பயணம் 1.1.2

|

ஞாயிறு இரவு தம்பியோடு பெங்களூரு செல்வதற்கு ஆத்தூர் பேருந்து நிலையம் வந்தேன். சேலம் செல்லுவதற்கு கணக்கிலடங்கா கூட்டம் காத்திருக்க கொஞ்சம் மிரட்சியாயிருந்தது, எப்படி போகப்போகிறோம் என.

கவலைப்படாதீர்கள் அண்ணா என சொல்லிய தம்பி, பெங்களூரு செல்ல நேரடி பேருந்து ஒன்று இருப்பதாய் என்னை காத்திருக்கச் சொல்லிவிட்டு பேருந்து நுழையுமிடத்திற்கு சென்றான்.

சிறிது நேரத்தில் உள்ளே நுழைந்த பேருந்தில் கடைசி வரிசையில் அவனது கைங்கர்யத்தால் இரு சீட்டுக்கள் கிடைக்க ஏறி அமர்ந்தோம். எல்லோரும் தொற்றி ஏறியதில் வண்டி அதற்கான இடத்தில் நிற்கும் முன்னரே நிறைந்துவிட்டது.

இருபத்தைந்து வயதொத்த ஒருவர் பக்கத்தில் காலியாய் இருந்த இருக்கையில் உட்காரலாமா எனக்கேட்க, 'இல்லை கீழே இறங்கி சென்றிருக்கிறார்' எனச் சொன்னேன். சரியென சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு இறங்கி சென்றுவிட்டார்.

பார்ப்பதற்கு மிகவும் சிறு வயதாய் இருந்த ஒரு பெண்மணிக்கு மூன்று குழந்தைகள் போலும். இடமில்லாததைப் பற்றி கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் படியில் அந்த பெண்ணின் கணவர், தம்பி என இருவரும்  அமர்ந்து கொண்டார்கள். தனது தங்கையை பக்கத்தில் உட்கார வைத்த அந்த பெண் ஒரு குழந்தையை கணவரிடம் கொடுத்துவிட்டு மற்ற இரு குழந்தைகளையும் துண்டு விரித்து நடைபாதையில் படுக்க வைத்து விட்டு முதலாவதாய் இருக்கும் சீட்டில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டார்.

பின் பக்கம் எவரும் ஏறா வண்ணம் கதவினை உள்புறத்தாழிட, வண்டி கிளம்பியது. சேலம் சென்றவுடன் பின்னால் கடைசி சீட்டில் இருவர் இறங்கிக்கொள்ள அந்த பெண்ணின் தம்பியும் தங்கையும் அமர்ந்து கொண்டார்கள். நிறைய பேர் வண்டி நுழையும்போதே ஏற முயற்சிக்க பின்பக்கம் இடமில்லாததால் எல்லோரும் முன்பக்கம் சென்றார்கள்.

அப்போதுதான் முன்னால் ஏதோ சப்தம் வர கவனித்தேன். நடத்துனர் சப்தமாய்  ஒருவரை திட்டிக் கொண்டிருந்தார். என்னிடம் சீட்டு கேட்டவர் தான் பதிலுக்கு மெதுவாய் கண்டக்டரிடம் வாதாடிக்கொண்டிருந்தார்.

இடமில்லை என்றதும் முன்பக்கத்தில் ஏறிக்கொண்டிருப்பார் போலிருக்கிறது. ஏற வந்தவர்களை வண்டியில் இடமில்லை என சொல்ல, அதைச் சொல்ல நீ யார் என்பதில் ஆரம்பித்து சூடு பிடிக்க ஆரபித்தது.

நடத்துனர் கொஞ்சமும் நிறுத்தாமல் சகட்டு மேனிக்கு கத்திக் கொண்டிருந்தார். பதிலுக்கு அவரும் ஏதோ சொல்ல சப்தம் மெதுவாய் அதிகமாகியது. டிரைவர் வண்டியை  மெதுவாய் ஒரமாய் நிறுத்த எங்களின் எல்லோரின் கவனமும் அவர்களின் மேல் விழுந்தது.

பார்ப்பதற்கு மிகவும் சாதுவாய் இருந்த அந்த நபர் அவ்வளவாய் உரத்துக்கூட பேசவில்லை. 'என்னது வண்டிக்கு பாம் வைத்துவிடுவாய? எங்கே வை பார்க்கலாம்? ஒழுங்கா ஊர் போய் சேர மாட்டாய், போலீஸ் ஸ்டேசனுக்கு வண்டியை விட்டுவிடுவேன்' என நடத்துனர் சொல்லும்போது, அவர் அப்படியெல்லாம் சொல்லியிருப்பாரா என்று எங்களுக்கெல்லாம்  தோன்றியது.

அப்புறம் சப்தமில்லை. அயர்ச்சியில் கண்ணயர அதிகாலை நான்கு மணியளவில் ஒசூரில் இறங்கி கொண்டேன், தம்பி பெங்களூரு சென்றுவிட்டான்.

அலுவலகம் சென்றபின் தம்பி என்னிடம் செல்பேச அவன் சொன்ன விவரங்களைக்கேட்டு அதிர்ந்தேன்.

அதிகாலை ஐந்து மணிக்கு மடிவாலா தாண்டியதும் வண்டியிலிருந்து அந்த நபர் இறங்கினாராம். அதன் பின் வண்டி சிறிது தூரம் சென்றவுடன் இன்னுமொரு நிறுத்தத்தில் நிற்க, இறங்கிய அந்த நபரின் தலைமையில் ஒரு இருபது பேர் கொண்ட கும்பல் பேருந்துக்குள் நுழைந்து கண்டக்டரையும், டிரைவரையும் அடி அடி என அடித்து பின்னியிருக்கிறார்கள்.

வண்டியின் பின்புறத்தில் கல்லெறிந்து கண்ணாடி உடையாததால் முன்புறத்தில் கண்ணாடியை உடைத்துவிட்டு சிட்டென பறந்து சென்றுவிட்டார்களாம்.

வரும்போதே செல்பேசி அந்த அதிகாலையிலும் ஆட்களை சேகரித்து அடித்திருக்கிறார். அதன்பின் காவல் நிலையம் சென்று  புகார்கொடுத்து என  ஒரு வழியாய் அறைக்கு சென்று சேர்வதற்கே எட்டு மணி ஆனதாம்.

இதன் மூலம் இரண்டு விஷயங்கள் தெளிவானது. ஒன்று அந்த சிறு பெண் தனது குடும்பத்தாரோடு பயணித்த விதம், எந்த நிலையிலும் சிறப்பாய் இருக்க முடியும் என்பதை உணர்த்துவதாய். மற்றொன்று ஆளைப்பார்த்து எடைபோடவேண்டாம், நாவடக்கம் என்றும் நலம் பயக்கும் என்பதை உணர்த்துவதாய்...

விகடம் 1.1.4

|

தேர்தல் முடிந்த இந்த வார இறுதியை தெடாவூரில் கழித்தேன். நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரிடமும் பேச, தேர்தலைப் பற்றிய பல சுவராஸ்யமான  விஷயங்கள் கிடைத்தது.

*****

ஆத்தூர் தொகுதியினைச் சேர்ந்த ஒரு பாட்டியிடம் கேட்டேன்.

'பாட்டி எதுக்கு ஓட்டு போட்ட?'

'கையில்தான்' எனச் சொல்லி என்னை நக்கலாய் பார்த்து கொஞ்சம் தாமதித்து 'ரெட்டெலைக்கு' எனச் சொல்லி சிரித்தது.

*****

வீட்டுக்கு உறவினராய் வந்த என் அத்தையிடம் கேட்டேன். (சங்கராபுரம் தொகுதி)

'எதுக்கத்த ஓட்டு போட்ட?'

'திமுக-வில முன்னூறு, அதிமுகவில இரநூறு கொடுத்தாங்க. யாருக்கும் துரோகம் பண்ணக்கூடாதுன்னு மோதிரத்துக்கு போட்டுட்டேன்'.

கேட்டுவிட்டு எனக்கு 'கிர்' ரென ஆனது.

*****
பக்கத்து வீட்டு பாட்டியிடம் கேட்டேன். 'நீ நினைக்கிறதுக்குத்தான் ராசா போட்டேன்'  பூடகமா சொன்னார்கள்.

நான் பதிலுக்கு 'சுயேச்சைக்கா பாட்டி ஓட்டு போட்டே?' எனக்கேட்டேன்.

'அப்படின்னா?'

'அதைத்தானே நான் நினைச்சேன்'.

'ஆமாமா அதுக்குத்தான் போட்டேன்' என்றார்கள்...

*****

எப்போதாவது உண்மையை பேசும் என் அத்தை மகன், 'மாமா நீ நம்பினா நம்பு நம்பாட்டி போ, நான் யாருக்குப் போட்டேன்னே தெரியல' என்றான்.

'அடப்பாவி என்ன சொல்றே?' எனக் கேட்க

'ஆமாம் மாமா எந்த கட்சியும் புடிக்கல. மெசினுக்கு பக்கத்துல போய் கண்ண மூடிகிட்டு ஏதோ ஒரு பட்டனை அழுத்திட்டு வந்துட்டேன், சத்தியமா எந்த பட்டன அழுத்தினேன்னு ஆண்டவனுக்குத்தான் தெரியும்' என்றான்.

காங்கிரஸில் பொறுப்பில் இருக்கும் அவன் எதற்கு போட்டிருப்பான் என எனக்கும் தெரியும்.

'விவசாயிகளுக்கு உருப்படியா எதுவும் செய்யல, ஆட்சி மாற்றம் வேணும்... மனச கல்லாக்கிகிட்டு ரெட்டலைக்கு போட்டேன்' என் தாத்தா...

காங்கிரஸ்காரரான என் அப்பா 'திமுகாவுக்குத்தான் போட்டேன் என உனக்குத் தெரியாதா?, உறுதியா காங்கிரஸ் உதவியோட திமுக ஆட்சி' என்றார்.

'இந்த முறை ஜெயலலிதாவுக்குத்தான் என் ஓட்டு' அம்மா.

'நல்ல வேலை நீ ஓட்டு போட வரல. வந்திருந்தா திமுகாவுக்கு எதிரா ஒரு ஓட்டு கிடைச்சிருக்கும்...' என் நண்பன் மணி.

பிச்சன் மாமவிடம் கேட்டதற்கு புதிதாய் ஒரு குண்டை போட்டார் 'செல்லாத ஓட்டு போட்டேன்' என.

'இல்லை மாமா, அப்படியெல்லாம் போட முடியாது என மறுத்துச் சொன்னேன்.

'யாரு சொன்னா? முரசு, சூரியன், மோதிரம்னு மூனையும் அழுத்திட்டு வந்தேன்' என சொன்னார்.

'முதலில் எதை அழுத்தினீர்கள்' எனக்கேட்டதற்கு முரசில் என சொன்னார்.

இன்னும் பலர் நேரடியான பதிலைத் தந்தார்கள். மே பதிமூன்று மிகவும் சுவராஸ்யமான நாளாய் இருக்கும் என்பது தெள்ளினப் புரிந்தது. வேலையைப் பார்த்துக்கொண்டு பொறுமையாய் காத்திருப்போம்...

என்னடா வேறு வேலையே இல்லையா? இத்தனைப் பேரை கேட்டிருக்கிறேன் என நினைக்காதீர்கள். எல்லாம் ஓட்டுப்போடத்தான் போக இயலவில்லையே, சரி எப்படித்தான் நடந்தது, என்னதான் செய்தார்கள் என அறிந்துகொள்ளும் ஆர்வக்கோளாறில்தான்...

குற்றம்...நடந்தது என்ன?

|

'எலேய், நம்ம அப்புவ யாரோ கொன்னு கெணத்துல போட்டுட்டாங்களாம்... பாக்க போறேன்னு' பரபரப்பா வெளியிலிருந்து ரமேசு கத்தினான்.
பழயத எடுத்து வாயில வெக்கப்போன மணி அப்படியே கெடாசிட்டு வெளிய ஓடினான்.

வண்டிய பரத்த, 'எப்படிடா? ராத்திரி 2 மணி வரைக்கும் நம்ம கூடத்தானே பேசிக்கிட்டிருந்தான்?, அதுக்கப்புறம் அவன் கூட யாரு இருந்தா?'

'கங்கா இருந்தான். அப்படியே அவனுக்கு ஒரு ஃபோன் போடு'

வழியெல்லாம் பரபரப்பா அந்த இடத்தக்கு எல்லோரும் போயிட்டிருந்தாங்க. ஆரன அடிச்சிகிட்டே வேகமா ரமேசு போயிட்டிருந்தான்.

'சுச்சாஃனு வருதுடா, அங்கதான் இருப்பான்னு நினக்குறேன்'

'சரிடா, போலீசு கேட்டா அவந்தான் இருந்தாங்கறத தெளிவா சொல்லிப்புடுவோம், நமக்கெதுக்கு வம்பு...?'

*******

'சொல்லித்தொலைடி, என்னடி ஆச்சு?.., ராத்திரி மூனு மணிக்கு வெளியில் இருந்து பேய் மாதிரி வந்த... அவன் வேற கெணத்துல மெதக்குறான், போலீசு உன்னையுமில்ல விசாரிப்பானுங்க, அய்யோ அந்த எழவெடுத்தவன் வேணாம்னு தலையில அடிச்சிகிட்டனே'

பேயடிச்ச மாதிரி செல்வி உட்காந்திருக்க 'சரி, சரி... ரொம்ப சத்தம் போடாத... போலீசு கீலீசு கேட்ட ஏதாச்சும் சொல்லி சமாளிச்சித் தொலைப்போம்...

பக்கத்து வீட்டில் இருந்த அந்த அம்மா தான் புருஷங்கிட்ட, 'இதோ பாருங்க... நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்... ராத்திரி அவ தலவிரி கோலமா வெறி புடிச்சமாதிரி வந்தத என் கண்ணால பார்த்தேன்... போலிசுக்கிட்ட கண்டிப்பா சொல்லப்போறேன்...

*******
சென்னை போகிற லாரியில் குழப்பமாய் யோசனையா கங்கா இருந்தான்.

'அவனுக்கு என்ன ஆச்சு? கடைசியா எங்கிட்டதானே பேசிகிட்டிருந்தான்?... மச்சான் என் ஆளைப் பாக்கப்போறேன், ஒரு முடிவோட இருக்கேன், இதுக்கு மேல கண்டிப்பா அவ அப்பனே என் காலில விழுந்தாவனும்னு புதிரா சொல்லிட்டு போனானே... எதுக்கும் ரெண்டு நாளைக்கு யாரு கண்ணுலயும் படாததுதான் நமக்கு நல்லது...'

*******

கொஞ்சமா தண்ணி இருந்த கிணத்துல இருந்து நேத்து ராத்திரி வரைக்கும் அப்புவா  இருந்த அத எடுத்து வெளியேப் போட்டிருந்தாங்க. தகவல் தெரிஞ்சி வந்த ரெண்டு போலீசு பக்கத்துல யாரையும் விடாம பாத்துகிட்டிருந்தாங்க.

அவனோட சின்னம்மா ரொம்ப ஓவராவே ஆக்டிங் கொடுத்து அழுதுகிட்டிருந்துச்சி, மனசுக்குள்ள வேற மாதிரியா நினைச்சிகிட்டு... 'ரங்கன தீர்த்துகட்ட சொன்னோம், ஆனா அவன் ரெண்டு நாளா ஊர்லயே இல்லை... யாரு செஞ்சிருப்பா? எப்படியோ சொத்து நமக்குத்தான்... சந்தேகம் வராதபடி நடந்துக்கனும்...'

******

எல்லாம் தள்ளி மச மசன்னு ஒரு உருவம் எல்லத்தையும் வேடிக்கை பார்த்துகிட்டிருக்கில்ல?... என்னது தெரியலையா? சாரிங்க...  எனக்கு நல்லா தெரியுது, அது அப்புவோட ஆவி... என்னமோ சொல்லுது, இருங்க கேட்டு சொல்றேன்...

'ராத்திரி கங்காகிட்ட சொல்லிட்டு கிணத்தடிக்கு செல்வியப் பாக்க வந்தப்போ ரொம்ப ஆர்வமா அவள கட்டிப் புடிக்க போனேன். பொசுக்குன்னு அவ தள்ளிவிட கீழ சடார்னு விழுந்துட்டேன். தல கல்லுல பொட்டுனு பட்டு கிணத்துக்குள்ள விழுந்து செத்துட்டேன்... அது அதுவும் குழம்பிக்கிட்டு இருக்குது... பாக்கலாம் என்னதான் ஆகுதுன்னு'...

அதுக்கப்புறமா என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? யாருக்குத் தெரியும்? நான் அங்க இருந்து வந்துட்டேன், விசாரிச்சி சொல்றேன், இல்லாட்டி நீங்க பேப்பர வாங்கி பாருங்க...

தேர்தலில் தெடாவூர்...

|

தேர்தல் சமயத்தில் அன்றாட நிகழ்வுகளை பத்திரிக்கைகளில், பஸ்-களில் படித்துத் தெரிந்து கொள்வதுபோல் உள்ளூர் நிகழ்வுகள் எல்லாம் செல்பேசித் தெரிந்து கொள்கிறேன்.

எங்களின் தெருவில் ரோடு போடுகிறோமெனெ கொத்தி வைத்ததால் எந்த ஒரு வாகனமும் உள்ளே வர இயலாத சூழல் நேற்றைக்கு முந்தைய நாள் வரை. இன்று ஜல்லி, மண் எனக்கொட்டி ரோடு ரோலரால் அமுக்கி தார் போடுவதற்குத் தயாராயிருக்கிறது. இனிமேல் பிரச்சார வாகனங்கள் நிறைய வரும்.

தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க தான் அதிக வோட்டுக்களை இதுவரை வாங்கி வந்திருக்கிறது. வன்னியர்கள் மிக அதிகமாயிருந்தும் பா.ம.க விற்கு ஓட்டுப் போடுபவர்கள் மிகக் குறைவே.

விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டாலும், வாங்கு திறனும் அதிகமாயிருக்கிறது. மக்கள் காசு வாங்கினாலும் மனதில் நினைத்தவர்களுக்குத்தான் ஓட்டுப் போடுவார்கள்.

கைசின்னத்துக்குதான் சாகிற வரைக்கும் போடுவேன் எனச் சொல்லும் பாட்டிகளும், ரெட்டெலக்குத்தான் என் ஓட்டு  எனச் சொல்லும் பாட்டிகளும், பார்ட்டிகளும் நிறையவே இருக்கிறார்கள்.

உடையார் சமூகத்தினர் நாற்பது சதம் பேர் இருக்கிறார்கள், பெரும்பாலோனோர் ஐ.ஜே.கெ-வுக்கு ஓட்டு போடுவார்கள் என்பதால் அ.தி.மு.க. வுக்கு சாதகமாக இருக்கும்.

டாஸ்மாக் மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் ஒரு வாரமாக விவரமாய் பதுக்கல் வேலைகளை செய்து, தயாராய் இருக்கிறார்களாம்.

சம்மந்தப்பட்டவர்களிடம் பணம் வந்து சேர்ந்துவிட்டாலும், இன்னும் பணப் பட்டுவாடா ஆரம்பிக்கவில்லை.

விடுமுறை எடுத்துக்கொண்டு ஊருக்கு சென்று ஓட்டு போடமுடியுமா எனத் தெரியவில்லை. கடமையாற்ற கடைசிவரை முயற்சிப்போம்.

நேற்று என் மகன் 'கலைஞர் தாத்தா ஜெயிப்பாங்களா இல்லை ஜெயலலிதா அம்மா ஜெயிப்பாஙகளா?' எனக் கேட்டார்.

நாயகன் ஸ்டைலில் 'எனக்குத்தெரியாதுப்பா' என சொல்லி, 'சரி நீங்க சொல்லுங்க' எனக் கேட்டதற்கு, 'சென்னை சூப்பர் கிங் ஜெயிக்கும்' எனச் சொல்லிவிட்டு சென்றார்.

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB