அன்பிற்கும் உண்டோ...

|

என் ஆசானிடம் திட்டு வாங்கவேண்டுமென்றால் இந்த இடுகைக்கு 'ட்ரெயினில் பல்பு வாங்கிய கதை' என்று வைக்கலாம். நல்ல மாடு என்பதால்... சரி விஷயத்திற்கு வரலாம்.

ஏழு வருடங்களுக்கு முன் டெல்லியிலிருந்து விடுமுறையில் சென்னை நோக்கி நானும் எனது மனைவியும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் வந்து கொண்டிருந்தோம்.

அம்மணியோடு பேசிக்கொண்டு கடலையை கொறித்தபடி, போட்டுக்கொண்டு... ஆம், பக்கத்தில் இருந்த ஒரு அழகான பெண்ணைப் பற்றி கிண்டலடித்தவாறு இனிமையாய் நேரத்தைக் கழித்துக் கொண்டிருந்தோம்.

அந்த பெண் சிறு வயது கிரண் போலவும், ரொம்பவும் துறுதுறுவென இருந்தாள். கோலி குண்டுகளை வைத்து எல்லோருமாய் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

வட்ட வடிவிலான ஒரு ப்ளாஸ்டிக் தகட்டில் கோலி குண்டுகளை வைப்பதற்கான குழிகள். நடுவில் தவிர எல்லாம் நிரப்பி ஒவ்வொன்றாய் தாண்டி எடுத்துக் கொள்ள, கடைசியாய் ஒன்று மட்டும் இருந்தால் வெற்றி பெற்றதாய் அர்த்தம். எவ்வளவு மோசமாய் விளையாடினாலும் நான்குதான் மீதம் இருக்கும்.

'ரொம்பவும் வழியாதீங்க, உங்களை அந்த பொண்ணு கண்டிப்பா பையான்னு சீக்கிரத்தில் கூப்பிடும் பாருங்க' என அம்மணி சாபம் விட்டார்கள்.

இதை பல முறை விளையாடியிருக்கிறேன், சாதாரணமாய் ஜெயித்திருக்கிறேன், அதற்கென ஒரு முறையை கண்டுபிடித்து வைத்திருப்பதால்.

அந்த பெண் மற்றும் அவர்கள் குடும்பத்தில் எவராலும் சரியாய் ஒன்று வரும்படியாய் விளையாடத் தெரியவில்லை. ஒவ்வொரு முறை தோற்கும்போது பெருத்த கூச்சல், ஆரவாரம் என எங்களின் பெட்டியே குதூகலமாய் இருந்தது.

அவர்கள் விளையாடுவதையே பார்த்துக்கொண்டிருக்க, அந்த பெண் என்னைப் பார்த்து 'பையா நீங்கள் விளையாடுகிறீர்களா?' எனக் கேட்க, என் மனைவி முகத்தில் ஆயிரம் வாட் பல்ப். 'தங்கச்சி கூப்பிடுதில்ல போங்க' என நக்கலாய் சொல்ல, களத்தில் புகுந்தேன்.

நான் விளையாட்டினை முதன் முதலாய் விளையாடும்போது கூட நான்கு மிச்சம் இருந்ததில்லை, என் நேரம் அன்று நான்கு மிச்சம் இருந்தது. கேலிச் சிரிப்புக்களூம், ஆரவாரங்களும் நான் பல்ப் வாங்கியதைப் பறைச்சாற்ற வெட்கப்பட்டு வழிந்த வண்ணம் அங்கிருந்து நகர்ந்தேன்.

என் மனைவியின் முகத்தைப் பார்க்க கூச்சமாய் இருந்தது. 'நான் முயற்சி செய்து பார்க்கட்டுமா?' என அழகான இந்தியில் கேட்டது அம்மணிதான். இதற்கு முன் விளையாண்டே பார்த்ததில்லை, நான் விளையாடும்போது மட்டும் அம்மணி பார்த்துக்கொண்டுதான் இருப்பார்கள்.

'யெஸ் பாபி, ஆப் ட்ரை கரோ' என கையைப் பிடித்து அந்த பெண் அழைத்துச் சென்றாள்.

சட் சட்டென ஒவ்வொன்றாய் தாண்டி வெகு சுளுவாய் எடுக்க, மிச்சம் ஒன்றே ஒன்று. எல்லோரும் கைத்தட்ட என் முகத்தில் ஏகமாய் பெருமிதம்.

'பாபி இதற்குமுன் நிறைய ப்ராக்டீஸ் செய்திருக்கிறீர்கள் தானே என அந்தப் பெண் கேட்க,

'இல்லை இல்லை. எனது வீட்டுக்காரர் விளையாடும்போது பார்த்துக் கொண்டிருப்பேன், அவர் சூப்பராய் விளையாடுவார், இன்று என்னவோ தெரியவில்லை முதல் முறையாய் தோற்றிருக்கிறார் எனச் சொல்லி என்னைப் பார்த்து அம்மணி சிரித்தார்கள்.

கொஞ்சம் கழித்து 'எப்படி அபி சாத்தியம்' என ஆச்சர்யமாய் கேட்டேன். நீங்கள் தோற்றபோது எல்லோரும் சிரித்தது ஒரு மாதிரியாய் இருந்தது. ஜெயித்தே ஆகவேண்டும் என விளையாண்டேன், அவ்வளவுதான் என என் அம்மணி கூலாக சொன்னார்கள்.

அன்று நான் தோற்றாலும் என் அம்மணியிம் அன்பையும் திறமையையும் புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது...

வேலுவும் சினிமாவும்...

|

சில நேரங்களில் பழயனவற்றை நினைவு கூறும்பொழுது 'அடடா இந்த விஷயத்தைப் பற்றி இன்னுமா எழுதாமல் இருக்கிறோம் எனத் தோன்றும்'. அது மாதிரியான ஒரு சம்பவம்தான் இந்த இடுகையில்.

ஏற்கனவே ஒருமுறை இடுகையில் குறிப்பிட்டிருக்கிறேன், ஆசிரியர் எதிர்காலத்தில் என்னவாய் ஆகப் போகிறீர்கள் எனக் கேட்டதற்கு எனது நண்பன் வேலு 'டைரக்டராகி சினிமா எடுக்கனும்' எனச் சொல்லி வான்கிக் கட்டிக்கொண்டான் என. அவனைப் பற்றியும், அவனது சினிமா தாகத்தையும் பற்றிய பகிர்வுதான் இது.

பத்து முடித்து பதினொன்று கெங்கவல்லியில் படித்துக்கொண்டிருந்த சமயம். என் வீட்டில் எனது பெற்றோர் எதற்காகவும் என்னைக் கட்டாயப் படுத்துவதில்லை, ஆனால் வேலுவின் கதை வேறு. அவனது அப்பா ரொம்பவும் கண்டிப்பானவர். சரியான நேரத்தில் எழுந்திருப்பதிலிருந்து இரவு தூங்குவது வரை அவனது எல்லாம் அவரின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. கதைப்புத்தகம் படிப்பது, விளையாடுவது, சினிமா பார்ப்பது என எல்லாவற்றுக்குமே தடா.

ஒருமுறை சேலத்தில் ஹாஸ்டலில் படித்துக்கொண்டிருக்கும் தம்பியிடம் பணம் கொடுத்துவிட்டு வரச் சொல்லி அவனது அப்பா அனுப்பி வைத்தார். வெள்ளியன்று மாலை சென்றவன் ஞாயிறன்று காலை வீட்டுக்குப் போகும்போது இருந்தான். வழக்கமாய் பேசிக்கொண்ருந்தோம். பக்கத்தில் அவனது மாமா வீடு இருக்கிறது, ஒருவேளை அங்கு சென்று வந்திருப்பானோ என எண்ணியவாறு, சேலத்தில் ஒரு நாள் முழுக்க என்ன செய்தாய் எனக் கேட்டேன்.

பளிச்சென சினிமா பார்த்தேன் எனச் சொன்னான். எத்தனை என்றதற்கு இரண்டு எனச் சொன்னான். என்ன படம் எனக் கேட்டுவிட்டு சரி, அதன் பிறகு என்ன செய்தான் எனக்கேட்டேன். சரி என் அப்பாவிடம் சொல்லிவிடாதே, மூன்று படங்கள் பார்த்தேன் என்றான். கிர்ரென்று வந்தது.

அடுத்த நாள் பள்ளி உணவு இடைவேளியில் நண்பர்களிடம் கொளுத்திப்போட, வேலு என்னை உஷ்ணமாய் பார்த்தான்.

'எப்படிடா வேலு, உங்க அப்பா செலவுக்கு அதிகமா காசு கொடுத்திருக்க மாட்டாரே, எப்படி மூனு படத்தைப் பார்த்தே' என ரவி கேட்டதற்கு, எல்லாம் கடைசி வகுப்பில் (2.80 டிக்கெட் என ஞாபகம்) பார்த்ததாய் சொன்னான். தனியே இருக்கும்போது என்னை கடிந்தவன், 'ஓட்ட வாயா, ஒரு விஷயத்தையும் மனசுல வெச்சிக்கத் தெரியாதா?, உண்மையில் நாலு படத்தைப் பார்த்தேன், இதையும் போய் சொல்லு' என்றான்.

அதையும் எல்லோரிடமும் சொல்லிவிட பலமாய் கலாய்த்தோம். இதெல்லாம் நடந்து நாட்களாகி, நான் இளங்கலை முடித்திருக்க, நன்கு படித்த அவன் பி.எஸ்.ஜி-யில் மெக்கானிக்கல் படித்துக்கொண்டிருந்தான், அவனைப் பார்க்க அவனது அறைக்குச் சென்றிருந்தேன்.

மெஸ்ஸில் நல்ல சாப்பாடு. தெம்பாய் சாப்பிட்டுவிட்டு வந்து பழங்கதைகளைப் பேசிக்கொண்டிருந்த சமயம் அன்று நடந்த சினிமா சம்பவத்தைப் பற்றி பேச ஆரம்பித்தோம். எப்படிடா நாலு படத்தை தொடர்ச்சியாய் பார்த்தாய் எனக் கேட்டதற்கு, 'அன்று பொய் சொன்னேன். உண்மையில் பார்த்தது ஐந்து சினிமா' என்றான். நிஜமாய் மயக்கம் வந்தது.

ஆம், வெள்ளி இரவு சேலத்தை அடைந்தவன் நள்ளிரவுக்காட்சியைப் பார்த்து, பின் அடுத்த நாள் காலைக் காட்சி, மேட்னி, முதல் காட்ச்சி, இரண்டாம் காட்சி என எனப் பார்த்துவிட்டு கடைசிப் பேருந்தில் வீட்டுக்கு வந்திருக்கிறான்.

படித்து முடித்து நிறைய வேலை வாய்ப்புகள் தேடி வந்தும் விடாப் பிடியாய் மறுத்து சினிமாதான் வாழ்க்கை என்று வாழ்ந்து வருகிறான். பல படங்களில் உதவி இயக்குனராகவும், சில தொலைக்காட்சி தொடர்களை இயக்கியும் இருக்கிறான்.

தற்சமயம் ஒரு படத்தினை இயக்கும் வாய்ப்பு கைகூடும்போல் இருக்கிறது. அதில் வெற்றி பெற்று எனது ஆருயிர் நண்பன் வேலுவின் கனவு நிறைவேற இந்த இடுகையின் மூலம் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

டிக்கெட்...

|

இரு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. ஆத்தூரில் இருந்து தெடாவூருக்கு செல்ல பேருந்தினுள் ஏறினேன். என்னுடன் கல்லூரியில் படித்த நண்பர் அழகுவேல் பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்திருக்க, பக்கத்தில் அமர்ந்து மெதுவாய் பேச ஆரம்பித்தேன். உதவி கண்டக்டர் சிறுவன் 'கெங்கவல்லி, தெடாவூர், வீரகனூர் எல்லாம் வண்டி கிளம்பும்போது ஏறுங்க' எனச் சொல்ல, எழுந்து கீழே போக எத்தனித்தேன்.

'இருங்க பிரபாகர், ஒன்னும் பிரச்சினை இல்லை' எனச் சொன்னார். என்ன ஒன்றாய் படித்தவரை இவ்வளவு மரியாதையாய் சொல்லுகிறேன் எனப் பார்க்கிறீர்களா? என்னை விட மூத்தவர், அவரின் தம்பிதான் எனது பள்ளித்தோழன். கல்லூரியில் தாமதமாய் சேர்ந்தார்.

எங்கள் ஊருக்கு ஆறு ரூபாய் டிக்கெட். காசினை எடுத்து கையில் வைத்துக் கொண்டு வீரகனூரை அடுத்த உடும்பியம் டிக்கெட் இரண்டாய் எடுத்து விடலாம் என அவரிடம் சொன்னதற்கு, 'தெடாவூருக்கே வாங்குவோம், ஏன் கவலைப்படுகிறீர்கள்' எனச் சொன்னார். 'இல்லை... ஏற வேண்டாம்னு' மெதுவாய் இழுத்தேன்.

'அதெல்லாம் நான் பார்த்துகொள்கிறேன்' எனச் சொன்னார். 'எதற்கு பிரச்சினை' என நான் இழுக்க, 'ஒன்னும் கவலைப் படாதீங்க' எனச் மறுத்துச் சொல்லவும் காசினை அவரிடமே கொடுத்து டிக்கெட் எடுக்கச் சொன்னேன்.

வெயில், வெளியில் நிற்கவோ உள்ளே உட்காரவோ இயலாத அளவிற்கு கடுமையாய் இருந்தது. வண்டி கிளம்பும் நேரம் ஆனதும், இன்னும் பலர் ஏறிக்கொள்ள ஒரு வழியாய் வண்டி கிளம்பியது.

கண்டக்டர் முன்னால் இருந்தார், இளம் வயது. கொஞ்சம் செவிமடுத்துக் கேட்டதில் அவர் பேசுவது கொஞ்சம் மிகையாவும், மரியாதைக்குறைவாயும் இருந்தது. 'வாய்யா, போய்யா என வசைவுகளாலும் ஒரு சில தடித்த வார்த்தைகளாலும் பேசி, உள்ளே எல்லோரையும் அடைத்துக் கொண்டிருந்தார்.

எனது கோபம் எல்லையை மீற ஆரம்பித்த அந்த நேரத்தில் ஒரு பெரியவரைப் பார்த்து, 'என்னய்யா மயிரு, உனக்கு தனியா சொல்லனுமா, உள்ள போய்த் தொலை' எனச் சொல்லவும் வெகுண்டு எழுந்தேன்.

'யூ ப்ளடி ராஸ்கல்' என ஆரம்பித்து 'என்னய்யா பேச்சு பேசுற, கொஞ்சமாச்சும் மரியாதை தெரியுதா உனக்கு? இப்படியா பேசுவே?' என இறைந்து கேட்க ஆரம்பித்தேன்.

'நீ என்ன பெரிய புடுங்கியா? அறிவுரை சொல்ல வந்துட்ட, மூடிக்கிட்டு உக்காரு' என என்னை சொன்னதும், அந்த பெரியவருக்கு வந்ததே கோபம்!... பொளிச்சென கண்டக்டரின் கன்னத்தில் ஒரு அறை விட்டார். அவரை திரும்ப அடிக்க எத்தனிக்க பக்கத்தில் இருந்தவர்களும் கண்டக்டரை சட் சட்டென அடிக்க ஆரம்பிக்க ஒரே களேபரமானது.

சமாதானமாவதற்கும் ,வண்டி கிளம்புவதற்கும் நிறைய நேரம் ஆனது. அதற்குள் பஸ்ஸின் ஓனர் வந்து சமாதானப் படுத்தி வண்டியை எடுக்கச் சொல்லிவிட்டு சென்றார்.  கண்டக்டர் பின்னால் வரவே இல்லை. உ.க. சிறுவன் டிக்கெட் கேட்டபோது 'தெடாவூர் இரண்டு' என சப்தமாய் சொல்லி டிக்கெட் கேட்டேன்.

இது நடந்து ஆறு மாதம் கழித்து எனது நண்பன் மணியுடன் கூகையூர் கோவிலுக்கு செல்லும்போது ஒரு கடையில் நிற்பாட்டி பூஜைக்கான பொருள்களை வாங்கும் போதுதான் கவனித்தேன், அருகிலிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தது அந்த கண்டக்டர், சிகரெட் குடித்தபடி லுங்கியுடன். அந்த ஊரைச் சேர்ந்தவர் போலிருக்கிறது.

என்னை முறைத்துப்பார்க்கவும் கொஞ்சம் உதறலாயிருந்தது. ஆனாலும் மணி இருக்கிறான் எண்ணும் தைரியம். கோவிலில் நிஜமாய் அடிவாங்காமல் ஊருக்குப் போகவேண்டும் என்றுதான் வேண்டிக்கொண்டேன், முதலைக்கு தண்ணீரில் தானே பலம்?... வேண்டுதலாலோ அல்லது எனது நல்ல நேரத்தாலோ எதுவும் நிகழவில்லை.

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB