பார்த்துப் பேசு...

|

'பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே' எனும் பழமொழியைக் கேள்வியுற்றிருக்கிறோம். அதன் உண்மைப் பொருள் தவிர்த்து உணர்ந்த ஒன்றினைப் பற்றியே இந்த இடுகை.

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயம். ஹாஸ்டலில் ஒவ்வொரு சனிக்கிழமையும் 'ஃப்ரீ' நைட். சாப்பிடுவதற்கு பிரட் ஜாம் மட்டும்தான் இருக்கும். வெளியே செல்லலாம், சினிமா பார்க்கலாம், தாமதமாய் திரும்ப வரலாம்.

அன்று ஃப்ரீ நைட். வெளியில் சாப்பிட்டுவிட்டு சினிமா செல்வதாய் உத்தேசித்து நண்பர்களுடன் கிளம்பினோம். பாதிபேர் எங்களுக்கு முன்னதாய் சென்று பீர் சாப்பிட்டுவிட்டு நேராக ஓட்டல் கிருஷ்ணபவனுக்கு வந்துவிட சப்தமாய் களைகட்டி, களேபரமாயிருந்தது. ஒரு வழியாய் சாப்பிட்டுவிட்டு பாதிபேர் வெளியே வந்து தம் போட்டபடி பேசிக்கொண்டிருக்க அப்போதுதான் வில்லங்கம் ஆரம்பமானது.

அங்கிருந்தவர்களில் ஒருவன் ஆஸ்டல் வார்டனைப் பற்றி ஏதோ சொல்ல ஆரம்பிக்க விவாதம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. 'அவன் கிடக்கிறான்' என ஆரம்பித்து எழுத இயலாத வார்த்தைகளால் அர்ச்சித்து அவரின் குடும்பத்தையே நடுத் தெருவிற்கு கொண்டு வந்தார்கள். அவர்களை சமாதானப்படுத்திய அந்த தருணத்தில் எதேச்சையாய் அருகில் இருந்த இருட்டுச் சந்தினைப் பார்த்தேன். யாரோ டி.வி.எஸ் 50 யை நிறுத்தி அதில் சாய்ந்து நின்றவாறு எங்களையேப் பார்த்துக் கொண்டிருக்க துணுக்குற்றேன். கும்மிருட்டிலும் எங்கள் ஹாஸ்டல் வார்டன் போல் இருந்தது.

'மாப்ளே, அவர் பாவம்டா, இவ்வளவு கேவலமா பேச வேண்டாம்டா' என சொல்ல, 'டேய் இந்த லூச மொதல்ல உதைக்கனும்டா' என என் மீது பாய்ந்தார்கள். சமாதானப்படுத்தி ஒரு வழியாய் படத்துக்குப் போய்விட்டு ஹாஸ்டலுக்கு திரும்பினோம்.

அடுத்த நாள் காலையில் வார்டன் எங்களையெல்லாம் பார்த்து சென்ற பார்வையிலிருந்தே அந்த இடத்தில் இருந்தது அவர்தான் என்பது தெளிவாய்ப் புரிந்தது. நண்பர்கள் எல்லாம் சொன்ன என்னை மறுபடியும் ஏளனமாய்ப் பார்த்து நக்கலடித்தார்கள். அன்று முழுக்க அவரைத் திரும்பவும் பார்க்காததால், எங்களை அழைத்து விசாரிக்காததால் அவராய் இருக்காதோ என்றல்லாம் கூட எண்ணினேன்.

திங்கள் காலை வகுப்புகளுக்கு சென்றதும் தான் எங்களுக்கு வேட்டு ஆரம்பமாகியது. பிரின்சிபால் வயதானவர், ஆஸ்டலுக்கு அருகேயிருந்த தங்கும் விடுதியில் இருந்தார். சனி ஞாயிறு வார விடுமுறையில் சென்றிருந்ததால் விஷயத்தை அவர் வந்தவுடன் சொல்லியிருப்பார் போலிருக்கிறது.

பிரின்சிபால் ரூமுக்கு எல்லோரையும் வரவழைத்து ஒருவழியாய் விசாரித்து அன்று சினிமா சென்றவர்களில் ஓட்டலில் சாப்பிட சென்றவர்களை மட்டும் இருக்கச் சொல்லி மற்றவர்களை வகுப்புக்கு அனுப்பி விட்டார்கள். வழக்கமாய் கண்டித்து விட்டுவிடும் பிரின்சிபால் அன்று கண்டிப்பாய் தண்டிக்கும் மன நிலையில் இருந்தார். பியூனை அனுப்பி வார்டனை அழைத்து வரச் சொன்னார்.

வார்டன், பிரின்சிபால்-க்கு வணக்கம் சொல்ல, 'சொல்லுங்க சார், இவங்கள்ல யார் உங்களைத் திட்டியது' எனக் கேட்டார். சரியாய் வெளியில் நின்று திட்டியவர்களை கைக்காட்ட அவர்களைத் தவிர மற்றவர்களை போகச் சொன்னார். என்னை சொல்லாததால் மற்றவர்களுடன் கிளம்ப நண்பர்களில் ஒருவன், 'சார் பிரபாகரும் இருந்தான்...' எனச் சொல்லி மாட்டிவிட்டான்.

'ஏன் சார் அவசரமா போறீங்க, வாங்க, வந்து ஜோதியில ஐக்கியமாகுங்க' என பிரின்சிபால் சொல்லவும் அடி வயிறு கலக்க ஆரம்பித்தது. இடைமறுத்த வார்டன் 'சார் அவங்கெல்லாம் என் குடும்பத்தை இழுத்து கண்டமேனிக்கு திட்டும்போது பிரபாகர் தான் சார், ஏன்டா இப்படியெல்லாம் சாரை திட்டுறீங்கன்னு கேட்டாரு. ஒரு வார்த்தையும் தப்பா பேசல, வேணும்னே மாட்ட விடறாங்க' என சொன்னார்.

'வார்டனைப் பத்தி பேச ஆரம்பிச்சது இவன் தான் என நண்பர்களில் ஒருவன் ஆணித்தரமாக சொல்லவும் 'பேசியது நீங்கதான், அனாவசியமா ஏம்பா அந்த பையனை மாட்டவிடுறீங்க' எனச் சொல்லி என்னை அனுப்பிவிட்டார்.

அப்புறம் பேசிய அந்த நாலுபேரையும் வார்டனுக்கு மன்னிப்பு கடிதம் எழுதித் தந்துவிட்டு உடனடியாக ஆஸ்டலை விட்டு காலி செய்ய சொல்லி விட்டார்கள். 'காலி செய்கிறோம், அப்புறம் எதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும், கேட்கவே மாட்டோம்' என பிடிவாதமாய் சாதிக்க, சரி காலி செய்தால் போதும் என இறங்கி வந்தார்கள்.

பக்கத்து தெருவில் வீடு எடுத்து, நடந்து செல்லும் தூரம்தான் என்றாலும் டாக்ஸியை வாடகைக்கு எடுத்து வந்து பந்தாவாக காலி செய்து கிளம்பி சென்றார்கள்.

அதன் பின் ஒரே மாதத்தில் ஆஸ்டலை காலி செய்து அவர்களோடு போய் சேர்ந்து கொண்டது தனி கதை. அதையெல்லாம் விட முக்கியமான விஷயம், அன்று என் நண்பன் சொன்னது முற்றிலும் உண்மை. 'வார்டன் ஏன்டா இப்படி இருக்கான்' என பேச்செடுத்தது நான் தான்.

9 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

vasu balaji said...

இப்படியுமா உலகம் நம்பிக்கிருக்கு:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

bad boy sorry bad uncle

ராம்ஜி_யாஹூ said...

எந்த ஊர் எந்த கல்லூரி, எந்த வருடம்- இந்த விபரங்கள் இல்லாமல் கதை/நிகழ்வு ஒரே தட்டையாக இருக்கிறது,

Unknown said...

இதுல நீங்க சூசகமா பதிவுலகப் பிரச்சனை பத்திப் பேசறா மாதிரி தெரியுதே??

ஈரோடு கதிர் said...

அண்ணே நீங்க பெரிய ஆள்ணே

எஸ்.கே said...

திரில் கதை போல் இருந்தது!

T.V.ராதாகிருஷ்ணன் said...

:))

ஜெயந்த் கிருஷ்ணா said...

நினைவுகளை மீட்டு வருகிறது உங்கள் பகிர்வு...

நான் படிக்கும் போது யார் என்று தெரியாமல் இருட்டில் வாத்தியாரையே அடித்த கதை நடந்திருக்கிறது..

a said...

நல்லா கிளப்புரீங்க பீதிய.....

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB