வசந்தப்புயல்... அத்தியாயம் ஒன்று.

|

செழியன்

என்னுடைய முழுப்பெயரைச் சொன்னால் நான் யார் எனக் கண்டுபிடித்துவிடுவீர்கள், அதனால் செழியன் மட்டும் போதும். படித்து முடித்து என் கனவான விரிவுரையாளர் வேலைக்கு சேர்ந்த முதல் நாள். கல்லூரி ஆரம்ப நேரத்துக்கு வெகு முன்னதாகவே வந்துவிட்டேன். என்ன, கனவு வேலை விரிவுரையாளரா என ஆச்சர்யமாய் பார்க்கிறீர்களா?

ஆமாம், தாத்தா, அப்பா வழியில் ஏகமாய் சொத்துக்கள், அரண்மனைபோன்ற வீடு. எதற்கெடுத்தாலும் வேலையாட்கள், கேட்டது அடுத்த நிமிடத்தில் என பழக்கப்பட்டு இருந்த எனக்கு ஆரம்பம் முதலே பணம் சம்மந்தமான எதிலும் நாட்டமில்லை.

சிறு வயதில் எங்கள் ஊர் பள்ளியிலேயே படித்தேன். வகுப்பறையிலும் தனி மரியாதை. மாலையில் ஆசிரியர் வீட்டிற்கே வந்து தனியாகவும் சொல்லித் தந்தார். எட்டாம் வகுப்பு முடித்ததும் ஏற்காட்டில் விடுதியில் சேர்த்துவிட்டார்கள். அதன்பின் கோவையில் கம்ப்யூட்டர் இஞ்சினீயரிங், சென்னையில் எம்பிஏ என படித்து முடித்தபோதுதான் கிராமம் சார்ந்த ஒரு கல்லூரியில் சேரவேண்டும் என முடிவு செய்தேன்.

அப்பா நான் பன்னிரண்டு படிக்கும் போதே திடீரென வந்த மாரடைப்பில் மேலே சென்றுவிட்டார். எனது தம்பிதான் எல்லவற்றையும் பார்த்துக்கொள்கிறான். எனக்கு அப்படியே எதிர்மறையாய் இருப்பான். ரொம்பவும் நல்லவன்தான், ஆனாலும் எங்களது எண்ணங்களில் ஏக முரண்.

உதாரணமாய் பாருங்களேன், கல்லூரியில் விரிவுரையாளராய் போகிறேன் என சொன்னவுடன் 'நம் தகுதிக்கு கைநீட்டி சம்பளம் வாங்கவேண்டுமா' என்றெல்லாம் விவாதிக்க ஆரம்பித்தவன், 'வேண்டாம், ஒரு கல்லூரியையே ஆரம்பித்துவிடுவோம், உன் பொறுப்பில் பார்த்துக்கொள்' என்றான்.

எதைச் சொல்லியும் என் மனதை மாற்ற முடியாது என்பது அவனுக்கும் தெரியும், அதனால் கடைசியாய், 'சரி, உனக்கு எந்த கல்லூரியில் வேலை வேண்டும் என்று சொல், வாங்கித்தருகிறேன்' எனக் கேட்டதற்கும் மறுத்துவிட்டேன்.

விளம்பரம் பார்த்து, ஏற்கனவே எண்ணியதுபோல் ஒரு சுமாரான கல்லூரிக்கு விண்ணப்பித்தேன். எனது மதிப்பெண்களைப் பார்த்து, நேர்முகத்தேர்வுக்கு அழைத்தார்கள். உண்மையில் இங்கு சேர ஆர்வமாய்த்தான் இருக்கிறீர்களா எனக்கேட்டு, சம்பளம் வேண்டுமானால் இன்னும் சேர்த்துத் தருகிறோம் என்றும் சொல்ல, வேண்டாம், எல்லோருக்கும் தருவதுதான் வேண்டும் எனச் சொல்லிவிட்டேன்.

ஆம், பல்கலைக் கழகத்திலேயே முதல் மாணவனாக தேறியிருந்தேன், மதிப்பெண்களைச் சொன்னால் கொஞ்சம் வியப்பீர்கள். என்னைப் பற்றிய விவரங்களைப் பார்த்த கல்லூரி முதல்வர் மிகவும் பவ்யமாய், தயக்கமாய் 'நீங்கள் இங்கு சேரத்தான் போகிறீர்களா?' எனக்கேட்க ஆமென்று சொல்லி, தயவு செய்து என்னைப்பற்றி எவரிடமும் சொல்லவேண்டாமென வேண்டுகோளினை வைத்தேன். அவரும் பிரம்மிப்பில் தலையாட்டினார்.

தங்குவதற்கு ஒரு வீட்டினை வாங்கிவிடலாம், கார் எடுத்துச் செல் என்றெல்லாம் மீண்டும் தம்பி, அம்மாவின் வற்புறுத்தல்கள். எல்லாம் மறுத்து கல்லூரிக்கு அருகிலேயே வாடகைக்கு வீடு பார்த்து, முன்பணம் கொடுத்து ஒரு வழியாய் இரு நாட்களுக்கு முன்பே ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தேன்.

என்ன நிறைய பேசுகிறேனா? நீங்கள் எதிரில் இல்லையே என்கிற துணிவில்தான். ரொம்பவும் ஜாலியாய் பேசுவேன், ஆனால் அந்த அளவிற்கு நாமெல்லாம் நெருக்கமாயில்லையே? சரி யாரிடம் அப்படியெல்லாம் பேசுவாய் என்று கேட்கிறீர்களா? அப்படி யாருமே இதுவரை இல்லை. என்ன, குழப்பமாயிருக்கிறதா? போகப்போக நீங்களே இன்னும் தெரிந்து கொள்வீர்கள்.

நண்பர்கள்? மிகவும் குறைவு. கல்லூரியில் முதுகலை படிக்கும்போது இருந்த இரு நண்பர்களின் விடாப்பிடியான வற்புறுத்தலுக்குப்பின் எனது ஊருக்கு அழைத்துவந்தேன். வந்து சென்றதும் என்னை அவர்கள் மரியாதையாய் பார்க்க ஆரம்பிக்க, எவ்வளவோ வற்புறுத்தியும் பழைய நண்பர்களாய் அவர்கள் இல்லை. அதன் பிறகு எவரையும் என் வீட்டுக்கு அழைத்துச்செல்வதில்லை என முடிவு செய்தேன். என்று தனித்து இருக்கிறோமோ அன்று கிடைக்கும் நட்புக்களே போதும் எனவும் முடிவு செய்தேன்.

கல்லூரி பரபரப்பாக ஆரம்பித்தது. ஒவ்வொருவராய் வர ஆரம்பித்தார்கள். அலுவலக ஊழியர் என்னிடம் விசாரித்து துறைத் தலைவரின் அறைக்கு அழைத்துச்சென்று அமரச் செய்து, தேனீர் வேண்டுமா என விளம்பி வேண்டாமென தலையாட்ட, என்னை காத்திருக்க சொல்லிவிட்டு சென்றார்.

ஒன்பது மணியளவில் உள்ளே வேகமாக நுழைந்த அவரைப்பார்த்து வணக்கம் சொன்னேன். 'வாங்க மிஸ்டர் செழியன், ரொம்ப நேரமா காத்திருக்கிறீங்களா?' என விசாரிக்க,

'இல்லை சார், இப்போதுதான் வந்தேன்' எனச் சொன்னேன்.

ஆசிரியர்கள் ஓய்வறைக்கு அழைத்துச் சென்று எனக்கான இருக்கையைக் காண்பித்தவர், எங்கள் துறையைச் சேர்ந்தவர்களையும் மற்ற ஆசிரியர்களையும் பரஸ்பர அறிமுகம் செய்துவைத்தார்.

என்னை முதல் பாடவேலைக்கு இரண்டாம் வருட வகுப்புக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி சென்றுவிட, எங்கள் துறையைச் சேர்ந்தவர்கள் மெதுவாய் கேள்விகளாய் பேச்சுக்கொடுக்க, தயக்கத்துடன் பதிலளித்தேன்.

துறைத் தலைவர் வகுப்புக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துவிட்டு சென்றுவிட ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தேன்.

எல்லோரும் தமிழில் பேசுங்கள், தமிழில் பேசுங்கள் என சப்திக்க, மறுத்து 'உங்களின் பாடங்கள் எல்லாம் ஆங்கிலத்தில் இருக்கின்றன, தவறெனினும் தயங்காமல் ஆங்கிலத்தில் தான் பேசவேண்டும் எனச் சொன்னேன்.

'சார் பாடம் நடத்தும்போது ஆங்கிலத்தில் நடத்துங்கள், நாம் பேசுவதை நம் தமிழிலேயே பேசுவோமே' என மிக அழகான ஆங்கிலத்தில் சொல்ல அந்த இனிமையான குரலுக்கு சொந்தமான அந்த மாணவியைப் பார்த்தேன்.

மிகவும் பாந்தமாய் கரிய பெரிய விழிகளோடு அறிவுக்களையாய் துறுதுறுவென இருந்தாள். பெயரை உடனே கேட்பது முறையாகாது என நினைத்து சரியென ஒத்துக் கொண்டு என்ன படித்தேன் என்பதை மட்டும் சொல்லி குடும்ப விவரங்களைத் தவிர்த்தேன்.

பெயர் மற்றும் ஊர் விவரங்களை ஒவ்வொருவராய் சொல்லும்படி பணித்தேன். முதலில் மாணவர்களிடம் ஆரம்பித்து வரிசையாய் சொல்லிவர மெதுவாய் கேட்டுவந்தேன். வானதி தஞ்சாவூர் என இமைகள் படபடக்க சொல்லி சட்டென உட்கார்ந்த அந்த மாணவி என்னை தமிழில் பேசும்படி அழகான ஆங்கிலத்தில் பணித்தவள்.

ஏனோ தெரியவில்லை, ஓர் அபிரிதமான ஆர்வம் வந்தது. எல்லோரும் சொல்லி முடித்தவுடன் வருகைப் பதிவேட்டினை விரித்து பெயர்களையும் மணவர்களையும் பார்த்து இருந்த சிறு தாளில் வராத எண்களைக் குறித்து வைத்துவிட்டு ’சரி பாடத்துக்கு செல்லலாமா?’ எனக் கேட்டேன்.

'சார் அட்டன்டன்ஸ்?' எனக் கேட்க, 'ஆப்சன்டீஸ் 21, 25 அன்ட் 32' எனச் சொல்ல எல்லோருக்கும் இனிய அதிர்ச்சி...

(தொடரும்...)

0 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB