எடிட்டிங்

|


எனக்கு வேல்முருகன் ரூமுக்கு போனால் எப்போதும் சுவையான சம்பவங்கள் கிடைக்கும்.

அன்னிக்கு அப்படித்தான் பர்ஸ்-ம் பெல்ட்-ம் அவன் கம்பனி-ல எடுத்து தர்றேன்னு சொன்னதால அவனை பாக்க போயிருந்தப்போ, எனக்கு மாணிக்கம் அறிமுகம் கிடைச்சுது.

பார்த்த உடனே பேச ஆரம்பிச்சுட்டான், என்னப் பத்தி வேலு ஏற்கனவே சொல்லியிருப்பான் போல இருக்கு.

அரியலூர் பக்கத்துல மாத்தூர் சொந்த ஊராம். அழகுவேல் ரெக்கமண்டேசன்ல வந்து இருக்கானாம். ஒரு எழுத்தாளர் வீட்டில வேலை செய்யுறானாம்.

நான் பட்டுனு கேட்டேன், 'தம்பி, நீங்க என்னவா ஆகனும்னு வந்து இருக்கீங்க'ன்னு

'எடிட்டிங்'னான்.

பதில் எனக்கு சர்ப்ரைஸ்-ஆ இருந்தது. ஏன்னா கிராமத்துல இருந்து சினிமா-வுக்கு வர்றவங்க பெரும்பாலும் டைரக்டர் ஆகனும், நடிகனாகனும், பாடலாசிரியராகனும்னு தான் வருவாங்க. அதுவும் மாத்துர்ல இருந்து எடிட்டர்னு நினைச்சாலே அவன்கிட்ட நிறைய பேசனும்போல இருந்தது.

'எப்போ வந்தே, சார் எழுத்தாளராச்சே, அங்க என்ன பண்றே'ன்னேன்.

'வந்து ஆறு மாசமாச்சு, வேலு அண்ணாதான் எழுத்தாளர் சார்கிட்ட சேத்து விட்டாரு அவர் மனசுல இடம் பிடிக்க போறேன்'னான்.

எனக்கு ஒரே குழப்பமா இருந்துச்சி. வேலு இப்படித்தான், ஏதச்சும் வில்லங்கமா பண்ணிட்டே இருப்பான்.

'ஊர்ல என்ன பண்ணிட்டிருந்த?, எடிட்டிங் மேல எப்படி ஆர்வம் வந்தது, எழுத்தாளர் சார் மனசுல இடம் பிடிக்கறதுக்கும், எடிட்டர் ஆவறதுக்கும் என்ன சம்மந்தம்'னேன்

'எழுத்தாளர் சாரும் தங்கார் பச்சன் சாரும் ஃபிரண்ட்ஸ். தங்கார் பச்சன் சாரும் எடிட்டர் லெனின் சாரும் ஃபிரண்ட்ஸ். எழுத்தாளர் சார் மனசுல இடம் பிடிச்சா தங்கார் சார் மூலம எடிட்டர் லெனின் சார் கிட்ட அசிஸ்டன்ட்-ஆ சேர்த்து விடுவார்னு வேலு அண்ணா தான் என்ன சேத்து விட்டாருன்னான்'

தலைய சுத்தற மாதிரி இருந்தது. சரி மனசுல இடம் புடிச்சியான்னு அவன் பாணியிலேயே கேட்டான்.

உடனே புலம்ப ஆரம்பிச்சிட்டான். 'ஏன்னா நீங்க வேற, என்னை அடிமை மாதிரி நடத்துறாங்க, சாரோடவைப்ஃ உள் பாவடை பிரா விலுருந்து நான் தான் துவைச்சுப் போடறேன். பாத்திரம் தேய்க்கறது, வீடு கழுவறது, பாத்திரம் சுத்தம் செய்யறது எல்லாமே நான் தான்.

ஆனா முந்த நாள் வீட்டு சாவிய தொலைச்சிட்டேன், அதுக்கு போயி கன்னா பின்னான்னு திட்டுறாங்க, மனசு கஷ்டமா இருக்கு, செத்துப்போயிடலாம்னு கூட இருக்கு, வேலு அண்ணாவுக்காகத்தான் பாக்கறேன். அவர்கிட்ட சொன்னா, இந்தமாதிரி கஷ்டப்பட்டாத்தான் வாழ்க்கையில முன்னேற முடியும்னு சொல்லுறாரு'

'ஆமா, ஊர்ல என்ன பண்ணின, எடிட்டிங் மேல எப்படி இவ்வளவு ஆர்வம் உனக்கு' பேச்சை மாற்றினேன்.

'அதுவா, ஊர்ல பைக் சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டிட்டு இருந்தேன். அழகுவேல் அண்ணாவை லைப்ரரிக்கு தினமும் சைக்கிள்ல கொண்டு போய் விடுவேன். என் மேல் பாசமா இருப்பார். என் ஆர்வத்தை பாத்துட்டு என்னை இங்கு அனுப்பி வெச்சாரு'ன்னுட்டு ஊர்ல பண்ணின சாகசத்தை சொல்ல ஆரம்பிச்சான்.

'அண்ணா எங்க ஊர் தியேட்டர்ல இந்து படம் போட்டிருந்தாங்க. அதுல சக்கர வள்ளி கிழங்கு பாட்டுல பல இடங்கள்ல கவர்மென்ட்ல(சென்சார்ல) சிலேன்ட்(சைலன்ட்) பண்ணிருப்பாங்க. ஆப்ரேட்டர் நல்லா பழக்கம். அவர் எல்ப்போல டெக்னிக் யூஸ் பண்ணி டேப் கேசட் மூலமா இணைச்சு பாட்டு தொடர்ச்சியா வர்ற மாதிரி பண்ணினேன்.

ஊர்ல எல்லோரும் என்ன பாரட்டினாங்க(?). அப்போதான் முடிவு பண்ணினேன், பெரிய எடிட்டர் ஆவறதுன்னு. சரியானசமயத்துல வேலு அண்ணாகிட்ட கடவுள் மாதிரி அழகு அண்ணா அனுப்பி வெச்சாரு'ன்னான்.

எனக்கு அவன் மேல் கொஞ்சம் பரிதாபமாக இருந்தது. கால் வேறு கொஞ்சம் ஊனம்ங்றத எழுந்து அவன் தண்ணி குடிக்கப்போகும் போதுதான் கவனிச்சேன்.

அவனுக்கு ஏதாச்சும் உதவி பண்ணனும்னு நினைச்சேன்.
'செலவுக்கு காசெல்லாம் என்ன பண்ணுவ, எவ்வளோ வெச்சுருக்கே'ன்னு கேட்டேன்

'சாப்பாடு, தங்கறது எல்லாம் அங்கேதான். அப்புறம் செலவுக்கு எதுக்குன்னு என்னை கேட்டவன், பஸ் போக கையில 50 பைசா இருக்குன்னான். வேலு வந்தா அவன உண்டு இல்லன்னு பண்ணனும் நினைச்சிட்டிருந்தேன்.

அப்போல்லாம் செல் போன் கிடையாது. காத்திருந்தேன், கடைசியா வந்தான் 1 மணி வாக்கில். வந்த உடனே அவசரப்படுத்தினான்.

'கிளம்பு, கிளம்பு டைமாச்சு, நீ எப்போ வந்தே மாணிக்கத்த கேட்டுட்டு அவனையும் கிளம்பச்சொன்னான்.

சைதாப்பேட்டையில் ஏறினோம். டி.வி.எஸ் 3 டிக்கட் வாங்கச் சொன்னான். வாங்கினேன்.

நானும் அவனும் பேசிட்டே வந்தோம். திடீர்னு பாத்தா ஒரு பஸ் ஸ்டாப்புல வேலு இறங்கி நடந்து போயிட்டுக்கான். அவசரமா ரென்டு பேரு காலை மிதிச்சு திட்டு வாங்கி ஓடுற பஸ்ஸிலிருந்து குதிச்சேன். மூச்சிறைக்க ஓடி பக்கத்துல போயி 'ஏண்டா இறங்கும் போது சொல்லக்கூடாதா? கடைசி நேரத்துலதான் கவனிச்சேன், இல்லன்னா என்ன ஆகி இருக்கும்'னேன்.

'பாரீஸ்க்கு போயிருப்பேன்னான் கூலா'.

வேற பஸ் புடிச்சு ராயப்பேட்டை தாண்டி ஜிம்மி பில்டிங் பக்கம இறங்கி அவன் கம்பனிக்கு போகும்போதுதான் மாணிக்கம் ஞாபகம் வந்தது. 'டாய் மாணிக்கம் எங்கடா'ன்னு கேட்டேன். 'அவன் கூட வரலையா? சரி பரவாயில்ல வா'ன்னான்.

'டேய், அவன்கிட்ட காசு கூட இல்லடா! 50 பைசா தான் இருக்குன்னான். டிக்கெட் வேற என் கையில் இருக்கு, என்னாச்சோ தெரியலயே?' பதறினேன்.

'50 பைசா வெச்சிருக்கானா? ஏது அவனுக்கு? என் கிட்ட சொல்லவே இல்லயே... சரி சரி, ஏன் தேவையில்லாம டென்சன் ஆகற? நல்லா பாடம் கத்துக்குவா'ன்னான்.

அப்புறமா அதைப்பத்தி பேசவே இல்லை, மறந்தும் போயாச்சு.
மூனு வருஷம் கழிச்சு, பொங்கல் சமயத்துல அழகுவேலுகிட்ட அவங்க வீட்டு திண்ணையில பேசிக்கிட்டிருக்கும்போது மாணிக்கம் ஞாபகம் வந்து கேட்டேன்.

'ஒ, அதுவா, நீங்க ரெண்டு பேரும் பஸ்ல விட்டுட்டு போனதுக்கப்புறம், செக்கிங்-ல மாட்டி நல்லா வாங்கி கட்டிட்டு, தாம்பரம் வரைக்கும் நடந்தே போனானாம். ரெண்டு நாள்-ல ராத்திரி லாரி புடிச்சி ஊருக்கு வந்துட்டான்.

ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி, ஒரு பொண்ணை இழுத்துட்டு ஓடி வந்துட்டான், நான் தான் அவனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சேன், நம்ம வீட்டிலதான் நடந்தது. இன்னைக்கு குடும்பத்தோடு பொங்கலுக்கு வர்ரான். தோ பாரு, அவனே வந்துட்டிருக்கான்'னு சொல்லவும் பாத்தேன்.

தூரமா வந்துகிட்டிருந்தான், காலை லேசா உந்தி உந்தி. பக்கத்திலே அவன் மனைவி, கைக்குழந்தையோடு. பக்கத்திலே வந்தான். பெரிசா மீசைய முறுக்கியிருந்தான்.

என்ன பாத்ததும் சிரிச்சான். 'மாணிக்கம் என்ன தெரியுதா'ன்னேன்.

'மறக்க முடியுமான்னே, டில்லில இருக்கீங்கலாமே? உங்களை பத்தி அப்பப்போ விசாரிப்பே'ன்னான்.

'ஆமாம் பெண் குழந்தையா, என்னா பேரு'ன்னேன்?

'இந்து'ன்னான்.

பிரபாகர்.

அன்பு நண்பர் லக்கிக்கு வாழ்த்து...

|

அருமை நண்பர் கிருஷ்ணாவும்
அழகு பெண்ணை பெற்றிட்டு
பொறுப்பான அப்பாவாய்
புது உலகில் நுழைந்துவிட

உரிமையாய் பழகுகின்ற
உயிருறைந்த நண்பரெலாம்
பூரிப்பில் மகிழ்ந்து
புது வரவை வரவேற்று

நிலையில்லா செல்வமது
நிறைய சேர்ந்திடினும்
விலைமதிப்பு இல்லாத
வரும் குழந்தை செல்வத்தினால்

குழலினிது குறளதனை
கண்ணுற்று கேட்டாலும்
மழலை மூலம் உணர்தலில்தான்
உண்மை சொர்க்கம் உணர்ந்திவோம்

பழகுதற்கு இனிய எங்கள்
பாசமுள்ள லக்கி நீரும்
உலகிலுள்ள பேறு யாவும்
ஒவ்வொன்றாய் பெற்றிட்டு

வலையுலகில் கருத்துகளை
வழக்கம்போல் தெளித்திட்டு
நிலை மாறா நிலையுடனே
உயர்ந்து வாழ வாழ்த்துகிறோம்.

பிரபாகர்.

தாய்மை

|


























ஒரு துளி உயிரை
உணர்வோடு வாங்கி
கருவறை காத்து
கடினங்கள் தாங்கி

பொறுமையை போற்றி
பசி தூக்கம் மறந்து
உரு கொண்டு வெளியில்
உணர்வாகும் வரையில்

கண்ணென காத்து
கருத்தாய் போற்றி
பண்களை பாடி
பாசத்தை ஊட்டி

தென்படும் பொருளை
தெளிவுடன் விளக்கி
மனதினிற் பதித்து
மறவாமல் செய்து

வேளைக்கு ஓன்றாய்
ஆடைகள் பூட்டி
அழகினில் பூரித்து
ஆனந்தம் கொண்டு

நாழியும் அயராமல்
நினைவாய் இருந்து
பாலினை புகட்டி
பாதியாய் இளைத்து

தடுப்பு மருந்துகள்
தவறாது கொடுத்து
நடப்பு நிகழ்வினில்
நாட்டத்தை குறைத்து

அடம் பிடித்தழுதால்
ஆறுதல் சொல்லி
கடமையில் மட்டும்
கவனம் செலுத்தி

நல்லமுது சேர்த்து
நற்கதைகள் புகட்டி
கல்வியின் சிறப்பை
கருத்தாய் உணர்த்தி

பள்ளிக்கு அனுப்பி
பாடத்தை பயிற்று
நல்லோர் போதித்த
நல்லவை நல்கி

தந்தையவர் கோபமுடன்
தவறுக்காக திட்டிட
சிந்தை மாறி சினந்து
சோர்ந்து கிடக்கையில்

மந்திர வார்த்தையோடு
மருந்திட்டு மனக்காயம்
வந்த தடம் தெரியாமல்
வலி போகச் செய்து

விடலை பருவத்தில்
உண்டான மற்றங்களை
கூடவே கவனித்து
குட்டி சரி செய்து

கடமையினை நினைவூட்டி
கல்வியினில் மனம் திருப்பி
மடமையினை நீக்கி
மகத்தான வழி செலுத்தி

வேலையில்லை என்று
வாட்டமொடு இருந்தன்று
வேளைவரும் உனக்கென்று
வஞ்ஜையாய் பேசி

ஆலயங்கள் சென்று
ஆண்டவனை தொழுது
வேலையது கைசேர
வேண்டுதல்கள் புரிந்து

திருமண வயதில்
துணையினை தேடி
இருமனம் இணைத்து
இல்லறம் நுழைத்து

பெற்றிட்ட பிள்ளைகளை
பெரிதும் நினைத்து
பெருமையாய் பிள்ளை
புகழ் பிறரிடம் சொல்லி

பிள்ளைக்காக வாழுகின்ற
புனிதமான தாய்மைக்கு
தலை தாழ்ந்து வணங்கி
திருவடிகள் போற்றி

மேலும் பல பிறவியிலும்
மகனாக பிறந்திடவே
ஞாலமாளும் இறையவனை
வணங்கி வேண்டுகிறேன்...

பாசமுடன்
மகன்....

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB