ஊழல் - சிறுகதை...

|

எங்கும் ஊழல் எதிலும் ஊழல்... பத்திரிக்கைகளைத் திறந்தால் ஸ்பெக்ட்ரம், கார்கில் வீடு ஒதுக்குதல், குடும்பத்துக்கு நிலம் ஒதுக்குதல் என பக்கத்துப் பக்கம் நாறிக்கிடக்க அதையெல்லாம் பார்த்த ராகவன் கொதித்துப்போயிருந்தார்.

டிவியிலும் அது சம்மந்தமான செய்திகளே வர, நொந்து போய் காப்பி கொடுக்கவந்த மனைவியின் மீதும், பாடத்தில் ஏதோ சந்தேகம் கேட்கவந்த மகனின் மீதும் தேவையில்லாமல் எரிந்து விழுந்தார்.

நேராய் குளியலறைக்கு சென்றவர் சில்லென தண்ணீரில் சூடு குறைய குளித்து கொஞ்சம் மனம் லேசாகி வந்தார். வரவேற்பறையில் காத்திருந்த அந்த நபரை புன்னகைத்து கொஞ்சம் காத்திருக்கச் சொல்லி பூஜை அறைக்குள் நுழைந்து மனமுருக பூஜித்து மனம் லேசாகி வந்தார்.

‘மன்னிச்சிக்குங்க, ஆபிஸ் விட்டு வந்ததும் குளிச்சி பூஜை செய்யலைன்னா வேலையே ஓடாது’ என்றவர் ‘காபி கொடுத்தாங்களா?’ எனக் கேட்க

‘ஆச்சுங்க, வந்த உடனே அம்மா கொடுத்தாங்க, இந்தாங்க நீங்க கேட்டது இருக்கு’ என ஒரு கவரைக் கொடுக்க,

‘என்னய்யா, எல்லாம் சரியா இருக்குல்ல? இனி கவலைப்படாத, செவ்வாக்கிழமைக்குள்ள பர்பெஃக்டா முடிச்சிக்கொடுத்திடறேன், ஆபிஸ்ல வெச்சி வாங்கறது நம்ம ரெண்டு பேருக்குமே நல்லதில்ல அதான் வீட்டுக்கு வரச் சொன்னேன்’ எனச் சொல்லி ‘பாக்கியம் இத பத்திரமா பீ்ரோவில வை’ என்றார்.

கசியும் மௌனம் - பிறந்தநாள் வாழ்த்து...

|

(கசியும் மவுனம் வலைப்பூவின் மூன்றாமாண்டு பிறந்தநாள் வாழ்த்து)

கசியும் மவுனத்தில்
கருத்தாய் கவிதைகள்
கண்ணுற்ற நண்பர்
கண்டிடச் சொல்ல
கண்டேன், வியந்தேன்...

ஈரோடு கதிரென
எழுச்சியாய் இடுகைகள்
இணைந்தேன் மகிழ்ந்தேன்
அன்றலர்ந்த நட்பு
ஆலமர விழுதாய்...

கண் தானம்பற்றி
கருத்தாய் எழுதி
மண் பெருமையை
மனிததோடு நினைந்து
மரம் நடுதலை
மகிழ்ந்து பகிர்ந்தீர்

உம்மால், உமது நட்பால்
மனம் நிறைந்து
இன்னும் பல
இனிதாய் எழுத
இறையை வேண்டுகிறேன்...

பிரபாகர்..

மன்மதன் அம்பு ஆடியோ ரிலீஸ்... செய்திக்கோர்ப்பு...

|

மன்மதன் அம்பு ஆடியோ ரிலீஸுக்கு சென்றிருந்தேன்... இது போன்ற நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியின் வாயிலாய்தான் பார்த்திருக்கிறேன், இதுதான் நேரடியாகப்பார்க்கும் ஆடியோ வெளியிடும் முதல் நிகழ்ச்சி.

மனதைக் கவர்ந்த விஷயங்கள் :

கமல்ஹாசன் இன்னும் இளைமையாய் இருப்பது

கமலைப் பற்றி மனதில் இருந்த பிம்பம் அப்படியே இருக்கவும், இன்னும் சில விஷயங்களில் எண்ணியதை விட இன்னும் பிரமிப்பு கூடும்வண்ணம் கமலின் பங்களிப்பு இருந்தது.

கமல் பாடிய நீல வானம்... நீயும் நானும் அற்புதமாய் இருந்தது. அவரே பாடக் கேட்க. நேரில் கேட்க.. டிவைன்.

தேவிஸ்ரீ பிரதாத்தின் துள்ளல்...

ரசிகர்கள் எட்டுபேரை (இருபாலரும் பாதிபாதியாய்) அழைத்து இசையை வெளியிட்ட விதம்..

கமலும் திரிஷா இருவரும் கவிதைப் பாட்டினைப் படிக்க ஆஹா!... கோபி சொன்னதுபோல் தமிழோடு திரிஷா இன்னும் அழகு கூடி மிளிர்ந்தார்.

கே.எஸ் ரவிக்குமாரின் பேச்சு, பங்காற்றியவர்களை நினைவுகூர்ந்த விதம்.

ஜோடி நம்பர் ஒன் குழுவினரின் நடனங்கள்...

மனதை நெருடிய விஷயங்கள் :

டிவியில் எடிட் செய்யப்பட்டு வழங்கப்படும் நிகழ்ச்சிகளைப்பார்த்து அற்புதம் என நினைத்து, தொகுத்த தீதி மற்றும் கோபியின் சொதப்பல்கள்.(ஒளிபரப்பின்போது இருக்காது)

சூப்பர் சிங்கர்களை கமர்சியலாக்கி, அவர்களைப் படுத்துவது.

கமலே வெட்கப்படும் அளவிற்கு தொகுப்பாளர்கள் அவரைப் புகழ்ந்து தள்ளியது (கமல் இதைக் குறிப்பிட்டு சொன்னார்)

உதயநிதியை வானளவிற்கு புகழ்ந்து தள்ளியது

விழாவினை ஏழு மணி என சொல்லி ஏழு இருபதுக்கு தாமதமாய் ஆரம்பித்தது.

கொசுறு :

எங்களுக்கு முன்னால் ஏதோ ஒரு பேனரை வைத்துக்கொண்டு அவ்வப்போது மறைத்து கேமிரா இந்த பக்கம் வருமா என ஆர்வக்கோளாறாய் இளைஞர்கள்.

அறுபதைக் கடந்த ஒருவர் அருகில் அடித்த கமெண்ட்டுகள், ரசித்து அவர் செய்த முகபாவங்கள்

திரிஷா ஆன்ட்டி என ஒருவர் கத்த குபீர் சிரிப்பலை...


டிஸ்கி : 

இதுதான் வாழ்வில் பார்க்கும் முதலும் கடைசியுமான ஆடியோ ரிலீஸ்...

விகடம் 1.1.2

|

அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள். தொலைக்காட்சியின் முன் இல்லாமல் குடும்பத்தோடு சந்தோஷமாய் கோவில், நண்பர்களை வரவழைத்து, நண்பர்களின் வீடுகளுக்கு சென்று உண்மையாய் தீபாவளியை கொண்டாடுபவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த சிறப்பு வாழ்த்துக்கள், வணக்கங்கள். (சிரத்தையாய் நெட்டில் இருப்போருக்கும்தான்...)

*****
இந்த சம்பவத்திலும் கதாநாயகன்(ர்) என் சித்தப்பாதான். பள்ளி விடுமுறைக்கு அவரின் மகள் சுவேதா தன் சித்தியின் வீட்டிற்கு சென்றிருக்கிறாள். சித்தியின் வீடு ஊரிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால் பஸ்ஸிலிருந்து இறங்கி நடந்துதான் செல்லவேண்டும். மகள் சென்று ஒரு மாதத்திற்கும் மேல் ஆனதாலும், பள்ளி திறப்பதற்கு நாள் நெருங்கிவிட்டதாலும், அழைத்துவர சென்றிருக்கிறார்.

மகளைப் பார்க்கும் ஆர்வத்தில் வேகவேகமாய் சித்தப்பா செல்ல, தொலைவில் அவர் வருவதைப் பார்த்து சுவேதா அழ ஆரம்பித்திருக்கிறாள். பார்த்து நெடு நாட்களாகிவிட்டதால் பாசத்தில் அழுகிறாள் என எண்ணி சித்தப்பா மேலும் பதைபதைப்பாய் செல்ல, பக்கத்தில் சென்றவுடன் ’ஏன் வந்தீங்க, நான் உங்ககூட வரமாட்டேன்’ என இன்னும் சப்தமாய் கதறி அழ மனுஷன் நொந்து நூடூல்ஸாகிப் போனாராம்.
*****
இது நடந்து மூன்று வருடங்கள் இருக்கும். சிங்கையில் இருந்து மனைவியுடம் ஸ்கைப் -பில் சாட் செய்வது வழக்கம். அன்று அழைத்த போது மூன்று வயதிலிருந்த என மகன் விஷாக், கம்ப்யூட்டரில் விளையாடிக்கொண்டிருக்க, எனது அழைப்பைப் பார்த்து பார்த்து, ஏற்று ஹெட் போனை காதில் மாட்டிக் கொண்டிருக்கிறார். ’நான் சொல்லுப்பா’ என ஆரம்பிக்க, ‘அப்பா நான் விஷாக், அம்மா இல்லை’ என சிரித்துச்சொல்ல சந்தோஷத்தில் அதிர்ந்தேன்.

‘தம்பி, உங்களுக்கு அக்சப்ட் பண்ணத்தெரியுமா? எனக் கேட்க, ‘ஓ தெரியுமே, அம்மா சொல்லிக்கொடுத்தாங்க’ எனச் சொன்னார்.

’அம்மா பாத்ரூமில் இருக்கிறாங்க, நான் கம்ப்யூட்டர்ல விளையாடிட்டிருக்கேன்’ என சொல்லிவிட்டு, ‘அப்பா தனியாவா இருக்கீங்க?’ எனக்கேட்டார்.

‘ஆமாம்பா...’ என்றவுடம், ‘உங்களுக்கு பயமா இல்லையா’ எனக் கேட்டார்.

‘இல்லை சாமி’ எனச் சொன்னேன்.

‘இல்லப்பா, எனக்கு பயமா இருக்கு அதான் கேட்டேன்’ எனச் சொன்னார்.
*****

நண்பேன்டா...

|

இப்போல்லாம் நீங்க வடிவேல் உதை வாங்கறத நிறைய காமெடியில பாத்திருப்பீங்க, ரசிச்சுகிட்டிருப்பீங்க. நாமெல்லாம் தொன்னூத்தி ரெண்டுலேயே அனுபவத்துல பாத்தாச்சு.

பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சைன்ஸ்ல கடைசி செமெஸ்டர், மெயின் எக்ஸாம் எல்லாம் முடிஞ்சுடுச்சி. நல்லா படிக்கிற ஆல் பாஸ் ஜீனியஸ்லாம் எஸ்கேப் ஆக அரியர் இருந்த நாங்க ஒரு பதினைஞ்சு பேர் மட்டும் ரூமிலே, ஹாஸ்டல்லே தங்கி மேத்ஸ் அரியர முடிச்சோம்.

ஹெச்.ஓ.டி நல்லா ஹெல்ப் பண்ண என் பேப்பர் எல்லாருக்கும் சர்குலேட் ஆக, பாஸ் மார்க்குக்கு மேலேயே எழுதினதால மெயின் பேப்பர் நெட்வொர்க் கண்டத்தையும் மறந்து சந்தோஷமா இருந்தானுங்க. (நெட்வொர்க் பேப்பருக்கு நடந்த கூத்த தனியா எழுதறேன்.)

புல் தண்ணி, சந்தோஷம். வழக்கம்போல நான் ஒதுங்கியிருக்க, ஸ்னாக்ஸாவது சாப்பிடுடான்னு கம்ப்பல் பண்ணி, நிறையா வாங்கி, பெப்சி நாலஞ்சி பாட்டலோட கொடுத்தானுங்க...

சாயங்காலமா எல்லாரும் போதையையும் மீறி பேயடிச்ச மாதிரி இருக்க, என்னடான்னு கேட்டுட்டு நானும் ஆடிப் போயிட்டேன். கூட படிச்ச, அந்த ஊர்லயே பெரிய வி.ஐ.பி.யோட பொண்ணு ஓடிபோயிடுச்சின்னானுங்க.

எல்லோரும் டக்குனு ராசுவைத்தான் சந்தேகப்பட்டோம். ஏன்னா அவன்தான் அந்த பொண்ணுகிட்ட கடலை போட்டுகிட்டே இருப்பான். கொஞ்ச நேரத்துல அவனே ரூமுக்கு வந்ததுமில்லாம ஆளு யாருன்னு சொன்னவுடன் அதிர்ந்துட்டோம்.

வேற குரூப் பையன் ஒருத்தன் தள்ளிகிட்டு போயிட்டாங்கற தகவல நம்பவே முடியல. ஏன்னா, அவங்க ரெண்டு பேரும் சந்திச்சு பேசினத யாரும் கண்ணால கூட பாத்ததில்ல.

காரணம், லன்ச் டைமுல மட்டும் தான் அவங்க கிளாஸ் ரூமிலேயே பாத்து பேசி டெவலப் பண்ணியிருக்காங்க, கூட படிச்ச மத்த ரெண்டு பொண்ணுங்க உதவியோட. வெளிய வேற எங்கேயும் அவங்க பாத்துகிட்டது கிடையாது.

நாங்க யாரும் அங்க இருக்க மாட்டோம், ஹாஸ்டல், ரூமுன்னு போயிட்டு ஒன்னே முக்காலுக்கு மேல தான் வருவோம். லவ்வுனதெல்லாம் ஒன்னுல இருந்து ஒன்றரை வரைக்கும்.

சரி விஷயத்துக்கு வருவோம். ராசு பீதியை கிளப்பினான். 'மாப்ளே எல்லாரும் வெறியோட தேடிகிட்டு இருக்காங்க, நாம மாட்டினா ஒழிஞ்சோம். பிரபா மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் பயமில்ல, கிளாஸ் மேட்டான்னு கூட தெரியாது. ஆனா நாம தான் எதுக்கெடுத்தாலும் மொத ஆளா போயி பாப்புலரா இருக்கோம், பாத்தா பின்னிடுவானுங்க' ன்னான்.

எல்லாருக்கும் உதற ஆரம்பிச்சிடுச்சி எங்க ரெண்டு மூனு பேரை தவிர. 'சரி எல்லோரும் ஒன்னா போவோம், எது வந்தாலும் பாத்துடுவோம்' னு படையா கிளம்பினோம் ராத்திரி ஏழரைக்கு மேல.

பஸ் ஸ்டான்ட் போற வரைக்கும் பிரச்சினை இல்ல. எல்லாரும் டீ குடிச்சோம். லோக்கல் பசங்க நிறைய பேரு கூட இருந்ததால ரொம்ப தெம்பா இருந்தோம்.

ஆத்தூர் போற பஸ் ஸ்டான்ட விட்டு வெளிய வர, எல்லாரும் வழியனுப்ப ஒவ்வொருத்தரா மூவ் ஆகற பஸ்ஸில ஒவ்வொருத்தரா வரிசையாய் ஏற ஆரம்பிச்சோம்.

அப்போ ஒருத்தன் பஸ்ஸில ஏறிகிட்டிடுந்த ரமேஷோட சட்டையை பிடிச்சி கீழ இழுத்தான். தடுமாறி கீழ இறங்கி முறைச்சி, 'என்ன விஷயம் ஏன் இழுக்கிற' ன்னான்.

அந்த பொண்ணு பேரை சொல்லி அதோட 'கிளாஸ் மேட்டுதானே' ங்கவும் ரமேஷ் தலையாட்ட,

'வாங்க சார், உங்களுக்காகத்தான் காத்திருக்கோம்' னு சொல்லி இழுத்துகிட்டு போகவும், ஏதோ பண்ண போறாங்கன்னுட்டு ஆட்டுகுட்டி மாதிரி நானும் ஏதோ துணிச்சலா கூடவே போனேன்.

பஸ்ஸு சல்லுனு போயிடுச்சி. பஸ் ஸ்டன்ட்ல நின்னுட்டிருந்த பசங்க எல்லாம் எஸ்கேப். அவனுங்க ஆளுங்க ரெண்டு மூனு பேரு சேர்ந்துட்டானுங்க.

'இவன் யாருடா கூடவே வர்ரான்' ன்னு ஒருத்தன் என்ன பாத்து கேட்கவும், எல்லோரும் கூடவே வந்துகிட்டிருந்த என்னை அப்போதான் பாத்தாங்க.

'நான் ரமேஷோட பிரண்டு' ன்னேன். 'அப்படியா, வாங்க சார்' னுட்டு பின்னால இருந்த மூத்திர சந்துக்கு கூட்டிட்டு போனாங்க.

அந்த பொண்ணோட தம்பி கொல வெறியோட இருந்தான். எல்லாரும் சேர்ந்து மாத்த ஆரம்பிச்சுட்டானுங்க. ரமேஷுக்கு நாலுன்னா எனக்கு ஒன்னு விழுந்துச்சி.

என்ன அடிக்கும் போது 'எவன்டா இவன் புதுசா இருக்கான்' னு கேக்க, 'அவரோட ஃபிரண்டாம்' னு சொல்ல, 'அப்பா சரின்னு வாங்கிக்கட்டும்' னு வஞ்சனையில்லாம குடுத்தானுங்க...

அவனோட பூணூல பிச்சிட்டானுங்க. கண்ணமெல்லாம் உப்பிடுச்சி. எனக்கும் அப்பப்போ சட்டு சட்டுனு அடி விழுந்துகிட்டிருந்துச்சி. அப்போ அங்க ஒரு போலீஸ் வர, அப்பாட தப்பிச்சோம்னு நினைக்க,

'டேய் பப்ளிக்ல ஏண்ட ராவுடி பண்றிங்க, தனியா கூட்டிட்டு போயி கவனிக்க வேண்டியதுதானே' ன்னு ஐடியா குடுத்திட்டு கண்டுக்காம போயிட்டாரு.

உயிர் பயம் ஆரம்பிச்சுடுச்சி. போட்டிருந்த செருப்பு, கொண்டு போன பேக் எங்க போச்சுன்னே தெரியல. வாயெல்லாம் உப்பு கரிக்க ஆரம்பிச்சுடுச்சி.

'சரி சரி இங்க போதும், ரூமுக்கு கூட்டிட்டு போலாம்' னு ஒருத்தன் சொல்ல அங்கிருந்து எங்கள தள்ளிகிட்டு நகரும்போது புதுசா ஒரு ஆளு வந்தான், கடவுள் மாதிரி.

அவனுங்களை அடக்கி, கையை தரை வரைக்கும் பின் பக்கமா கொண்டு போயி சப்புனு ரமேஷ் கன்னத்துல ஒன்னு உட்டான். 'திரும்பி பாக்காம ஓடிப்போ' ன்னு சொல்லிட்டு, அடுத்து எனக்கும் அதே மாதிரி ஒன்னு விட்டான்.

காமிக்ஸ்ல மட்டுமே அடிச்சா நட்சத்திரம் பறக்கிறத பாத்த நான், நேர்ல லைவ்-ஆ பாத்தேன். திரும்பி பாக்காம அழுதுகிட்டே கந்தலா போயி, நின்னுகிட்டிருந்த ஆத்தூர் பஸ்ல போயி உட்காந்தோம்.

ரமேஷ் வெலவெலத்துப் போயி என்ன கட்டி புடிச்சி அழ ஆரம்பிச்சுட்டான். நிமிர்ந்து பாத்தா, ஓடிப்போன எல்லாரும் குரூப்பா திரும்பி வந்து கோரஸா 'மாப்ளே ஒன்னும் ஆகலல்ல' ன்னானுங்க, ஒன்னுமே தெரியாத மாதிரி.

அப்புறம் நடந்ததெல்லாம் இங்க முக்கியம் இல்ல. அந்த பொண்ணுகிட்ட இருந்து கல்யாணத்துக்கு அழைப்பு வந்திருந்தது. ஆட்டோகிராப் பாத்து அனுப்பி இருக்கும் போல.

கண்டு பிடிச்சி அவனை உதைச்சு (கண்டிப்பா எங்களவிட அதிகமா இருக்கும்னு நம்பறேன்) சொந்தத்துலேயே ஒரு தியாகியை புடிச்சி கல்யாணம்னு தெரிஞ்சிகிட்டேன்.

கல்யாணத்துக்கு போனேன், ரவி மட்டும் வந்திருந்தான். பசங்க வேற எவனும் வரல, பொண்ணுங்களும் வரல.

அந்த பொண்ணோட தம்பிதான் முன்னாலயே நின்னுகிட்டு எல்லாத்தையும் வரவேற்றுகிட்டு இருந்தான்.

என்ன 'வாங்கண்ணா' ன்னு பலமா வரவேற்பெல்லாம் குடுத்துட்டு, சட்டுனு கட்டிபுடிக்கிற மாதிரி காதுகிட்ட 'மன்னிச்சுடுங்கண்ணா, சாரி' ன்னான்.

அடி வாங்கினாலும், அந்த பொண்ணு மனசு எவ்வளவு கஷ்டப்படும்னு பாக்கலாம்னுதான் போனேன். நல்லா கலகலப்பா சிரிச்சிகிட்டு முன்ன விட சந்தோஷமா இருந்துச்சி.

சிறு மாற்றங்களுடன் கூடிய மீள் இடுகை...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB