Saturday, January 30, 2010

ஏப்ரல் ஃபூல்...

இங்க என்னோட ஃபிரண்டு மணியப்பத்தி சொல்லியே ஆகனும். பயங்கரமா நம்பறமாதிரி நிறையா சொல்லுவான். எத்தன முறை ஏமாந்தாலும் அவன் சொல்ற ஒவ்வொரு விஷயமும் நம்பற மாதிரித்தான் இருக்கும். வருஷம் முழுசும் ஏமாத்தினாலும் ஏப்ரல் ஒன்னு அன்னிக்கு கொஞ்சம் விஷேசமா பண்ணுவான்.

முன்னாடி அவன் பண்ணின சில விஷயங்கள பாருங்களேன்...

ஆத்தூர்ல அயர்ன் ஃபிளவர்ஸ்னு ஒரு படம் போட்டிருக்கான், சூப்பரா இருக்காம்னு சொல்லி கூட்டிட்டு போனான். போனதுக்கப்புறம்தான் தெரிஞ்சது இரும்புப் பூக்கள்னு கார்த்திக் படம்...

இன்னொரு வருஷம் கிரிக்கெட் விளையாண்டுக்கிட்டிருந்தப்போ பதட்டமா வந்தான். 'என்னய்யா பண்ணின, அண்ணன் (என் அப்பாவை அப்படித்தான் கூப்பிடுவான்) ரொம்ப கோபமா இருக்காரு' ன்னான்.

'ஒன்னும் பண்ணலையே மணி' ன்னு சொன்னதுக்கு ’வாழ்க்கையில இவ்ளோ கோபமா பாத்ததே இல்ல, எங்க இருந்தாலும் கூட்டிகிட்டு வரச் சொன்னாரு’ ன்னான்.

ஆட்டத்த பாதியிலயே விட்டுட்டு அவசரம் அவசரமா தவிப்பா வீட்டுக்கு போனதுக்கு அப்புறம்தான் அவரு ஆபீஸ் விஷயமா வெளியூருக்கு போயிருக்கிறதும், ரெண்டு நாள் கழிச்சித்தான் வருவாருங்கறதும் ஞாபகத்துக்கு வந்துச்சி.

இன்னுமொரு வருஷம்... முறைக்காதீங்க, சொல்லல. இந்த மாதிரி நம்மல படுத்திகிட்டிருக்கிற மணிக்கிட்ட இந்த வருஷம் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும்னு முடிவு செஞ்சேன். இதுக்கு முன்னால தெரியாம ஏமாந்துட்டோம், இந்த தடவ உஷாரா இருக்கனும்னு தயாரா இருந்தேன், ஏப்ரல் ஒன்னுங்கறது ரொம்ப நல்லாவே ஞாபகம் இருந்துச்சி.

காலையிலேயே வீட்டுக்கு வந்தான். 'காட்டுல ஒரு பெரிய பாம்பு கரண்டுல மாட்டுச்சிய்யா, வந்து பாக்குறியா’ ன்னான். நெல்லு வயல்ல எலித்தொல்லைக்காக கரண்ட் போடுவாங்க. அதுல எலி, பாம்புன்னு நிறைய மாட்டும்.

எனக்கு ஒரு பெரிய செத்த பாம்ப பாக்கனும்னு ஆசை, அவங்கிட்ட மொதல்லயே கேட்டிருந்தேன். ஏப்ரல் ஒன்ன நினைச்சிட்டு ’இல்ல மணி இன்னொரு நாள் பாத்துக்கலாம்’ னு சொன்னேன்.

'பொய்யில்லய்யா நிஜமாத்தா சொல்றேன்’ னுட்டு அங்க வந்த பக்கத்து வீட்டு மாமாகிட்ட, 'மாமா ஆத்துல ஒரு பெரிய பாம்ப உங்ககிட்ட காமிச்சந்தானே' ன்னு கேட்க ஆமான்னு அவரு தலையாட்டினாரு.

'நம்புய்யா வாழ்க்கையில' ன்னு சொன்னதுக்கு அப்புறம், போயி பாத்தோம், அப்புறமா அங்க இங்கன்னு போனோம். ஆத்தூர், விரகனூர்னு டி.வி.எஸ்.ல போயிகிட்டே இருந்தோம். நிறையா வேலை வெச்சிருந்தான். சாயந்திரம் வரைக்கும் வீட்டுக்கே வரல.

கடைசியா வீட்டுக்கு வரும்போது மனசு விட்டு கேட்டுட்டேன், 'மணி இன்னிக்கு ஏப்ரல் ஒன்னு தெரியுமா? ஞாபகம் இருக்கான்' னு கேட்டேன்.

'ஞாபகம் இல்லாமய காலையில இருந்து உங்கூட இருக்கேன்' ன்னு சொல்லிட்டு ’ஏப்ரல் ஒன்னுக்கு உன்னை எதுவுமே பண்ணலன்னு தானே கேக்கறே' ன்னு கேட்டான்.

'ஆமா மணி, காலையில இருந்தே எதிர்பாக்கறேன் ஒன்னுமே நீ பண்ணல...' ன்னு சொல்லவும்,

'பண்ணுவேன் பண்ணுவேன்னு எதிர்ப் பார்த்துகிட்டிருந்து, இப்போ நடக்காம ஏமாந்து போயிட்டல்ல' ன்னு சொல்லி சிரிச்சிட்டு, 'அதெல்லாம் இல்லை வீட்டுக்கு போ தெரியும்' னு சொல்லிட்டு வண்டியில இருந்து இறங்கி அவங்க வீட்டுக்கு போயிட்டான்.

வாசல்யே பாபு டென்ஷனா கொதிப்பா உக்காந்திருந்தான், பாத்துட்டு ஷாக் ஆயிட்டேன். அவன மதியமா வரச் சொல்லியிருந்தத சுத்தமா மறந்துட்டேன், பவானியில இருந்து வந்திருக்கிறான்.

ரெண்டுபேரும் சேர்ந்து ஒரு கோவிலுக்கு போலாம்னு பேசி வெச்சிருந்தோம். காலையில பாம்புல ஆரம்பிச்சி சாயந்திரம் வரைக்கும் அங்க இங்கன்னு மணிகூடயே சுத்திகிட்டிருந்ததில சுத்தமா மறந்துட்டேன். மணிகிட்ட மொதல்லயே சொல்லியிருந்தேன், அதான் வீட்டுக்கு வராம இழுத்துகிட்டு அலைஞ்சிருக்கான்!

அவன் டென்ஷனாயி கத்த, சமாதானப்படுத்த பட்ட பாடு இடுக்கே, சொல்லி மாளாது... இப்ப நினைச்சாலும் டரியலா இருக்கு...

Thursday, January 28, 2010

சிலேட்டு பென்சில், சீருடை, புத்தகப்பை...

விவரம் தெரிந்த சிறிய வயதிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு விஷயத்திலும் பல்வேறு மாற்றங்களைப் பார்த்து வந்திருக்கிறோம். இன்றைய காலகட்டத்தில் எப்படி இருக்கிறது என நமக்கெல்லாம் தெள்ளென தெரிந்தாலும் பழையனவற்றை திரும்பிப் பார்க்கும் வரிசையில் முதலாவதாய் ஆரம்பப்பள்ளியின் சிலேட்டு பென்சில், சீருடை, புத்தகப்பை...

சிறு வயதில் இரு இடங்களில் நுழையும்போது மனம் கொஞ்சம் பயப்படும், ஆர்ப்பரிக்கும் எண்ணங்கள் அடங்கி சாந்தமாகும், அவை கோவில் மற்றும் பள்ளி. தப்பு செய்தால் சாமி கண்ணை குத்திவிடும், ஆசிரியர் அடித்து விடுவார் எனும் பயத்தின் காரணமாயும் அல்லது பெற்றோர் மற்றும் சுற்றத்தார் நம்மை வழிநடத்தியதாலும் இருக்கலாம்.

ஆசிரியர்கள் கடவுளுக்கு நிகராக மதிக்கப்பட்டு வந்தார்கள். அவர் சொல்வதுதான் மிகச் சரி என்பது பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கும். வீட்டில் அடங்காத பிள்ளைகள் கூட ஆசிரியரிடம் சொல்கிறேன் என சொன்னால் மறுபேச்சில்லாமல் மறுக்காமல் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.

மஞ்சள் கலரில் ஒரு ஜவுளி கடை துணிப்பை (நம்மள மாதிரி ஆளுங்க), வயர்களால் பின்னப்பட்ட பை(பெரும்பாலும் மாணவிகள் கொண்டு வருவார்கள்), பூ வேலைப்பாடுகளுடன் கூடிய துணிப்பை (வசதிக்கார பசங்க), வெள்ளை நிற உர சாக்குகளில் செய்யப்பட்ட சாக்குப்பை (நம்ம விட கொஞ்சம் வசதியானவங்க) போன்றவைகள் தான் பெரும்பாலும் புத்தகம் சிலேட்டு நோட்டுகளை சுமக்க உதவின.

அப்போது சீருடை என்பது ஆரம்ப வகுப்புகளுக்கு கிடையாது. போட்டு வரும் துணிகளே அவர்களின் வசதியினை பறைச்சாற்றும். துவைத்து மாற்றி மாற்றி போட்டு வருவதற்கும், சலவை செய்து தினமும் ஒன்றாய் போடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா? ஆசிரியரே பார்த்து திட்டி துவைத்து போட்டுவரச் சொல்லுமளவிற்கு ஒரே டிராயர் சட்டையை போட்டும் வசதி குறைவான மாணவர்களும், கிழிந்த டிரயருடன் போஸ்ட் ஆபிஸ் என கிண்டல் செய்யுமாறு போட்டு வருபவர்களும் என எல்லா விதத்திலும் கலந்து இருப்பார்கள்.

ஆசிரியர்கள் மாணவர்களை ரொம்பவும் அழுக்காக போட்டு வராதபடியும், பொத்தான்கள் இல்லை என்றால் ஊக்கு குத்தியாவது வரவேண்டும் எனவும், கிழிந்திருந்தால் தைத்து போட்டு வரவேண்டும் என்று அன்பாய் சொல்லியும், அடுத்து திட்டியும், அதன்பின் அடித்தும் பார்த்துக்கொள்வார்கள். கந்தையானாலும் கசக்கிக்கட்டு, கூழானாலும் குளித்துக்குடி என்பவை சுத்தமாய் இருப்பதற்கு அவர்களால் அதிகம் உபயோகப்படுத்தப்பட்டவை.

சிலேட்டு பென்சில்தான் (பல்பம் என கேள்விப்பட்டதோடு சரி, எங்கள் பக்கத்தில் பென்சில்தான்) ஆரம்ப நிலையில். குச்சி பென்சில், கட்டை பென்சில் என இரண்டு இருக்கும், குச்சி உருண்டையாயும், கட்டை தட்டையாயும் இருக்கும்.

குச்சி பென்சில் கல் சிலேட்டில் மட்டும் நன்றாக எழுதும், நிறைய எழுதுவதற்கு வரும். கட்டை பென்சில் நன்றாக எழுதும் அதே சமயம் சீக்கிரம் தீர்ந்துவிடும். பென்சில் திருட்டுக்கள் சாதாரணமாய் நடக்கும். பண்ட மாற்றுக்கு பென்சில்கள் பெரிதும் உதவியாயிருக்கும். வீட்டில் இருந்து கொஞ்சம் தின்பண்டம் கொண்டுவந்தால் போதும், நிறைய பென்சில்கள் பதிலுக்கு கிடைக்கும். (தாத்தா வீட்டிலிருந்து படிச்சப்போ கரும்பு வெட்டி வெல்லம காய்ச்சி வித்ததால அச்சுவெள்ளம் பண்ட மற்றுக்கு ரொம்ப உதவியா இருந்துச்சி)

சிலேட்டுகளில் இரண்டு வகை இருக்கும். கல் சிலேட் மற்றும் தகர சிலேட். கல் சிலேட்டில் எல்லா பென்சில்களும் நன்றாக எழுதும், ஆனால் தகர சிலேட்டில் கட்டை பென்சில் மட்டும்தான் நன்றாக எழுதும். கல் சிலேட் கீழே விழுந்தால் உடைந்துவிடும், நிறைய கவனமெடுத்து பார்த்துக்கொள்ள வேண்டும்.

பெரும்பாலும் எச்சில் போட்டுத்தான் சிலேட்டுக்களை அழிப்பது வழக்கம். வாத்தியார், வீட்டில் யாராவது திட்டினால் மட்டும் தண்ணீர் தொட்டு. தினமும் தவறாது வீட்டுப்பாடம் எழுதிவர வேண்டும். ஆசிரியர் அதை பார்த்து அவரது முத்திரையை சிலேட்டிலும், இல்லையென்றால் முதுகிலும் பதிப்பார்.

கொண்டு வரும்போது புத்தகங்களுக்கிடையே வைத்து எழுதியிருக்கும் வீட்டுப்பாடம் அழியாமல் எடுத்து வருவது, பையை தூக்கிப் போட்டாலும் உடையாத அளவிற்கு பக்குவமாய் வைப்பது என சிலேட்டுக்களை பராமரிக்க நிறைய மெனக்கிட வேண்டும்.

எழுதுவது பளிச்சென்று தெரிய சிலேட்டுக்கு கரி போடவேண்டும். கரி, ஊமத்தந்தழை இரண்டையும் சேகரித்து யாரும் பார்க்கவில்லையென்றால் நெல் குத்தும் உரலிலிலும், இல்லையென்றால் கல்லை வைத்து மசிய இடிக்க வேண்டும்(உரல வீணாக்கி புட்டானுங்க பாவின்னு திட்டு வாங்கறது தனி கதை).

பின் அந்த விழுதை சிலேட்டுக்களில் அப்பி நன்றாக காய வைத்து, காய்ந்தவுடன் எழுதும்போது பளீரென எழுத்துக்கள் தெரியும்போது முகத்தில் மலர்ச்சியும், சந்தோஷமும் பூரித்து அப்படி ஒரு நிறைவை கொடுக்கும்.

சார் என்னை அடித்துவிட்டன், கிள்ளிவிட்டான், எச்சில் துப்புகிறான், எனது புத்தகத்தை கிழித்துவிட்டான் என முறையீடுகளும் அதற்கு குச்சால் ஏற்றார்போல் பரிகாரங்களும் நடக்கும்.

டிக்டேஷன், சிறு கணக்குகள் போடுதல், சொல்லித்தரும் பாடல்களை ஒப்பித்தல், மாலையானல் மணலில் புறண்டு விளையாடல் என பொழுது இனிமையாய் கழியும்.

பரீட்சைக்கு வசதியிருந்தால் கிளிப் வைத்த அட்டை, இல்லையென்றால் தினசரி காலண்டரின் அட்டை என எடுத்துக்கொண்டு செல்லவேண்டும் மூன்று வகுப்புகளுக்கு மேல். அதற்குக் கீழ் சிலேட்டுத்தான் எல்லாம்.

சுருங்கச்சொன்னால், குறைவாய் படித்து, நிறைய விளையாடி மிக சந்தோஷமாயிருந்த தருணம் அது...

வலச்சரத்தில் இன்று நான்காம் நாள். சென்று பாருங்களேன்...

இப்போ பாத்துகிட்டிருக்காங்க!