விகடம் 1.1.4

|

தேர்தல் முடிந்த இந்த வார இறுதியை தெடாவூரில் கழித்தேன். நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரிடமும் பேச, தேர்தலைப் பற்றிய பல சுவராஸ்யமான  விஷயங்கள் கிடைத்தது.

*****

ஆத்தூர் தொகுதியினைச் சேர்ந்த ஒரு பாட்டியிடம் கேட்டேன்.

'பாட்டி எதுக்கு ஓட்டு போட்ட?'

'கையில்தான்' எனச் சொல்லி என்னை நக்கலாய் பார்த்து கொஞ்சம் தாமதித்து 'ரெட்டெலைக்கு' எனச் சொல்லி சிரித்தது.

*****

வீட்டுக்கு உறவினராய் வந்த என் அத்தையிடம் கேட்டேன். (சங்கராபுரம் தொகுதி)

'எதுக்கத்த ஓட்டு போட்ட?'

'திமுக-வில முன்னூறு, அதிமுகவில இரநூறு கொடுத்தாங்க. யாருக்கும் துரோகம் பண்ணக்கூடாதுன்னு மோதிரத்துக்கு போட்டுட்டேன்'.

கேட்டுவிட்டு எனக்கு 'கிர்' ரென ஆனது.

*****
பக்கத்து வீட்டு பாட்டியிடம் கேட்டேன். 'நீ நினைக்கிறதுக்குத்தான் ராசா போட்டேன்'  பூடகமா சொன்னார்கள்.

நான் பதிலுக்கு 'சுயேச்சைக்கா பாட்டி ஓட்டு போட்டே?' எனக்கேட்டேன்.

'அப்படின்னா?'

'அதைத்தானே நான் நினைச்சேன்'.

'ஆமாமா அதுக்குத்தான் போட்டேன்' என்றார்கள்...

*****

எப்போதாவது உண்மையை பேசும் என் அத்தை மகன், 'மாமா நீ நம்பினா நம்பு நம்பாட்டி போ, நான் யாருக்குப் போட்டேன்னே தெரியல' என்றான்.

'அடப்பாவி என்ன சொல்றே?' எனக் கேட்க

'ஆமாம் மாமா எந்த கட்சியும் புடிக்கல. மெசினுக்கு பக்கத்துல போய் கண்ண மூடிகிட்டு ஏதோ ஒரு பட்டனை அழுத்திட்டு வந்துட்டேன், சத்தியமா எந்த பட்டன அழுத்தினேன்னு ஆண்டவனுக்குத்தான் தெரியும்' என்றான்.

காங்கிரஸில் பொறுப்பில் இருக்கும் அவன் எதற்கு போட்டிருப்பான் என எனக்கும் தெரியும்.

'விவசாயிகளுக்கு உருப்படியா எதுவும் செய்யல, ஆட்சி மாற்றம் வேணும்... மனச கல்லாக்கிகிட்டு ரெட்டலைக்கு போட்டேன்' என் தாத்தா...

காங்கிரஸ்காரரான என் அப்பா 'திமுகாவுக்குத்தான் போட்டேன் என உனக்குத் தெரியாதா?, உறுதியா காங்கிரஸ் உதவியோட திமுக ஆட்சி' என்றார்.

'இந்த முறை ஜெயலலிதாவுக்குத்தான் என் ஓட்டு' அம்மா.

'நல்ல வேலை நீ ஓட்டு போட வரல. வந்திருந்தா திமுகாவுக்கு எதிரா ஒரு ஓட்டு கிடைச்சிருக்கும்...' என் நண்பன் மணி.

பிச்சன் மாமவிடம் கேட்டதற்கு புதிதாய் ஒரு குண்டை போட்டார் 'செல்லாத ஓட்டு போட்டேன்' என.

'இல்லை மாமா, அப்படியெல்லாம் போட முடியாது என மறுத்துச் சொன்னேன்.

'யாரு சொன்னா? முரசு, சூரியன், மோதிரம்னு மூனையும் அழுத்திட்டு வந்தேன்' என சொன்னார்.

'முதலில் எதை அழுத்தினீர்கள்' எனக்கேட்டதற்கு முரசில் என சொன்னார்.

இன்னும் பலர் நேரடியான பதிலைத் தந்தார்கள். மே பதிமூன்று மிகவும் சுவராஸ்யமான நாளாய் இருக்கும் என்பது தெள்ளினப் புரிந்தது. வேலையைப் பார்த்துக்கொண்டு பொறுமையாய் காத்திருப்போம்...

என்னடா வேறு வேலையே இல்லையா? இத்தனைப் பேரை கேட்டிருக்கிறேன் என நினைக்காதீர்கள். எல்லாம் ஓட்டுப்போடத்தான் போக இயலவில்லையே, சரி எப்படித்தான் நடந்தது, என்னதான் செய்தார்கள் என அறிந்துகொள்ளும் ஆர்வக்கோளாறில்தான்...

2 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

vasu balaji said...

/என்னடா வேறு வேலையே இல்லையா? இத்தனைப் பேரை கேட்டிருக்கிறேன் என நினைக்காதீர்கள்.

சே சே. அதான் வெட்டி வேலைன்னு தெரியுதுல்ல:))

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB