மகனுக்காக...

|

என்னுடன் வேலை பார்க்கும் நண்பரின் மனைவி நிறைமாதக் கர்ப்பிணியாய் இருக்கிறார். பிரசவ சமயத்தில் மனைவியின் அருகில் கண்டிப்பாய் இருக்கச்சொல்லி அறிவுறுத்தி முன்னதாகவே அவரை ஊருக்கு செல்லுமாறு வற்புறுத்தினேன். காரணம் எனது மகன் மற்றும் மகள் பிறக்கும்போது அருகில் இருக்க இயலாத சூழலில் இருந்தேன் என்பதால்தான்.

அதிலும் குறிப்பாய் எனது மகன் பிறந்த தருணத்தில் கையில் காசின்றி, நம்பி சென்ற வேலையும் இல்லாமல் வெறுமையாய் சிங்கையில் இருந்த அந்த சூழலில் என் மகன் பிறந்த செய்தி, எப்படி இருக்கிறான் என எல்லாவற்றையும் செவிவழிக் கேட்டுத்தான் தெரிந்துகொண்டேன்.

அந்த தருணத்தில் 'மகனுக்காக' எனும் தலைப்பில் எழுதிய ஒன்றை இங்கு பகிர உத்தேசம்.

இது சிங்கையில் வெளிவரும் தமிழ் முரசில் 07/11/2004 அன்று வெளிவந்தது.

கண்ணே என் கண்மணியே
     காணாத பொக்கிசமே
என்னோடு இயைந்திருக்கும்
     இன்பம் தரும் பூஞ்சுகமே

நினைவெல்லம் உனைப்பற்றி
     நிறைந்திருந்து தவிக்கின்றேன்
கனவிலுனைக் கண்டிட்டு
     காண்பதற்கு துடிக்கின்றேன்.

கையிலுன்னை தொட்டெடுத்து
     கனிவான மொழி பேசி
மெய்சிலிர்த்து வியந்து உன்
     மேனியெழில் தரிசித்து

ஆயிரம் பாடல்களை
     ஆராரோ சேர்த்துப்பாடி
மாயக்கண்ணன் நீயுறங்க
     மகிழ்வினில் நான் கிறங்க

எண்ணும்போது சிலிர்க்கிறது
     எங்கோ மனம் பறக்கிறது
கண்ணில் துளி பார்க்கிறது
     கவலை மேகம் சூழ்கிறது

பணம் எனும் வாழ்வின்
     பிரதான விஷயம்தான்
என்னையுன்னை பிரிக்கிறது
     ஏக்கமதை சேர்க்கிறது.

உயிர் கொடுத்த என் நாசி
     உப்பலான என் கன்னம்
கயல் பொன்ற கண்களினில்
     கிறங்கடிக்கும் துறுதுறுப்பு

தாயவளின் தங்கநிறம்
     தேன் சிந்தும் அதரங்கள்
சேயுனக்கு இருப்பதாய்
     செவிமடுத்து கேட்டிட்டேன்

உனைக் கண்ட யாவருமே
     வியந்து பல கூறக்கேட்டு
தினமும் நான் திளைக்கின்றேன்
     திகட்டாத மகிழ்ச்சியினில்

கனவு காணத் தூங்கின்றேன்
     கலைந்த பின்பு ஏங்குகின்றேன்
மனம் முழுதும் மகனுக்காக
     மனக்கோட்டை கட்டுகின்றேன்

அடிப்படை தொல்லையெல்லாம்
     அகன்றிடும் முதல் நாளில்
துடிப்புடன் கிளம்பிவந்து
     தங்கமகன் உனைப் பார்த்து

வாடும் முகம் மலர்ந்திடுவேன்
     வருத்தமெலாம் தொலைத்திடுவேன்
தேடுகின்றேன் அந்தநாளை
     தொலைவிலில்லை பக்கம்தான்...

2 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

நிலாமதி said...

நினைவு மீட்டும் அந்த நாள் ஞாபகங்கள். அருமை. இனிய புதுவருடம் தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் உதிக்கட்டும்

கோவி said...

கவிதைகளை வாசிப்போர் இன்னும் பதிவுலகில் அதிகம் இல்லாமல் இருப்பது வருத்தமளிக்கிறது.. இனிய கவிதை..

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB