அலுவலக வேலையினை முடித்து அவரமாய்க் கிளம்பி சென்றால் ஏர் இந்தியா விமானம் இரண்டு மணிநேரத்தாமதம். ஒரு வழியாய் சென்னை சென்றால், வரவேண்டிய லக்கேஜ் வராமலேயே நெடுநேரம் எல்லோரும் காத்திருக்க, வெகு தாமதாய்த் தான் தெரிந்தது நாளைதான் வருமென. கொதிப்பு, கோபம், பரபரப்பில் உள்ளிருந்தும் தொடர்புகொள்ள இயலாமல், லக்கேஜ் எண்ணை புகார் கொடுத்துவிட்டு ஒரு வழியாய் வெளியே வந்தால், நண்பன் காத்திருந்து வெறுத்துப்போய் சென்றிருந்தான். அருகிலிருந்தவர் செல்பேசியை நாகரீகப் பிச்சையில் வாங்கி தொடர்பு கொள்ள அவன் எடுக்கவே இல்லை. (பிறகு அவனது மெயிலைப் பார்த்துதான் தெரிந்தது, அங்குதான் ஒரு பெஞ்சில் படுத்து உறங்கியிருக்கிறான் என).
’அவர்’ என்னை எந்த நேரம் என்றாலும் அழையுங்கள் எனச் சொல்லியிருந்ததால் மணி நான்கை நெருங்கியிருந்தாலும் அழைக்க, உடன் எடுத்து பாம்பு பட்டத்தோடு சந்தோஷ வரவேற்பு. தாமதமான காரணம் கேட்க, விவரங்களைச் சொல்ல, எங்கு தங்க எண்ணம் எனக்கேட்க, நண்பன் வீட்டுக்கு என சொன்னேன். முதலில் ஓய்வெடுங்கள், லக்கேஜ் காலையில் பார்த்துக்கொள்ளலாம் எனச் சொல்லி, விவரம் கேட்க விமான நிலையத்தொடர்பு எண்ணை வாங்கிகொண்டார்.
அடுத்து மற்றொரு நண்பன் வீட்டுக்கு அழைத்து வந்த தகவல் சொல்லி, கார் ஒன்று பேசி ஒரு வழியாய் இரவு பன்னிரண்டுக்கு பதிலாய் நாலரைக்கு சேர்ந்தேன். நெடுநாட்கள் கழித்து சந்திப்பதால் நிறைய பேசி அளவளாவினோம். தூக்கமில்லாமல் கடமைக்கு படுத்து எழுந்து அணிவதற்கான துணிகளும் வராது போன லக்கேஜில் இருந்ததால் கல்லூரியில் படிக்கும் மருமகனை அழைத்துக் கொண்டு ஆட்டோவில் சரவணா ஸ்டோர்ஸ் சென்றோம். அங்காடித்தெரு பாதிப்பில் அங்கு செல்ல வேண்டும், துணியினை எடுக்கவேண்டும் போல் எண்ணம் இருந்ததால் செயலில்.
’அவர்’ எனக்கு அழைத்து லக்கேஜ் காலை ஏர் இந்தியாவில் வரயிருப்பதாகவும், இன்னும் ஒரு மணிநேரம் கழித்து சென்றால் வாங்கிக்கொள்ளலாம் என சொன்னார். நடேசன் தெருவில் இறக்கிவிட அங்கிருந்து நடந்தது செல்கையில் சரவணா பாத்திரக்கடை பின்புறத்தில் சென்றோம்.சினிமாவில் பார்த்த ஏறக்குறைய தொண்ணூறு சதம் ஒத்துப்போன தங்கும் இடம், மற்றும் அவர்கள் புழங்கும் இடம் மனதிற்கு நெருடலாய் இருந்தது.
காலை வேளை, ரொம்ப பரபரப்பில்லாமல் இருந்தது. வரப்போகும் ஒரு நெரிசலான நாளை எதிர்கொள்ள தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஒரு பேன்ட், டி-ஷர்ட் மற்றும் பெர்ஃயூம் வாங்க விசாரித்து மாடியேற, சரிவர பதில் சொல்லவில்லை என்றாலும் ஏனோ அவர்களின் மேல் ஏனோ கோபம் வரவில்லை.
டி-ஷர்ட் வாங்க விசாரிக்கும்போது, நமது எதிர்ப் பார்ப்பை சொல்ல கடைசியாய் இருந்த இடத்தைக் காட்டினார்கள். அதிகம் எடுத்து காட்டச்சொல்ல மனமில்லாமல் அளவை சொல்லி, கண்களாலேயே பார்த்து இரண்டினை எடுத்து அதில் ஒன்றினை சட்டென எடுத்துக்கொள்ள, எடுத்துக் காண்பித்த பையனுக்கு வியப்பு. அதேபோல்தான் பேண்ட் வாங்குமிடத்திலும்.
பெர்ஃயூம் வாங்குபோதும் அங்கிருந்த ஒரு பெண்ணிடம் நல்லதாய் ஒன்று கொடுங்கள் என சொல்ல அவர் கொடுத்ததை மறுபேச்சில்லாமல் வாங்கிக்கொள்ள(வழக்கமாய் உபயோகிப்பதெல்லாம் லக்கேஜில் இருக்கிறது) அவருக்கு மெலிதாய் வெட்கச்சிரிப்போடு ஆச்சர்யம். உடை மாற்றுவது எங்கே எனக்கேட்க, பேஸ்மெண்டில் என சொல்ல, அங்கு சென்றோம்.
இருந்த ஒரே அறைக்குள் மேக்கப் செய்துகொண்டு பணிக்கு தயாராகும் சிறுவர்கள்(?). தலையை ரொம்ப நேரம் சீவி அழகு பார்த்துக்கொண்டு விதவிதமாய் தயாராக, உள்ளே சென்று தாழிட்டுக்கொண்டு உடை மாற்ற கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டேன். இருக்கும் ஒரே கண்ணாடியைப் பார்க்க அவசரம், பொறுமையின்றி கதவை தட்ட, வெளியே தலை வாரிக்கொள்ள ஆர்வமாய் இன்னும் சிலர். எல்லாம் பசங்கள்தானே என திறந்து வைத்தே உடைகளை மாற்றிக்கொண்டு, ம்....சூப்பர் என தலைவாரிக்கொண்டிருந்த ஒரு பையனிடம் சொல்லி சிநேகிதப்பார்வையோடு வந்தேன். அவர்களிடம் தான் எத்தனைக் கனவுகள்?
’அவர்’ லக்கேஜ் வந்து விட்டதாய் விசாரித்து சொல்ல, அங்கிருந்து நேராய் மின்சார ரயிலில் பயணித்து திரிசூலம். தங்கியிருந்த மவுண்ட் ஸ்டேஷனை கடக்கும்போது மனதிற்குள் பூச்சி பறந்தது. கண்ணில்லா பிச்சைக்காரர் அழகாய் 'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே' என பாடி ஆழ்மனதுள் தாலாட்ட, மகிழ்ந்து அவரிடம் பணம் கொடுத்தேன்.பக்கத்தில் இருந்தவர் என்னை ஒரு மாதிரியாய் பார்த்தார். இன்னொருவர் ஆர்மோனியப் பெட்டியை அழகாய் கையாண்டு கணீர் குரலில் பாட, வசூலுக்கு ஒரு சிறுமி. முன்பு கொடுத்த அளவிற்கு கொடுக்க மனமில்லை, சிறுமியை வைத்து பிச்சை எடுப்பதாலோ? ஏழு வருடத்துக்குப்பின் மின்சார இரயில் பயணம், கொஞ்சம் வித்தியாசமாய் இருந்தது.
ஏர்போர்ட் வேலை நடந்து கொண்டிருப்பதால் மிகவும் சிரமமாய் இருந்தது. நெரிசல், ஆயினும் இன்னும் இரு வருடத்திற்குப்பின் சரியாகிவிடுமே என சமாதானம் சொல்லி, உள்ளே சென்று வந்திருந்த லக்கேஜினை ஆயிரத்தெட்டு சரிபார்த்தலுக்குப்பின் ஓரு வழியாய் வாங்கி வந்தேன். மருமகனிடம் கொடுத்து அனுப்பிவிட்டு அங்கிருந்து சென்னை அலுவலகம் சென்று எல்லோரையும் சந்தித்து, மதிய உணவுக்கு வெளியே சென்று அன்றைய பொழுதை மிக சந்தோஷமாய் கழித்தேன். மாலை எக்மோர் செல்லும் கம்பனி பஸ்சிலேயே செல்லும்போது சென்னையின் நெரிசலான அந்த மாலையினை ஆறு வருடங்களுக்குப்பின் சந்திக்க, திரும்ப சென்னைக்கு வரலாமென்றிருந்த எண்ணம் நீர்த்துப்போயிற்று.
அதற்குள் அவரின் அழைப்பு, எப்படி வரவேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்தல். பக்கத்தில் பேசிக்கொண்டு வந்த சென்னை அலுவலகத்தில் வேலைபார்க்கும் தோழியிடம் கொடுத்து பேருந்து வரும் விவரங்களை சொல்லச் சொன்னேன். அவரை சந்திக்கும் நேரம் வந்துவிட்டதால் அவரைப்பற்றிய எண்ணங்கள் என்னை முழுதாய் வியாபிக்க ஆரம்பித்தது.
அவரின், அவரின் எழுத்தின் மேல்தான் எனக்கு எத்தனை மரியாதை, காதல்?... அன்பாய் அறிவுறுத்தியும், ஆதரவாய் தோள்கொடுத்தும், உரிமையாய் தட்டி தவறுகளை சுட்டிக்காட்டியும்... அப்பப்பா, சொல்ல வார்த்தைகள் இல்லை. அப்படிப்பட்ட ஆதர்ஷ நாயகரை நேரில் சந்திக்கப்போகிறோமே எனும் பரபரப்பு, இனம் புரியா தவிப்பு என பல்வேறு எண்ணங்களால் ஆட்பட்டிருந்தேன்.
ஸ்பென்சர் தாண்டி இறங்கி, வந்த ஒரு ஆட்டோவைப் பிடித்து அவரின் சென்ட்ரல் அலுவலகம் அருகே வெளியே தவிப்போடு நின்றிருந்தேன். அதோ தொலைவில் வருவது அவரா? யோசிக்க, ஆஹா, அவரே தான். சராசரி உயரத்தில் நிறைய முடியுடன்... என்ன சொல்ல, கடவுளைக் கண்ட பரவசம், ஆரத்தழுவிக்கொண்டோம். ஆஹா, யூத் மாதிரியில்லை, யூத்தேதான் என நம்மைப் பார்த்து சொல்ல, தும்ம நேர்ந்தது. அருகிலிருந்த கடையில் குளிர்பானம் மற்றும் ஐஸ் மோர் பாக்கெட்டுகள் வாங்கிக்கொண்டு அதே ஆட்டோவில் மெரீனா பீச் சென்றோம்.
இனிமையான ஒரு மணிநேரம். என்ன சொல்ல, சிஷ்யனாய் அவர் சொல்வதை மெய்மறந்து கேட்க, என் வாழ்வின் மிகவும் சிறப்பான சந்தோஷமான தருணம் அது. நிறைய பேசினோம். நேரமானதால் திரும்ப ஆட்டோ பிடித்து எக்மோர் சென்று அங்கிருந்த ஒரு ஓட்டலில் இரவு உணவு முடித்து என்னை ஆட்டோவில் அனுப்பி சென்றார். (ஆட்டோ அனுபவங்கள் அடுத்த இடுகையில்)
அவர் என் ஆசான்
வானம்பாடிகள் அய்யா! திருப்பதி சென்று பாலாஜியை தரிசித்த உணர்வு சென்னையில் என் அய்யாவை சந்தித்ததில் கிடைத்தது. அந்த அற்புத மனிதரை ஆசானாய், நண்பராய், வழிகாட்டியாய் தந்த இந்த வலையுலகிற்கு என் நன்றி சொல்லி, இன்று போல் எங்களின் நட்பு இறுதிவரை இருக்க எல்லாம் வல்ல இறையவனை வேண்டுகிறேன்..
முடியில்லை என பின்னூட்டத்தில் கும்முபவர்களுக்காக இதோ அய்யாவின் போட்டோவும் அவர் எடுக்கச் சொன்ன இன்னொரு போட்டோவும் மற்றும் அன்றிருந்த நானும்...