தப்பு...

|


அலுவலகம் வந்ததிலிருந்து மனதிற்கு உறுத்தலாயிருக்கிறது பல்லிடுக்கில் பாக்கென.
 
சரியாய் பத்துநாள் இருக்கும். வெஸ்ட் மாம்பலம் லேக் வியூ அருகில் ஒரு பெரியவர் விபூதியுடன் சிரித்தமுகமாய் எனது வண்டியை கைகாட்டி நிறுத்தினார்.
 
'தம்பி என்னை டி நகர் பஸ் ஸ்டாண்டில் விட்டுவிடமுடியுமா எனக்கேட்க', சரி எனச் சொல்லி முதுகோடிருந்த பையினை முன்புறம் மாற்றி வழக்கத்தினும் மெதுவாய் ஓட்டிச் சென்றேன்.
 
சப்வேயைக் கடந்து நெரிசலில் செல்லும் வழக்கம் இல்லாததால் வலதுபுறம் ஜெயின் காலேஜ் வழியாய் செல்ல திரும்பி நிறுத்தினேன். அதற்குள் விடுவிடுவென இறங்கி அந்த பெரியவர் நடந்து செல்ல ஆரம்பித்துவிட்டார்.
 
ஒரு சிநேகமான புன்னகையோ, ஒரு நன்றியையோ சொல்லாமல் சட்டென சென்றது மனதுக்குள் ஏதோ செய்தது. அதே சமயம், இதையெல்லாமா எதிர்பார்ப்பது என உள் மனது வாதிட்டாலும், இல்லையில்லை அழைத்துச் செல்லக் கேட்கும் போது இருந்ததில் இறங்கு ம்போது ஒரு சதவீதமாவது இருக்கலாமே என வாதிடத்தான் செய்தது.
 
கிளம்பும் நேரத்தைப் பொறுத்து செல்லும் வழி மாறும் என்பதால், இன்றுதான் மீண்டும் அதே வழியில். அதே பெரியவர், மலர்ந்த சிரிப்புடன் கை காட்டி லிப்ட் கேட்க விருட்டென் வந்துவிட்டேன்.  அதனால்தான் இந்த இடுகையின் முதல் வரி...

சதீஷுக்கு கல்யாணம்...

|

ரெண்டு வருஷத்துக்கு முன்னால ஊருக்கு போயிருந்தப்போ சதீஷ் என்னை பார்க்க வந்தான். எல்லாம் விசாரிச்சிட்டு, 'அண்ணா ஒரு முக்கியமான விஷயம், யாருகிட்டயும் சொல்லிடாதீங்க, எனக்கு நாளைக்கு கல்யாணம்'னு சொன்னான்.

எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியா இருந்துச்சி. ஏன்னா அவனுக்கு வயசு பதினாறுதான் இருக்கும். கேட்டப்போ 'என்னன்னா அவ்வளோ கம்மியா சொல்றே! தை வந்தா பதினேழு முடியுதுண்ணா'ன்னு சொன்னான், அப்போ சித்திரை மாசம்...

'சரி பொண்ணு யாரு, ரகசியம் மாதிரி சொல்ற' ன்னு கேட்டதுக்கு, 'லவ்வுண்ணா, பொண்ணு புதூர்தான். ராத்திரி ஓடியாறேன்னு சொல்லியிருக்கு, திவா அண்ணன்கிட்டத்தான் வண்டிக்கு சொல்லியிருக்கேன்னு சொன்னான்.

'எப்படிடா லவ்வு' ன்னு கேட்டதுக்கு 'கொத்து வேலைக்கு புதூருக்கு போயிருந்தப்போ, வேலை செஞ்ச வீட்டுக்கு பக்கத்துலதான் அந்த பொண்ணு இருந்துச்சி. தண்ணி கேக்கிற மாதிரி பேச ஆரம்பிச்சேன், நாலாவது நாள் கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டேன், சரின்னுடுச்சி'.

என் தம்பி திவா அங்க வர, 'என்னடா கூத்து நடக்குது, பொண்ணு ஓடிவருதாம், காருக்கு உங்கிட்ட தான் ஏற்பாடு பண்ண சொல்லியிருக்கானாம், என்ன விஷயம்' னு கேக்க,

'யாருகிட்டயும் சொல்ல வேணாம்னு சொல்லியிருந்தேன். இவன் ஒவ்வொருத்தருகிட்டயும் கல்யாணம்னு சொல்லி ஒங்கிட்ட மட்டும்தான் சொல்றேன், யாருகிட்டயும் சொல்லாதன்னு சொல்லியிருக்கான். இப்போ தெருவுக்கே தெரியும்ணா'

'சரி அந்த பொண்ணு வருமா' ன்னு கேட்டதுக்கு 'டவுட்டுத்தான்' னு திவா சொல்ல, 'கண்டிப்ப வரும்ணா, திவா அண்ணந்தான் நம்பிக்கை இல்லாமயே பேசிகிட்டிருக்கு' ன்னு சதீஷ் மறுத்து சொன்னான்.

'சதீஷு, காரு வந்துட்டு போகலைன்னாலும் ஐநூறு ரூபாவது கொடுத்தாகனும், தெளிவா சொல்லிட்டேன்'னு சொல்ல, 'அது பத்தி உனக்கென்ன?, வர்றது கன்ஃபார்ம்' னு சொன்னான்.

அப்போ அங்க வந்த பக்கத்து வீட்டு வாண்டு சூர்யா சதீஷோட எங்கள பாத்துட்டு , 'சதீஷ் அண்ணனுக்கு நாளைக்கு கல்யாணம்' ன்னு சொல்லிட்டு போக, திவா தலையில அடிச்சிகிட்டு 'டேய், சின்ன பசங்களையும் விடலையா?' ன்னு கேக்க, அவன் என்னோட கூட்டாளிண்ணா' ன்னு சொன்னான்.

'திவா ரொம்ப சுருக்கமா இவன் லவ்வ பத்தி சொல்லு' ன்னு கேட்டேன். 'இவந்தான்னா ஏதேதோ சொல்லிகிட்டிருக்கான், அந்த பொண்ணு வீட்டுக்கே இவன் செட்டு பசங்க, பிரகாஷ் அண்ணன் தலமையில பொண்ணு கேக்க போயிருக்காங்க.

சதீஷ பாத்து 'இந்த ஆளு எங வீட்டு பக்கமாவே சுத்திகிட்டு இருக்கான். இனிமே பாத்தன்னா வெளக்கமாறு பிஞ்சிடும்னு, வந்துட்டானுங்க பெரிய மனுஷனுங்க பொண்ணு கேட்டுட்டு’ன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லி அனுப்பிச்சிட்டாங்க. பிரகாஷ் அண்ணன் மானமே போச்சுன்னு பொலம்பிகிட்டிருந்துச்சி'.

'அதெல்லாம் ஆரம்பத்துலண்ணா. அவங்க அம்மாவ விட்டுத்த்தள்ளு, பொண்ணுதானே முக்கியம்' னு சதீஷ் சொன்னான்.

'சரி எப்படி பொண்ணு வரப்போகுது' ன்னு கேட்டதுக்கு, 'அந்த பொண்ணோட அக்கா புருஷன் இவன மாதிரியே கொத்து வேலை செய்யறவன். அவனுக்கு தினமும் பீர், சில்லி சிக்கன், பீஃப்னு வாங்கி கொடுத்துகிட்டு இருக்கான். அவன் பொண்ண கண்டிப்பா அனுப்பி வெக்கிறேன்னு சத்தியம் பண்ணி சொன்னதா இவன் சொல்றான், மொதல்லயே சொன்ன மாதிரி எனக்கு ஒரு துளிகூட நம்பிக்கையில்ல!'

'பத்து மணிக்கு ஃபோன் பண்ண சொல்லியிருக்காப்லண்ணா, வண்டிக்கு சொல்லிடு டான்னு பத்து மணிக்கு மூலையில நிக்கனும்' னு சொல்லிட்டு ரெடி பண்ண போயிட்டான்.

அவன் வீட்டுல எல்லாரும் தயாரா காத்துகிட்டிருந்தாங்க. தூங்கிட்டு வழக்கமா விடியகாலம் எழுந்திரிச்சி, சதீஷ் மேட்டர் என்ன ஆச்சுன்னு கேட்டேன்.

அந்த பொண்ணு வரலையாம், அழுதுகிட்டிருக்கானாம், சமாதானப்படுத்தவே முடியலன்னு சொன்னாங்க.

அவனோட ஃபிரண்டுங்க எல்லாம்(மொன்ன கத்தியும் மொத்த பனியனும் கதா நாயகன் கங்கா தலமையில)ராத்திரி அந்த பொண்ணோட வீட்டுக்குள்ளயே செவுரேறி குதிச்சி உள்ள போய் பாத்திருக்கானுங்க, பொண்ணு எஸ்கேப்.

அதோட அக்கா புருஷன் விவரமா அழைச்சிகிட்டு போயி அவங்க வீட்டுல பூட்டி வெச்சுட்டானாம். செல்லுக்கு கூப்பிட்டா எடுக்கவே இல்லயாம். அப்புறம் அக்கா புருஷனோட ஃபிரண்டு ஒருத்தன் வீட்டுக்கு போயி அவனோட செல்ல புடுங்கி அதிலிருந்து கால் பண்ண எடுத்திருக்கான்.

இவனுங்க கோபமா கேட்டதுக்கு, 'உங்களுக்கெல்லாம் நான் வில்லண்டி. அந்த புள்ளய நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு கணக்கு பண்ணிகிட்டிருக்கேன், எனக்கே ஆப்பு வெக்க பாக்குறீங்களா' ன்னு கேட்டிருக்கான்.

அப்புறமா சதீஷ திட்டி, கொஞ்சம் மெனக்கிட்டு ஒரே வாரத்துல கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்க. ரெண்டு வயசுல பெண் குழந்த, அடுத்த வாரிசுக்கு இப்போ அந்த பொண்ணு மூணு  மாசம். குடும்பஸ்தனா சந்தோஷமா இருக்கான்.

அதுக்கப்புறமா ஞாபகம் வந்து 'அந்த பொண்ணு என்னடா ஆச்சி' ன்னு கேட்டதுக்கு, 'கல்யாணத்துக்கு அப்புறமா கால புடிச்சிகிட்டு கதறுனுச்சி. போடி மயிறான்னு திட்டிவிட்டுட்டேன். அப்புறமா அவங்க அக்கா புருஷனையே கல்யாணம் பண்ணிகிச்சி' ன்னான்.

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB