பயணம் 1.1.3

|

நாம் மேற்கொள்ளும் பயணங்கள் புதுப்புது அனுபவங்களையும் பாடங்களையும் கற்றுத்தருகின்றன. கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் நமக்கு பல விஷயங்கள் புலப்படும்.

பயணத்தின்போது புதிதாய் ஒரு நட்பினைப் பெறுவதிலோ, சுற்றுப்புற நிகழ்வுகளை அசைபோடுவதிலோதான் அதிக ஆர்வம் இருக்கும். வெறுமையாய் உணரும்போது இருக்கவே இருக்கிறது இசை, நமது எண்ணவோட்டத்துக்கு ஏற்றவாறு...

சமீபத்தில் நிகழ்ந்த சில விஷயங்களைப் பற்றிய ஒரு பகிர்வை இந்த இடுகை. சில விஷயங்களைப் பற்றி பலமுறை கேள்விப்பட்டிருப்போம், படித்தும் இருப்போம். ஆனால் நேரில் நாமே அதில் சம்மந்தப்ப்படும்போது?

அதிகாலை தெடாவூர் செல்லும் பஸ்ஸில் அமர்ந்திருந்தேன். பெரம்பலூர் செல்லும் எல்லா பேருந்துகளும் எங்களின் ஊர் வழியாய்த்தான் செல்லும். மற்றபடி அரும்பாவூர், புளியங்குறிச்சி என இன்னும் பல ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளும் வழியாகச் செல்லும்.

முன்னால் அமைந்திருந்த பாட்டி மெதுவாய் திரும்பி என்னிடம் 'தம்பி இந்த பஸ் எங்கு போகும்?' எனக் கேட்டார்கள்.

'அரும்பாவூர் போகிறது' எனச் சொன்னேன்.

'அய்யய்யோ பெரம்பலூர் போகாதா? இந்த வண்டி அங்கதானே போகணும்' என்றார்கள்.

'அடுத்த வண்டி வரும் அதில் வாருங்கள்' எனச் சொன்னேன். எந்த ஒரு பதிலும் சொல்லாமல் அமர்ந்திருக்க மறுபடியும் சொன்னேன்.

'நான் வீரகனூர் தான் போகிறேன், இந்த பஸ் வீரகனூருக்கு போகும்னு எனக்குத் தெரியும்' எனச் சொல்ல சரியான பல்ப்.

எனக்குத் தெரிந்தவரை இந்த பஸ், இந்த ஊருக்கு போகுமா என பெருசுகள் எவருமே கேட்பதில்லை.

******

பக்கத்தில் ஷார்ட்ஸ், அழுக்கேறிய பனியன், எண்ணையைப் பார்த்திராத பரட்டைத்தலை, மழிக்காத தாடி, மஞ்சளாய் மொச்சைப் பற்களுடன் முழுச் சிரிப்போடு ஒருவர் அமர்ந்திருந்தார்.

பார்வையிலேயே கொஞ்சம் மன நிலை குன்றியவர் போலிருந்தார். தலையை அடிக்கடி ஆட்டுவதும் ஏதோ முணுமுணுப்பதாயும் இருந்தார்.

பேருந்து கிளம்ப இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கும் சமயத்தில் உதவி கண்டக்டர் பையன் வந்து அவரை எந்த ஊருக்கு போகவேண்டும் எனக்கேட்க, 'ஆங், அக்...' என என சைகையோடு சொல்ல ஆரம்பித்தார்.

பேச வராது போலிருக்கிறது, ஒலியெழுப்ப மட்டும் தெரிந்திருக்கிறது. 'இந்த பஸ் போகாது' என சொல்லி அவரை எழுப்பிவிடுவதிலே குறியாய் இருக்க அவரும் இறங்குவேனா பார் என அடம் பிடித்தார்.

 கடைசியாய் கோபத்துடன் அவரை தள்ளி இறக்க முயல அவரின் பாஷையில் திரும்பவும் சொல்லி பக்கத்தில் இருந்த என்னைப் பார்த்து பேச ஆரம்பித்தார்.

நான் ஒவ்வொரு ஊராக சொல்லி, கடைசியில் 'அரும்பாவூர் போகனுமா' எனகேட்க, அவரின் முகத்தில் உற்சாக பல்ப். 'ங்.... அஃ...' என சிரித்தபடி சொல்லி தலையாட்டினார்.

உதவி சென்றுவிட அதன் பின் ஏறிய பாட்டி தான் எனக்கு அழகாய் பல்ப் கொடுத்தது. கண்டக்டர் வந்து டிக்கெட் கேட்க, அவர் பதினைந்து ரூபாயை நீட்டி டிக்கெட் கேட்க, எந்த ஊர் என்றதற்கு 'அங்...கா...கா' எனச் சொல்ல 'போகாது இறங்கு' எனச் சொன்னார்.

 'அண்ணே அரும்பாவூர் போகனுமாம்' என சொன்னவுடன் அவர் சிரித்து 'ங்...' என மலர்ச்சியாய் சிரித்தார்.

தெடாவூரில் இறங்கும்போது எடுத்து வந்திருந்த இரு பைகளையும் இறக்குவதற்கு உதவி செய்த அவரைப் பார்த்து 'தேங்க்ஸ்' என சொல்ல தலையாட்டி ஒரு சிரிப்பு சிரித்தார். சிலீரென்றிருந்தது...

பொய்மையும்...(தொடர்ச்சி)

|

இதன் முதல் பகுதியினை படிக்காதவர்கள் இங்கு சென்று படித்துப்பின் தொடருங்களேன்...

மாலை வீட்டுக்கு சென்று பையினை வைத்துவிட்டு உடனடியாக திவாவை சந்தித்தேன். இருவரும் பேசியவண்ணம் ஆற்றினை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

'என்ன திவா, இப்படி பிள்ளையார் பிடிக்க குரங்காப்போயிடுச்சி' எனக்கேட்டேன். 'ஆமாண்டா. நான் யோசிச்சி ஒரு முடிவெடுத்திருக்கிறேன், கண்டிப்பாக அதற்கு நீ ஒத்துக் கொண்டுதான் ஆகனும்' என கட்டளையை வேண்டுகோளாய் வைத்தான்.

 'சரி சொல்லு திவா' என்றேன். 'இந்த நிலைமையில் உனக்கு ஒன்றுமில்லை எனச் சொல்வதால் எல்லோருக்கும் ஏமாற்றப்பட்டோமே என்னும் கோபம் மட்டும் தான் இருக்கும், பதிலாய் பெரிய அளவில் நிம்மதியாவார்கள். ஆனால், சீனியை நினைத்துப்பார். வித்தியாசமான ஆள்'.

'உன்னிடம் அவன் தனியே கூப்பிட்டு பேசியது கூட அவனும் உன்னைப்போல என எண்ணியதால் தான். அவன் இயல்பாக ஆகும் வரை நீ நோயாளிதான், இதே நாடகத்தை தொடர்ந்துதான் ஆகவேண்டும்' என்றான்.

 'என்ன திவா ஒரு நாள் நடிப்பதற்கே தவிடு திங்கும்படி ஆகிவிட்டது. தொடர்வதா' என பயந்தேன்.

 'உன்னால் முடியும் அன்பு, சீனிக்காக இந்த பொய்யினை தொடர்ந்துதான் ஆகவேண்டும், எல்லா விதத்திலும் நான் உறுதுணையாயிருக்கிறேன்' என்றான்.

நிறைய பேசிய பிறகு இறுதியில் சீனி இயல்பு நிலைக்கு வரும்வரை இந்த நாகத்தை கொஞ்ச நாளைக்கு தொடர்வதாய் முடிவு ஆனது.

அடுத்த நாள் வகுப்புக்கு உற்சாகமாய் சென்றேன். எப்போதும் மூன்றாவது பெஞ்சில் அமர்ந்திருக்கும் சீனி என் பக்கத்தில் வந்து அமர்ந்துகொண்டான். ரொம்பப் பிரமாதமாக எல்லாம் படிக்க மாட்டான். தேர்வுக்கு, அவசியம் என்றால் மட்டும்தான் புத்தகத்தை தொடுவான்.

நான் தங்கியிருந்த கல்லூரி விடுதிக்கே வந்து விட்டான். அதிக நேரம் என்னோடு செலவிட ஆரம்பிக்க, எங்களுக்கிடையேயான நட்பு இன்னமும் பலப்பட்டது. அதே சமயம் வகுப்புத் தோழர்களெல்லாம் என்னை கரிசனமாய் கவனித்துக்கொள்ளும் படலமும் தொடர்ந்தது.

தோழிகள் அவர்கள் வீட்டில் எது செய்தாலும் எனக்குக் கொண்டுவந்து தருவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்கள். தீபா கட்டாயப்படுத்தி அவளின் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள்.

எனக்கு பிடித்த எல்லாம் செய்து வைத்திருந்தார்கள். அவளின் அம்மா, 'கவலைப் படாதே அன்பு, உனக்கு ஒன்றும் ஆகாது, நீண்ட நாளைக்கு சௌக்யமா இருப்பே' என்றெல்லாம் பேச ஆரம்பிக்க, தீபா அம்மா என அதட்ட அப்படியே பேச்சை மாற்றினார்கள்.

நண்பர்களுக்குள் கடிந்து பேசாமல், சண்டை போடாமல் இருப்பது என்பது மிகக் கடினமான ஒரு விஷயம். ஆனால் எனக்காக எல்லோரும் அவ்வளவு பொறுமையாய் இருந்தார்கள். என்ன செய்தாலும் சகித்துக்கொள்ள, எனக்கே சில சமயம் போராக இருந்தது.

இன்னொரு விஷயத்தையும் சொல்லியே ஆகவேண்டும். தொடர்ச்சியாக அவர்கள் நம்புவதற்காக, 'பிரைன் டியூமருக்கு ஏதாச்சும் வைத்தியம் இருக்கா?' என்பேன். என் மாமா சாப்பிடும் நரம்பு சம்மந்தமான மாத்திரைகளை  எடுத்துச் சென்று விடுவேன் (இரண்டாயிரத்திலேயே அந்த மாத்திரையின் விலை பதினான்கு ரூபாய்... பெயர் தெரியவில்லை). அவர்களின் கண் முன்னால் படும்படி வைப்பேன். பையிலிருந்து வெளியே வைப்பது, திரும்ப உள்ளே வைப்பது என அவர்களின் கவனத்தில் படும்படி பார்த்துக்கொண்டேன்.

'சீனி உன் பெயரில் மட்டுமல்லடா, உன் உடம்பிலும் சக்கரைடா' என சொன்னாலும் கோபித்துக்கொள்ளாத அளவிற்கு தேறி விட்டான். அவனை சக்கரை சீனி எனக் கூபிட ஆரம்பித்தேன். வெகு இயல்பாக எடுத்துக்கொள்ள ஆரம்பித்தான்.

உணவுப் பழக்கவழக்கத்தை சரியாய் மேற்கொண்டு உடம்பினை கட்டுக்குள் வைத்துக்கொள்ள ஆரம்பித்தான். அவனுக்காக நானும் சக்கரை இல்லாமல் சாப்பிடுகிறேன் என சொல்லி, தொடர்ந்ததிலிருந்து சக்கரை இல்லாத காப்பி, டீ குடிக்க பழகிக்கொண்டான்.

கடைசியில், 'அண்ணே என் பேரே சீனி. சக்கரை இல்லாத காப்பி போடுங்க' என்பான்.

அண்ணா நீங்கள் கூட கவனித்திருப்பீர்கள், அந்த வருடத்தின் எல்லா பண்டிகைகளுக்கும் என் நண்பர்கள் எட்டு பேரும் தெடாவூர் வந்திருந்ததை. அதெல்லாம் என்னை சந்தோஷப்படுத்தவே.

ஒருநாள் சீனியிடம் திவாகர் பேசும்போது 'சக்கரை வியாதி ஒன்றும் பெரிய விஷயமில்லை திவா, உணவுக்கட்டுப்பாடு இடுந்தால் அழகாக சமாளிக்கலாம்' எனச் சொல்லவும் எங்களுக்கு பெரும் நிம்மதி.

அதற்குள் எங்கள் கல்லூரி வாழ்க்கையே முடிவுக்கு வந்திருந்தது. நண்பர்கள் நாங்களாகவே கல்லூரியின் கடைசி நாளை கொண்டாட முடிவு செய்தோம். சரி இதுதான் உண்மையைச் சொல்லுவதற்கு சமயம் என திவாவிடம் நானும் முடிவேடுத்தோம்.

ஓட்டலில் சென்று ஒன்றாய் விருப்பமானதை எல்லாம் சாப்பிட்டோம். கடைசி நாள், எப்படி எங்கள் மனநிலை இருந்தது என சொல்லத் தேவையில்லை. ஏற்காடு செல்லும் வழியில் இருந்த வழுக்குப்பாறை எனும் இடத்துக்கு சென்றோம். ஒரு பாறையில் அமர்ந்து சந்தோஷமாய் பழைய நினைவுகளை எல்லாம் கிளறி, பேசிக்கொண்டிருந்தபோது 'அமைதி, அமைதி' எனச் சொல்லி சட்டென எழுந்தேன்.

எல்லோரும் என்னை ஆர்வமாய் பார்க்க. 'ப்ளீஸ் முதலில் என்னை எல்லோரும் மன்னித்துக் கொள்ளுங்கள்' என ஆரம்பித்து, 'ஒரே நாளில் முடித்துவிடுவதாய் ஆரம்பித்த இந்த விளையாட்டை சீனிக்காக, ஒரு வருடத்திற்கு தொடர்ந்தது என் தப்ப்புதான். ஆனான் அன்றே சொல்லியிருந்தால் அவன் இந்த அளவிற்கு சகஜமாய் மாறியிருப்பான என்பது சந்தேகம்தான்' என எல்லாம் சொல்லி முடித்தேன்.

சந்தோஷம், கோபம், ஏமாற்றப்பட்டுவிட்டோமே என கோபம் எல்லாம் என் நண்பர்கள் முகத்தில் அன்று ஒரு சேர பார்த்தேன். கும்பலாய் என் மேல் பாய்ந்து என்னை அடித்து அவர்களின் அன்பு, கோபம் என எவ்வாவற்றையும் அடியாய் இந்த அன்பின் மேல் பொழிந்தார்கள்.

எல்லாம் பார்த்துக்கொண்டு அமைதியாய் இருந்த சீனி உணர்ச்சிகளை அடக்க முடியாமல் என்னை கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்துவிட்டான்.

சீனிக்கு திருமணமாகி ஒரு பையன் இருக்கிறான். திருமணத்திற்கு முன்பாக எல்லாம் சொல்லித்தான் செய்துகொண்டான். எங்கள் வகுப்பில் இருந்த எல்லோருக்கும் திருமணம் ஆகிவிட்டது, குழந்தைகள் இருக்கிறார்கள். சீனிக்கும் இன்னொரு இசுலாமியத் தோழிக்கு மட்டும்தான் ஆண்  குழந்தை. எங்கள் எல்லோருக்கும் பெண்...

இன்றும் அவன் என்னை அழைக்காத நாட்கள் எனச் சொன்னால், எனது செல்பேசியை மறந்து பள்ளிக்கு சென்றுவிட்டாலோ, அல்லது பிரச்சினையாகி வேலை செய்யாமலிருந்தாலோ தான்...

பொய்மையும்...

|


என் தம்பி என்னை விட்டு சென்று ஒரு வருடத்துக்கும் மேல் ஆகிறது. அவனது இடத்தினை நிரப்புவதற்கு எவராலும் இயலாத காரியம் என்றாலும் ஓரளவிற்கு அந்த குறையினைப் போக்குபவன் அன்பு, என் தம்பியின் உயிர் நண்பன், சகலை. இன்று எனக்கு இன்னுமோர் தம்பி.

இழப்பு என்னை எந்த அளவிற்கு வருத்துகிறதோ, நண்பனை இழந்த அவனுக்கும் அதே அளவில். என் தம்பிக்குப் பின் அன்பு மனம் விட்டு பேசும் ஒரே நபர் நான்தான். அவர்கள் இருவரும் சேர்ந்து செய்த ஒரு விஷயத்தை சென்றவாரம் பேசுகையில் கேட்டு ஆச்சர்யம், அதிர்ச்சி, சோகம் என எல்லாம் கலந்து கிடைக்க அன்பு சொன்னது அப்படியே அவன் சொல்வதாய் இந்த இடுகையில்.

'அண்ணா நான் எம்.எஸ்.சி முதாலாம் ஆண்டு படிக்கும்போது இது நடந்தது. என் வகுப்பில் படிக்கும் எல்லோருக்கும் திவாகரை நன்கு தெரியும், சேலம் வரும்போதெல்லாம் சந்தித்துவிட்டுதான் செல்லுவான். நானும் திவாவும் சேர்ந்து எல்லோரையும் ஏப்ரல் ஃபூல் பண்ணவேண்டும் என முடிவு செய்தோம். ஏப்ரல் ஒன்று அன்று செய்தால் எல்லோரும் புரிந்து கொள்வார்கள் என்பதால் முதல் நாளிலேயே எங்கள் வேலையினை ஆரம்பித்தோம்.

பதினோரு மணியளவில் வேண்டுமென்றே கார்த்தியிடம் சண்டை இழுக்க ஆரம்பித்தேன். என்ன செய்தாலும் சண்டை பெரிதாகாமல் போகவே வலிய கோபித்துக்கொள்வதாய் காட்டிக்கொண்டு வகுப்பினை விட்டு வெளியே வந்து நேராய் வீட்டிற்கு கிளம்பி வந்துவிட்டேன்.

கல்லூரியிலிருந்து வந்தவுடன் நேரே வீட்டுக்கு செல்லாமல் உங்கள் வீட்டிற்கு வந்து திவாவோடு பேசிக்கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் செல்போன் கிடையாது, உங்கள் வீட்டில் இருக்கும் போன் தான் எனக்கு பி.பி.

விளையாட்டாய் வெளியே சென்றிருக்கிறேன், வந்துவிடுவேன் என நம்பிக்கொண்டிருந்தவர்கள் ரொம்ப நேரம் வராமல் போகவே, சந்தேகப்பட்டு திவாகருக்கு போன் செய்து என்னைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்கள்.

திவாகர் மெதுவாய் நடந்ததை விசாரித்து அவனது பங்கிற்கு ஆரம்பித்தான். போன் செய்த கார்த்தியிடம், 'கார்த்தி உங்ககிட்டஒரு விஷயம் சொல்லுவேன், கண்டிப்பாய் நீங்கள் யாரிடமும் சொல்லக்கூடாது, ப்ராமிஸ்' என ஆரம்பித்து, 'அன்புவிற்கு ப்ரைன் ட்யூமர், இந்த விஷயம் எனக்கும் அவனுக்கு மட்டும்தான் தெரியும். இருக்கும் வரை அவர்களாவது சந்தோஷமாய் இருக்கட்டுமே என அவனது குடும்பத்தாருக்குக்கூட சொல்லவில்லை. இன்னும் ஓரிரு வருடங்கள் தான் உயிருடன் இருப்பான். தயவு செய்து அவனை எந்த விதத்திலும் கஷ்டப்படுத்தாதீர்கள், அவன் இருக்கும் வரை சந்தோஷமாய் பார்த்துக்கொள்ளவேண்டியது உங்களது, நண்பர்களாகிய நமது பொறுப்பு' என சொல்லியவுடன் கார்த்தி நிறையவே அதிர்ந்து போனான்.

பதட்டத்துடன் 'இல்லையே அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பில்லையே, அன்பு எதுவும் எங்ககிட்ட சொன்னதில்லையே?' எனக் கேட்க , 'அதான் முதலிலேயே சொன்னேனே, அவன் யாரையும் கஷ்டப்படுத்த விரும்ப மாட்டான். தயவு செய்து நான் உங்களிடம் சொன்னதாய் அவனிடம் சொல்லிவிடாதீர்கள். அவன் மனம் விட்டு பேசும், ஆறுதலாய் நினைக்கும் ஒரே ஆள் நான்தான்' என சோகமாய் சொல்லி போனை வைத்தான்.

சிரிப்பினை அடக்கி பக்கத்து ரூமிற்குள் ஒடி சிரித்து சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன். அடக்க முடியாத சிரிப்பினை வெளிக்கொணர்ந்து 'என்ன அன்பு என்னை மாட்டி விட்டுவிடுவாய் போலிருக்கிறது' என செல்லமாய் கடிந்து, 'சரி இனிமேல் இதை மெயின்டைன் பண்ணுவது உன் பொறுப்பு' என சொன்னான்.

அடுத்த நாள் கிளம்பி கல்லூரிக்கு சென்றேன். வழக்கமாய் இறங்கும் பேருந்து நிறுத்தத்தில் எனது வகுப்பினை சேர்ந்த பதினேழு பேரில் பத்துக்கும் மேற்பட்டோர் கும்பலாக எனக்காக காத்திருந்தார்கள்.

இறங்கியதும் விஷயம் தெரியாதவனாய் அப்பாவித்தனமாய் முகத்தை வைத்துக் கொண்டு, 'ஆமாம், ஏன் எல்லோரும் இங்கு வந்து நிற்கிறீர்கள்?' எனக்கேட்டேன்.

'ஒன்னுமில்லை அன்பு, ஐ ஏம் வெரி சாரி, தெரியாம உங்கிட்ட சண்டை போட்டுட்டேன், என்னை மன்னித்துக்கொள்' என கார்த்தி தழுதழுக்கும் குரலில் சொன்னான்.

'நான் ஒன்றும் தப்பாக நினைக்கவில்லையே! இப்பொழுதெல்லாம் தலைவலி அடிக்கடி வருகிறது. நேற்று கொஞ்சம் அதிகம், அதனால்தான் கிளம்பிவிட்டேன். சரி, டீ சாப்பிட வந்தீங்களா?' எனக் கேட்டேன். பதிலையும் நானே சொல்லிவிட்டதால் ஆமென்று தலையாட்டினார்கள்.

என்னை எல்லோரும் பார்த்த பார்வையில் இருந்து அவர்களால் கட்டுப்படுத்தியும் முடியாமல் வெளிப்பட்ட பரிதாப உணர்ச்சி எனக்குத் தெளிவாய் தெரிந்தது. ஒருவன் எனது தோளில் கைபோட்டபடி... ஆறுதாலாய் வருகிறானாம். இன்னொருவன் எனது பையினை வாங்கிகொண்டு... பாரம் சுமக்க அனுமதிக்க மாட்டானாம். சீனி மட்டும் அந்த கும்பலில் இல்லை. எங்கே எனக் கேட்டதற்கு இன்றும் வரவில்லை எனச் சொன்னார்கள்.

எனது நண்பர்களிலேயே சீனி ரொம்பவும் வித்தியாசமானவன். நினைத்த நேரம் வருவான், பேசுவான். அவனைப் பற்றி எங்களுக்கெல்லாம் சரிவர புரியாத தருணம். பல சமயங்களில் அவன் பேசுவது மொக்கையாய் இருக்கும் என்பதால் அவனைப் பொருட்படுத்த மாட்டோம்.

தீபா அவளின் அம்மா எனக்கு பிடித்த பால்கோவா செய்து கொடுத்தார்கள் எனக் கொடுத்தாள். ரவி பிடித்த இன்னொமொரு அயிட்டமான ஃபைவ் ஸ்டார் சாக்லேட் வாங்கி வைத்திருந்தான். ஒரு பை நிறைய பழங்களோடு இன்னும் ஒருவன். சரி சாயந்திரம் இந்த விஷயத்தைப் போட்டு உடைக்கும் வரை நான் தான் ராஜா என எண்ணிக்கொண்டு நடிப்பினை தொடர்ந்தேன்.

பதினொரு மணிக்கு வெளியில் அழைத்துச் சென்று ஐஸ்கிரீம் வாங்கித் தந்தார்கள். நான் பேசுவதை அக்கறையாய் கவனித்தார்கள். கொஞ்சம் இருமினாலும் பதறி என்ன என்ன எனக் கேட்டார்கள். ததுபித்தாய் எதைப் பேசினாலும் பதில் சொல்லாமல் கேட்டார்கள்.

எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருக்க மதியம் இரண்டு மணிக்கு சீனி வேர்த்து விறுவிறுத்து வந்தான். நான் ஹோ எனக் கத்தி வரவேற்க, எல்லோரும் சப்தம் எழுப்பினார்கள். எவரையும் கவனியாமல், தவிர்த்து, இறுக்கமான முகத்துடன் வழக்கத்திற்கு மாறாய் கடையில் சென்று அமர்ந்தான். என்னடா ஆச்சு என கார்த்திக் கேட்க, அவனை போடா என விரட்டியவன் என்னை அருகே அழைத்தான்.

'கடவுள் எந்த தப்பும் பண்ணாத நம்ம ரெண்டு பேரையும் தண்டிச்சிட்டாருடா. இன்னிக்கு காலையில மயக்கம் வந்து விழுந்துட்டேன்... ஹாஸ்பிடல் போய் செக்பண்ணி பார்த்த போது சுகர் இருக்குன்னு சொல்லிட்டாங்கடா... இருவத்தொரு வயசிலேயே சுகர் டா' என அழ ஆரம்பித்தான்.

’உன் பிரச்சனைப் பத்திக்கூட கார்த்திக்,நேத்து போன்ல சொன்னான்... மனசு கஷ்டமா இருந்துச்சுடா... உன் நிலமை எனக்கு தெரியுது... ஒரு நோயாளிக்குத்தான் இன்னொரு நோயாளியோட கஷ்டம் என்னன்னு புரிஞ்சுக்க முடியும்... இனி நான் எப்பவும் உன்கூட இருப்பேன்.. நீயும் எனக்கு ஆறுதலா இருடா... இவங்க யாரும் வேணாம்.. நீ மட்டும் கூட இருந்தா போதும்' என சொல்லவும் திருடனுக்கு தேள் கொட்டினார்போல் ஆனேன்.

ஏற்கனவே சீனி மன தைரியம் குறைவானவன். அதிகமாய் எவருடனும் வைத்துக்கொள்ளமாட்டான். இப்போது கூட என்னை நோயாளியாய் நினைத்துத்தான் ஒருவருக்கொருவர் ஆறுதலாய் இருக்கலாம் என சொல்லுகிறான். சீனியை சமாதானப்படுத்தி, 'நான் இருக்கிறேன், கவலைப்படாதே என பலவிதமாய் ஆறுதல் சொன்னேன்.

இதை எப்படி சமாளிப்பது என யோசித்து யோசித்து உண்மையில் ப்ரைன் ட்யூமர் வந்துவிடும் போலிருந்தது. சரி ஆபத்பாந்தவன் திவா இருக்கிறான் அவனிடம் கேட்போம் என முடிவு செய்து கிடைத்த இடைவெளியில் வெளியே வந்து எஸ்.டி.டி பூத்திலிருந்து அழைத்தேன்.

எல்லாம் கேட்டு 'உன் மேட்டரை இன்னிக்கு ஒப்பன் பண்ணாதே, நேரில் வா பேசி முடிவு செய்துகொள்ளலாம் என சொன்னான்.

(நீண்டுகொண்டே செல்கிறது. மற்றவை அடுத்த இடுகையில்)

ஜெராக்ஸ்...

|

கல்லூரியில் சேர்ந்து மூன்று மாதங்கள் முடிந்திருந்தது. ரேகிங் எல்லாம் முடிந்து, படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்து, ஒவ்வொருவரைப் பற்றியும் ஓரளவிற்கு அறிந்து பருவத் தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்த தருணம்.

எங்கள் வகுப்பைச் சேர்ந்த குமார் ஓரளவுக்கு வசதியானவன், சுமாராகப் படிப்பான். எங்களுக்கெல்லாம் அவன் தான் பைனான்சியர், அவசர தேவைக்கு கொடுத்து உதவுவான்.

அவனது அன்றாட முக்கிய அலுவல் ஒன்றே இந்த இடுகையின் சாரம்சம். அறையில் படுத்திருக்கும் நேரம் தவிர தோளில் மாட்டிய பையோடு இருப்பான் அவன் செய்யும் அந்த வேலைக்கு உதவியாய்.

அப்படியென்ன அவன் செய்தான் என ஆவல் எழுகிறதல்லவா? அது அவன் எடுக்கும் ஜெராக்ஸ் பற்றி. ஆம், அவனிடம் இருந்த கடைசிவரை விடவே இயலாத பழக்கம். எந்த ஒரு புதிய விஷயத்தை பற்றி எதிலாவது பார்த்தாலும், படித்தாலும், எவரேனும் இருப்பதாய் சொன்னாலும் போதும். உடனே அதன் பிரதி அவனிடத்தில் இருக்கும்.

ஹிந்துவில் ஒரு விஷயம் வந்திருக்குடா மச்சி என சொன்னவுடன் லைப்ரரிக்குப் போய் அதன் பிரதியோடு தான் வருவான். ஜெராக்ஸ் எடுக்க ஆகும் செலவினை மட்டும் கண்டுகொள்ளவே மாட்டான்.

மூன்றாம் வருடத்துக்கு தேவையான ஒரு விஷயம் என எவரேனும் சொன்னாலும் போதும் அதையும் சேகரிப்பில் வைத்துக்கொள்வான். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை ஊருக்கு செல்லும் போது எல்லாவற்றையும் எடுத்துச் சென்று பாதுகாப்பு கருதி அவனது ஊரில் வைத்துவிட்டு வந்துவிடுவான்.

அறையில் கூட எந்த ஒரு பிரதியையும் வெளியில் வைக்கமாட்டான், காசு பணத்தை வெளியில் வைத்தாலும். அஞ்சல் வழிக் கல்வியில் தரப்படும் புத்தகங்களின் பிரதிகளையும் சேர்த்து,  தமிழ்நாட்டில் உள்ள அத்தனை கல்லூரிகளில் கொடுக்கப்பட்டிருக்கும் நோட்ஸ்களும் அவனிடத்தில் இருக்கும்.

ஜமால், பிஷப், யு.டி.சி என திருச்சியில் உள்ள கல்லூரிகளில் நடத்தப்படும் மேத்ஸ் நோட்டுக்களின் பிரதிகளையும் எடுத்து வைத்திருந்தான். கசங்கிய, குப்பைபோல் உடுத்துகின்ற துணிகளை குவித்து வைத்திருக்கும் அவன்,
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பைல் என கோர்வையாய் அழகாய் வைத்திருப்பான்.

நாங்களெல்லாம் எவ்வளவோ முறை கிண்டல், கேலி செய்தபோதும். இளங்கலை படிப்பினை முடிக்கும் வரை இந்த பழக்கத்தினை விடுவதாயில்லை.

இறுதியாண்டில் சிலபஸ் மாறியதால் நெட்வொர்க் -பேப்பருக்கு  இரண்டு யூனிட்டுகளுக்கான டெக்ஸ்ட் புத்த்கம் மிகப் பழமையான பதிப்பு என்பதால்  புத்தகமே கிடைக்கவே இல்லை. பாடம் நடத்துவதற்கு ஆசிரியரும், படிப்பதற்கு நாங்களும் நிறையவே திணறிப் போனோம்.

குமாரிடம் இதற்கு ஏதேனும் வைத்திருக்கிறாயா என நக்கலாய் கேட்க அவனும் முனைந்து தேடி சரியாய் எடுத்துவந்து எங்களின் முகத்திலெல்லாம் ஈயாட வைத்து, நெஞ்சில் பால்வார்த்தான். இனிமேல் ஜெராக்ஸ் எடுப்பதை கேலி பண்ணமாட்டேன் என சத்தியம் வாங்கிக் கொண்ட பிறகுதான் எங்களிடம் பிரதியெடுக்கக் கொடுத்தான். இது பல கல்லூரிகளுக்கும் பயணித்தது தனி கதை.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இதனை எப்போது பிரதி எடுத்துவைத்தான் என்பது அவனுக்கே தெரியாது எனச் சொன்னதுதான்.
இவன் சேகரித்தது பாடம் சம்மந்தப்பட்டது மட்டுமல்ல, அவன் மனதுக்கு முக்கியம் எனப்படுவது, மற்றவர்களால்  முக்கியம் எனச் சொல்லப்படுவது எல்லாம்.

படித்து முடித்ததும் கடனாய் கொடுத்திருந்த பணத்தினை வாங்கினானோ இல்லையோ, அவன் கொடுத்து வைத்த பிரதிகளை மறவாமல் வாங்கி சென்றான்.

வெகு நாட்களுக்குப் பிறகு கடந்த வருடம் அவனை ஏர்போர்ட்டில் சந்தித்தேன். அப்போது ஒல்லியாய் இருந்ததற்கு நேர்மாறாய் இன்று இருந்தான். குடும்பத்தோடு லண்டன் செல்லுவதாக சொன்னான். டிபிஏ-வாக இருப்பதாக சொல்லி என்னைப் பற்றியும் விசாரித்தான். மனைவியும் குழந்தைகளும் ஏதோ வாங்கப் போயிருப்பதாக சொன்னான்.

'மச்சான் இன்னமும் ஜெராக்ஸ் எடுத்துகிட்டுதான் இருக்கியா எனக் கேட்டேன்'.

வெடிச் சிரிப்பாய் அதிரச் சிரித்தவவன், 'டேய், இன்னும் அதை நீ மறக்கலையா?, எனக்கே மறந்துடுச்சி... எம்.எஸ்.சி முடிச்சிட்டு வீட்டுல வேலை இல்லாம இருந்தேன். ஒருநாள்  சும்மாவே உக்காந்திருக்கேன்னு அப்பா சொல்ல, பெரிய தகராறு. படிச்சி என்னத்த கிழிச்சே என அவர் கேட்க, என்னோட ரூமில் பாதி இடத்தை அடைச்சிகிட்டிருந்த என்னோட கலக்சன காமிச்சென். கம்முனு போயிட்டாரு. ஆன அதுக்கு நான் பண்ணின செலவ நினைச்சிப் பார்த்தேன், மயக்கமே வந்துடுச்சி. அப்புறம் எல்லாத்தையும் எடைக்குப் போட்டுட்டேன்' எனச் சொல்லி,பக்கத்தில் வந்த அவனது மனைவி, குழந்தைகளை அறிமுகப் படுத்தி வைத்துவிட்டு, 

'அதான் ஜெராக்ஸா ரெண்டு பசங்களைப் பெத்திருக்கேனே' எனச் சொன்னான்.

ஆம், அப்படியே அவனை உரித்து வைத்தார்போல் இருந்தார்கள் அவனது மூத்த மகனும், இளைய மகனும்... கொஞ்சமும் அம்மாவின் சாயல் இல்லாமல்.

வசந்தப்புயல்...அத்தியாயம் மூன்று...

|

இரண்டாவது அத்தியாயத்தை படிக்கவில்லையெனில் இங்கு படித்து தொடருங்களேன்..

வானதி

சென்னை, கோவை என நல்ல கல்லூரிகளில் இடம் கிடைத்தபோதும் அருகில் இருக்கிறது, வாரம் ஒருமுறையாவது என்னை பார்க்கவேண்டும் என்பற்காகவும் இந்த பொட்டல் காட்டில் இருக்கும் கல்லூரியில் சேர்த்துவிட்டார்கள்.

படித்ததெல்லாம் ஆங்கில வழியாய் என்பதால் சரளமாய் பேசுவேன். இங்கு கொஞ்சம் ஆங்கிலத்தில் பேசினாலே போதும், பீட்டர் விடுகிறாள் என எல்லோரும் கிண்டல். ஆசிரியர்களிடம் சந்தேகம் கேட்டாலே இறைஞ்சுகின்ற பார்வையில் தவிர்க்க முற்படுகிறார்கள், அல்லது அதிகமாய் மதிப்பெண்கள், தனிச் சலுகைகள் எனும் விதத்தில் கேள்வியே கேட்காவண்ணம் கட்டிப் போட்டுவிடுகிறார்கள்.

இவ்வாறெல்லாம் மனதளவில் காயப்பட்டிருந்த எனக்கு, செழியன் சாரின் வருகை பெரிய மாற்றத்தின் அறிகுறியாகவே தெரிந்தது. ஒருநாள் பாடம் எடுத்ததை வைத்து என்னடா இப்படிச் சொல்லுகிறேன் எனப் பார்க்கிறீர்களா? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமல்லவா?

அப்புறம் ஆசிரியர்களிடம் எனக்கு பிடிக்காத இன்னுமொரு விஷயம், பாடம் நடத்துபோது எல்லோரையும் பார்த்து பேசுவது கிடையாது. ஒரு இயந்திரத்தன்மை இருக்கும். சுருங்கச் சொன்னால் கடமைக்கு பாடம் நடத்துவதாய் இருக்கும். புத்தகத்தைப் படித்து அப்படியே ஒப்பிப்பார்கள், அல்லது அப்படியே பார்த்து படிக்கவும் செய்வார்கள். புத்தகத்திலிருந்து வரி பிசகாமல் அப்படியே சொல்லி கட்டாயப்படுத்தி குறிப்பெடுக்கவும் செய்வார்கள்.

ஆனால் செழியன் சார் முதல் வகுப்பிற்கு எந்த ஒரு குறிப்பையும் பார்த்து நடத்தவில்லை, பதிலாய் ஒரு காகிதத்தில் அழகாய் குறித்தெடுத்து வந்திருந்தார், அதனையும் கடைசியில் குறிப்பெடுத்துக்கொள்ளக் கொடுத்துவிட்டார். கண்ணனிடம் வாங்கி உடனே எழுதிக்கொண்டு விட்டேன்.

அதிலுல்ல குறிப்புகள் முற்றிலும் புதிதாய், புரியும்படி எளிதாய், எந்த ஒரு புத்தகத்திலும் இல்லாமல் அவரின் கைவண்ணமாய் இருந்தது. கண்டிப்பாய் பல புத்தகங்களைப் படித்து குறிப்பெடுத்துக்கொண்டு வந்திருக்கிறார்.

எனது சந்தோஷங்களை அறைத்தோழிகளிடம் பகிர்ந்துகொண்டபோது என்னை ஒரு மாதிரியாய்ப் பார்த்தார்கள். அதற்கான காரணம் என்ன என்பது எனக்குத் தெளிவாகத் தெரியும். முதலாவது, நான் எந்த ஒரு ஆசிரியரையும் அவர்களிடத்தில் உயர்த்திப்பேசியது கிடையாது. அடுத்து இவ்வளவு உற்சாகமாய் பாட சம்மந்தமாய் பேசியது கிடையாது. மொத்தத்தில் இன்றுதான் படிக்க வந்ததன் அர்த்தம் விளங்குவதாய் இருந்ததது.

தனித்தனியான விடுதி என்றாலும் சாப்பிடுவதற்கு ஒரே இடத்தில்தான். ஒரு பெரிய ஹாலில் மாணவிகள், மாணவர்கள் என எல்லோரும் தனித்தனியே அமர்ந்து சாப்பிடுவோம். கண்டிப்பாய் இருப்பார்கள் என்பதால் அதிகம் பேசிக்கொள்ள மாட்டோம்.

ஆசிரியர்களுக்கு தனியான வட்ட வடிவில் மேஜையிட்டிருக்கும். விடுதியில் தங்கியிருந்த ஆசிரியர்கள், ஆசிரியைகள் அங்கு அமர்ந்து சாப்பிடுவார்கள். செழியன் சார் வெள்ளை வேட்டியும், டி ஷர்ட்டும் அணிந்து அமர்ந்திருந்தார். மற்ற ஆசிரியர்களிடம் மெதுவான தயக்கத்துடன் அளவாய் சிரித்துப்பேசி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

வழக்கமாய் அன்றைய தினத்தில் தரும் தோசையும் குருமாவும்தான், ஆனாலும் ரொம்பவும் சுவையாக இருப்பதாய்ப் பட்டது. ஆம், மனம் மகிழ்வாயிருந்தால் நாம் சந்திக்கும், செயல்படுத்தும் எல்லாம் இனிதாகவே இருக்கும் போலிருக்கிறது.

இரவு படுக்கச் செல்லும் போது எல்லா நாட்களும் இன்று போலவே இனிமையாய் அமையவேண்டும் என வேண்டிக்கொண்டேன். கனவில் கூட செழியன் சார் வகுப்பெடுப்பது போலும், கேள்விகள் கேட்பது போலவும் தான் வந்தது. என் எண்ணம் எல்லாம் வெறும் கனவாகப்போகிறது என அப்போது எனக்கு தெரிந்திருக்கவில்லை

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB