வேலுவும் சினிமாவும்...

|

சில நேரங்களில் பழயனவற்றை நினைவு கூறும்பொழுது 'அடடா இந்த விஷயத்தைப் பற்றி இன்னுமா எழுதாமல் இருக்கிறோம் எனத் தோன்றும்'. அது மாதிரியான ஒரு சம்பவம்தான் இந்த இடுகையில்.

ஏற்கனவே ஒருமுறை இடுகையில் குறிப்பிட்டிருக்கிறேன், ஆசிரியர் எதிர்காலத்தில் என்னவாய் ஆகப் போகிறீர்கள் எனக் கேட்டதற்கு எனது நண்பன் வேலு 'டைரக்டராகி சினிமா எடுக்கனும்' எனச் சொல்லி வான்கிக் கட்டிக்கொண்டான் என. அவனைப் பற்றியும், அவனது சினிமா தாகத்தையும் பற்றிய பகிர்வுதான் இது.

பத்து முடித்து பதினொன்று கெங்கவல்லியில் படித்துக்கொண்டிருந்த சமயம். என் வீட்டில் எனது பெற்றோர் எதற்காகவும் என்னைக் கட்டாயப் படுத்துவதில்லை, ஆனால் வேலுவின் கதை வேறு. அவனது அப்பா ரொம்பவும் கண்டிப்பானவர். சரியான நேரத்தில் எழுந்திருப்பதிலிருந்து இரவு தூங்குவது வரை அவனது எல்லாம் அவரின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. கதைப்புத்தகம் படிப்பது, விளையாடுவது, சினிமா பார்ப்பது என எல்லாவற்றுக்குமே தடா.

ஒருமுறை சேலத்தில் ஹாஸ்டலில் படித்துக்கொண்டிருக்கும் தம்பியிடம் பணம் கொடுத்துவிட்டு வரச் சொல்லி அவனது அப்பா அனுப்பி வைத்தார். வெள்ளியன்று மாலை சென்றவன் ஞாயிறன்று காலை வீட்டுக்குப் போகும்போது இருந்தான். வழக்கமாய் பேசிக்கொண்ருந்தோம். பக்கத்தில் அவனது மாமா வீடு இருக்கிறது, ஒருவேளை அங்கு சென்று வந்திருப்பானோ என எண்ணியவாறு, சேலத்தில் ஒரு நாள் முழுக்க என்ன செய்தாய் எனக் கேட்டேன்.

பளிச்சென சினிமா பார்த்தேன் எனச் சொன்னான். எத்தனை என்றதற்கு இரண்டு எனச் சொன்னான். என்ன படம் எனக் கேட்டுவிட்டு சரி, அதன் பிறகு என்ன செய்தான் எனக்கேட்டேன். சரி என் அப்பாவிடம் சொல்லிவிடாதே, மூன்று படங்கள் பார்த்தேன் என்றான். கிர்ரென்று வந்தது.

அடுத்த நாள் பள்ளி உணவு இடைவேளியில் நண்பர்களிடம் கொளுத்திப்போட, வேலு என்னை உஷ்ணமாய் பார்த்தான்.

'எப்படிடா வேலு, உங்க அப்பா செலவுக்கு அதிகமா காசு கொடுத்திருக்க மாட்டாரே, எப்படி மூனு படத்தைப் பார்த்தே' என ரவி கேட்டதற்கு, எல்லாம் கடைசி வகுப்பில் (2.80 டிக்கெட் என ஞாபகம்) பார்த்ததாய் சொன்னான். தனியே இருக்கும்போது என்னை கடிந்தவன், 'ஓட்ட வாயா, ஒரு விஷயத்தையும் மனசுல வெச்சிக்கத் தெரியாதா?, உண்மையில் நாலு படத்தைப் பார்த்தேன், இதையும் போய் சொல்லு' என்றான்.

அதையும் எல்லோரிடமும் சொல்லிவிட பலமாய் கலாய்த்தோம். இதெல்லாம் நடந்து நாட்களாகி, நான் இளங்கலை முடித்திருக்க, நன்கு படித்த அவன் பி.எஸ்.ஜி-யில் மெக்கானிக்கல் படித்துக்கொண்டிருந்தான், அவனைப் பார்க்க அவனது அறைக்குச் சென்றிருந்தேன்.

மெஸ்ஸில் நல்ல சாப்பாடு. தெம்பாய் சாப்பிட்டுவிட்டு வந்து பழங்கதைகளைப் பேசிக்கொண்டிருந்த சமயம் அன்று நடந்த சினிமா சம்பவத்தைப் பற்றி பேச ஆரம்பித்தோம். எப்படிடா நாலு படத்தை தொடர்ச்சியாய் பார்த்தாய் எனக் கேட்டதற்கு, 'அன்று பொய் சொன்னேன். உண்மையில் பார்த்தது ஐந்து சினிமா' என்றான். நிஜமாய் மயக்கம் வந்தது.

ஆம், வெள்ளி இரவு சேலத்தை அடைந்தவன் நள்ளிரவுக்காட்சியைப் பார்த்து, பின் அடுத்த நாள் காலைக் காட்சி, மேட்னி, முதல் காட்ச்சி, இரண்டாம் காட்சி என எனப் பார்த்துவிட்டு கடைசிப் பேருந்தில் வீட்டுக்கு வந்திருக்கிறான்.

படித்து முடித்து நிறைய வேலை வாய்ப்புகள் தேடி வந்தும் விடாப் பிடியாய் மறுத்து சினிமாதான் வாழ்க்கை என்று வாழ்ந்து வருகிறான். பல படங்களில் உதவி இயக்குனராகவும், சில தொலைக்காட்சி தொடர்களை இயக்கியும் இருக்கிறான்.

தற்சமயம் ஒரு படத்தினை இயக்கும் வாய்ப்பு கைகூடும்போல் இருக்கிறது. அதில் வெற்றி பெற்று எனது ஆருயிர் நண்பன் வேலுவின் கனவு நிறைவேற இந்த இடுகையின் மூலம் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

1 Comentário:

Agal said...

Very nice. Try to ask velu again..
Chances are there to get reply as "Six".


Note: Very hard to reply in tamil

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB