தேர்தல் முடிவுகள்...

|

பெரும்பாலோனோர் எதிர்ப்பார்க்காத ஒரு தேர்தல் முடிவினை தமிழகம் சந்தித்திருக்கிறது, தினமணியின் தலையங்கம் சொல்வதுபோல் தன்மானத்தமிழன் என தலை நிமிர்த்திச் சொல்வதுபோல். எந்த ஒரு கட்சியினையும் சார்ந்திராத நான் இந்த முறை மனப்பூர்வமாய் அதிமுகவுக்குத்தான் ஆதரவு தெரிவித்தேன், அதற்கு முக்கியக் காரணம் ஸ்பெக்ட்ரம், சினிமா கபளீகரம் மற்றும் அராஜகம்.

அதிமுக ஒழுக்கமான கட்சி என்று ஆதரிக்கவில்லை, மாறுதல் ஒரு ஒழுங்கினைக் கொண்டுவருமா எனத்தான். எவ்வளவு இறுமாப்பான பேச்சுக்கள், எகத்தாளமான நம்பிக்கைகள்... இவ்வாறான ஒரு முடிவை அதிமுகவே எதிர்ப்பார்த்திருக்காது என்பதுதான் எதார்த்தமான உண்மை.

அதிமுகவை ஆதரித்தாலே அவர்களோடு அன்னம் தண்ணீர் புழங்கக் கூடாது என்பதுபோல் தான் வலையுலகில் நிலவியது. சார்ந்திருக்கும் ஒரு இயக்கத்தை ஆதரிக்கத்தான் வேண்டும், கண்மூடித்தனமாய் அல்ல என எல்லோருக்கும் சொல்லியிருக்கிறது இந்த தேர்தல் முடிவுகள்.

மாறி மாறிதான் ஓட்டுக்களை இட்டுவந்திருக்கிறேன் இதுவரை. ஆனாலும் இலங்கைப் பிரச்சினை முழுமையாய் மாற்றிவிட முழுமையான திமுக எதிர்ப்பு நிலை. தேர்தல் முடிவுகளைப் பற்றி வலையுலக நண்பர்கள் பலரிடமும் முன்னதாகவே பேசியிருக்கிறேன், அதே போல்தான் இப்போது எதிர்ப்பார்த்த வெற்றி. கேட்கலாம், இனி தனி ஈழம் கிடைத்துவிடுமா? என. சில பல உரிமைகளாவது நிலை நாட்டப்படும் எனும் நம்பிக்கை கிடைத்திருக்கிறது.

நேற்றைய முழுநாளும் எல்லா சேனல்களும், வலையுமே என்னை வியாபித்திருக்க நிறைய தெரிந்துகொள்ள வாய்ப்புக்கள் கிட்டின...

கவர்ந்த விஷயங்கள் :

  • அம்மாவின் அகந்தையில்லா, ஆர்ப்பாட்டமில்லா பேச்சு
  • ஓரளவிற்கு நடுநிலைமையாய் சன் டிவியின் ஒளிபரப்பு
  • வலையுலக விவாதங்கள்
  • முக்கியத் தலைவர்களின் தோல்வி, குறிப்பாய் சேலத்துப் பெரியார்.
  • அதிகமான தங்கபாலு கொடும்பாவி


வருத்திய விஷயங்கள்

  • சில நல்ல வேட்பாளர்களின் தோல்விகள்
  • குளத்தூரில் தேர்தல் முடிவு சம்மந்தமான இடர்பாடுகள்
  • எஸ்.வி.சேகர் வீடு தாக்கப்பட்ட விஷயம்


பெரும் சவாலான ஒரு பொறுப்பு அதிமுகவிடம் விடப்பட்டிருக்கிறது, பார்க்கலாம் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று. நல்லதே நடக்கும் என்று நம்புவோம் வழக்கம்போல்...

0 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB