பொய்மையும்...(தொடர்ச்சி)

|

இதன் முதல் பகுதியினை படிக்காதவர்கள் இங்கு சென்று படித்துப்பின் தொடருங்களேன்...

மாலை வீட்டுக்கு சென்று பையினை வைத்துவிட்டு உடனடியாக திவாவை சந்தித்தேன். இருவரும் பேசியவண்ணம் ஆற்றினை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

'என்ன திவா, இப்படி பிள்ளையார் பிடிக்க குரங்காப்போயிடுச்சி' எனக்கேட்டேன். 'ஆமாண்டா. நான் யோசிச்சி ஒரு முடிவெடுத்திருக்கிறேன், கண்டிப்பாக அதற்கு நீ ஒத்துக் கொண்டுதான் ஆகனும்' என கட்டளையை வேண்டுகோளாய் வைத்தான்.

 'சரி சொல்லு திவா' என்றேன். 'இந்த நிலைமையில் உனக்கு ஒன்றுமில்லை எனச் சொல்வதால் எல்லோருக்கும் ஏமாற்றப்பட்டோமே என்னும் கோபம் மட்டும் தான் இருக்கும், பதிலாய் பெரிய அளவில் நிம்மதியாவார்கள். ஆனால், சீனியை நினைத்துப்பார். வித்தியாசமான ஆள்'.

'உன்னிடம் அவன் தனியே கூப்பிட்டு பேசியது கூட அவனும் உன்னைப்போல என எண்ணியதால் தான். அவன் இயல்பாக ஆகும் வரை நீ நோயாளிதான், இதே நாடகத்தை தொடர்ந்துதான் ஆகவேண்டும்' என்றான்.

 'என்ன திவா ஒரு நாள் நடிப்பதற்கே தவிடு திங்கும்படி ஆகிவிட்டது. தொடர்வதா' என பயந்தேன்.

 'உன்னால் முடியும் அன்பு, சீனிக்காக இந்த பொய்யினை தொடர்ந்துதான் ஆகவேண்டும், எல்லா விதத்திலும் நான் உறுதுணையாயிருக்கிறேன்' என்றான்.

நிறைய பேசிய பிறகு இறுதியில் சீனி இயல்பு நிலைக்கு வரும்வரை இந்த நாகத்தை கொஞ்ச நாளைக்கு தொடர்வதாய் முடிவு ஆனது.

அடுத்த நாள் வகுப்புக்கு உற்சாகமாய் சென்றேன். எப்போதும் மூன்றாவது பெஞ்சில் அமர்ந்திருக்கும் சீனி என் பக்கத்தில் வந்து அமர்ந்துகொண்டான். ரொம்பப் பிரமாதமாக எல்லாம் படிக்க மாட்டான். தேர்வுக்கு, அவசியம் என்றால் மட்டும்தான் புத்தகத்தை தொடுவான்.

நான் தங்கியிருந்த கல்லூரி விடுதிக்கே வந்து விட்டான். அதிக நேரம் என்னோடு செலவிட ஆரம்பிக்க, எங்களுக்கிடையேயான நட்பு இன்னமும் பலப்பட்டது. அதே சமயம் வகுப்புத் தோழர்களெல்லாம் என்னை கரிசனமாய் கவனித்துக்கொள்ளும் படலமும் தொடர்ந்தது.

தோழிகள் அவர்கள் வீட்டில் எது செய்தாலும் எனக்குக் கொண்டுவந்து தருவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்கள். தீபா கட்டாயப்படுத்தி அவளின் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள்.

எனக்கு பிடித்த எல்லாம் செய்து வைத்திருந்தார்கள். அவளின் அம்மா, 'கவலைப் படாதே அன்பு, உனக்கு ஒன்றும் ஆகாது, நீண்ட நாளைக்கு சௌக்யமா இருப்பே' என்றெல்லாம் பேச ஆரம்பிக்க, தீபா அம்மா என அதட்ட அப்படியே பேச்சை மாற்றினார்கள்.

நண்பர்களுக்குள் கடிந்து பேசாமல், சண்டை போடாமல் இருப்பது என்பது மிகக் கடினமான ஒரு விஷயம். ஆனால் எனக்காக எல்லோரும் அவ்வளவு பொறுமையாய் இருந்தார்கள். என்ன செய்தாலும் சகித்துக்கொள்ள, எனக்கே சில சமயம் போராக இருந்தது.

இன்னொரு விஷயத்தையும் சொல்லியே ஆகவேண்டும். தொடர்ச்சியாக அவர்கள் நம்புவதற்காக, 'பிரைன் டியூமருக்கு ஏதாச்சும் வைத்தியம் இருக்கா?' என்பேன். என் மாமா சாப்பிடும் நரம்பு சம்மந்தமான மாத்திரைகளை  எடுத்துச் சென்று விடுவேன் (இரண்டாயிரத்திலேயே அந்த மாத்திரையின் விலை பதினான்கு ரூபாய்... பெயர் தெரியவில்லை). அவர்களின் கண் முன்னால் படும்படி வைப்பேன். பையிலிருந்து வெளியே வைப்பது, திரும்ப உள்ளே வைப்பது என அவர்களின் கவனத்தில் படும்படி பார்த்துக்கொண்டேன்.

'சீனி உன் பெயரில் மட்டுமல்லடா, உன் உடம்பிலும் சக்கரைடா' என சொன்னாலும் கோபித்துக்கொள்ளாத அளவிற்கு தேறி விட்டான். அவனை சக்கரை சீனி எனக் கூபிட ஆரம்பித்தேன். வெகு இயல்பாக எடுத்துக்கொள்ள ஆரம்பித்தான்.

உணவுப் பழக்கவழக்கத்தை சரியாய் மேற்கொண்டு உடம்பினை கட்டுக்குள் வைத்துக்கொள்ள ஆரம்பித்தான். அவனுக்காக நானும் சக்கரை இல்லாமல் சாப்பிடுகிறேன் என சொல்லி, தொடர்ந்ததிலிருந்து சக்கரை இல்லாத காப்பி, டீ குடிக்க பழகிக்கொண்டான்.

கடைசியில், 'அண்ணே என் பேரே சீனி. சக்கரை இல்லாத காப்பி போடுங்க' என்பான்.

அண்ணா நீங்கள் கூட கவனித்திருப்பீர்கள், அந்த வருடத்தின் எல்லா பண்டிகைகளுக்கும் என் நண்பர்கள் எட்டு பேரும் தெடாவூர் வந்திருந்ததை. அதெல்லாம் என்னை சந்தோஷப்படுத்தவே.

ஒருநாள் சீனியிடம் திவாகர் பேசும்போது 'சக்கரை வியாதி ஒன்றும் பெரிய விஷயமில்லை திவா, உணவுக்கட்டுப்பாடு இடுந்தால் அழகாக சமாளிக்கலாம்' எனச் சொல்லவும் எங்களுக்கு பெரும் நிம்மதி.

அதற்குள் எங்கள் கல்லூரி வாழ்க்கையே முடிவுக்கு வந்திருந்தது. நண்பர்கள் நாங்களாகவே கல்லூரியின் கடைசி நாளை கொண்டாட முடிவு செய்தோம். சரி இதுதான் உண்மையைச் சொல்லுவதற்கு சமயம் என திவாவிடம் நானும் முடிவேடுத்தோம்.

ஓட்டலில் சென்று ஒன்றாய் விருப்பமானதை எல்லாம் சாப்பிட்டோம். கடைசி நாள், எப்படி எங்கள் மனநிலை இருந்தது என சொல்லத் தேவையில்லை. ஏற்காடு செல்லும் வழியில் இருந்த வழுக்குப்பாறை எனும் இடத்துக்கு சென்றோம். ஒரு பாறையில் அமர்ந்து சந்தோஷமாய் பழைய நினைவுகளை எல்லாம் கிளறி, பேசிக்கொண்டிருந்தபோது 'அமைதி, அமைதி' எனச் சொல்லி சட்டென எழுந்தேன்.

எல்லோரும் என்னை ஆர்வமாய் பார்க்க. 'ப்ளீஸ் முதலில் என்னை எல்லோரும் மன்னித்துக் கொள்ளுங்கள்' என ஆரம்பித்து, 'ஒரே நாளில் முடித்துவிடுவதாய் ஆரம்பித்த இந்த விளையாட்டை சீனிக்காக, ஒரு வருடத்திற்கு தொடர்ந்தது என் தப்ப்புதான். ஆனான் அன்றே சொல்லியிருந்தால் அவன் இந்த அளவிற்கு சகஜமாய் மாறியிருப்பான என்பது சந்தேகம்தான்' என எல்லாம் சொல்லி முடித்தேன்.

சந்தோஷம், கோபம், ஏமாற்றப்பட்டுவிட்டோமே என கோபம் எல்லாம் என் நண்பர்கள் முகத்தில் அன்று ஒரு சேர பார்த்தேன். கும்பலாய் என் மேல் பாய்ந்து என்னை அடித்து அவர்களின் அன்பு, கோபம் என எவ்வாவற்றையும் அடியாய் இந்த அன்பின் மேல் பொழிந்தார்கள்.

எல்லாம் பார்த்துக்கொண்டு அமைதியாய் இருந்த சீனி உணர்ச்சிகளை அடக்க முடியாமல் என்னை கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்துவிட்டான்.

சீனிக்கு திருமணமாகி ஒரு பையன் இருக்கிறான். திருமணத்திற்கு முன்பாக எல்லாம் சொல்லித்தான் செய்துகொண்டான். எங்கள் வகுப்பில் இருந்த எல்லோருக்கும் திருமணம் ஆகிவிட்டது, குழந்தைகள் இருக்கிறார்கள். சீனிக்கும் இன்னொரு இசுலாமியத் தோழிக்கு மட்டும்தான் ஆண்  குழந்தை. எங்கள் எல்லோருக்கும் பெண்...

இன்றும் அவன் என்னை அழைக்காத நாட்கள் எனச் சொன்னால், எனது செல்பேசியை மறந்து பள்ளிக்கு சென்றுவிட்டாலோ, அல்லது பிரச்சினையாகி வேலை செய்யாமலிருந்தாலோ தான்...

0 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB