என்ன தவம் செய்தனை...

|

ஆசானிடம் செல்பேசுவது என்பது ஒரு சந்தோசத் துள்ளலில் ஆரம்பித்து மன நிறைவில் முடிவதாய் இருக்கும். அதற்காகவே அவ்வப்போது அவரை அழைத்து, அலுத்துக்கொள்ளுமளவிற்கு அவதிப் படுத்துவேன் என்பதுதான் உண்மையாயிருந்தாலும் அசராமல் அழைத்தவண்ணம் தான் இருப்பேன்.

அவரிடம் இருந்து வரும் அழைப்பென்றால் சொல்லவே வேண்டாம், இரட்டை சந்தோசம்தான், கண்டிப்பாய் ஒரு நல்ல விசயம் இருக்குமென்பதால்.

அன்றைய பொழுதின் மதிய உணவுக்குப் பின் தொடுதிரையில் ஆசானின் பெயர் மின்னி அழைக்க, இருக்கையினின்று இடம் பெயர்ந்தேன்.

‘வணக்கம் அய்யா’ வில் ஆரம்பித்து விசாரித்தலின் பின் ‘சுவாமி வருகிறார், நம்மையெல்லாம் சந்திக்க இருக்கிறார், உங்களிடம் தகவல் சொல்லச் சொன்னார்’ என்று சொன்னவுடன் உள்ளம் குதூகலிக்க ஆரம்பித்தது.

மெதுவாய் மனம் பின்னோக்கி அசைபோட, சுவாமி அவர்களுடன் பேசிய அந்த நாட்கள் நிழலாட ஆரம்பித்தன.

இடுகைகளை எழுத ஆரம்பித்த ஆரம்பகால நாட்கள். என் ஆருயிர் தம்பியும் அதீத சந்தோசங்களும் என்னை ஆர்ப்பரித்த துயரங்களும் என்னோடு இயைந்திருந்த நேரம். இடுகையினைப் படித்து அதனை விமர்சித்து ஒரு மடலின் வாயிலாய்த்தான் அறிமுகமாகி, எண் பெற்று எண்ணங்களைப் பேசி ஆரம்பித்த அந்த ஆரம்பகாலக் கட்டத்தில், சுவாமி அவர்களிடம் பேசி எனக்கு கிடைத்த மனநிறைவு நிச்சயம் ஆசான், கதிரிடம் பேசியதற்கு இணையாயிருக்கும். ஆம், இக்கட்டான அத் தருணங்களில் அவர்களின் பங்களிப்பு, துயரகற்றி இதமூட்டியது.

நிறைய பேசியிருக்கிறோம், சந்தித்த நிகழ்வுகள், மனத்துயரங்கள், பிரச்சினைகள் என. அவரது நண்பர்கள் குழுவில் விவாதிக்கும் விசயங்கள், ஈழம் பற்றிய ஒத்த சிந்தனைகள், என்னை உள்ளுந்தி எழுதச் சொன்னவைகள் என நிறைய சொல்லலாம்.

அவர் பேசும் தமிழ் மிகவும் வித்தியாசமாய், ஆங்கிலக் கலப்பின்றி அழகாயிருக்கும். அவர் ஜெர்மனி சென்றுவிட சிறு இடைவெளி, ஆனாலும் அவர் என்னைப் பற்றி, நான் அவரைப் பற்றி ஆசானிடம் எல்லாம் பரிமாறிக்கொள்ள, பேசுதலின்றி எல்லாம் தெரிந்துகொள்வோம்.

அதிகாலை ஐந்து மணியளவில் சுவாமி மதுரையிலிருந்தும், ஆறு முப்பதுக்கு ஆசான் சென்னையிருந்தும் என கதிர் சொல்ல ஏழரைக்கு வருவதாய் சொன்னேன், கண்டிப்பாய் நான் ஏழரையாயிருக்கமாட்டேன் எனும் அதீத நம்பிக்கையில்.

அழைக்கையில் பேருந்து நிலையத்தின் வெளியே ராயல் தியேட்டர் அருகில் நில்லுங்கள் பிரபா என கதிர் சொன்னார்.

கொஞ்சம் காத்திருத்தலில் வெள்ளை மனம் கொண்ட கதிரின் சிவப்பு வண்டியில் ஆசானோடு வந்ததும் வழக்கமான கிண்டல் கேலியோடு வரவேற் பின்’ கதிரின் வீட்டுக்கு கிளம்பினோம். 

அய்யா, சாமி வரலையா? எனக் கேட்டதற்கு, குளித்து முடித்திருந்தார் முடியினை உலர்த்த நேரமாகும் என்பதால் நாங்கள்தான் வந்தோம் என்றார். சுவாமி எப்படி இருப்பார் என்பதனைப் பற்றி இன்னும் பல மாற்றங்களை என்னுள் செய்துகொண்டு கதிரின் வீட்டினை அடைந்தோம்.

நான்கு வருடங்களாய் குராலயிருந்த சுவாமியின் தரிசனம். கைகுலுக்கி அன்பினைப் பரிமாறி பேச ஆரம்பித்தோம் எல்லோரும் குளித்துக் கிளம்ப ஆரூரன் எங்களோடு இணைந்துகொள்ள. அவரோடு பைக்கில் நான் தொற்றிக்கொள்ள சாப்பிடக் கிளம்பினோம்..

உணவுக்காக தேடியலைந்து,  கடைசியாய் ஆரூரானின் பணிக்கூடத்தின் அருகிலிருந்த ஒரு நவீன உணவகத்தில் பசியாறியது தனி அனுபவம். பின் ஆரூரனின் அலுவலத்தில் ஒரு நெடிய ‘இலக்கிய’ உரையாடலின் பின் திண்டல் முருகன் கோவிலுக்கு விரைந்தோம்.

விஞ்ஞான வளர்ச்சி பல விதங்களில் உதவியாயிருந்தாலும், சில புரதாண விசயங்கள் நம்மை விட்டு அகன்றிடவும் காரணமாய் அமைகிறது. கோவிலைப் பார்த்ததும் நிறைய மாறியிருக்கிறது, முன்புபோல் இல்லையென சுவாமி சொன்னார்.

முருகனைக் காணும் வரை காத்திருந்து, மெதுவாய் எல்லாம் பேசியவாறு சுற்றி வந்து நிறைவாய் கீழே இறங்கினோம். கதிரின் வீட்டுக்கு எல்லோரும் காரில் செல்ல நான் பைக்கில் தொடர்ந்தேன்.

கதிரின் காட்டுக்கு சென்று பார்க்கும்போது ‘நகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர்’ என எழுதியிருப்பதன் அர்த்தம் நேரில் விளங்கியது. பாய்ந்த என்பதை விட படர்ந்த என்பது தான் சரியெனப்பட்டது, அவர் அங்கு நிகழ்த்திய பல நிகழ்வுகள். சரசரவென மரத்தில் ஏறி, கொய்யாக்களை கொய்த விதம், விவசாயம் பற்றிய அவரது ஆதங்கங்கள் என நிறைய சொல்லலாம்.

சப்போட்டாக்களை பறித்து பக்குவமாய் கழுவி சாப்பிடக் கொடுக்க வாழ்வின் முதன்முறையாய் அதனை தோலோடு தின்றது அங்குதான்.

கதிரின் குடும்பத்தார் ஒவ்வொருவரும் கவனித்த விதம் வார்த்தைகளில் சொல்ல இயலாது. விருந்தோம்பலின் அர்த்தம் விளங்குவதாய் அற்புதமாய். பக்கோடா போல் பருப்பு வடையில் செய்திருந்தது மிகவும் அருமை, வடை பாயாசத்தோடு விருந்து. அம்மா இன்னும் சாப்பிடுங்கோ என ஒவ்வொன்றையும் மேலும் மேலும் பாசத்தோடு இலையில் வைக்க,  அட ஒரு நாள்தானே என வழக்கத்தையும் மீறி அளவில் அதிகமாய்.

பதிமூன்று நாள் கன்றுக்குட்டி படு சுட்டியாய் பார்க்க அழகாய் இருந்தது. பேசியவாறு கொஞ்சம் ஓய்வெடுத்து தேனீரருந்தினோம்.

நேரமாக, பிரிய மனமின்றி, நகருக்குத் திரும்பி புகைப்படங்களையெல்லாம் கணனிக்கு மாற்றும்போது எனது கேமிராவிலிருந்த ஏற்கனவே இருந்த புகைப்படங்களைக் கண்ணுற்ற கதிர் கருமமே கண்ணாய் கவனித்துவிட, அப்புறம்தான் அதகளம். ஒவ்வொரு போட்டாவையும் பார்த்து விமர்சித்தபடி, கண்ணில் நீர்வர, புரையேறும் அளவிற்கு சிரித்து, அப்பா, முடியல என சொல்லுமளவிற்கு சிரிப்போடு எங்களின் நாள் முடிவுக்கு வந்தது.

இரவு உணவு முடித்து இரயில் நிலையத்தில் கதிர் இறக்கிவிட, நினைவுகளைத் தேக்கி, மீண்டும் இதே போல் இன்னுமொரு நாளினை நமதாக்கவேண்டுமென நினைத்து, ஏற்காட்டில் சென்னை திரும்பினோம். 

இரயிலில், எல்லாம் அசைபோட்டவாறு கண்ணயரும் முன் எனக்குத் தோன்றியதுதான் இந்த இடுகையின் தலைப்பு...

கதிர், நான் மற்றும் ஆசான்

ஆரூரன்...

மரத்தினூடே கொய்யும் கதிர்...

கொய்ததை கீழே தரும் கதிர்..



கன்றீன்றிருக்கும் பசு...






களிப்பில் நண்பர்கள்...




3 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

vasu balaji said...

இனிய பொழுதுகள். இனிய நினைவுகள். நல்லா வந்திருக்கு ப்ரவுண்ணா

க.பாலாசி said...

விருவிருப்பான நடை அண்ணா... ஆமா நானும் சாமி அய்யாவோட புகைப்படம் போடலையா.. நானும் அவரை பார்த்ததில்லை..

Blog27999 said...

Easy "water hack" burns 2 lbs OVERNIGHT

At least 160 000 men and women are losing weight with a easy and secret "liquids hack" to lose 1-2lbs each night in their sleep.

It's painless and it works on anybody.

Just follow these easy step:

1) Go get a glass and fill it half glass

2) And now learn this strange HACK

and you'll be 1-2lbs skinnier in the morning!

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB