Showing posts with label சற்றே நீளமான சிறுகதை.... Show all posts
Showing posts with label சற்றே நீளமான சிறுகதை.... Show all posts

ப்ளாக் மெயில்... நிறைவுப் பகுதி

|

முதல் பகுதியான இதை படித்துப் பின் படியுங்களேன்...

மாலினிக்கும் எனக்கும் என்ன உறவு என்பதை மாபுத்திசாலியான நீங்கள் யூகித்திருப்பீர்கள் என்று எனக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் ஒருமுறை மெதுவாய் என் காதில் சொல்லுங்களேன்... எஸ்... கரெக்ட். என் முன்னால் காதலி.

கல்லூரியில் எம்.சி.ஏ கடைசி வருடம் படித்த சமயம் பி.எஸ்.சி கம்ப்யூட்டரில் சேர்ந்தாள். சூப்பர் சீனியர் என்ற முறையில் அவர்களின் வகுப்பினை பார்வையிட(ரேகிங் செய்ய என்றுதானே என உள்ளுள் நினைக்கிறீர்கள், சரிதான். ஒரு விஷயத்தைக்கூட உங்களிடம் மாற்றிச்சொல்ல முடியாது போலிருக்கிறது) சென்ற போதுதான் அவளை முதன் முதலில் பார்த்தேன்.

அழகென்றால் அப்படி ஒரு அழகு. வர்ணித்தால் நீங்கள் பொறாமைப் படுவீர்கள். இன்று நீங்கள் பார்க்கும் பெண்கள் எல்லோரையும் அவளுடன் ஒப்பிட்டு ஏமாந்து போவீர்கள் என்பதால் அழகு என்பதோடு விட்டுவிடுகிறேன். பார்த்தவுடன் எங்களுக்குள் ஏற்பட்ட ஹார்மோன்கள் மாற்றததினால் காதல் பொசுக்கென பற்றிக்கொள்ள, அடுத்து வந்த ஆறு மாதங்கள் என் வாழ்வின் மறக்க இயாலாத சொர்க்கமாயிருந்தன.

படித்தது திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரி என்பதால் திருச்சி சென்று சினிமா, முக்கொம்பு, உச்சிப்பிள்ளையார் கோவில், ஸ்ரீரங்கம் என எல்லா இடங்களையும் சுற்றினோம். நிறைய கடிதங்கள், புகைப்படங்கள், அப்புறம் .... சொல்ல வெட்கமாக இருக்கிறது... அய்யய்யோ ரொம்ப தப்பா நினைக்காதீர்கள் நிறைய முத்தங்கள் எனத்தான் சொல்ல வந்தேன்.

கடைசி செமெஸ்டரில் ப்ராஜெக்ட் விஷயமாய் மெட்ராஸ் சென்றுவிட பிரிவு தாளாமல் பசலை நோயால்...அடிக்க வராதீர்கள் அதிகமாய் சொல்லவில்லை, கடிதத் தொடர்பிலிருந்தோம். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பார்த்துவிட்டு சென்றேன்.

திடீரென பத்து நாட்களாய் எந்த தகவலும் இல்லாததால் கல்லூரிக்கு வந்து பார்க்க, அவள் கல்லூரிக்கு வருவதில்லை எனவும், குடும்பமே ஊரை காலி செய்துவிட்டு சென்று விட்டதாகவும் கிடைத்த தகவல்கள் என்னை நிலை குலையச்செய்தது.

எவ்வளவோ முயன்றும் எந்த ஒரு தகவலும் கிடைக்காது போக, ஏற்பட்ட சோகத்தில் வெறித்தனமாய் படித்து, வங்கித் தேர்வில் தேறி, வேலையிலும் சேர்ந்து... மீதிக் கதைதான் உங்களுக்குத் தெரியுமே... சரி, நிகழ்வுக்கு வருவோம்.

மாலினி என்னை எப்படி இருக்கிறாய் எனக்கூட கேட்கவில்லை. ’எப்படி என்னைக் கண்டுபிடித்தாய், உடனே போய்விடு, ஏன் இப்போது வந்தாய், அவர் வருகின்ற நேரம்’ என படபடவென பேசி என்னை அனுப்புவதிலேயே குறியாய் இருக்க, கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றேன்.

என்னை பார்த்த பார்வையில் சத்தியமாய் பழைய மாலினி இல்லை. ‘ரொம்ப வசதியாய்தான் இருக்கிறாய் போலிருக்கு, பழசெல்லாம் மறந்து விட்டாயா’ எனக் கேட்டேன்.

‘அய்யோ, என்னை புரிந்துகொள்ளுங்கள், ப்ளீஸ், இப்போ உடனே கிளம்புங்கள்’ என அவள் மன்றாட ஆரம்பிக்க சட்டென சில விஷயங்களை முடிவு செய்தேன்.

’மாலினி, நீயும் நானும் ஒன்றாய் எடுத்துக்கொண்ட போட்டோக்கள், கடிதங்கள் எல்லாம் என்னிடம் பத்திரமாய் இருக்கின்றன. அதையெல்லாம் உன் கணவரிடம் காண்பித்தால் உன் கதி என்ன தெரியுமா?’ என சினிமா வில்லன் போல் பேச, அவளும் சி.க போல (அதாங்க, சினிமா கதாநாயகி) அப்படியெல்லாம் செய்துவிடாதீர்களென கெஞ்ச ஆரம்பித்தாள்.

‘சரி, எனக்கு அவசரமாய் பணம் தேவைப்படுகிறது, ஒரு லட்சம் ரூபாயைக் கொடுத்துவிடு, கடிதங்களையும் போட்டோக்களையும் கொடுத்துவிடுகிறேன்’ என சொல்ல சட்டென ஒத்துக்கொண்டாள். எனது முகவரியினைக் கேட்டு அவசர அவசரமாய் தொலைபேசி அருகே இருந்த தாளில் குறித்துக்கொண்டாள். (விவரமாய் எனது பேங்க் முகவரியைத்தான் கொடுத்தேன் என உங்களுக்கு சொல்ல வேண்டுமா என்ன?) கண்டிப்பாய் இன்னும் இரு வாரத்துக்குள் செக்காக அனுப்பி வைப்பதாய் சொன்னாள்.

உடன் அங்கிருந்து விலக, சட்டென கதவை சாத்திக்கொண்டாள். நீங்கள் நினைக்கலாம், என்னடா ஒரு வங்கியில் வேலை பார்ப்பவன் இவ்வளவு அற்பனாய் நடந்து கொள்கிறானே என. எல்லாம் என் பண முடை பாஸ்.... அத்தோடு என்னை தவிக்க விட்டு சென்ற அவளுக்கு கொடுக்கும் தண்டனையாக மனதிற்கு ஒரு சமாதானம். அதுவுமில்லாமல் என்னைப் பார்த்து எப்படி இருக்கிறாய் எனக் கூட கேட்காமல் விரட்டியடிக்க எத்தனித்ததற்கு தண்டனை, கடைசியாய் கடனையெல்லாம் அடைத்து சீட்டாடும் பழக்கத்தில் இருந்து நிரந்தரமாய் விடுதலை.

வழக்கத்துக்கு மாறான அதீத சந்தோசத்துடன், சீட்டி அடித்தபடி பணப்பிரச்சினை எல்லாம் தீர்ந்துவிட்டது என உற்சாகமாய் ஆட்டோ பிடிப்பதற்காக சாலையை நோக்கி நடந்தேன்.

வழக்கமான ஒரு வாரத்துக்குப் பின் வங்கியில் மதிய உணவெல்லாம் முடித்து கொஞ்சம் ஓய்வாய் இருக்கையில் ப்யூன் வந்து என்னைப் பார்க்க ஒரு பெண் வந்திருப்பதாய் கூற, கொஞ்சம் ஆச்சர்யப்பட்டு ஆர்வமாய் வெளியே வர, அங்கு மாலினியைப் பார்த்து கொஞ்சம் அதிர்ச்சியோடு சந்தோசித்தேன்.

அருகே சென்று மெலிதாய் புன்னகை செய்து அருகே அமர்ந்து, ’என்ன மாலினி நேரிலேயே வந்துவிட்டாய், பணமாய் கொடுத்துவிடலாமென முடிவு செய்துவிட்டாயா?’ எனக்கேட்டேன்,

தலையாட்டி, ‘வா எனக்கூட கேட்கமாட்டீர்களா?, எல்லாம் தயாராக இருக்கிறது, சரி கடிதம் புகைப்படங்களைல்லாம் எங்கிருக்கின்றன?’ எனக் கேட்டாள்.

’வீட்டிலா வைக்க முடியும்? இங்குதான் இருக்கிறது. இதோ எடுத்து வருகிறேன், அருகிலிருக்கும் ஓட்டலுக்கு சென்று காபி சாப்பிட்டுக்கொண்டே பேசலாம்’ என சொல்லி உள்ளே சென்றேன்.

ஒரு காபியில் சக்கரை கம்மி என சொல்லிவிட்டு கவரை கொடுக்க, புகைப்படங்களையெல்லாம் மேலோட்டமாய் பார்த்துவிட்டு தனது கைப்பையில் வைத்துக்கொண்டு, ‘சரி, திரும்ப உன் சீட்டுக்கு சென்று நீங்கள் லோனாக எடுத்து வைத்திருக்கும் ஐம்பதாயிரத்தை எடுத்து வந்து கொடுத்துவிட்டு இந்த கவரை வாங்கிக்கொள்’ எனச் ஒருமையில் சொல்ல ஏகமாய் வேர்த்தேன்.

என்ன விளையாடுகிறாயா எனக்கோபமாய் கேட்க, ‘பொறுமை மிஸ்டர் ராஜா, இந்த கடிதங்களையும், புகைப்படங்களையும் உன் மனைவியிடம் காட்டாமல் இருக்கத்தான் அந்த ஐம்பதாயிரம். மெட்ராஸில் என்னைப் பார்த்தாயே, அது என் தற்காலிக வீடு. என்ன பார்க்கிறாய், நான் ஒரு காஸ்ட்லி கால் கேர்ள். இப்போது ஆளை மாற்றிவிட்டேன், நாளை மும்பைக்கு பறக்கப் போகிறேன்’.

‘அவர் வரும் நேரத்தில் நீ வந்ததால்தான் உன்னை அவசரமாக போகச் சொல்ல நேரிட்டது, ஆனால் வசமாய் நீ என் வலையில் சிக்கிக் கொண்டாய். அப்புறம் இன்னுமொரு தகவல் நீ ப்ராஜெக்ட்டுக்கு சென்றவுடம் என் அப்பா ஒரு சீட்டுக்கம்பனியில் பணத்தையெல்லாம் இழக்க இரவோடிரவாய் வேறு ஊருக்கு சென்று, கொஞ்ச நாளிலேயே அப்பா தற்கொலை செய்துகொள்ள, அம்மாவும் அவரைத் தொடர்ந்து சென்றுவிட, எல்லாம் தலைகீழாய் மாறி.... சரி, இதெல்லாம் உனக்கெதற்கு, பணத்தை எடுத்துவா’

’எப்படி உன்னைப்பற்றி எல்லாம் தெரிகிறது எனப் பார்க்கிறாய? நேற்றே இங்கு வந்து உன்னைப்பற்றி எல்லா விவரங்களையும் தெரிந்து கொண்டேன், மனைவி சொல்லே மந்திரம் என வாழ்பவன், புதிதாய் ஒரு வீடு வாங்குவதற்க்காக உன் மனைவி கேட்ட ஐம்பதாயிரம் லோன் இன்றுதான் கிடைத்தது என்பது வரை. உன் மனைவி கேட்டால் பணத்தை வழியில் தொலைத்ததாய் சொல்லி சமாளி’

சொல்லி முடிக்க தலையெல்லாம் எனக்கு கிர்ரென சுற்ற, சனியனை எடுத்து பனியனுக்குள் விட்ட கதையாய்... சொல்லுங்க பாஸ்... எனக்கு இது தேவையா?

ப்ளாக் மெயில்...

|

அத்தியாயம் ஒன்று :

(இது தொன்னூற்று இரண்டில் எழுதிய எனது முதல் கதை. இந்த கதைக்கே ஒரு கதை இருக்கிறது, அது இதனைத் தொடர்ந்து...)

இது தேவையா என எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? என்போல் தலையில் கைவைத்து உட்கார்ந்திருக்கிறீர்களா? இல்லையா? குட். நீங்களெல்லாம் பாக்கியசாலி. சரி, அப்படியே இந்த துரதிஷ்டசாலியின் கதையினைக் கொஞ்சம் கேளுங்களேன் பாஸ்...

முதலில் என்னைப் பற்றிய விவரங்களிலிருந்து ஆரம்பிக்கிறேன். ராஜாராமன், வயது முப்பத்தைந்து, மாநிறம். அழகாய் சுப்ரஜா, நான்கு வயது மகள் நல்லவேளையாய் அம்மாவின் சாயலாய் இல்லாமல் முழுக்க என்னைப்போல் இன்னும் கொஞ்சம் கலராய். நிறைய சொத்துக்களோடு வாக்கப்படப் போகிறவள். ஆனால் என்னைப்போல் அவன் இருக்கமாட்டான், கண்டிப்பாய் பெரும் அதிர்ஷ்டசாலி.

ஏன் சொல்கிறேன் என்றால் என் மனைவி நல்ல கருப்பாய் பூசிய உடம்புடன் கழுத்து நிறைய நகைகளுடன்... உங்களுக்குப் புரிவது எனக்குத் தெரிகிறது. கரெக்ட், எல்லாம் சில ஆதாயங்களுக்காக செய்த தியாகம் பாஸ். திருமணத்தின் போது சுமராய் இருந்தவள், சுப்ரஜா பிறந்ததுக்குப்பின் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாத உணவுப்பழக்கம், எல்லா வேலைகளுக்கும் ஆள் என இருந்ததால் மேற்சொன்னவாறு ஆனதால். ரொம்ப போரடிக்கிறேனா? விஷயத்துக்கு வருகிறேன்...

பேங்க்-ல் வேலை, ஆனாலும் வீட்டில் மதுரை. அவளின் ஏராளமான சொத்துக்களுக்கிடையில் என் வழியாய் வரும் வருமானங்கள் கொசு. சம்பளம் வந்தவுடன் அப்படியே கவரை அவளிடம் கொடுக்க, என் செலவுக்கென ஒரு சொற்பத் தொகையினை பரிதாபப்பட்டு தருவாள். மேற்படி தேவைப்பட்டால் அவளிடம் கெஞ்சித்தான் வாங்க வேண்டும்.

பாஸ், என்னிடம் இருக்கும் ஒரு பெரிய கெட்ட பழக்கம்... மொதல்ல ப்ராமிஸ் பண்ணுங்க, என் வைஃப்கிட்ட சொல்ல மாட்டேன் என, அப்போதுதான் சொல்லுவேன். ஓகே.... உங்களை நம்பறேன். சீட்டு பைத்தியம் நான். திருச்சியில் இருந்தாலும் மாதம் ஒருமுறை ஏதாவது சொல்லி மெட்ராஸுக்கு சென்றுவிடுவேன். சேர்த்து, கடன் வாங்கிய பணத்தோடு இரண்டு நாட்கள் மவுண்ட்ரோடில் உள்ள ஒரு லாட்ஜில். முன்பதிவு செய்த ரயிலில் ஞாயிறு இரவு கிளம்பி வழக்கத்துக்கு சென்று விடுவேன்.

எனக்கு நேரமே சரியில்லை, கொண்டு வந்த பணம் எல்லாம் காலி. கடந்த நான்கு மாத தொடர் தோல்விகளால் மொத்தக்கடன் ஐம்பதாயிரத்தை தாண்டியிருந்தது. மதியம் தான் ஆகிறது, இரவு வரை என்ன செய்வது? கண்டிப்பாய் காசில்லாமல் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்.

அறைக்கு வந்து கிளம்பி, தம்மோடு ஒரு டீ சாப்பிட வெளியே வந்த போதுதான் சிக்னலில் வெகு அருகில் நின்றிருந்த அந்த மாருதியைப் பார்த்து அதிர்ந்தேன், காரில் டிரைவர் இருக்கையில் இருந்தது மாலினி, என் மாலினி. வேறு யாராவது இருக்குமா என கூர்ந்து கவனிக்க கன்னத்தில் சிறிய மச்சத்துடன்...அவளேதான்!... மெருகு கூடி இன்னும் அழகாய் இருந்தாள். பச்சையில் வண்டி கிளம்ப உடனடியாய் எண்ணைக் குறித்துக்கொண்டேன்.

ஆர்.டி.ஓ-வில் இருக்கும் நண்பனை தொடர்புகொள்ள அவன் ஏன் பார்க்க வரவில்லை, மறந்துவிட்டாய் என்றெல்லாம் பேசி கழுத்தறுக்க, கடைசியாய் அந்த கார் பற்றிய விவரங்களை வாங்கிக்கொண்டேன். அடையாறில் இருந்தது அந்த முகவரி...

பணக்காரர்கள் மட்டுமே வசிக்கும் பகுதி என்பது ஆட்டோவில் அந்த இடத்தை நெருங்கும்போதே தெரிந்தது. பெரிய பங்களா டைப் வீடு, கேட்டிலிருந்து நிறைய உள்தள்ளி இருந்தது. கார் நிறுத்த, தோட்டம் என நிறைய இடங்களோடு விசாலமாயிருந்தது.

கேட்டில் ஆள் யாரும் இல்லை, மெதுவாய் திறந்து உள்ளே சென்று அழைப்பு மணியை அடித்தேன். சற்று கழித்து ‘கோன்’ என கேட்டவாறு திறந்த மாலினி என்னை பார்த்ததும் உடன் அடையாளம் தெரிந்து கொண்டு அதிர்ந்தாள்.

இரண்டாம் பகுதியைப் படிக்க இங்கு அழுத்துங்கள்...

(தொடரும்)

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB