாதிரி இருக்க, என்னடான்னு கேட்டுட்டு நானும் ஆடிப் போயிட்டேன். கூட படிச்ச, அந்த ஊர்லயே பெரிய வி.ஐ.பி.யோட பொண்ணு ஓடிபோயிடுச்சின்னானுங்க.

எல்லோரும் டக்குனு ராசுவைத்தான் சந்தேகப்பட்டோம். ஏன்னா அவன்தான் அந்த பொண்ணுகிட்ட கடலை போட்டுகிட்டே இருப்பான். கொஞ்ச நேரத்துல அவனே ரூமுக்கு வந்ததுமில்லாம ஆளு யாருன்னு சொன்னவுடன் அதிர்ந்துட்டோம்.

வேற குரூப் பையன் ஒருத்தன் தள்ளிகிட்டு போயிட்டாங்கற தகவல நம்பவே முடியல. ஏன்னா, அவங்க ரெண்டு பேரும் சந்திச்சு பேசினத யாரும் கண்ணால கூட பாத்ததில்ல.

காரணம், லன்ச் டைமுல மட்டும் தான் அவங்க கிளாஸ் ரூமிலேயே பாத்து பேசி டெவலப் பண்ணியிருக்காங்க, கூட படிச்ச மத்த ரெண்டு பொண்ணுங்க உதவியோட. வெளிய வேற எங்கேயும் அவங்க பாத்துகிட்டது கிடையாது.

நாங்க யாரும் அங்க இருக்க மாட்டோம், ஹாஸ்டல், ரூமுன்னு போயிட்டு ஒன்னே முக்காலுக்கு மேல தான் வருவோம். லவ்வுனதெல்லாம் ஒன்னுல இருந்து ஒன்றரை வரைக்கும்.

சரி விஷயத்துக்கு வருவோம். ராசு பீதியை கிளப்பினான். 'மாப்ளே எல்லாரும் வெறியோட தேடிகிட்டு இருக்காங்க, நாம மாட்டினா ஒழிஞ்சோம். பிரபா மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் பயமில்ல, கிளாஸ் மேட்டான்னு கூட தெரியாது. ஆனா நாம தான் எதுக்கெடுத்தாலும் மொத ஆளா போயி பாப்புலரா இருக்கோம், பாத்தா பின்னிடுவானுங்க' ன்னான்.

எல்லாருக்கும் உதற ஆரம்பிச்சிடுச்சி எங்க ரெண்டு மூனு பேரை தவிர. 'சரி எல்லோரும் ஒன்னா போவோம், எது வந்தாலும் பாத்துடுவோம்' னு படையா கிளம்பினோம் ராத்திரி ஏழரைக்கு மேல.

பஸ் ஸ்டான்ட் போற வரைக்கும் பிரச்சினை இல்ல. எல்லாரும் டீ குடிச்சோம். லோக்கல் பசங்க நிறைய பேரு கூட இருந்ததால ரொம்ப தெம்பா இருந்தோம்.

ஆத்தூர் போற பஸ் ஸ்டான்ட விட்டு வெளிய வர, எல்லாரும் வழியனுப்ப ஒவ்வொருத்தரா மூவ் ஆகற பஸ்ஸில ஒவ்வொருத்தரா வரிசையாய் ஏற ஆரம்பிச்சோம்.

அப்போ ஒருத்தன் பஸ்ஸில ஏறிகிட்டிடுந்த ரமேஷோட சட்டையை பிடிச்சி கீழ இழுத்தான். தடுமாறி கீழ இறங்கி முறைச்சி, 'என்ன விஷயம் ஏன் இழுக்கிற' ன்னான்.

அந்த பொண்ணு பேரை சொல்லி அதோட 'கிளாஸ் மேட்டுதானே' ங்கவும் ரமேஷ் தலையாட்ட,

'வாங்க சார், உங்களுக்காகத்தான் காத்திருக்கோம்' னு சொல்லி இழுத்துகிட்டு போகவும், ஏதோ பண்ண போறாங்கன்னுட்டு ஆட்டுகுட்டி மாதிரி நானும் ஏதோ துணிச்சலா கூடவே போனேன்.

பஸ்ஸு சல்லுனு போயிடுச்சி. பஸ் ஸ்டன்ட்ல நின்னுட்டிருந்த பசங்க எல்லாம் எஸ்கேப். அவனுங்க ஆளுங்க ரெண்டு மூனு பேரு சேர்ந்துட்டானுங்க.

'இவன் யாருடா கூடவே வர்ரான்' ன்னு ஒருத்தன் என்ன பாத்து கேட்கவும், எல்லோரும் கூடவே வந்துகிட்டிருந்த என்னை அப்போதான் பாத்தாங்க.

'நான் ரமேஷோட பிரண்டு' ன்னேன். 'அப்படியா, வாங்க சார்' னுட்டு பின்னால இருந்த மூத்திர சந்துக்கு கூட்டிட்டு போனாங்க.

அந்த பொண்ணோட தம்பி கொல வெறியோட இருந்தான். எல்லாரும் சேர்ந்து மாத்த ஆரம்பிச்சுட்டானுங்க. ரமேஷுக்கு நாலுன்னா எனக்கு ஒன்னு விழுந்துச்சி.

என்ன அடிக்கும் போது 'எவன்டா இவன் புதுசா இருக்கான்' னு கேக்க, 'அவரோட ஃபிரண்டாம்' னு சொல்ல, 'அப்பா சரின்னு வாங்கிக்கட்டும்' னு வஞ்சனையில்லாம குடுத்தானுங்க...

அவனோட பூணூல பிச்சிட்டானுங்க. கண்ணமெல்லாம் உப்பிடுச்சி. எனக்கும் அப்பப்போ சட்டு சட்டுனு அடி விழுந்துகிட்டிருந்துச்சி. அப்போ அங்க ஒரு போலீஸ் வர, அப்பாட தப்பிச்சோம்னு நினைக்க,

'டேய் பப்ளிக்ல ஏண்ட ராவுடி பண்றிங்க, தனியா கூட்டிட்டு போயி கவனிக்க வேண்டியதுதானே' ன்னு ஐடியா குடுத்திட்டு கண்டுக்காம போயிட்டாரு.

உயிர் பயம் ஆரம்பிச்சுடுச்சி. போட்டிருந்த செருப்பு, கொண்டு போன பேக் எங்க போச்சுன்னே தெரியல. வாயெல்லாம் உப்பு கரிக்க ஆரம்பிச்சுடுச்சி.

'சரி சரி இங்க போதும், ரூமுக்கு கூட்டிட்டு போலாம்' னு ஒருத்தன் சொல்ல அங்கிருந்து எங்கள தள்ளிகிட்டு நகரும்போது புதுசா ஒரு ஆளு வந்தான், கடவுள் மாதிரி.

அவனுங்களை அடக்கி, கையை தரை வரைக்கும் பின் பக்கமா கொண்டு போயி சப்புனு ரமேஷ் கன்னத்துல ஒன்னு உட்டான். 'திரும்பி பாக்காம ஓடிப்போ' ன்னு சொல்லிட்டு, அடுத்து எனக்கும் அதே மாதிரி ஒன்னு விட்டான்.

காமிக்ஸ்ல மட்டுமே அடிச்சா நட்சத்திரம் பறக்கிறத பாத்த நான், நேர்ல லைவ்-ஆ பாத்தேன். திரும்பி பாக்காம அழுதுகிட்டே கந்தலா போயி, நின்னுகிட்டிருந்த ஆத்தூர் பஸ்ல போயி உட்காந்தோம்.

ரமேஷ் வெலவெலத்துப் போயி என்ன கட்டி புடிச்சி அழ ஆரம்பிச்சுட்டான். நிமிர்ந்து பாத்தா, ஓடிப்போன எல்லாரும் குரூப்பா திரும்பி வந்து கோரஸா 'மாப்ளே ஒன்னும் ஆகலல்ல' ன்னானுங்க, ஒன்னுமே தெரியாத மாதிரி.

அப்புறம் நடந்ததெல்லாம் இங்க முக்கியம் இல்ல. அந்த பொண்ணுகிட்ட இருந்து கல்யாணத்துக்கு அழைப்பு வந்திருந்தது. ஆட்டோகிராப் பாத்து அனுப்பி இருக்கும் போல.

கண்டு பிடிச்சி அவனை உதைச்சு (கண்டிப்பா எங்களவிட அதிகமா இருக்கும்னு நம்பறேன்) சொந்தத்துலேயே ஒரு தியாகியை புடிச்சி கல்யாணம்னு தெரிஞ்சிகிட்டேன்.

கல்யாணத்துக்கு போனேன், ரவி மட்டும் வந்திருந்தான். பசங்க வேற எவனும் வரல, பொண்ணுங்களும் வரல.

அந்த பொண்ணோட தம்பிதான் முன்னாலயே நின்னுகிட்டு எல்லாத்தையும் வரவேற்றுகிட்டு இருந்தான்.

என்ன 'வாங்கண்ணா' ன்னு பலமா வரவேற்பெல்லாம் குடுத்துட்டு, சட்டுனு கட்டிபுடிக்கிற மாதிரி காதுகிட்ட 'மன்னிச்சுடுங்கண்ணா, சாரி' ன்னான்.

அடி வாங்கினாலும், அந்த பொண்ணு மனசு எவ்வளவு கஷ்டப்படும்னு பாக்கலாம்னுதான் போனேன். நல்லா கலகலப்பா சிரிச்சிகிட்டு முன்ன விட சந்தோஷமா இருந்துச்சி.

சிறு மாற்றங்களுடன் கூடிய மீள் இடுகை...

முரண்...

|

கவிதை தருகிறேன், காதல் தருவாயா என்றேன்,
காதலைத் தா... பிரிவினை தருகிறேன் என்றாள்...

உயிரைத் தருவேன், உன்னைத் தருவாயா என்றேன்,
உயிரைத் தா... என் கண்ணீரைத் தருகிறேன் என்றாள்.

கண்ணாய் இருப்பேன், கருத்தாய் காப்பேன் என்றேன்,
கருத்தே இல்லை உன் காதலில் என்றாள்.

பார்க்கும் யாவிலும் பாவை நீ என்றேன்,
பார் ஒரு கண் மருத்துவரை என்றாள்...

சொல்வதெல்லாம் தேனாய் என் காதில் என்றேன்,
கவனம் கடித்துவிடும் எறும்புகள் என்றாள்...

என்ன தான் சொல்ல வருகிறாய் என்றேன்,
என்ன சொல்ல?, சொல்வதற்கில்லை என்றாள்...

விருந்து...

|

விருந்து...

இனமழித்து மகி(ழ்)ந்தனை
இன்முகத்தில் வரவேற்று
சிறப்புறுத்தும் தாய்நாட்டின்
சிறுமையால் நாணி
சிந்தை யெல்லாம் கொதிக்க
தமிழ் காக்கா தமிழிருக்க
தலை குனிந்து வெட்கி
என் செய்வேன் தமிழே...
என்னினிய உறவே...

நிலை மாறும்...

பக்கத்தில் நெருப்பென
பராமல் இருப்பாரும்
விக்கித்தி நிற்குமொரு
வேளையது வந்து சேரும்
சக்கரம்தான் வாழ்வுமது
சத்தியமாய் உணர்ந்திட
எக்கணம் ஏங்குகிறேன்
இறையவனை வேண்டுகிறேன்...

பார்த்துப் பேசு...

|

'பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே' எனும் பழமொழியைக் கேள்வியுற்றிருக்கிறோம். அதன் உண்மைப் பொருள் தவிர்த்து உணர்ந்த ஒன்றினைப் பற்றியே இந்த இடுகை.

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயம். ஹாஸ்டலில் ஒவ்வொரு சனிக்கிழமையும் 'ஃப்ரீ' நைட். சாப்பிடுவதற்கு பிரட் ஜாம் மட்டும்தான் இருக்கும். வெளியே செல்லலாம், சினிமா பார்க்கலாம், தாமதமாய் திரும்ப வரலாம்.

அன்று ஃப்ரீ நைட். வெளியில் சாப்பிட்டுவிட்டு சினிமா செல்வதாய் உத்தேசித்து நண்பர்களுடன் கிளம்பினோம். பாதிபேர் எங்களுக்கு முன்னதாய் சென்று பீர் சாப்பிட்டுவிட்டு நேராக ஓட்டல் கிருஷ்ணபவனுக்கு வந்துவிட சப்தமாய் களைகட்டி, களேபரமாயிருந்தது. ஒரு வழியாய் சாப்பிட்டுவிட்டு பாதிபேர் வெளியே வந்து தம் போட்டபடி பேசிக்கொண்டிருக்க அப்போதுதான் வில்லங்கம் ஆரம்பமானது.

அங்கிருந்தவர்களில் ஒருவன் ஆஸ்டல் வார்டனைப் பற்றி ஏதோ சொல்ல ஆரம்பிக்க விவாதம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. 'அவன் கிடக்கிறான்' என ஆரம்பித்து எழுத இயலாத வார்த்தைகளால் அர்ச்சித்து அவரின் குடும்பத்தையே நடுத் தெருவிற்கு கொண்டு வந்தார்கள். அவர்களை சமாதானப்படுத்திய அந்த தருணத்தில் எதேச்சையாய் அருகில் இருந்த இருட்டுச் சந்தினைப் பார்த்தேன். யாரோ டி.வி.எஸ் 50 யை நிறுத்தி அதில் சாய்ந்து நின்றவாறு எங்களையேப் பார்த்துக் கொண்டிருக்க துணுக்குற்றேன். கும்மிருட்டிலும் எங்கள் ஹாஸ்டல் வார்டன் போல் இருந்தது.

'மாப்ளே, அவர் பாவம்டா, இவ்வளவு கேவலமா பேச வேண்டாம்டா' என சொல்ல, 'டேய் இந்த லூச மொதல்ல உதைக்கனும்டா' என என் மீது பாய்ந்தார்கள். சமாதானப்படுத்தி ஒரு வழியாய் படத்துக்குப் போய்விட்டு ஹாஸ்டலுக்கு திரும்பினோம்.

அடுத்த நாள் காலையில் வார்டன் எங்களையெல்லாம் பார்த்து சென்ற பார்வையிலிருந்தே அந்த இடத்தில் இருந்தது அவர்தான் என்பது தெளிவாய்ப் புரிந்தது. நண்பர்கள் எல்லாம் சொன்ன என்னை மறுபடியும் ஏளனமாய்ப் பார்த்து நக்கலடித்தார்கள். அன்று முழுக்க அவரைத் திரும்பவும் பார்க்காததால், எங்களை அழைத்து விசாரிக்காததால் அவராய் இருக்காதோ என்றல்லாம் கூட எண்ணினேன்.

திங்கள் காலை வகுப்புகளுக்கு சென்றதும் தான் எங்களுக்கு வேட்டு ஆரம்பமாகியது. பிரின்சிபால் வயதானவர், ஆஸ்டலுக்கு அருகேயிருந்த தங்கும் விடுதியில் இருந்தார். சனி ஞாயிறு வார விடுமுறையில் சென்றிருந்ததால் விஷயத்தை அவர் வந்தவுடன் சொல்லியிருப்பார் போலிருக்கிறது.

பிரின்சிபால் ரூமுக்கு எல்லோரையும் வரவழைத்து ஒருவழியாய் விசாரித்து அன்று சினிமா சென்றவர்களில் ஓட்டலில் சாப்பிட சென்றவர்களை மட்டும் இருக்கச் சொல்லி மற்றவர்களை வகுப்புக்கு அனுப்பி விட்டார்கள். வழக்கமாய் கண்டித்து விட்டுவிடும் பிரின்சிபால் அன்று கண்டிப்பாய் தண்டிக்கும் மன நிலையில் இருந்தார். பியூனை அனுப்பி வார்டனை அழைத்து வரச் சொன்னார்.

வார்டன், பிரின்சிபால்-க்கு வணக்கம் சொல்ல, 'சொல்லுங்க சார், இவங்கள்ல யார் உங்களைத் திட்டியது' எனக் கேட்டார். சரியாய் வெளியில் நின்று திட்டியவர்களை கைக்காட்ட அவர்களைத் தவிர மற்றவர்களை போகச் சொன்னார். என்னை சொல்லாததால் மற்றவர்களுடன் கிளம்ப நண்பர்களில் ஒருவன், 'சார் பிரபாகரும் இருந்தான்...' எனச் சொல்லி மாட்டிவிட்டான்.

'ஏன் சார் அவசரமா போறீங்க, வாங்க, வந்து ஜோதியில ஐக்கியமாகுங்க' என பிரின்சிபால் சொல்லவும் அடி வயிறு கலக்க ஆரம்பித்தது. இடைமறுத்த வார்டன் 'சார் அவங்கெல்லாம் என் குடும்பத்தை இழுத்து கண்டமேனிக்கு திட்டும்போது பிரபாகர் தான் சார், ஏன்டா இப்படியெல்லாம் சாரை திட்டுறீங்கன்னு கேட்டாரு. ஒரு வார்த்தையும் தப்பா பேசல, வேணும்னே மாட்ட விடறாங்க' என சொன்னார்.

'வார்டனைப் பத்தி பேச ஆரம்பிச்சது இவன் தான் என நண்பர்களில் ஒருவன் ஆணித்தரமாக சொல்லவும் 'பேசியது நீங்கதான், அனாவசியமா ஏம்பா அந்த பையனை மாட்டவிடுறீங்க' எனச் சொல்லி என்னை அனுப்பிவிட்டார்.

அப்புறம் பேசிய அந்த நாலுபேரையும் வார்டனுக்கு மன்னிப்பு கடிதம் எழுதித் தந்துவிட்டு உடனடியாக ஆஸ்டலை விட்டு காலி செய்ய சொல்லி விட்டார்கள். 'காலி செய்கிறோம், அப்புறம் எதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும், கேட்கவே மாட்டோம்' என பிடிவாதமாய் சாதிக்க, சரி காலி செய்தால் போதும் என இறங்கி வந்தார்கள்.

பக்கத்து தெருவில் வீடு எடுத்து, நடந்து செல்லும் தூரம்தான் என்றாலும் டாக்ஸியை வாடகைக்கு எடுத்து வந்து பந்தாவாக காலி செய்து கிளம்பி சென்றார்கள்.

அதன் பின் ஒரே மாதத்தில் ஆஸ்டலை காலி செய்து அவர்களோடு போய் சேர்ந்து கொண்டது தனி கதை. அதையெல்லாம் விட முக்கியமான விஷயம், அன்று என் நண்பன் சொன்னது முற்றிலும் உண்மை. 'வார்டன் ஏன்டா இப்படி இருக்கான்' என பேச்செடுத்தது நான் தான்.

வாழ்க்கைச் சக்கரம்...

|

வீழ்ந்திருக்கும்போது
வேண்டுவதெல்லாம்
ஆழ்மனத்தின் காயம்
ஆற்றிடும் மருந்து...

அப்போதே சொன்னேன்
அப்போதே நினைத்தேன்
இப்போது வேண்டாம்
என்னினிய உறவே...

எண்ணிலா எண்ணி
ஏதுவாய் எடுத்து
முன்னிறுத்தி செய்தும்
முடிவது துயரம்

எண்ணிய யாவும்
ஏதுவாய் நடந்தால்
மண்ணினில் எவரும்
மகிழ்வுடன் இருப்பர்.

வாழ்க்கையது உருண்டு
ஓடிடும் சக்கரம்
தாழ்வாயும் கீழே
தலையெடுத்தும் மேலே

எந்திரன் - என் பார்வையில்...

|

எந்திரன் பற்றி எல்லோரும் பிரித்து அலசிவிட்டதால் நம் பங்குக்கும் பார்த்ததை பகிர்ந்துகொள்ளலாமென இந்த இடுகை.

பிடித்த விஷயங்கள்:

ரஜினி - இந்த வயதிலும் தலைவர் துள்ளலாய் அசத்தியிருப்பது.

ஐஸ்வர்யா - என் வயதிலும் இன்னும் அழகாயிருப்பது.

ஏ.ஆர்.ரஹ்மான் - இசையால் படம் முழுதும் ஆள்வது.

கிளிமாஞ்சாரோ பாடல் - எடுத்த விதம், ஐஸ்வர்யாவின் நடனம் அத்தோடு தலைவரின் பெர்ஃபார்மன்ஸ்.

சங்கர் - இதுபோல் பிரம்மாண்டமாய் ஒரு தமிழ்ப்படம் எடுக்கமுடியுமென நிரூபித்துக் காட்டியது.

ரத்தினவேலு - கண்களுக்கு இதமான, அழகான காட்சிகளை கேமிராவில் சிறைபிடித்தது.

வசனம் - தலைவர் சுஜாதாவல் எழுதப்பட்டது என தனித்து தெரியும் வசனங்கள் மட்டும்.

கிளைமாக்ஸ் - அடிக்க வராதீங்க... காமெடி இல்லை என்ற குறையை தீர்த்ததனால்.

பிடிக்காத விஷயங்கள்:

விளம்பரம் - எரிச்சலூட்டும் வண்ணம் திரும்பத் திரும்ப போரடிக்கும் வண்ணம் இருப்பது.

சந்தானம் & கருணாஸ் : வரும் ஒரு சில காட்சிகளிலும் சூப்பராய் சொதப்புவது.

சன் பிக்சர்ஸ் - ரொம்பவும் ஓவாராய் பீத்திக்கொள்வது.

டிக்கெட் விலை - பத்து டாலருக்கு இருந்த டிக்கெட் விலை பதினைந்தாக ஆனது.

கொசு பிடித்தல் - ரஜினி கொசுபிடிக்கும் காட்சி... ரொம்பவும் நெளிய வைத்தது. இந்த சீனுக்கு ஐடியா கொடுத்தவருக்கு நோபல் பரிசுக்காக சிபாரிசு செய்யவேண்டும்.

புறக்கணிப்பு - சுஜாதாவின் பங்களிப்பினை மிக லேசாய் சொல்லி, மறந்தது.

சனி இரவு என்பதால் அரங்கு தொன்னூறு சதம் நிறைந்திருந்தது, நிறைய தமிழர்களும் பார்த்தார்கள். எந்தவொரு சப்தமும் இல்லாமல் பார்த்த முதல் ரஜினி படம். மொத்தத்தில் குழந்தைகளையும் ரஜினி ரசிகர்களையும் நிறைய கவரும்.

அப்பாவுக்கு பிறந்தநாள்...

|

அக்டோபர் ஏழு ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தைந்தில் பிறந்த என் அப்பா வை.ராமசாமி அவர்களுக்கு இன்று அறுபத்தைந்து முடிந்து அறுபத்தாறாவது பிறந்த நாள். சென்ற வருடமும் இதே நாளில் ஒரு இடுகை எழுதினேன். வழக்கம்போல் நேரில் சந்திக்க இயலாத காரணத்தால் இன்றும் இடுகையின் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து அவரின் ஆசியினை வேண்டிக்கொள்கிறேன்.

இங்கிருந்து அதிகமாய் அம்மாவின் செல்போனுக்கு அழைத்துத்தான் பேசுவது வழக்கம். 'என்னப்பா எப்போ பார்த்தாலும் ஆயாகிட்டத்தான் பேசுறீங்க, தாத்தாகிட்ட பேசுங்க' என ஓடிச் சென்று தாத்தாவிடம் கொடுத்துவிடுவார். 'என்னடா பையா அப்பாவை மறந்துட்டியா' என செல்லமாக கேட்பார். என்னை டா போட்டு அழைப்பது இந்த ஒரே தருணத்தில் தான், மிகவும் செல்லமாய். பதில் சொல்லுவதற்குள் ’இல்ல கண்ணு, சும்மா கேட்டேன்' எனச் சொல்லி குழந்தைகளைப்பற்றிய விஷயங்களைப் பேச ஆரம்பித்துவிடுவார்.

தம்பியின் மரணத்தின்போது சர்க்கரை நோயின் தாக்கம் காரணமாய் ஒரு காலில் அதிக வலியாகி நடக்க இயலாமல் அதிக பாதிப்புக்கு உள்ளாகியிருந்தார். எல்லாம் முடித்து கிளம்பி வரும்போது சுருக்கமாய் ‘அப்பா, நீங்கள் நன்றாக இருந்தால் தான் நான், நாங்கள் நன்றாக இருக்க முடியும்’ என சொல்லிவிட்டு வந்தேன். உடற்பயிற்சி, மருத்துவமுறைகளை முறையாய் பின்பற்றுதல் என இன்று முழு ஆரோக்யத்தோடு தினமும் பேரப்பிள்ளைகளோடு வாக்கிங் சென்று வருகிறார், அவர்களை கண்போல் பார்த்துக்கொள்கிறார்.

கவிதை எழுதுவார் என முன்பே சொல்லியிருக்கிறேன். அவரின் கவிதைகள் எல்லாவற்றையும் தொகுத்து வைத்திருக்கிறேன். திருமுருகன் பாமாலை என ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். அவரின் சில கவிதைகளை நினைவு கூர்ந்து பார்க்கையில்,

பூவேந்தும் சொல்லேந்தி
புனைந்திட்ட கவிதையினை
நாவேந்த வாய்மணக்கும்
கொம்புத்தேன் சுவையிழக்கும்

காவேந்தும் தன் தென்றல்
தணலாகி உடல் நோகும்
பாவேந்தன் என் ஆசான்
கண்ணதாசன் புகழ் வாழி...
...............

என கண்ணதாசனுக்காக எழுதிய பாடலின் சில வரிகளும்,

வண்ணமலர் சோலையிலே
வாசமலர் பூத்திருக்க
எண்ணம்கொண்ட வண்டினங்கள்
மலர்நாடி தேன் குடிக்கும்

வண்ணமலர் வாடியங்கே
வாசமது அற்றுப்போனால்
பண்ணிசைத்த வண்டினங்கள்
ஏறெடுத்தும் பார்ப்பதுண்டோ...

பணம் படைத்த மாந்தரெல்லாம்.... என தொடர்ந்து பொருள் இருக்கும் வரைதான் சுற்றம் என பொருள்படும்படி எழுதிய இந்த பாடலும் நினவிற்கு வருகின்றன. யோசித்து நினைவிற்கு வந்ததை எழுதியிருக்கிறேன். சொற்குற்றம் பொருட்குற்றம் எல்லாம் எனக்கே...

எந்த ஒரு கஷ்டத்தையும் மிகவும் எளிதாய் எடுத்துக்கொள்ளும் பக்குவம் வாய்ந்தவர். பிரச்சினைகளுக்கு அவர் தருகின்ற தீர்வுகள் மனதிற்கு இதமாயும், மெல்லிய மயிலிறகால் வருடுவது போல நாசூக்காக இருக்கும்.

தினமும் அதிகாலையில் குளித்து நெற்றியினை பட்டையாய் நீறு, சந்தனம் குங்குமம் என எல்லாம் அலங்கரித்து பாடல்களைப் பாடி பூஜித்து காதில் எம்.பி.த்ரீ ப்ளேயரில் பக்திப்பாடல்களை கேட்டவண்ணம் சோஃபாவில் அமர்ந்திருப்பார். எழுந்து வந்து ’குட்மார்னிங்பா’ என சொல்லும்போது நமக்கு வெட்கமாய் இருக்கும், உடனே நாமும் குளித்து தயாராகவேண்டுமென இருக்கும்.

அவரைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம், சொல்லலாம் இனி வரும் நாட்களில்...

எனக்கு வழிகாட்டியாய், நண்பனாய், ஆசானாய் இருக்கும் என் அப்பா, நல்ல ஆரோக்கியத்துடன் இன்னும் பல்லாண்டுகாலம் வாழ அவர் வணங்கும் முருகனை நானும் மனமுருகி வேண்டுகிறேன்.

அப்பா, ஐ லவ் யூ...

கல்மாடியோடு ஒரு (கற்பனை) சந்திப்பு

|

ஆசானின்  கதிரோட கலக்கல் கற்பனை(?)ப் பேட்டியைப் படித்துவிட்டு நம் பங்குக்கு ஒரு போட்டிக்காய் ஒரு பேட்டி இடுகை..

காமென்வெல்த் போட்டியில் தொடர்ந்து சொதப்பி வரும் கல்மாடியுடன் ஒரு சிறப்புப் பேட்டி(கற்பனை).

(நேயர்களுக்கு டெல்லியிலிருந்து இந்த பிராடு பீதாம்பரத்தின் அன்பு கலந்த வணக்கங்கள்!... இந்த நேரடி ஒளிபரப்பில், நமது 'நம்பினா நம்புங்க' டிவியின் பிரபலங்களோடு பேசலாம் நிகழ்ச்சியில், காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரான சுரேஷ் கல்மாடி அவர்களை சந்தித்து பேச இருக்கிறோம்)

பி.பீ : வணக்கம் கல்மாடி ஜீ, பிரபலங்களோடு பேசலாம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டமைக்கு எங்களது மனமார்ந்த நன்றி. பேட்டியை ஆரம்பிக்கலாமா?

கல்மாடி : தாராளமாய். ஒலிம்பிக் போட்டிகளை வேறு நடத்திக்கொண்டிருக்கிறோம், பரபரப்புக்கு இடையில் இங்கு வந்திருக்கிறேன்.

பி.பீ : என்னது ஒலிம்பிக்கா?

கல்மாடி : மன்னிக்கனும், குழப்பத்தில் சொல்லிவிட்டேன். தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்.

பி.பீ : (நமக்கு இன்னிக்கு நேரமே சரியில்லை) சரி, காங்கிரஸை நடத்திச் செல்லும் அன்னை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கல்மாடி : தற்பொழுதைய காங்கிரஸ் தலைவி இந்திரா காந்தி மிகவும் திறமையானவர்.அவரின் அரவணைப்பால்தான் கட்சி இன்று சிறப்பாய் இருக்கிறது.

பி.பீ : அருமை. உங்களின் கட்சியினைப் பற்றிய மேலும் சில விஷயங்களை எங்களின் நேயர்களுக்காக சொல்லுங்களேன்.

கல்மாடி : நான் சார்ந்திருக்கும் திராவிட இயக்கமான பா.ஜா.கா. மத சார்பற்றது. நாட்டு மக்களுக்காக, உழைப்பதற்காகவே உருவாக்கப்பட்டது. உலக சுதந்திரத்துக்காகப் பாடுபட்டது...

பி.பீ : சரி, காமன்வெல்த் சம்மந்தமாய் ஒரு கேள்வி. நீங்கள் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்து கட்டுமானம் சரியில்லாத்தால் கூரை இடிந்து பிழைத்துக்கொண்டாதாய் சரத்பவார் நக்கல் செய்திருக்கிறாரே, அது பற்றி உங்கள் கருத்து?

கல்மாடி : இது ஜனநாயக நாடு. எவர் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். குறிப்பாய் எதிர் கட்சியினர் பேசுவதை நாம் பொருட்படுத்தக்கூடாது.

பி.பீ : எப்படி சார் இப்படியெல்லாம் தகவல்களை அள்ளி விடுகிறீர்கள்? சரி உங்களின் எதிர்காலத்திட்டங்கள் என்ன?

கல்மாடி : ராஜீவ் காந்தியை பிரதமராக்கனும். வர இருக்கிற எல்லா விளையாட்டுப் போட்டிகளுக்கும் நான் ஒருங்கிணைப்பாளராய் இருந்து, கலக்க வேண்டும்.

பி.பீ : கண்டிப்பாய், நாங்களெல்லாம் கலங்கித்தான் போயிருக்கிறோம் கல்மாடி ஜி... உங்களுக்கு எங்களின் நம்பினா நம்புங்க டிவியின் மனமார்ந்த நன்றி.

கல்மாடி : நானும் இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஸ்டார் ப்ளஸ் நேயர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்..

(பீதாம்பரம் இதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் ஸ்டுடியோவை விட்டு தலைதெறிக்க ஓடுகிறார்)

ரங்கு

|

அவரை எல்லோரும் ரங்கு என்றுதான் கூப்பிடுவார்கள், உண்மையான பெயர் ரங்கநாதன். எப்போதும் சிரித்த முகத்தோடுதான் இருப்பார், கோபப்பட்டு எவரும் பார்த்ததே கிடையாது. அந்த ஊரில் எல்லோருக்கும் அவரை கண்டிப்பாகத் தெரியும், குறிப்பாய் குழந்தைகளுக்கு. ஆம் குழந்தைகள் என்றால் அவருக்கு கொள்ளைப் பிரியம். பார்க்கும்போதெல்லாம் கண்டிப்பாய் மிட்டாய் தருவது அவரது வழக்கம்.

குழந்தைகளுக்கு தங்களது அப்பாக்களை விடவும் ரங்கு மாமாவை அதிகம் பிடிக்கக் காரணம் அவரும் ஒரு குழந்தையாய் மாறிப் பழகுவதும், கண்டிப்பை கண்டதில்லை என்பதாலும், அதைவிட அவர் தரும் மிட்டாய்க்காகவும் இருக்கலாம்.

மாநிறம், மீசையில்லாத மழிக்கப்பட்ட முகம், மொச்சை மொச்சையாய் வெண்ணிற பற்கள். சராசரியான உயரத்தில் ஒடிசலான தேகம். எப்போதும் மங்கலான வெள்ளை வேட்டி, கதரில் ஒரு சட்டை... இதுதான் இவரின் அடையாளம்.

அப்பா ஊரில் பெரிய மிராசுதார், நிறைய சம்பாத்து வைத்திருந்தார். ரங்குவின் செலவுக்கென அவரால் முழுமையால் பார்த்துக்கொள்ளப்படும் ஒரு மாவுமில். மூன்று பேஸ் கரண்ட் என்றால் மட்டும் மாவரைத்துக் கொடுத்துவிட்டு மற்ற நேரங்களில் ஊர் வேலை செய்ய கிளம்பிவிடுவார். வசதி குறைவானவர்களுக்கு கொடுக்கும் காசினை வாங்கிகொண்டு மாவினை அரைத்துக்கொடுப்பார். கரண்ட் பில் கட்டியது போக மீதம் அவரின் செலவுக்கு சரியாய் இருக்கும்.

பேசும் பேச்சில், செயல்களில் அவரிடம் பெண்மைத்தனம் மிகுந்து இருக்கும். விழாக்களில் பெண்கள் செய்யும் சடங்குகளை அவர்களைவிட சிறப்பாய் செய்வார்.தண்ணீர் குடத்தினை பெண்கள் போல் அழகாய் சுமந்து வருவார். எவரேனும் கிண்டல் செய்தால் கண்டுகொள்ளவே மாட்டார். அவரை 'போடா பொட்டையா' எனத் திட்டினாலும், 'ஆமாம் இவரு மட்டும் ஆம்பள சிங்கம், தர்மன் கிட்டே உதை வாங்கினது தெரியாது?' என அவர் எப்போதோ நடந்த சம்பவத்தைச் சொல்லி சொன்னவரின் வாயை அடைப்பார்.

ஜாதி பேதமெல்லாம் பார்க்கவே மாட்டார். எல்லோரரையும் மாமா, மச்சான், அண்ணா, அண்ணி, மதனி, அத்தை என உறவுமுறையோடுதான் அழைப்பார். ஊரில் யாருக்கேனும் உடம்புக்கு சுகமில்லை என்றால் சரியாகும் வரை தினமும் சம்மந்தப்பட்டவரின் வீட்டுக்கு சென்று பார்த்து வருவார். அங்கிருப்பவர்களுக்கு ஆறுதல் சொல்லுவது, வியாதிக்கான விளக்கமான தகவல்களைப் பரிமாறி அவர்களை சீக்கிரம் குணமடைய ஆறுதல் சொல்லுவார். முடிந்த அளவுக்கு அவராலான உதவிகளை தயக்கமின்றி செய்வார்.

அதே போல்தான் ஏதேனும் விஷேசமென்றால். வலியச் சென்று, கடைசிவரை பம்பரமாய் சுழன்று எல்லா வேலைகளையும் செய்து தருவார். வயது ஐம்பதுக்கு மேல் என்றாலும் அவர் திருமணமே செய்துகொள்ளவில்லை.கேட்டால் சிரித்துக்கொண்டே 'நமக்கெல்லாம் எதுக்கு? எல்லோரும் நல்லாருந்தா சரி' என சொல்லுவார்.

அவரின் உடன் பிறந்தோரெல்லாம் சொத்தில் பாகத்தினைப் பிரித்துக்கொண்டு அவருக்கு சொற்பமாய் நிலத்தினையும், ஓட்டினால் வேயப்பட்ட ஒரு வீட்டினையும், பார்த்துக்கொண்டிருந்த மாவு மில்லையும் ஒதுக்கிவிட, எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆதரவாய் அவரின் அம்மா இருந்ததார்கள்.

தனது இளைய மகன் திருமணம் செய்துகொள்ளவில்லையே என எல்லோரிடமும் சொல்லிச் சொல்லி அங்கலாய்த்துக்கொண்டிருந்தார், அந்த கவலையோடு கண்மூடியும் விட்டார். அன்றுதான் ரங்குவை சோர்ந்த முகத்தோடு அந்த ஊரில் உள்ள எல்லோரும் பார்த்தார்கள்.

அதன் பின்னும் அவர் அவரின் வழக்கமான வேலைகளை செய்தவண்ணம்தான் இருந்தார், ஆனாலும் அவரின் முகத்தில் முன்பிருந்த மலர்ச்சி இப்போது இல்லை. ஊரில் மற்றொரு நவீன மாவு மில் வந்துவிட அவருக்கான வருமானம் குறைய ஆரம்பித்தது. அவருக்கென ஒதுக்கிய கரம்பு நிலத்தில் ஏதும் விளைவிக்காததால், விளையாததால் அவரின் அன்றாட செலவுக்கே தடுமாற வேண்டியிருந்தது.

ஊரில் எல்லோருக்கும் வந்த ஒரு வித காய்ச்சல் அவரை மட்டும் விட்டு பிரியாமல் ஒட்டிக்கொள்ள, படுக்கையில் வீழ்த்தியது. எல்லோரும் அவரை சென்று பார்த்துவந்தார்கள், முடிந்த அளவுக்கு பார்த்துக்கொண்டார்கள்.

விருந்தும் மருந்தும் மூன்று வேளைக்கு என்பது போல் ஒரு வாரத்திற்கு பிறகு அவரை எவரும் கண்டுகொள்ளவில்லை. அவர் இனிமேல் தேறமாட்டார் என எல்லோரும் கைவிட்டுவிட அவரின் உடல் நிலை இன்னும் மோசமானது. அந்த நிலையில் அவரின் சின்னம்மா(சித்தி) ஒரு வண்டியில் ஏற்றி அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார், எல்லோரும் பெங்களூர் சென்றுவிட்டதாய் பேசிக்கொண்டார்கள்.

அவரைப் பற்றிய எந்த ஒரு தகவலும் சில மாதங்களுக்கு இல்லை. ஒரு வருடத்திற்குப்பின் ரங்கு திருமணக்கோலத்தில் வந்து இறங்கினார். புதிதாய் பெரிதாய் மீசையெல்லாம் வைத்திருந்தார். இந்த வயதிலா என எல்லோரும் ஆச்சர்யப்பட தனது மனைவியின் தோளில் கைபோட்டபடி பாரதியின் கூற்றுப்படி நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை என கம்பீரமாக இருந்தார்.

காந்தி பிறந்த நாள்...காமராஜர் இறந்த நாள்.

|

இன்று அக்டோபர் இரண்டு. பெயரளவில் மது விற்பனையாகாத, விடுமுறை நாட்களில் ஒன்று. ஆனால் எனது பால்ய நாட்களில் மிகவும் விஷேசமான நாள்.

அப்பா தீவிர காங்கிரஸ்காரர். வீட்டில் காந்தி, காமராஜ், நேரு, இந்திரா என எல்லா காங்கிரசைச் சார்ந்த தலைவர்களின் புகைப்படங்களும் வரவேற்பரையில் மாட்டப் பட்டிருக்கும். பெரும்பாலும் எல்லாம் திருமணத்தின்போது அன்பளிப்பாய் வந்தவைகளே.

விடுமுறை என்பதால் அதிகாலையிலேயே குளித்து என்னையும் குளிப்பாட்டி காங்கிரஸ் கொடி இருக்கும் பேருந்து நிறுத்தம் அருகே அழைத்து சென்று விடுவார். அங்கு எங்களின் வீட்டிலிருந்து எடுத்து செல்லப்பட்ட காமராஜின் புகைப்படம் மாலையிடப்பட்டு பொட்டு வைத்து தட்டில் நிறைய மிட்டாய்களுடன் இருக்கும். நைந்து போயிருந்த காங்கிரஸ் கொடி புதிதாய் மாற்றப்பட்டு, ரோஜாப் பூவிதழ்களை உள்ளடக்கி ஏற்றுவதற்கு தயாராய் இருக்கும்.

கோவிந்தன் மாமாவும் காங்கிரஸ் காரர் என்பதால் அவரின் சவுண்ட் சிஸ்டத்திலிருந்து கம்பத்தில் கட்டப்பட்ட ஒலி பெருக்கிகள் சப்தமாய் காங்கிரஸ் பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கும். ’மாமா, சினிமா பாடல்களைப் போடுங்கள்’ எனக் கெஞ்சுவோம், கொடியேற்றியவுடன் எனச் சொல்லி எங்களை சமாதானப்படுத்துவார்.

எல்லோரும் வந்தவுடன், கொடியேற்றி வணக்கம் செலுத்தி சந்தனப்பொட்டினை எல்லோரும் வைத்துக்கொள்ள, மிட்டாய்களை வினியோகிப்பார்கள். அடுத்த அரைமணிநேரம் காத்திருந்து சினிமா ரெக்கார்ட் மாற்றிவிட்டு சந்தோசமாய் வீடு திரும்புவோம்.

இன்று பட்டி தொட்டியெல்லாம் சத்துணவு வழங்கப்படுகிறது என்றாலும் அதற்கு காமராஜ் அவர்களால் கொண்டு வரப்பட்ட மதிய உணவுத்திட்டம் தான் முன்னோடி. நான்காவது படித்த போது கண்டிப்பாய் ஏழைக் குழைந்தைகளுக்குதான் சத்துணவு கிடைக்கும். கோதுமையில் செய்யப்பட்ட சாதம், வெல்லத்தூள் என கொடுப்பார்கள்.

அப்பா அரசாங்க வேலையில் இருந்ததால் எனக்கெல்லாம் கிடைக்காது. ஆனாலும் உணவு இடும் ஆயா எனது சொந்தக்காரர் என்பதால் நான் சாப்பாடு எடுத்துச்செல்லும் தூக்கு போனியில் சாப்பாட்டினை வைத்து பொட்டலமாய் வெல்லம் மடித்து தருவார்கள். வீட்டில் வந்து சாப்பிடுவேன்.

அப்பாவிடம் காமராஜ் ஏன் அக்டோபர் இரண்டில் இறந்தார் என ஒருமுறை நிறையவே வருத்தப்பட்டேன்.  காரணம் கேட்டதற்கு வேறொரு நாளில் இறந்திருந்தால் இன்னொரு நாள் விடுமுறை கூடுதலாய் கிடைத்திருக்குமே எனச் சொன்னேன்.

இந்த இடுகை எழுதும் இந்த காலைப்பொழுதில் அப்பாவை அழைத்தேன். கோவிந்தன் மாமா இந்த வருடம் இல்லை, வழக்கம்போல் கொடியேற்ற கிளம்பிக் கொண்டிருப்பதாய் சொன்னார். இன்னும் சில வருடங்களுக்காவது இது தொடரும் என எண்ணுகிறேன்.

கல்விக்கண் திறந்த கர்மவீரரை நினைவு கூர்வோம், காந்தியின் சத்தியம், அகிம்சை ஆகியவற்றை பின்பற்ற முயற்சிப்போம்.

இருநூறாவது இடுகை...

|

இதுவரை எத்தனை இடுகைகள் எழுதியிருக்கிறோம் என எதேச்சையாய் பார்க்க இருநூற்றைத் தாண்டியிருப்பது தெரியவந்தது. கொஞ்சம் வியப்பாயும் ஆச்சர்யமாயும் இருந்தது, இவ்வளவு எழுதியிருக்கிறோமா என. மீள் இடுகைகளை தவிர்த்தால் இது இருநூறாவது இடுகை. ஆம், இத் தருணத்தில் இந்த வலையுலகிற்கு கண்டிப்பாய் எனது மனமார்ந்த நன்றியினை சொல்லியே ஆகவேண்டும், எனது எண்ணங்களை எழுத்துக்களாய் மாற்றியதிற்காக, அதை பகிர்ந்து கொள்ள நல்ல நட்புக்களையும், சொந்தங்களையும் ஏற்படுத்தித் தந்தமைக்காக...!

எழுத வந்தபோதிருந்த சூழல் கண்டிப்பாய் இப்போது இல்லை. நிறைய பேர் எழுதுகிறார்கள், பல புதிய விஷயங்களைத் தெளிவாய்த் தருகிறார்கள். இப்போதெல்லம் தினம் வருகின்ற இடுகைகளின் எண்ணிக்கைகள் அதிகமாய் படிக்க நேரம் ஒதுக்க இயலாத அளவிற்கு இருக்கின்றன. அதே சமயம் சர்ச்சையான விஷயங்களும் இல்லாமல் இல்லை. தடியெடுத்தவன் தண்டல்காரன் எனும் போக்கும், தரக்குறைவான விமர்சனங்கள், தகாத வார்த்தைகள் என சில விஷயங்கள் அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

வலையுலகில் நுழைந்ததிலிருந்து இன்றுவரை நிறைய நட்புக்கள், சொந்தங்கள். இவ்வாறு சொல்லுவதற்குக் காரணம் பார்க்கும், பழகும் எல்லோரிடமும் நட்பு துளிர்த்தாலும் இறுதிவரை தொடரப்போவது வெகு சிலரோடு தானே? அந்த வகையில் இன்று ஏராளமான நிரந்தர நண்பர்கள், என் வாழ்வோடு இயைந்துவிட்ட சொந்தங்கள் என பூரிப்பாக இருக்கிறேன்.

என்னைத் தொடரும் நூற்றுக்கும் மேற்பட்ட அன்பு உள்ளங்களுக்கு என் மனப்பூர்வமான அன்புகலந்த நன்றியினை இதன் வாயிலாய் தெரிவித்துக்கொள்கிறேன்.  சூழல், வேலைப்பளு ஆகியவற்றால் முன்புபோல் அதிக இடங்களில் பின்னூட்டமிட இயலவில்லை. ஆனாலும் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் படித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

இதில் குறிப்பிட்டு எவரையேனும் சொல்லவேண்டுமென்றால் நிச்சயம் பழைய பல்லவியை திரும்ப பாடுவதாய் இருக்கும். பல இடுகைகளின் வாயிலாய் திரும்ப திரும்ப அவர்களைக் குறிப்பிட்டிருக்கிறேன். தொடர்ந்து படிக்கும் எல்லோருக்கும் அவர்களைத் தெரியும் என்பதால் அவர்களுக்கெல்லாம் எனது ஸ்பெஷல் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த இடத்தில் ஒரு சம்பவத்தைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். ராகவன் அண்ணா சிங்கை வந்திருந்த போது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த உன்னதமான நபரை, அன்பு அண்ணனை சந்தித்த அந்த தருணத்தில், ‘வாடா பெரிய மனுஷா, சௌக்யமா’ என வரவேற்றபோது சில்லென உணர்ந்தேன். முதல் முறை பார்க்கும்போதே பல வருடங்கள் பழகிய உணர்வு அந்த ஒரு நொடியில் தொற்றிக்கொள்ள, அதன் பின் அவரோடு பேசிய தருணங்கள் என் வாழ்வின் மறக்க இயலாதவைகளில் ஒன்றாய் இயைந்துவிட்டது. கனிவின் உருவமாய் அண்ணி, இன்றும் என் கண்ணில் நிற்கும் அன்பு அர்விந்த்... ஆகா, இறைவா உனக்கு நன்றி.

சிங்கை பதிவர்களிடம் ராகவன் அண்ணா விளையாட்டாய், ‘எப்பா, இவருதான் பிரபாகர், வானம்பாடிகளோட ரைட் ஹேண்ட், அவரோட சிஷ்யன்’ என சொல்லியபோது கொஞ்சம் பெருமையாயும் பயமாயும் இருந்தது. என் ஆதர்ஷ நாயகன் என் ஆசானோடு சேர்த்து சொல்லும்போது எனக்கு தகுதி இருக்கிறதா என ஒரு கேள்வியும், அதை வளர்த்துக் கொள்ளவேண்டுமே என ஒரு எண்ணமும் எழுந்தது.

கேபிள் அண்ணா மூலம் அறிமுகமாகி இன்று எனக்கு சொந்தமான என் ஆருயிர் நண்பர் புண்ணாக்கு மூட்டை என சொல்லிக்கொள்ளும் சரக்கு மூட்டை(தலைவரே சரிதானே?) பாலா அவர்கள் எங்கிருந்தாலும் என்னை அழைத்து வாரம் ஒரு முறை பேசிவிடுவார். நைஜீரியாவோ, சென்னையோ... அவரின் அழைப்பு தவறாமல் இருக்கும். அவரின் இந்த உறவும் இந்த வலை தந்ததே. அவர் தந்திருக்கும் தகவல்கள் இன்னும் பல வருடங்களுக்கு வலையேற்ற உதவியாய் இருக்கும். அவரோடு பேசுவதே ஒரு இனிமையான அனுபவம், அதனால்தான் சரக்கு மூட்டை என்றேன்.

எனக்காகவே வாழ்ந்து,  எனது ஒவ்வொரு இடுகையினையும் முதலில் செவிவழிக்கேட்டு, படித்து, ஊக்குத்து,  இடுகைக்கு விஷயங்க்ளைப் பகிர்ந்து, இளமையில் இறைவனைச் சேர்ந்த, இன்றும் என்னுடனே இருக்கும் என் தம்பி திவாகர்.... என்ன சொல்ல சொல்ல வார்த்தைகள் இல்லை.

இறுதியாய் எனக்கு பின்னூட்டமிடும், என்னைப் படிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றியினை மீண்டும் தெரிவித்து, இன்னும் சிறப்பாய் இடுகைகளைத் தர முயற்சிக்கிறேன் எனச் சொல்லி, என்றும் நன்றியுடன்...

பிரபாகர்...

விகடம் 1.1.1

|

படித்த, அன்றாட வாழ்வில் நிகழ்ந்த நகைச்சுவை சம்பவங்களை இந்த விகடம் வரிசையில் எழுத ஆசை. படித்து உங்களின் கருத்தினை சொல்லுங்களேன்...

*****
ஒருத்தர் கழுதையில் போய்க்கொண்டிருந்தபோது எதிரில் இன்னொருவர் குதிரையில் வருவதைப்  பார்த்து 'எஸ்குஸ்மி, இந்த கழுதையைத் தரேன், உங்க குதிரையைத் தர்றீங்களா?' எனக் கேட்டாராம். அதற்கு எதிரில் வந்த நபர், 'யாராவது கழுதைக்கு குதிரையை தருவாங்களா?, என்னை அந்த அளவுக்கு கேனைன்னு நினைச்சியா?' என பதிலுக்குக் கேட்க, 'ஒரு வேளை அப்படி இருந்தா'  என பதில் சொன்னாராம். என்ன விவரம் பாருங்க?
*****
என் சித்தப்பாவிடம் அவர் மகன் விவேக் 'அப்பா கட்டுரை நோட்டு வாங்க நூறு நூபாய் வேணும்' எனக்கேட்க சரி என அவர் இருபது நூபாய் கொடுத்தார். அவனும் பதில் ஏதும் சொல்லாமல் வாங்கிச் செல்ல எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இருவரிடமும் தனித்தனியே கேட்டு கடைசியில் நான் மயக்கமானேன்.

சித்தப்பா 'கட்டுரை நோட்டு பதினாறு ரூபாயிலிருந்து இருபது ரூபாய்க்குள்ளத்தான் இருக்கும். கேட்டதைக் கொடுத்திட முடியுமா?'

விவேக் 'நூறு ரூபா கேட்டாத்தான் இருபது ரூபாயாவது கொடுப்பாரு. சரியான காசு கேட்டா எப்பாவாச்சும் கொடுத்தத சொல்லி, அதுல மீதிய என்ன பண்ணினன்னு ஆயிரத்தெட்டு கேள்வி கேட்பாரு'
*****
நேற்று அம்மாவினை அழைத்தபோது அவர்களுக்கு பதில் எடுத்து பேசியது என் மகன் விஷாக்.

'அப்பா நீங்க புளிச்ச கீரைன்னா ரொம்ப விரும்பி சாப்பிடுவீங்களா?'

'ஆமாம் குட்டி, என்ன விஷயம்?'

'ஆயா இதைதான் இன்னிக்கு செஞ்சிருக்காங்க, எனக்குப் பிடிக்காது, சாப்பிட மாட்டேன்னு சொன்னேன், உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்னு சின்ன வயசிலிருந்து விரும்பி சாப்பிடுவீங்கன்னு சொன்னாங்க, அதான் கேட்டேன்' எனச் சொல்லிவிட்டு 'ஆயாகிட்ட தர்றேன்' என கொடுத்துவிட்டார்.

'பிரபு இந்த கூத்த பாரேன், உனக்கு பிடிக்கும்னு சொன்னதும் அதை கன்ஃபார்ம் பண்ணிட்டு ரசிச்சி சாப்பிடறான்' என ஆச்சரியப்பட்டார். எனக்குள் ஒரு கேள்வி, எனக்கு பிடிக்கும் என்பதற்காக தனக்கும் பிடித்ததாக மாற்றிக்கொள்ளும் இது இன்னும் எத்தனை நாளைக்கு?

வைரம்...காமினி...பரந்தாமன் (சவால் சிறுகதை)

|

ஆஸ்பத்திரி.

'ஐ ஏம் சாரி, ஆப்ரேஷன் நேத்துதான் முடிஞ்சது, கண்டிப்பா உங்களை டிஸ்சார்ஜ் செய்ய முடியாது'

'இதுக்காகத் தான் இத்தனை கஷ்டப்பட்டேன் டாக்டர்,கிளைமாக்ஸ் மட்டும்தான் பாக்கி, நான் இங்க இருக்கிறதே அவங்க யாருக்கும் தெரியாது, கண்டிப்பா நான் ஷூட்டிங் போயாகனும்...'

'நோ காமினி, யூ நீட் ரெஸ்ட் ஃபார் அட்லீஸ்ட் டூ டேஸ்' டாக்டர் ரவி கட்டாயமாய் சொல்லிவிட்டு மாஸ்க்கை அவளின் முகத்தில் பொறுத்திவிட்டு அகன்றார்.

காமினி தமிழ்த் திரையின் வளர்ந்து வரும் கதாநாயகி. திடீரென வயிற்றுவலி வர யாருக்கும் தெரியாமல் அட்மிட் ஆகி ஒரு மைனர் ஆப்ரேஷன், ஒரே நாள் என சொல்லவும் ஒத்துக்கொள்ள, முடிந்தபின் கண்டிப்பாய் இன்னும் இரு நாட்கள் இருந்தாகவேண்டும் என சொல்லவும்தான் மேற்கண்ட உரையாடல்.

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

*********
விமான நிலையம்.

துபாயிலிருந்து வரும் அந்த விமானத்திற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரின் தலைமையில் ஒரு குழுவே காத்திருந்தது. வரும் ஒரு பயணி வைரம் கடத்துவதாய் வந்த ஓர் வலுவான தகவலின் பேரில்.

"என்னய்யா பக்கத்துல ஒரே கும்பலா இருக்கு" என இன்ஸ் கேட்க,

'காமினி நடிக்கிற படத்தின் கிளைமாக்ஸ் சார், பர்மிசன் வாங்கி எடுத்திட்டு இருக்காங்க" என கான்ஸ் சொன்னார்.

விமானம் தரை இறங்கியதும் விமானத்திலிருந்து சிறிய கைப்பையுடன் மாடல் காமினி ஒய்யாரமாய் இறங்கி இமிக்ரேசனை நோக்கி எல்லோருடனும் இயல்பாய் நடந்தாள்.

*********
ஏர்போர்ட் ஷூட்டிங் ஸ்பாட்.

அனுமதி பெற்று ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது. கிளைமாக்ஸ் காட்சியினை எடுத்துக்கொண்டிருந்தார்கள். காமினி தோளில் மாட்டிய பையோடு இருக்க, துப்பாக்கியோடு வில்லன் சிவா. காப்பாற்றத் தயாராய் கதாநாயகன் சுஜீத். ரெடி டேக் என சொன்னவுடன்,

"என்னை சுட்டாலும் கவலை இல்லை நான் போய்த்தான் ஆகனும்?" என காமினி கிளம்ப,

"ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை" என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

காட்சியின் படி துப்பாக்கியின் ட்ரிக்கரை அழுத்தும்போது ஹீரோ பாய்ந்து தட்டிவிடவேண்டும், துப்பாக்கி வெடித்து மேலே இருக்கும் சரவிளக்கில் பட்டு அறுந்து அப்படியே கீழே விழ வேண்டும், அதன் பின் ஃபைட்.

சிவா ட்ரிக்கரை அழுத்த துப்பாக்கியில் டம்மி புல்லட்டுக்கு பதில் யாரோ ஒரிஜினல் புல்லட் மாற்றி வைத்துவிட அது உண்மையில் வெடித்து அங்கிருந்த ஒரு டெக்னீஷியனின் தோளில் மேல் பாய்ந்தது. அவர் அலறலுடன் பொத்தென்று சாய அந்த இடமே களேபரமானது.

*********
ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்.

"காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே" என்று பாராட்டினார் பரந்தாமன்.

காமினி திரு திருவென விழித்து "டார்லிங், எனக்கு, ஒன்னுமே எனக்கு புரியல. என்ன சொல்றீங்க?" எனக் கேட்டாள்.

பரந்தாமன் உள்ளே புதிதாய் வந்த ஒரு நபரைப் பார்த்து, "வாய்யா தனா, உனக்குத்தான் நன்றி சொல்லனும். ஷூட்டிங்ல துப்பாக்கியில ஒரிஜினல குண்டப் போட்டு கலக்கிட்டய்யா. அந்த களேபரத்தாலத் தான் காமினிய சரி வர செக் பண்ணாம விட்டுட்டாங்க, இந்தா உன் பங்கு" என ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டுக்கட்டு ஒன்றை அவனது பாக்கெட்டில் திணித்துவிட்டு,

"சாரி காமினி, உங்கிட்ட சொல்லாமயே உன்னை டைமண்ட் கடத்த காரியரா உபயோகப்படுத்திக்கிட்டோம் . உன் பேக்கேஜ்ல இருந்த வைரம் இப்போ சேஃபா என் கைல..." என ஹா ஹா என அட்டகாசமாய் சிரிக்க ஆரம்பித்தார்.

கொஞ்ச நேரம் கழித்தி "டார்லிங், லெட் மி கோ டு ரெஸ்ட் ரூம்" என சொல்லிய காமினி மெதுவாய் அங்கிருந்து விலகி, ஏற்கனவே ஒரு பார்ட்டியில் அறிமுகமான கமிஷ்னரின் எண்ணுக்கு அழைத்தாள்.

சேற்றில் கல்...

|

அது ஒரு அழகிய ஆற்றங்கரை. ஆற்றினில் கரை புரண்டு வெள்ளம் கருமை நிறத்தில் ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றுக்கு செல்லும் அந்த ஒரு பாதையின் இரு மருங்கிலும் பசுமையாய் கமுகு, மா, வாழை, பலா என பல்வகையான மரங்கள் கனிகளை சொரிந்த வண்ணம் செழுமையாய் இருந்தன. சந்தோஷமாய் துள்ளிக் குதித்தோடும் மான்கள், அங்கிங்கும் ஓடியாடும் வெண்ணிற முயல்கள், மரங்களிடளையே பழங்களை உதிர்த்து ஆடி ஓடி தாவி விளையாடும் வானரங்கள், மலர்ந்திருக்கும் பூக்கள், அவைகளில் தேனுண்ண ரீங்காரமிடும் வண்டுகள்...

கரு மேகங்கள் போன்று திரண்டிருந்த அந்த யானைக் கூட்டம் ஆற்றங்கரையில் அடந்திருந்த சோலையில் கனி வகைகளையெல்லாம் பசியாறிய பின் ஆற்று வெள்ளத்தில் நீராடி, இதோ இப்போதுதான் ஆற்றினை விடுத்து வரிசையாய் தமது இடத்துக்கு கிளம்பத்தொடங்கின.

செல்லும் வழியில் இருந்த ஒரு சகதி நிரம்பிய குட்டையில் புரண்டு விளையாடிய கூர்மங்கள் திடீரென குதூகலித்து யானைகள் வரும் வழியில் ஓடிவர ஆரம்பித்தன. யானைகள் சட்டென விலகி அவைகள்  செல்லும் வரை பொறுமையாய் காத்திருக்க, அவைகளுக்கெல்லாம் அதீத மகிழ்ச்சி அவ்வளவு பெரிய யானைகளுக்கே தங்களைக் கண்டால் பயம் என.

ஆனால் அவைகளைத்தவிர அங்கிருந்த யாவற்றுக்கும் தெரியும் ஏன் ஒதுங்கி நின்றன என.

எந்திரன் பார்க்கனும்... - தொடர் பதிவு...

|

ஆருயிர் நண்பர் சேட்டை அன்போடு இந்த தொடர்பதிவுக்கு அழைத்ததற்காக அன்பு கலந்த வணக்கத்தோடு நன்றி சொல்லி, ராமருக்கு அனில் போல் (இதையும் ஆராய்ச்சி செய்து ராமர் வாழ்ந்ததாக சொல்லப்படும் காலத்தில் அனில் இல்லை என்று கூட யாராவது இடுகையிடலாம், அதற்கெல்லாம் நாம் பொறுப்பு இல்லைங்கோ!) எந்திரன் படத்துக்கு நாமும் ஒரு இடுகை இடலாமென எண்ணி இதோ களத்தில். (இந்த உதாரணம் சரியில்லையே என நினைத்தால்... சாரிங்க, ஒரு ஃப்ளோவில் எழுதிட்டேன்...)

அவர் ரொம்பவும் வித்தியாசமான ஆள், எதற்கெடுத்தாலும் சந்தேகப் படுவார். உதாரணமாய் வீட்டை பூட்டிவிட்டு போகும்போது நன்றாய் கை வலிக்க இழுத்து தொங்கி பார்த்துவிட்டுத்தான் போவார். தெரு முனைக்கு போனவுடன் பூட்டினோமா என சந்தேகம் வர, திரும்பவும் வந்து பார்த்துவிட்டு போவார்.பஸ்ஸில் ஏறியவுடன் சரியான பஸ்ஸில் தான் ஏறியிருக்கிறோமா என சந்தேகம் டிக்கெட் வாங்கும்வரை. அதன்பின் மறக்காமல் டிக்கெட் வாங்கிவிட்டு ஸ்டேஜ் வரும் வரை பாக்கெட்ல பத்திரமா இருக்கிறதா எனத் தொட்டு பார்த்துக்கொண்டே வருவார்.

அடுத்ததாய் ஒரு சின்ன விசயத்தை ரொம்ப பூதாகாரமாய் கற்பனை செய்வார். ஒரு வாழைப்பழத்தோல் கிடந்தால் அதில் ஒருவர் வழுக்கி விழுந்து அவரை மானசீகமாய் போட்டோவில் மாட்டும்வரை யோசித்து, கடைசியாய் அதை எடுத்து போடாமால் போவார்.

மொத்தத்தில் யாரையும் நம்ப மாட்டார், விதிவிலக்காய் குடும்ப டாக்டரை மட்டும். ஒரு முறை அவருக்கு காலையிலேயே தலைவலியாய் இருக்க, வாழ்க்கையில் அவர் நம்பும் ஒரே நபரான டாக்டரைப் பார்க்க போயிருந்தார். நன்றாக பரிசோதித்து ஒன்றுமில்லை ஓய்வு தான் தேவையென வலியுறுத்த, அவர் நம்புவதாய் இல்லை. கண்டிப்பாய் ஏதாவது மருந்து கொடுத்தே ஆகவேண்டும் என வற்புறுத்த, இல்லாத நோய்க்கு மருந்தா என டாக்டர் ஒரு மருந்து சீசாவில் தண்ணீரைப் பிடித்துக் கொடுத்து 'இது சக்தி வாய்ந்த மருந்து இதைக் குடிக்கும்போது குரங்கினை மட்டும் நினைக்கக் கூடாது' எனச் சொல்லிக் கொடுத்தார்.

சரி, இந்த கதைக்கும், இடுகை தலைப்புக்கும் ஏதாச்சும் சம்மந்தம் இருக்கிறதா? சத்தியமாய் இல்லை. அது மாதிரிதான் எந்திரன் படத்தைப்பற்றியும் சம்மந்த சம்மந்தமில்லாமல் பலரும் பலவாறு பார்க்காதே... அது இது என பயமுறுத்த நமக்குள் பார்த்தே ஆகவேண்டும் எனும் எண்ணம் எழுகிறது. அதனால் கண்டிப்பாய் எந்திரனை நான் பார்ப்பேன்.

அதுபோல், படம் எடுக்கிறார்கள், விளம்பரம் செய்கிறார்கள், நன்றாக இருந்தால் ஓடப்போகிறது, இல்லையென்றால் ஓ....டப்போகிறது. அதை விடுத்து அதற்கு இத்தனை வியாக்கியானங்களா? இது போன்ற குதர்க்கங்களுக்காகவும் கண்டிப்பாய் நான் எந்திரனை நான் பார்ப்பேன்!

கடைசியாய் ரஜினியை ரொம்ப பிடிக்கும் என்பதாலும் நான் எந்திரனைக் கண்டிப்பாய் பார்ப்பேன்.

எங்கேயோ படிச்சது - குருவும் சிஷ்யனும்... புனைவு இல்லைங்கோ...

|

உலகத்துலேயே அவருதான் மாவீரன்னு ஒருத்தரு நினைச்சிகிட்டிருந்தாரு. அதுல கொஞ்சம் உண்மையும் இருந்துச்சி, ஏன்னா அவருக்கு சகல வித்தைகளும் தெரியும்.

அதப் பத்தி ஜம்பமா கூட்டாளிங்ககிட்ட சொல்லிருக்கும்போது ஒருத்தர் சொன்னாரு...'நீ பெரிய வீரன் தான் ஒத்துக்கறேன், ஆனா அந்த மலையத் தாண்டிப்போனா அங்க ஒரு குரு இருக்காரு. அவருகிட்ட உன் திறமையக் காமிச்சி அவரு வாயால வீரன்னு சொன்னாத்தான் இந்த உலகத்துலயே நீ பெரிய பலசாலி' ன்னாரு.

சொன்னது நியாயமாப் படவே உடனே கிளம்பி மலையத் தாண்டிப்போய் அந்த குருவப் பார்த்தாரு. அவரு தன்னைப் பத்தி பெருமையா சொன்னத எல்லாம் பொறுமையா காதுல வாங்கிட்டு குரு,  'உங்களோட பலம் என்னன்னு கேட்டாரு.

'சும்மா சாதாரணமா நூறு பேரை அடிச்சிப்போட்டுடுவேன்' னு சொல்லவும், 'ஆஹா, பிரமாதம்' னு சிஷ்யனா சேர்த்துகிட்டு கடுமையான பயிற்சிகளை கொடுத்தாரு.

ஒரு ஆறு மாசம் போனதுக்கப்புறம் கூப்பிட்டு 'உங்களோட பலம் இப்போ எவ்வளவு'ன்னு கேட்டாரு. ஒரு அம்பது பேரை அடிச்சிப் போட்டுடுவேன்'னு சொல்லவும் இன்னும் நிறைய பயிற்சிகளை செய்யச் சொன்னாரு. திரும்ப ஒரு மூனுமாசம் கழிச்சி அதே கேள்வியக் கேட்க, இருபத்தைஞ்சின்னு பதில் வந்துச்சி. இப்படியா பத்து, அஞ்சின்னு நின்னது.

கடைசியா ஒரு நாள் கேட்டப்போ, 'அது எப்படிங்க, எதிராளிய வெச்சித்தானே சொல்ல முடியும்' னாரு.

'ஆஹா, இப்போதான் நீ உண்மையான வீரன்' னு வாழ்த்தி 'உனக்கு பயிற்சி தேவையில்லை' ன்னு அனுப்பி வெச்சாரு.

இதுக்கப்புறமும் நீதின்னு டிஸ்கியில சொல்லி... கதிர் என்னை கும்மனுமா என்ன?

எங்கள் வீட்டுப் பூனைக்குட்டி...

|

விலங்குகளுக்கும் நமக்குமான நட்பு ரீதியான பரிட்சயம் ரொம்பவும் குறைவு. அதனால்தானோ என்னவோ, கல்லால் ஓணான் அடிப்பது, தும்பியினைப் பிடித்து வாலில் நூல் கட்டிவிடுவது, உண்டிவில்லால் அணில் அடிப்பது, வயல்களில் கடலை பிடுங்கியபின் இருக்கும் எலி வளைகளை வெட்டி, உள்ளே இருக்கும் எலிகளை அடிப்பது(சேமித்து வைத்திருக்கும் கடலைக்காக வளைகளை தோண்டுவது வழக்கம்) , தெரு நாய்களை கல்லால் அடிப்பது என எல்லாப் பாதகச் செயல்களையும் வஞ்சனையில்லாமல் நண்பர்ளோடு சேர்ந்து செய்தோம்.

தெரியாத வயதில் அறியாமல் செய்ததை இப்போது நினைத்தாலும் வலிக்கிறது. தாத்தா, ஆயா, அம்மா, அப்பா என எல்லோரும் வாயில்லாத ஜீவன் பாவம் எனச் சொன்னாலும் அவர்களை விரோதிபோல் பாவித்து செய்யும் செயல்களிலிருந்து திருந்தியதில்லை.

ஆனாலும் விதிவிலக்காய் வீட்டில் வளர்க்கும் பூனைகளின் மேல் மட்டும் அலாதிப் பிரியம். கொஞ்சமும் மாசில்லாத வெள்ளை நிறப் பூனைகளை மட்டும்தான் ஆயா வளர்ப்பார்கள் நன்றாக கவனிப்பார்கள், கவனிக்கச் சொல்லி எனக்கும் அறிவுறுத்துவார்கள். மாசில்லா வெள்ளை நிறமோ, அல்லது நமக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை கவனிக்கும் பொறுப்பை விட்டதுவோ பிரியமாய் இருந்ததற்கு காரணமாய் இருக்கலாம்.

காலை மாலை இருவேளைகளும் அதற்கு சாதத்தில் பாலினை ஊற்றி வைக்கும் வேளை நம்முடையது. அதிகாலையிலேலேயே குழந்தைபோல் பசியில் கத்த ஆரம்பித்துவிடும். காலை சுற்றிச் சுற்றி கத்தியபடி வருவதைப் பார்க்க பரிதாபமாக இருக்கும். வெறும் சாதத்தை என்ன பசியென்றாலும் சாப்பிடாது.

சாதத்தில் பால் ஊற்றினால் மட்டும் தான் சாப்பிடும். பாலினை கறந்து கொண்டிருக்கும்போதே குவளையில் வாங்கிவந்து சாதத்தை அதன் தட்டினில் இட்டு பாலை ஊற்ற, ஆர்வமாய் பசியாற சாப்பிடும். பசியாறியபின் நன்றி சொல்வதுபோல் வேறொரு குரலில் கத்தி, பாசமாய் பார்த்துவிட்டுப் போகும். மாலையிலும் இதேபோல் என தினமும் இது தொடரும்.

சிலவேளைகளில் எலியினை வேட்டையாடி பசியாறி இருந்தால் அது யாரையும் நம்மை சட்டை செய்யாமல் அங்குமிங்கும் அலைந்தபடி இருக்கும். அசைவ உணவுகளை சாப்பிடும்போது அருகிலேயே அமர்ந்து நாம் தரும்வரை ஆர்வமாய் பார்த்தவண்ணம் இருக்கும். கருவாடு என்றால் அதற்கு ரொம்பப் பிடிக்கும்.

புதிதாய் யாராவது வந்தால் அவர்களிடம் சிநேகமாகும் வரை அருகே செல்லாது. அழைத்தால் தயங்கியபடி வந்து நம்மோடு ஒட்டிக்கொண்டு ஒரு விதமாய் குரல் எழுப்பி அதன் பாசத்தை வெளிப்படுத்தும்.

பசியில்லாத தருணங்களில் கிடைக்கின்ற எலியினை உடனே சாப்பிடாமல் மயங்கிப் போகும்படி அடித்து வீட்டின் அறையின் மூலையில் போட்டுவிட்டு அதையே பார்த்துக்கொண்டிருக்கும். மக்கம் தெளிந்து அது தப்பிக்க ஓடும் தருணங்களில் ஓங்கி தலையில் ஒரு அடி போட எலி மயங்கி விழும். இவ்வாறு தெளியத் தெளிய அடித்துபோட்டு நன்றாக பசிக்கும்போது ஒரே கவ்வாக கவ்விக்கொண்டு மூட்டைகள் அடுக்கி இருக்கும் இடத்துக்கு எடுத்து சென்றுவிடும்.

தப்பித்து ஓடும் எலிகள் அருகில் இருக்கும் பொந்துகளில் ஒளிந்துகொண்டால் வெளியே வரும்வரை ரொம்பவும் பொறுமையாய் காத்திருக்கும். ஒன்றுமே கிடைக்காத தருணங்களில் தவளை ஓணான் ஆகியவைகளையும் பிடித்துத் தின்னும்.

இரவு வேளைகளில் படுத்திருக்கும் நம் அருகில் வந்து போர்வைக்குள் புகுந்துகொண்டு குறுகுறுவென படுத்துக்கொள்ளும். எங்கே அதன் மேல் நாம் உருண்டுவிடுவோமோ என பயந்தவண்ணமே தூங்கவேண்டியிருக்கும்.

நன்றாக சாப்பிட்டு கொழுத்து ஏழெட்டு குட்டிகளை ஈன்று அவற்றை பத்திரமாய் பாதுகாக்கும். வாயால் கவ்விக்கொண்டு இடத்தினை அடிக்கடி மாற்றும். அச் சமயங்களில் கத்துவது குழந்தை கத்துவது போல இருக்கும். வெள்ளைக் கலரில் இருக்கும் குட்டிகளுக்கு நிறைய கிராக்கி இருக்கும், யாராவது சொல்லி வைத்து வாங்கி சென்று விடுவார்கள். செல்லுபடியாகாத குட்டிகளை ஒரு சாக்கில் போட்டு வீட்டு வேலையாட்களிடம் கொடுத்து ஆற்றுப் பக்கம் விட்டுவிட சொல்லிவிடுவார்கள்.

எந்த பூனையும் நீண்ட நாட்களுக்கு இருக்காது, திடீரென ஒருநாள் காணாமல் போய்விட ஆயா ரொம்ப புலம்புவார்கள். அதை சாப்பிட யாரோ பிடித்து சென்றுவிட்டதாக சொல்லுவார்கள். அடுத்து ஒரிரு நாட்களில் வெள்ளைக் கலரில் இன்னுமொரு பூனை வரும், வழக்கமான கவனிப்புகள் தொடரும்.

கேரக்டர் : வானம்பாடிகள் அய்யா...

|

வானம்பாடிகள் அய்யா... வாழ்வியல் பாடம்...

அய்யாவைப் பற்றி ஏதாவது ஒரு இடுகை இடவேண்டும் என்பது எனது நீண்ட நாள் எண்ணம்.தமிழ்மணம் ஸ்டாராக இருக்கும் இந்த வாரத்தில் எழுதுவது மிகப் பொருத்தமாக இருக்கும் என்பதால் எண்ணத்தை எழுத்தாக்கி உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

இந்த வாரம் மட்டுமன்றி எல்லா வாரமும் எங்கள் மனத்தில் ஸ்டாராக இருக்குமென் ஆசான் வானம்பாடிகள் அய்யாவை நினைத்து வியக்காத நாளே கிடையாது. ஆசானின் ஒவ்வொரு செய்கையும் சிஷ்யனுக்குப் பிடிக்கும் என்பது நியதி. ஆனால் இவர் விஷயத்தில் இவரைத் தொடர்ந்து படிப்பவர்கள் அனைவருக்குமே மிக மிகப் பிடிக்கிறது என்பதில்தான் இருக்கிறது இவரின் எழுத்தின் வெற்றி.

நட்பு பாராட்டுவதற்கு இவரினும் சிறந்தவர் எவரேனும் உண்டோ? அழைக்கும்போது பதிலுக்கு அவர் சொல்லும் வார்த்தையிலிருந்தே(‘சொல்லுங்க பிரபா’...’சொல்லுங்க அய்யா’, ‘ம்... சொல்லுங்க’...)அவர் எந்த மாதிரி பேசப்போகிறார், என்ன மனநிலையில் இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரியும். குழம்பிய மனத்துடன் பேச ஆரம்பித்தாலும் பேசி முடிக்கும்போது தெளிவாக இருக்கும்.

இடுகை ஒன்றுக்கு அவர் இடும் பின்னூட்டத்தை வைத்தே அவர் எவ்வாறு அதை ரசித்திருக்கிறார் என்பது தெள்ளெனத் தெரியும். பல இடுகைகளை அவரின் பின்னூட்டங்களைப் படித்தபின் தான் படிப்பதை வழக்கமாய் கொண்டிருக்கிறேன்.

இலங்கை விஷயம் என்னை மிகவும் பாதிக்க ஆரம்பித்தது இவரைப் படிக்க ஆரம்பித்த பிறகுதான். பல புதிய நட்புக்கள் கிடைக்கப்பெற்றதும் இவரால் தான். தொடர்ந்த சோகங்கள் என்னை சோர்வில் ஆழ்த்தினாலும் சரி செய்து இயல்பாகியது இவரால்தான்.

நேர்மையான அரசாங்க ஊழியரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், படித்திருக்கிறேன்... ஆனால் பழகிகொண்டிருப்பது இவரோடு மட்டும்தான். சந்தித்தது மூன்று முறைதான், ஆனால் மூன்று ஜென்மம் பழகியது போல் உணர்வு பேசும்போது, பார்க்கும்போது.

இவரின் ஒவ்வொரு இடுகையும் ஒவ்வொரு தினுசாய், தரத்தில் ஒன்றையொன்றி விஞ்சி இருக்கும். நறுக், கேரக்டர், வடிவேலுவை வைத்து எழுதப்படும் காமெடிகள், சமுதாய அக்கறையோடு எழுதும் கட்டுரைகள், காதல் ததும்பும் கவிதைகள், அதி சூர மொக்கை, மரண மொக்கை... என எல்லாம் இவரின் எழுத்தாற்றலை பறைச்சாற்றும். இவரின் கவிதைகளின் முதல் ரசிகன் நான். இப்படியெல்லாம் கூட யோசிக்க முடியுமா என வியக்க வைப்பவை இவரின் கவிதை வரிகள்...

வாரத்திற்கு ஒரு முறையாவது கேட்காமல் இருக்க மாட்டார். ‘அய்யா அய்யா சொல்வீங்களே, அந்த தாத்தா கிட்ட இன்னும் பேசறீங்களா? எப்படி இருக்கார்?’...’அப்பா... சிங்கப்பூர் எப்பப்பா கூட்டிட்டு போறீங்க?... அட்லீஸ்ட் சென்னைக்காவது தாத்தாவீட்டுக்கு கூட்டிட்டுப் போங்கப்பா!’ ‘அப்பா கம்பெடிஷனுக்கு சென்னை போறேன், அப்படியே தாத்தாவைப் பார்த்துட்டு வரட்டுமா?’

இவரின் நட்பு மட்டும் இன்னும் சற்று முன்னதாய் கிடைத்திருக்கக் கூடாதா என ஏங்காத நாளில்லை. இந்த சொந்தம் இன்னும் மெருகேறி தொடர்ந்திடவும், அய்யா அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இன்னும் பல எழுதி எங்களை வழிநடத்தி சென்றிடவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டி அறிமுகம் செய்து வைத்த கதிருக்கும் ஒரு நன்றி சொல்லி முடிக்கிறேன்.

நறுக்கிய பக்கம்....

|

90% தமிழர்களை மறுகுடியமர்த்தி விட்டோம்-பசில் சொல்கிறார்
***************************************************************************
அடுத்து ஜிம்பாப்வே கரன்சி மதிப்பு யு.எஸ். டாலரவிட அதிகம்னும் சொல்லுவாரு...
==================================================================

கருணாநிதி எதிர்பார்ப்புக்கு என்னால் ஒத்துழைக்க முடியாது-ஜெ
*****************************************************************************
நீங்க ஒத்துழைக்கக் கூடாதுங்கறதுதானே அவரோட எதிர்ப்பார்ப்பே...
=================================================================

என் முகத்தை காண துடிக்கும் மக்கள்-விஜயகாந்த் சொல்கிறார்
******************************************************************
கீழ அவரு சொல்றதனாலையா?
=================================================================

விஜயகாந்த் ஒரு அரை வேக்காட்டு அரசியல்வாதி-வீராசாமி
*************************************************************************
முழுமையான கரன்ட்ட தர்றவரு சொல்றாருங்க.... எல்லாரும் ஜோரா கையைத்தட்டுங்க!
=================================================================

திமுகவில் இணைந்த திருப்பூர் சிபிஎம் எம்எல்ஏ கோவிந்தசாமி
****************************************************************************
வெல்லம் இருக்கிற இடத்துக்கு ஈ போகுது....
===============================================================

தஞ்சம் கோரிய தமிழர்களை கைது செய்யும் கனடா!
**************************************************************
இலங்கைக்கு அந்த நாட்டுக்காரங்க போயிட்டு வந்தாங்களா?
=============================================================

புதிய பொறியியல் கல்லூரிகள்: அனுமதி கூடாது-பொன்முடி
***********************************************************************
இருக்குற காலேஜே காத்து வாங்குதுன்னா?
==============================================================

100 தொகுதிகளுக்கு குறி- ராமதாசின் 'மைக்ரோ பிளான்'!
*****************************************************************
234 க்கும் வைக்க வேண்டியதுதானே, காசா பணமா?
===============================================================

லெனினை கைது செய்ய கோரும் நித்யானந்தா ஆதரவாளர்கள்!
****************************************************************************
ஆரம்பிச்சிட்டாங்கய்யா ஆராம்பிச்சிட்டாங்க!.... யப்பா லெனின் இன்னொரு சி.டிய அவுத்து விடு...
==============================================================

கேபி சொல்வது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்-வைகோ
*************************************************************************
எல்லாரும் அப்படியே நம்பிட்டோங்க!
========================================================

அது ஏன்?...

|

நல்லாக் கேக்குறான்யா டீட்ட்ட்ட்டேய்லு... ன்னு ஆசான் ஒரு இடுகை போடுறப்போ சிஷ்யன் நாம சும்மாயிருந்தா எப்பூடி?... நம்ம பங்குக்கு அது ஏன்னு கேள்வி கேட்டு ஒரு இடுகை போட்டுடுவோம்ல....

1. கூட்டமா படியில தொங்கிகிட்டு போற பஸ்ஸில/ட்ரெயின்ல கெஞ்சி கூத்தாடி நிக்க இடம் கிடைச்சதும் அடுத்து ஏற வர்றவங்களுக்கு இருந்தும், இடம் கொடுக்காம மறுக்கிறோமே... அது ஏன்?

2. சினிமா தியேட்டர்ல பாக்குற ஃபிரண்ட, 'சினிமாவுக்கு வந்தியா'ன்னு
கேக்குறது கேணத்தனம்னு தெரிஞ்சும் கேக்குறோமே... அது ஏன்?

3. அடுத்தவன் தங்கச்சிய லுக்கு விடுற நமக்கு, நம்ம தங்கச்சிய பாக்குறப்போ மட்டும் பத்திகிட்டு எரியுதே... அது ஏன்?

4. இந்த மாதிரி கேள்வி கேட்டு ஒருத்தர் இடுகை போட்டா, பதிலுக்கு நாமும் இடுகையிடனும்னு தோணுதே... அது ஏன்?

5. இங்கிலிஷ் படம் பார்க்குறப்போ எல்லோரும் சிரிச்சா, புரியன்னாலும் நாமும் விழுந்து விழுந்து சிரிக்கிறோமே... அது ஏன்?

6. யாராவது சின்னப்பசங்க நாட்டி பண்ணுனா, அவங்களவிட நாம அதிகம் பண்ணினோம்ங்கறத மறந்துட்டு அவங்க மேல சுள்ளுனு கோவம் வருதே... அது ஏன்?

7. பரிட்சை ஒழுங்க எழுதாம சத்தியமா பாஸ் பண்ணமாட்டோம்னு
தெரிஞ்சும் ரிசல்ட் பாஸான்னு ஆர்வமா பாக்குறோமே... அது ஏன்?

8. மகன் புத்திசாலிதனமாக கேட்கும்போது, என்னமாய் கேள்விக்கேட்குறான் என வியக்குறோமே, நாமும் நம்ம அப்பாவாவை இதே மாதிரி கேட்டதை மறந்துட்டு... அது ஏன்?

9. ஃபிரண்ட்ஸ் கிட்ட பேசும்போது, பணம் கடன் கேக்குற விஷயமா பேசும்போது மட்டும் அங்கும்/இங்கும் சரிவர கேட்பதில்லையே... அது ஏன்?

10. ஏன் லேட் என்ற கேள்விக்கு பதிலாக பெரும்பாலும் லேட்டாயிடுச்சின்னே பதில் சொல்லப்படுதே அது ஏன்?

11. ஊருக்கு போறப்போ 'ஆளு இப்போ கலராயிட்டியே'ன்னு கூசாமல் பொய் சொல்லி அடுத்து காசுக்குத்தான் மேட்டர் போடுறாங்கன்னு தெரிஞ்சும் சந்தோஷிக்கிறோமே...அது ஏன்?

புரட்சித் தலைவர்...

|

சிங்கை வந்த புதிதில் டாக்ஸியில் பயணித்துக்கொண்டிருந்தேன். டிரைவர் சிங்கப்பூர் தமிழர் என்பதுவும் வயது அறுபது வாக்கில் இருக்கும் எனவும் யூகிக்க முடிந்தது. மெதுவாய் பேச்சுக்கொடுத்தேன். அவரின் பெயர் ரமேஷ் எனச் சொன்னார். வழக்கமான விசாரிப்புக்களுக்கு பிறகு ‘தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறீர்களா’ எனக்கேட்டேன்.

அதற்குப் பதில் சொல்லாமல் ‘நீங்கள் புரட்சித்தலைவரைப் பார்த்திருக்கிறீரா?’ எனக்கேட்டார். ‘ம்... பார்த்திருக்கிறேன், எனக்கு அவரை ரொம்பவும் பிடிக்கும்’எனச் சொன்னேன். அவர் மிகவும் சந்தோஷமடைந்து ஆர்வமாய் பேச ஆரம்பித்தார்.

தலைவர் உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்புக்காக வந்திருந்தபோது அவரை அருகில் பார்த்து கை குலுக்கியதாக சொன்னார். தலைவரைத்தொட்ட கைகளை ஒரு வாரம் கழுவாமல் வைத்திருந்ததாய் சொன்னார். அவர் வந்திருந்தபோது இங்கு கூடிய கூட்டம்போல் இன்னமும் கூடியதில்லை எனச் சொல்லி, அவர் மலேசியா சென்ற பிறகும் அவர் அங்கிருக்கும்வரை அவரைப் பார்ப்பதற்காக அங்கு சென்று தங்கியிருந்ததாக சொன்னார்.

தலைவர் மலேசியா சென்றபோது அங்கு வரவேற்க பெரும் திரளாக கூட்டம் கூடியிருந்ததாம். வேகமாக வெளியே வந்த தலைவர் வெயிலில் நின்றுகொண்டிருந்த ஒரு வயதான மூதட்டியில் அருகே சென்று ஆரத்தழுவி 'அம்மா உங்களை அழைத்து வந்தது யார் எனக்கேட்டாரம். 'என் மகன்தான்' எனச் சொல்ல அருகிலிருந்த அவர் மகனை செல்லமாய் அடித்து 'இப்படியா வெயிலில் அம்மாவை நிற்க வைப்பாய்' என வைது உடன் வந்தவர்களிடமிருந்து ஒரு குடையினைப் பறித்து கையில் கொடுத்து வெயில் படாமல் பிடிக்கச் சொன்னாராம்.

இன்னும் நிறைய சொல்லியிருப்பார், அதற்குள் தங்கியிருந்த இடம் வந்துவிட்டது. அவரின் கார்டினை வாங்கிக் கொண்டு பிரியா விடை பெற்றேன்.

ஒரு விஷயத்தை மறந்துவிட்டேன், அவர் தமிழ் நாட்டுக்கு வந்ததே இல்லையாம், தலைவர் சமாதியைப் பார்ப்பதற்காக வாழ்வில் ஒருமுறையாவது வரவேண்டுமாம். அவரது சமாதியில் காதை வைத்துக்கேட்டால் கடிகாரத்தின் துடிப்பு கேட்கிறதாமே நீங்கள் கேட்டிருக்கிறீர்களா எனவும் கேட்டார்.

டிஸ்கி : எல்லோரும் புரட்சி, புரட்சி என சொல்லும்போது விலாவாரியாக விளக்கும்போது நமக்கு தெரிந்த, புரிந்த, பிடித்த புரட்சி....புரட்சித் தலைவர்தான்!

காதலால்...

|

காதலால்...


சொல்லாது சொல்லி
கேளாமல் கேட்டு
பார்க்காமல் பார்த்து
சிரிக்காமல் சிரித்து
சிந்தையை தொலைத்தேன்...
சேர்ந்தந்த காதலால்..

புரியாத வார்த்தைகளும்
பொருள் பொதிந்து கவியாகும்
புன்னகைக்கும் என்னவளின்
பூஞ்சிரிப்பை பார்க்கையினில்...

தெரியாத விஷயங்களும்
தெள்ளெனத் தெளிவாகும்
குறுகுறுக்கும் விழிபார்த்து
கிறுகிறுக்கும் தருணமதில்...

அனல் நோகும் தேகமும்
ஐஸ்தொட்ட உணர்வாகும்
அருகாமை அவளிருந்து
அன்போடு தழுவுகையில்...

கோபத்திற்கு என்மேல்
கோபமடி கண்ணே
காலமெல்லாம் இருந்ததை
கழட்டிவிட்ட காரணத்தால்...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB