டிக்கெட்...

|

இரு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. ஆத்தூரில் இருந்து தெடாவூருக்கு செல்ல பேருந்தினுள் ஏறினேன். என்னுடன் கல்லூரியில் படித்த நண்பர் அழகுவேல் பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்திருக்க, பக்கத்தில் அமர்ந்து மெதுவாய் பேச ஆரம்பித்தேன். உதவி கண்டக்டர் சிறுவன் 'கெங்கவல்லி, தெடாவூர், வீரகனூர் எல்லாம் வண்டி கிளம்பும்போது ஏறுங்க' எனச் சொல்ல, எழுந்து கீழே போக எத்தனித்தேன்.

'இருங்க பிரபாகர், ஒன்னும் பிரச்சினை இல்லை' எனச் சொன்னார். என்ன ஒன்றாய் படித்தவரை இவ்வளவு மரியாதையாய் சொல்லுகிறேன் எனப் பார்க்கிறீர்களா? என்னை விட மூத்தவர், அவரின் தம்பிதான் எனது பள்ளித்தோழன். கல்லூரியில் தாமதமாய் சேர்ந்தார்.

எங்கள் ஊருக்கு ஆறு ரூபாய் டிக்கெட். காசினை எடுத்து கையில் வைத்துக் கொண்டு வீரகனூரை அடுத்த உடும்பியம் டிக்கெட் இரண்டாய் எடுத்து விடலாம் என அவரிடம் சொன்னதற்கு, 'தெடாவூருக்கே வாங்குவோம், ஏன் கவலைப்படுகிறீர்கள்' எனச் சொன்னார். 'இல்லை... ஏற வேண்டாம்னு' மெதுவாய் இழுத்தேன்.

'அதெல்லாம் நான் பார்த்துகொள்கிறேன்' எனச் சொன்னார். 'எதற்கு பிரச்சினை' என நான் இழுக்க, 'ஒன்னும் கவலைப் படாதீங்க' எனச் மறுத்துச் சொல்லவும் காசினை அவரிடமே கொடுத்து டிக்கெட் எடுக்கச் சொன்னேன்.

வெயில், வெளியில் நிற்கவோ உள்ளே உட்காரவோ இயலாத அளவிற்கு கடுமையாய் இருந்தது. வண்டி கிளம்பும் நேரம் ஆனதும், இன்னும் பலர் ஏறிக்கொள்ள ஒரு வழியாய் வண்டி கிளம்பியது.

கண்டக்டர் முன்னால் இருந்தார், இளம் வயது. கொஞ்சம் செவிமடுத்துக் கேட்டதில் அவர் பேசுவது கொஞ்சம் மிகையாவும், மரியாதைக்குறைவாயும் இருந்தது. 'வாய்யா, போய்யா என வசைவுகளாலும் ஒரு சில தடித்த வார்த்தைகளாலும் பேசி, உள்ளே எல்லோரையும் அடைத்துக் கொண்டிருந்தார்.

எனது கோபம் எல்லையை மீற ஆரம்பித்த அந்த நேரத்தில் ஒரு பெரியவரைப் பார்த்து, 'என்னய்யா மயிரு, உனக்கு தனியா சொல்லனுமா, உள்ள போய்த் தொலை' எனச் சொல்லவும் வெகுண்டு எழுந்தேன்.

'யூ ப்ளடி ராஸ்கல்' என ஆரம்பித்து 'என்னய்யா பேச்சு பேசுற, கொஞ்சமாச்சும் மரியாதை தெரியுதா உனக்கு? இப்படியா பேசுவே?' என இறைந்து கேட்க ஆரம்பித்தேன்.

'நீ என்ன பெரிய புடுங்கியா? அறிவுரை சொல்ல வந்துட்ட, மூடிக்கிட்டு உக்காரு' என என்னை சொன்னதும், அந்த பெரியவருக்கு வந்ததே கோபம்!... பொளிச்சென கண்டக்டரின் கன்னத்தில் ஒரு அறை விட்டார். அவரை திரும்ப அடிக்க எத்தனிக்க பக்கத்தில் இருந்தவர்களும் கண்டக்டரை சட் சட்டென அடிக்க ஆரம்பிக்க ஒரே களேபரமானது.

சமாதானமாவதற்கும் ,வண்டி கிளம்புவதற்கும் நிறைய நேரம் ஆனது. அதற்குள் பஸ்ஸின் ஓனர் வந்து சமாதானப் படுத்தி வண்டியை எடுக்கச் சொல்லிவிட்டு சென்றார்.  கண்டக்டர் பின்னால் வரவே இல்லை. உ.க. சிறுவன் டிக்கெட் கேட்டபோது 'தெடாவூர் இரண்டு' என சப்தமாய் சொல்லி டிக்கெட் கேட்டேன்.

இது நடந்து ஆறு மாதம் கழித்து எனது நண்பன் மணியுடன் கூகையூர் கோவிலுக்கு செல்லும்போது ஒரு கடையில் நிற்பாட்டி பூஜைக்கான பொருள்களை வாங்கும் போதுதான் கவனித்தேன், அருகிலிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தது அந்த கண்டக்டர், சிகரெட் குடித்தபடி லுங்கியுடன். அந்த ஊரைச் சேர்ந்தவர் போலிருக்கிறது.

என்னை முறைத்துப்பார்க்கவும் கொஞ்சம் உதறலாயிருந்தது. ஆனாலும் மணி இருக்கிறான் எண்ணும் தைரியம். கோவிலில் நிஜமாய் அடிவாங்காமல் ஊருக்குப் போகவேண்டும் என்றுதான் வேண்டிக்கொண்டேன், முதலைக்கு தண்ணீரில் தானே பலம்?... வேண்டுதலாலோ அல்லது எனது நல்ல நேரத்தாலோ எதுவும் நிகழவில்லை.

3 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஏண்ணே  ..அங்கேயே  பொதேல்னு அடிக்கவேண்டியதுதானே!! அது என்ன மரியாதை தராமா சிகரெட் குடிக்கிறேனு? .. இப்படியே வடைய விட்டுக்கிட்டு இருந்தா..???????

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இன்னா தலிவா .. சீக்கிரம் கமென்ஸ் பப்ளிஸ் பண்ணுங்க.. தூங்கப்போகனும்

Agal said...

நமக்கென்ன வந்தது அப்படின்னு வேடிக்கை பார்க்காமல் இப்படித்தான் தட்டி கேட்கனும்..

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB