ஹரிதாஸ் விமர்சனம்...

|


’யாசகன்’ முடித்து பிண்ணனி இசை சேர்ப்பில் முசுவாயிருக்கும் எங்களது நண்பர், இயக்குனர் துரைவாணன், பிரசாத்தில் ஹரிதாஸ் எடிட்டர் ப்ரிவியூ இருக்கிறது பார்க்க வருகிறீர்களா என அன்போடு அழைக்க வேலுவுடன் சென்றேன். இன்றைய நாளின் முதல் பாதி, மனத்தினை நிறைவிப்பதாய் இருக்க சிலாகித்து எழுத ஆரம்பிக்கிறேன்.

எப்போதும் படிக்கும் கேபிள், உனா தானா அண்ணாக்கள் விமர்சனங்கள் ஏற்கனவே ஏக எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்க ஆர்வமாய் பார்க்க ஆரம்பித்தேன். குளிரும்படியாய் ஏசி, மிகைத்தலுக்கு மின்விசிறி என ஒரு குளிர்ச்சியான சூழல். கட்டிப்போட்டார்போல் படத்தின் தொடக்கத்தின் பத்து நிமிடம் தவிர்த்து இறுதி வரை. பல இடங்களில் விழியோரக்கசிவுகள் ஏற்படக் காரணமாயிருக்கும் காட்சியமைப்புகள்.

ஆட்டிசம் பற்றி படித்திருந்தாலும், அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும் எனும் உந்துதல் எழுந்ததுவும், அவ்வாறிருப்பவர்களைப் பார்த்தலின் அவர்களிடத்து என்ன திறமை இருக்கும் என தேடலோடு யோசிக்கவேண்டும் எனும் எண்ணம் ஆர்ந்ததுவும் இந்த படத்தினைப் பார்த்ததின் பெரும் வெற்றி எனக் கருதுகிறேன்.

ஆதியினை என்கவுண்ட்டர் செய்ய எத்தனிக்கும் திட்டங்கள் ஒருபுறமாயும், ஆட்டிசக் குறைபாடுடைய கிஷோரின் மகனைச் சார்ந்த விசயங்கள் மறுபுறமாயுமென காட்சிகள் விரிகின்றன.

கிஷோர்... மிகையில்லாத மிடுக்கான மிளிர்கிற நடிப்பால் என்கவுண்ட்டர் போலீஸாய், பொறுப்பான அப்பாவாய் அசத்துகிறார். எப்போதும் பிடிக்கும் இவரை இதனில் அதிகமாய்.

சிறுவனின் நடிப்பு சிறப்பாய் இருக்கிறது.நண்பர்களாய் வருபவர்கள், சினேகாவின் அம்மா, தங்கை, பள்ளி மாணவர்கள் என எல்லோரின் பங்களிப்பும் எதார்த்தமான நடிப்பும் கவர, சூரி ரொம்பவும் இம்சிக்கிறார். நகைச்சுவை என நினைத்து அவரின் வாயிலாய் நமக்கு இயக்குனர் எரிச்சலைதான் தந்திருக்கிறார்.

வசனகர்த்தாவை கண்டிப்பாய் பாராட்ட வேண்டும். படத்தின் இயல்பான ஓட்டத்திற்கு சிறிதும் தொய்வினை ஏற்படுத்தாமல் சிறப்பாய் கொடுத்திருக்கிறார். எல்லோருக்கும் கண்டிப்பாய் ‘டாக்டர் கோச் மாதிரி பேசறார், கோச் டாக்டர் மாதிரி பேசறார்’ ரொம்பவும் பிடிக்கும்.

உறுத்தலில்லாத கண்ணுக்கு குளிர்ச்சியாய், தேவையான அளவில் இருக்கும் ரத்தினவேலுவின் ஒளிப்பதிவு. சொல்லிக்கொள்ளும்படியாய் இல்லாமல் இசை, ஆனாலும் இம்சிக்கவில்லை.

சினேகா, பார்த்து சினேகமானது இந்த படத்தில் தான். அமுதவல்லி டீச்சராய் அசத்தலாய் நடித்திருக்கிறார். கடைசி நாற்பது நிமிடங்களை எனக்கு முன் வரிசையில்தான் ரசித்து பார்த்த வண்ணம் இருந்தார். அவ்வப்போது பார்த்துக்கொண்டிருக்கும் எங்களின் ரசிப்பினையும் கவனித்துக்கொண்டிருந்தார். படம் முடித்து வெளியில் வரும்போது வெளியில் நின்று கொண்டிருந்த சினேகாவைப் பார்த்து கட்டை விரலை உயர்த்தி ‘ப்ரில்லியண்ட்’ என சொன்னபோது ‘தேங்க்யூ, தேங்க்யூ’ என சிரிப்போடு ஏற்றுக்கொண்டவிதம் ஈர்ப்பாயிருந்தது.

தேவையில்லாத ஒரு குத்தாட்டப் பாடல், இழுவையாய் இறுதியில் சண்டை என குறைகள் இல்லாமல் இல்லை. இருந்தாலும்... ஐ லவ் திஸ் மூவி.

இதுபோன்ற படங்களைக் கண்டிப்பாய் கேபிள் அண்ணா சொன்னது போல் கொண்டாட வேண்டும். அப்போத்துதான் இன்னும் சிறப்பாய் பல கோணங்களில் படங்கள் தமிழ் சினிமாவுக்குக் கிடைக்கும். அவசியம் குடும்பத்தோடு பாருங்கள்.

மொத்ததில் ஹரிதாஸ், என்கவுணட்டர் என கரடுமுரடான முட்கள் நிறைந்த ஆட்டிசக் குறைபாடுகளை அலசும் முள்ரோஜா...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB