ஜெராக்ஸ்...

|

கல்லூரியில் சேர்ந்து மூன்று மாதங்கள் முடிந்திருந்தது. ரேகிங் எல்லாம் முடிந்து, படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்து, ஒவ்வொருவரைப் பற்றியும் ஓரளவிற்கு அறிந்து பருவத் தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்த தருணம்.

எங்கள் வகுப்பைச் சேர்ந்த குமார் ஓரளவுக்கு வசதியானவன், சுமாராகப் படிப்பான். எங்களுக்கெல்லாம் அவன் தான் பைனான்சியர், அவசர தேவைக்கு கொடுத்து உதவுவான்.

அவனது அன்றாட முக்கிய அலுவல் ஒன்றே இந்த இடுகையின் சாரம்சம். அறையில் படுத்திருக்கும் நேரம் தவிர தோளில் மாட்டிய பையோடு இருப்பான் அவன் செய்யும் அந்த வேலைக்கு உதவியாய்.

அப்படியென்ன அவன் செய்தான் என ஆவல் எழுகிறதல்லவா? அது அவன் எடுக்கும் ஜெராக்ஸ் பற்றி. ஆம், அவனிடம் இருந்த கடைசிவரை விடவே இயலாத பழக்கம். எந்த ஒரு புதிய விஷயத்தை பற்றி எதிலாவது பார்த்தாலும், படித்தாலும், எவரேனும் இருப்பதாய் சொன்னாலும் போதும். உடனே அதன் பிரதி அவனிடத்தில் இருக்கும்.

ஹிந்துவில் ஒரு விஷயம் வந்திருக்குடா மச்சி என சொன்னவுடன் லைப்ரரிக்குப் போய் அதன் பிரதியோடு தான் வருவான். ஜெராக்ஸ் எடுக்க ஆகும் செலவினை மட்டும் கண்டுகொள்ளவே மாட்டான்.

மூன்றாம் வருடத்துக்கு தேவையான ஒரு விஷயம் என எவரேனும் சொன்னாலும் போதும் அதையும் சேகரிப்பில் வைத்துக்கொள்வான். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை ஊருக்கு செல்லும் போது எல்லாவற்றையும் எடுத்துச் சென்று பாதுகாப்பு கருதி அவனது ஊரில் வைத்துவிட்டு வந்துவிடுவான்.

அறையில் கூட எந்த ஒரு பிரதியையும் வெளியில் வைக்கமாட்டான், காசு பணத்தை வெளியில் வைத்தாலும். அஞ்சல் வழிக் கல்வியில் தரப்படும் புத்தகங்களின் பிரதிகளையும் சேர்த்து,  தமிழ்நாட்டில் உள்ள அத்தனை கல்லூரிகளில் கொடுக்கப்பட்டிருக்கும் நோட்ஸ்களும் அவனிடத்தில் இருக்கும்.

ஜமால், பிஷப், யு.டி.சி என திருச்சியில் உள்ள கல்லூரிகளில் நடத்தப்படும் மேத்ஸ் நோட்டுக்களின் பிரதிகளையும் எடுத்து வைத்திருந்தான். கசங்கிய, குப்பைபோல் உடுத்துகின்ற துணிகளை குவித்து வைத்திருக்கும் அவன்,
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பைல் என கோர்வையாய் அழகாய் வைத்திருப்பான்.

நாங்களெல்லாம் எவ்வளவோ முறை கிண்டல், கேலி செய்தபோதும். இளங்கலை படிப்பினை முடிக்கும் வரை இந்த பழக்கத்தினை விடுவதாயில்லை.

இறுதியாண்டில் சிலபஸ் மாறியதால் நெட்வொர்க் -பேப்பருக்கு  இரண்டு யூனிட்டுகளுக்கான டெக்ஸ்ட் புத்த்கம் மிகப் பழமையான பதிப்பு என்பதால்  புத்தகமே கிடைக்கவே இல்லை. பாடம் நடத்துவதற்கு ஆசிரியரும், படிப்பதற்கு நாங்களும் நிறையவே திணறிப் போனோம்.

குமாரிடம் இதற்கு ஏதேனும் வைத்திருக்கிறாயா என நக்கலாய் கேட்க அவனும் முனைந்து தேடி சரியாய் எடுத்துவந்து எங்களின் முகத்திலெல்லாம் ஈயாட வைத்து, நெஞ்சில் பால்வார்த்தான். இனிமேல் ஜெராக்ஸ் எடுப்பதை கேலி பண்ணமாட்டேன் என சத்தியம் வாங்கிக் கொண்ட பிறகுதான் எங்களிடம் பிரதியெடுக்கக் கொடுத்தான். இது பல கல்லூரிகளுக்கும் பயணித்தது தனி கதை.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இதனை எப்போது பிரதி எடுத்துவைத்தான் என்பது அவனுக்கே தெரியாது எனச் சொன்னதுதான்.
இவன் சேகரித்தது பாடம் சம்மந்தப்பட்டது மட்டுமல்ல, அவன் மனதுக்கு முக்கியம் எனப்படுவது, மற்றவர்களால்  முக்கியம் எனச் சொல்லப்படுவது எல்லாம்.

படித்து முடித்ததும் கடனாய் கொடுத்திருந்த பணத்தினை வாங்கினானோ இல்லையோ, அவன் கொடுத்து வைத்த பிரதிகளை மறவாமல் வாங்கி சென்றான்.

வெகு நாட்களுக்குப் பிறகு கடந்த வருடம் அவனை ஏர்போர்ட்டில் சந்தித்தேன். அப்போது ஒல்லியாய் இருந்ததற்கு நேர்மாறாய் இன்று இருந்தான். குடும்பத்தோடு லண்டன் செல்லுவதாக சொன்னான். டிபிஏ-வாக இருப்பதாக சொல்லி என்னைப் பற்றியும் விசாரித்தான். மனைவியும் குழந்தைகளும் ஏதோ வாங்கப் போயிருப்பதாக சொன்னான்.

'மச்சான் இன்னமும் ஜெராக்ஸ் எடுத்துகிட்டுதான் இருக்கியா எனக் கேட்டேன்'.

வெடிச் சிரிப்பாய் அதிரச் சிரித்தவவன், 'டேய், இன்னும் அதை நீ மறக்கலையா?, எனக்கே மறந்துடுச்சி... எம்.எஸ்.சி முடிச்சிட்டு வீட்டுல வேலை இல்லாம இருந்தேன். ஒருநாள்  சும்மாவே உக்காந்திருக்கேன்னு அப்பா சொல்ல, பெரிய தகராறு. படிச்சி என்னத்த கிழிச்சே என அவர் கேட்க, என்னோட ரூமில் பாதி இடத்தை அடைச்சிகிட்டிருந்த என்னோட கலக்சன காமிச்சென். கம்முனு போயிட்டாரு. ஆன அதுக்கு நான் பண்ணின செலவ நினைச்சிப் பார்த்தேன், மயக்கமே வந்துடுச்சி. அப்புறம் எல்லாத்தையும் எடைக்குப் போட்டுட்டேன்' எனச் சொல்லி,பக்கத்தில் வந்த அவனது மனைவி, குழந்தைகளை அறிமுகப் படுத்தி வைத்துவிட்டு, 

'அதான் ஜெராக்ஸா ரெண்டு பசங்களைப் பெத்திருக்கேனே' எனச் சொன்னான்.

ஆம், அப்படியே அவனை உரித்து வைத்தார்போல் இருந்தார்கள் அவனது மூத்த மகனும், இளைய மகனும்... கொஞ்சமும் அம்மாவின் சாயல் இல்லாமல்.

3 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

ILA (a) இளா said...

wow. விகடனுக்கு அனுப்பிச்சிருக்கலாமே. அட்டகாசமான கதை. விகடன், குமுதத்துல ஏதோ ஒன்னுல கண்டிப்பா வெளியாகியிருக்கும்

க ரா said...

கதை நல்லாருக்குண்ணே....

vasu balaji said...

நல்லாருக்கு

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB