வசந்தப்புயல்...அத்தியாயம் மூன்று...

|

இரண்டாவது அத்தியாயத்தை படிக்கவில்லையெனில் இங்கு படித்து தொடருங்களேன்..

வானதி

சென்னை, கோவை என நல்ல கல்லூரிகளில் இடம் கிடைத்தபோதும் அருகில் இருக்கிறது, வாரம் ஒருமுறையாவது என்னை பார்க்கவேண்டும் என்பற்காகவும் இந்த பொட்டல் காட்டில் இருக்கும் கல்லூரியில் சேர்த்துவிட்டார்கள்.

படித்ததெல்லாம் ஆங்கில வழியாய் என்பதால் சரளமாய் பேசுவேன். இங்கு கொஞ்சம் ஆங்கிலத்தில் பேசினாலே போதும், பீட்டர் விடுகிறாள் என எல்லோரும் கிண்டல். ஆசிரியர்களிடம் சந்தேகம் கேட்டாலே இறைஞ்சுகின்ற பார்வையில் தவிர்க்க முற்படுகிறார்கள், அல்லது அதிகமாய் மதிப்பெண்கள், தனிச் சலுகைகள் எனும் விதத்தில் கேள்வியே கேட்காவண்ணம் கட்டிப் போட்டுவிடுகிறார்கள்.

இவ்வாறெல்லாம் மனதளவில் காயப்பட்டிருந்த எனக்கு, செழியன் சாரின் வருகை பெரிய மாற்றத்தின் அறிகுறியாகவே தெரிந்தது. ஒருநாள் பாடம் எடுத்ததை வைத்து என்னடா இப்படிச் சொல்லுகிறேன் எனப் பார்க்கிறீர்களா? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமல்லவா?

அப்புறம் ஆசிரியர்களிடம் எனக்கு பிடிக்காத இன்னுமொரு விஷயம், பாடம் நடத்துபோது எல்லோரையும் பார்த்து பேசுவது கிடையாது. ஒரு இயந்திரத்தன்மை இருக்கும். சுருங்கச் சொன்னால் கடமைக்கு பாடம் நடத்துவதாய் இருக்கும். புத்தகத்தைப் படித்து அப்படியே ஒப்பிப்பார்கள், அல்லது அப்படியே பார்த்து படிக்கவும் செய்வார்கள். புத்தகத்திலிருந்து வரி பிசகாமல் அப்படியே சொல்லி கட்டாயப்படுத்தி குறிப்பெடுக்கவும் செய்வார்கள்.

ஆனால் செழியன் சார் முதல் வகுப்பிற்கு எந்த ஒரு குறிப்பையும் பார்த்து நடத்தவில்லை, பதிலாய் ஒரு காகிதத்தில் அழகாய் குறித்தெடுத்து வந்திருந்தார், அதனையும் கடைசியில் குறிப்பெடுத்துக்கொள்ளக் கொடுத்துவிட்டார். கண்ணனிடம் வாங்கி உடனே எழுதிக்கொண்டு விட்டேன்.

அதிலுல்ல குறிப்புகள் முற்றிலும் புதிதாய், புரியும்படி எளிதாய், எந்த ஒரு புத்தகத்திலும் இல்லாமல் அவரின் கைவண்ணமாய் இருந்தது. கண்டிப்பாய் பல புத்தகங்களைப் படித்து குறிப்பெடுத்துக்கொண்டு வந்திருக்கிறார்.

எனது சந்தோஷங்களை அறைத்தோழிகளிடம் பகிர்ந்துகொண்டபோது என்னை ஒரு மாதிரியாய்ப் பார்த்தார்கள். அதற்கான காரணம் என்ன என்பது எனக்குத் தெளிவாகத் தெரியும். முதலாவது, நான் எந்த ஒரு ஆசிரியரையும் அவர்களிடத்தில் உயர்த்திப்பேசியது கிடையாது. அடுத்து இவ்வளவு உற்சாகமாய் பாட சம்மந்தமாய் பேசியது கிடையாது. மொத்தத்தில் இன்றுதான் படிக்க வந்ததன் அர்த்தம் விளங்குவதாய் இருந்ததது.

தனித்தனியான விடுதி என்றாலும் சாப்பிடுவதற்கு ஒரே இடத்தில்தான். ஒரு பெரிய ஹாலில் மாணவிகள், மாணவர்கள் என எல்லோரும் தனித்தனியே அமர்ந்து சாப்பிடுவோம். கண்டிப்பாய் இருப்பார்கள் என்பதால் அதிகம் பேசிக்கொள்ள மாட்டோம்.

ஆசிரியர்களுக்கு தனியான வட்ட வடிவில் மேஜையிட்டிருக்கும். விடுதியில் தங்கியிருந்த ஆசிரியர்கள், ஆசிரியைகள் அங்கு அமர்ந்து சாப்பிடுவார்கள். செழியன் சார் வெள்ளை வேட்டியும், டி ஷர்ட்டும் அணிந்து அமர்ந்திருந்தார். மற்ற ஆசிரியர்களிடம் மெதுவான தயக்கத்துடன் அளவாய் சிரித்துப்பேசி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

வழக்கமாய் அன்றைய தினத்தில் தரும் தோசையும் குருமாவும்தான், ஆனாலும் ரொம்பவும் சுவையாக இருப்பதாய்ப் பட்டது. ஆம், மனம் மகிழ்வாயிருந்தால் நாம் சந்திக்கும், செயல்படுத்தும் எல்லாம் இனிதாகவே இருக்கும் போலிருக்கிறது.

இரவு படுக்கச் செல்லும் போது எல்லா நாட்களும் இன்று போலவே இனிமையாய் அமையவேண்டும் என வேண்டிக்கொண்டேன். கனவில் கூட செழியன் சார் வகுப்பெடுப்பது போலும், கேள்விகள் கேட்பது போலவும் தான் வந்தது. என் எண்ணம் எல்லாம் வெறும் கனவாகப்போகிறது என அப்போது எனக்கு தெரிந்திருக்கவில்லை

0 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB