இங்க என்னோட ஃபிரண்டு மணியப்பத்தி சொல்லியே ஆகனும். பயங்கரமா நம்பறமாதிரி நிறையா சொல்லுவான். எத்தன முறை ஏமாந்தாலும் அவன் சொல்ற ஒவ்வொரு விஷயமும் நம்பற மாதிரித்தான் இருக்கும். வருஷம் முழுசும் ஏமாத்தினாலும் ஏப்ரல் ஒன்னு அன்னிக்கு கொஞ்சம் விஷேசமா பண்ணுவான்.
முன்னாடி அவன் பண்ணின சில விஷயங்கள பாருங்களேன்...
ஆத்தூர்ல அயர்ன் ஃபிளவர்ஸ்னு ஒரு படம் போட்டிருக்கான், சூப்பரா இருக்காம்னு சொல்லி கூட்டிட்டு போனான். போனதுக்கப்புறம்தான் தெரிஞ்சது இரும்புப் பூக்கள்னு கார்த்திக் படம்...
இன்னொரு வருஷம் கிரிக்கெட் விளையாண்டுக்கிட்டிருந்தப்போ பதட்டமா வந்தான். 'என்னய்யா பண்ணின, அண்ணன் (என் அப்பாவை அப்படித்தான் கூப்பிடுவான்) ரொம்ப கோபமா இருக்காரு' ன்னான்.
'ஒன்னும் பண்ணலையே மணி' ன்னு சொன்னதுக்கு ’வாழ்க்கையில இவ்ளோ கோபமா பாத்ததே இல்ல, எங்க இருந்தாலும் கூட்டிகிட்டு வரச் சொன்னாரு’ ன்னான்.
ஆட்டத்த பாதியிலயே விட்டுட்டு அவசரம் அவசரமா தவிப்பா வீட்டுக்கு போனதுக்கு அப்புறம்தான் அவரு ஆபீஸ் விஷயமா வெளியூருக்கு போயிருக்கிறதும், ரெண்டு நாள் கழிச்சித்தான் வருவாருங்கறதும் ஞாபகத்துக்கு வந்துச்சி.
இன்னுமொரு வருஷம்... முறைக்காதீங்க, சொல்லல. இந்த மாதிரி நம்மல படுத்திகிட்டிருக்கிற மணிக்கிட்ட இந்த வருஷம் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும்னு முடிவு செஞ்சேன். இதுக்கு முன்னால தெரியாம ஏமாந்துட்டோம், இந்த தடவ உஷாரா இருக்கனும்னு தயாரா இருந்தேன், ஏப்ரல் ஒன்னுங்கறது ரொம்ப நல்லாவே ஞாபகம் இருந்துச்சி.
காலையிலேயே வீட்டுக்கு வந்தான். 'காட்டுல ஒரு பெரிய பாம்பு கரண்டுல மாட்டுச்சிய்யா, வந்து பாக்குறியா’ ன்னான். நெல்லு வயல்ல எலித்தொல்லைக்காக கரண்ட் போடுவாங்க. அதுல எலி, பாம்புன்னு நிறைய மாட்டும்.
எனக்கு ஒரு பெரிய செத்த பாம்ப பாக்கனும்னு ஆசை, அவங்கிட்ட மொதல்லயே கேட்டிருந்தேன். ஏப்ரல் ஒன்ன நினைச்சிட்டு ’இல்ல மணி இன்னொரு நாள் பாத்துக்கலாம்’ னு சொன்னேன்.
'பொய்யில்லய்யா நிஜமாத்தா சொல்றேன்’ னுட்டு அங்க வந்த பக்கத்து வீட்டு மாமாகிட்ட, 'மாமா ஆத்துல ஒரு பெரிய பாம்ப உங்ககிட்ட காமிச்சந்தானே' ன்னு கேட்க ஆமான்னு அவரு தலையாட்டினாரு.
'நம்புய்யா வாழ்க்கையில' ன்னு சொன்னதுக்கு அப்புறம், போயி பாத்தோம், அப்புறமா அங்க இங்கன்னு போனோம். ஆத்தூர், விரகனூர்னு டி.வி.எஸ்.ல போயிகிட்டே இருந்தோம். நிறையா வேலை வெச்சிருந்தான். சாயந்திரம் வரைக்கும் வீட்டுக்கே வரல.
கடைசியா வீட்டுக்கு வரும்போது மனசு விட்டு கேட்டுட்டேன், 'மணி இன்னிக்கு ஏப்ரல் ஒன்னு தெரியுமா? ஞாபகம் இருக்கான்' னு கேட்டேன்.
'ஞாபகம் இல்லாமய காலையில இருந்து உங்கூட இருக்கேன்' ன்னு சொல்லிட்டு ’ஏப்ரல் ஒன்னுக்கு உன்னை எதுவுமே பண்ணலன்னு தானே கேக்கறே' ன்னு கேட்டான்.
'ஆமா மணி, காலையில இருந்தே எதிர்பாக்கறேன் ஒன்னுமே நீ பண்ணல...' ன்னு சொல்லவும்,
'பண்ணுவேன் பண்ணுவேன்னு எதிர்ப் பார்த்துகிட்டிருந்து, இப்போ நடக்காம ஏமாந்து போயிட்டல்ல' ன்னு சொல்லி சிரிச்சிட்டு, 'அதெல்லாம் இல்லை வீட்டுக்கு போ தெரியும்' னு சொல்லிட்டு வண்டியில இருந்து இறங்கி அவங்க வீட்டுக்கு போயிட்டான்.
வாசல்யே பாபு டென்ஷனா கொதிப்பா உக்காந்திருந்தான், பாத்துட்டு ஷாக் ஆயிட்டேன். அவன மதியமா வரச் சொல்லியிருந்தத சுத்தமா மறந்துட்டேன், பவானியில இருந்து வந்திருக்கிறான்.
ரெண்டுபேரும் சேர்ந்து ஒரு கோவிலுக்கு போலாம்னு பேசி வெச்சிருந்தோம். காலையில பாம்புல ஆரம்பிச்சி சாயந்திரம் வரைக்கும் அங்க இங்கன்னு மணிகூடயே சுத்திகிட்டிருந்ததில சுத்தமா மறந்துட்டேன். மணிகிட்ட மொதல்லயே சொல்லியிருந்தேன், அதான் வீட்டுக்கு வராம இழுத்துகிட்டு அலைஞ்சிருக்கான்!
அவன் டென்ஷனாயி கத்த, சமாதானப்படுத்த பட்ட பாடு இடுக்கே, சொல்லி மாளாது... இப்ப நினைச்சாலும் டரியலா இருக்கு...
ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே...
2 hours ago


