நான் பார்த்த மொக்கைப் படங்கள்...

|

சினிமா நமது வாழ்வின் அங்கமாகிவிட்ட ஒன்று. ஏதேனும் ஒன்று பற்றி உதாரணம் சொல்ல வேண்டுமென்றாலும் இன்றெல்லாம் சினிமாவைத்தான் உதாரணமாய் காட்டுகிறார்கள். சினிமாவில் பேசப்படும் பிரபல வசனங்கள் தாம் சமீபத்திய பேச்சுகளில் இழையோடுகிறது.

வாழ்வில் மறக்கவே முடியாத சில படங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும், அதற்கான காரணங்கள் பலவாக இருந்தாலும் குறிப்பாய் இரண்டுதானிருக்கும். ஒன்று மிகவும் பிடித்தது, மற்றொன்று ஏனடா இந்த படத்திற்கு வந்தோம் என எண்ணவைத்தது.

இன்றெல்லாம் படத்திற்கு செல்வதற்கு முன் விமர்சனங்களைப் படித்து, எல்லாவற்றிற்கும் நம்மை தயார்படுத்திக்கொண்டு செல்கிறோம். ஓரளவிற்காவது அந்த படத்தினைப் பற்றிய விவரத்துடன் செல்கிறோம். ஆனால் அன்று?

இந்த இடுகை பார்த்து நொந்துபோன மூன்று படங்களைப் பற்றி.

சிவப்பு நிறத்தில் ஒரு சின்ன பூ என்றொரு படம். எத்தனை பேருக்கு இப்படி ஒரு படம் வந்திருக்கிறது என தெரியும் என்பது கேள்விக்குறி. எல்லா படங்களையும் விடாது பார்க்கும் கல்லூரி தருணத்தில் பெரம்பலூர் ராம் தியேட்டரில் காலைக் காட்சியாய் பார்த்தது.

சத்தியமாய் உள்ளே இருபது நிமிடங்கள் தான் இருந்தேன். ஏதோ தொழிலாளர் பிரச்சினை, வறுமை, கேவலமான திரை(அப்போது பழுப்பு கலராய் இருக்கும்) என எல்லாம் இருக்கவிடாமல் செய்ய, ஆளை விட்டால் போதும் என, மீ... த எஸ்கேப்...

மாப்பிள்ளை மனது பூப்போல என்றொரு படம் ஆத்தூர் சொர்ணம் தியேட்டரில் ரிலீசாகியிருந்தது. குருவிக்கரம்பை சண்முகம் அவர்களின் சொந்தப் படம் என எண்ணுகிறேன். அப்போது சக்தி சிஸ்டத்தில் இருந்தேன், நாங்கள் மூன்று பேர் நான், சங்கர் அண்ணா, பாலாதான் முழுப் பொறுப்பு.

தியேட்டர் ஓனர் பையன் எங்களிடம் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ளும் மாணவன் என்பதால், டிக்கெட் தேடி வந்துவிட்டது, இலவசமாய். படம் பார்க்க கிளம்பியதற்கு முக்கிய காரணம், யுவராணி கதாநாயகி. எனக்கும் ஷங்கர் அண்ணாவுக்கும் யுவராணியை ரொம்பப் பிடிக்கும். பாண்டியராஜன் கதாநாயகன். பாலா வேண்டாமடா என எச்சரித்தும் கேளாமல் உள்ளே சென்றோம்.

பெண்பார்க்கும் படலம், கட்டைக் குதிரையைப் பார்த்து ஒரு பாடல் என படு மொக்கையாய் இருக்க, உட்கார்ந்த பத்தாவது நிமிடத்தில் ஷங்கர் அண்ணா என்னைப் பார்த்து தம்பி போகலாமா எனக்கேட்க, ஆகா எனக் கிளம்பி, பாலா வண்டியை எடுத்து வந்துவிடு என சொல்லிவிட்டு வெளியே எஸ்கேப்...

நடந்தே ரூமிற்கு சென்றுவிட, பாலா பதினோரு மணிபோல்தான் வந்தான், பேயடித்தாற்போல். இடைவேளைக்கு முன்னால் வண்டியை எடுத்து செல்ல அனுமதிக்க மாட்டார்களாம். கெஞ்சிக் கதறியும் வேலைக்காக வில்லையாம். விட்டு வந்த எங்களை அவன் அர்ச்சித்ததை சத்தியமாய் இங்கு எழுத முடியாது.

மூன்றாவதாய் உமைக்குயில். அதே சொர்ணம் தியேட்டர், முன் சொன்ன படத்திற்கு முன்னதாய். பாக்கியராஜைக் காப்பியடித்தார் போல யோகராஜ் என்பவர் நடித்த படம். இரண்டு பாடல்கள் நன்றாக இருந்தது வெளியில் வந்து கேட்கும்போது. (கன்னம் சிவந்தது வெக்கத்தில் உனக்கு.... மற்றும் இது ராத்திரி...சாமத்துல) அவ்வளவாய் விவரம் தெரியாத வயது, அப்போதே முழுதாய் பார்க்க இயலவில்லை. இடைவேளையோடு வந்துவிட்டேன்.

பூ மனசு (பெரம்பலூர் தனம் தியேட்டரில் ஒரே காட்சிதான் இந்த படம், அடுத்து காட்சிக்கு பூந்தோட்டக்  காவல்காரன். அப்படியும் பார்த்தாயிற்று), தாஜ்மகால், நாட்டுக்கு ஒரு நல்லவன் என இன்னும் நிறைய சொல்லிக்கொண்டு போகலாம்.

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB