பயணம் 1.1.2

|

ஞாயிறு இரவு தம்பியோடு பெங்களூரு செல்வதற்கு ஆத்தூர் பேருந்து நிலையம் வந்தேன். சேலம் செல்லுவதற்கு கணக்கிலடங்கா கூட்டம் காத்திருக்க கொஞ்சம் மிரட்சியாயிருந்தது, எப்படி போகப்போகிறோம் என.

கவலைப்படாதீர்கள் அண்ணா என சொல்லிய தம்பி, பெங்களூரு செல்ல நேரடி பேருந்து ஒன்று இருப்பதாய் என்னை காத்திருக்கச் சொல்லிவிட்டு பேருந்து நுழையுமிடத்திற்கு சென்றான்.

சிறிது நேரத்தில் உள்ளே நுழைந்த பேருந்தில் கடைசி வரிசையில் அவனது கைங்கர்யத்தால் இரு சீட்டுக்கள் கிடைக்க ஏறி அமர்ந்தோம். எல்லோரும் தொற்றி ஏறியதில் வண்டி அதற்கான இடத்தில் நிற்கும் முன்னரே நிறைந்துவிட்டது.

இருபத்தைந்து வயதொத்த ஒருவர் பக்கத்தில் காலியாய் இருந்த இருக்கையில் உட்காரலாமா எனக்கேட்க, 'இல்லை கீழே இறங்கி சென்றிருக்கிறார்' எனச் சொன்னேன். சரியென சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு இறங்கி சென்றுவிட்டார்.

பார்ப்பதற்கு மிகவும் சிறு வயதாய் இருந்த ஒரு பெண்மணிக்கு மூன்று குழந்தைகள் போலும். இடமில்லாததைப் பற்றி கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் படியில் அந்த பெண்ணின் கணவர், தம்பி என இருவரும்  அமர்ந்து கொண்டார்கள். தனது தங்கையை பக்கத்தில் உட்கார வைத்த அந்த பெண் ஒரு குழந்தையை கணவரிடம் கொடுத்துவிட்டு மற்ற இரு குழந்தைகளையும் துண்டு விரித்து நடைபாதையில் படுக்க வைத்து விட்டு முதலாவதாய் இருக்கும் சீட்டில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டார்.

பின் பக்கம் எவரும் ஏறா வண்ணம் கதவினை உள்புறத்தாழிட, வண்டி கிளம்பியது. சேலம் சென்றவுடன் பின்னால் கடைசி சீட்டில் இருவர் இறங்கிக்கொள்ள அந்த பெண்ணின் தம்பியும் தங்கையும் அமர்ந்து கொண்டார்கள். நிறைய பேர் வண்டி நுழையும்போதே ஏற முயற்சிக்க பின்பக்கம் இடமில்லாததால் எல்லோரும் முன்பக்கம் சென்றார்கள்.

அப்போதுதான் முன்னால் ஏதோ சப்தம் வர கவனித்தேன். நடத்துனர் சப்தமாய்  ஒருவரை திட்டிக் கொண்டிருந்தார். என்னிடம் சீட்டு கேட்டவர் தான் பதிலுக்கு மெதுவாய் கண்டக்டரிடம் வாதாடிக்கொண்டிருந்தார்.

இடமில்லை என்றதும் முன்பக்கத்தில் ஏறிக்கொண்டிருப்பார் போலிருக்கிறது. ஏற வந்தவர்களை வண்டியில் இடமில்லை என சொல்ல, அதைச் சொல்ல நீ யார் என்பதில் ஆரம்பித்து சூடு பிடிக்க ஆரபித்தது.

நடத்துனர் கொஞ்சமும் நிறுத்தாமல் சகட்டு மேனிக்கு கத்திக் கொண்டிருந்தார். பதிலுக்கு அவரும் ஏதோ சொல்ல சப்தம் மெதுவாய் அதிகமாகியது. டிரைவர் வண்டியை  மெதுவாய் ஒரமாய் நிறுத்த எங்களின் எல்லோரின் கவனமும் அவர்களின் மேல் விழுந்தது.

பார்ப்பதற்கு மிகவும் சாதுவாய் இருந்த அந்த நபர் அவ்வளவாய் உரத்துக்கூட பேசவில்லை. 'என்னது வண்டிக்கு பாம் வைத்துவிடுவாய? எங்கே வை பார்க்கலாம்? ஒழுங்கா ஊர் போய் சேர மாட்டாய், போலீஸ் ஸ்டேசனுக்கு வண்டியை விட்டுவிடுவேன்' என நடத்துனர் சொல்லும்போது, அவர் அப்படியெல்லாம் சொல்லியிருப்பாரா என்று எங்களுக்கெல்லாம்  தோன்றியது.

அப்புறம் சப்தமில்லை. அயர்ச்சியில் கண்ணயர அதிகாலை நான்கு மணியளவில் ஒசூரில் இறங்கி கொண்டேன், தம்பி பெங்களூரு சென்றுவிட்டான்.

அலுவலகம் சென்றபின் தம்பி என்னிடம் செல்பேச அவன் சொன்ன விவரங்களைக்கேட்டு அதிர்ந்தேன்.

அதிகாலை ஐந்து மணிக்கு மடிவாலா தாண்டியதும் வண்டியிலிருந்து அந்த நபர் இறங்கினாராம். அதன் பின் வண்டி சிறிது தூரம் சென்றவுடன் இன்னுமொரு நிறுத்தத்தில் நிற்க, இறங்கிய அந்த நபரின் தலைமையில் ஒரு இருபது பேர் கொண்ட கும்பல் பேருந்துக்குள் நுழைந்து கண்டக்டரையும், டிரைவரையும் அடி அடி என அடித்து பின்னியிருக்கிறார்கள்.

வண்டியின் பின்புறத்தில் கல்லெறிந்து கண்ணாடி உடையாததால் முன்புறத்தில் கண்ணாடியை உடைத்துவிட்டு சிட்டென பறந்து சென்றுவிட்டார்களாம்.

வரும்போதே செல்பேசி அந்த அதிகாலையிலும் ஆட்களை சேகரித்து அடித்திருக்கிறார். அதன்பின் காவல் நிலையம் சென்று  புகார்கொடுத்து என  ஒரு வழியாய் அறைக்கு சென்று சேர்வதற்கே எட்டு மணி ஆனதாம்.

இதன் மூலம் இரண்டு விஷயங்கள் தெளிவானது. ஒன்று அந்த சிறு பெண் தனது குடும்பத்தாரோடு பயணித்த விதம், எந்த நிலையிலும் சிறப்பாய் இருக்க முடியும் என்பதை உணர்த்துவதாய். மற்றொன்று ஆளைப்பார்த்து எடைபோடவேண்டாம், நாவடக்கம் என்றும் நலம் பயக்கும் என்பதை உணர்த்துவதாய்...

3 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

sathishsangkavi.blogspot.com said...

//ஆளைப்பார்த்து எடைபோடவேண்டாம், நாவடக்கம் என்றும் நலம் பயக்கும் என்பதை உணர்த்துவதாய்...//

உண்மைதான்....

ஒவ்வொரு பயணமும் ஒரு அனுபவம்...

ஈரோடு கதிர் said...

பாம் பக்கிரிய கூட உக்கார வெச்சிருந்தா நாமளும் ரவுடியாயிருக்லாமே பிரவு?

vasu balaji said...

/எந்த நிலையிலும் சிறப்பாய் இருக்க முடியும் என்பதை உணர்த்துவதாய்./
/ஆளைப்பார்த்து எடைபோடவேண்டாம், நாவடக்கம் என்றும் நலம் பயக்கும்/

சமூக அக்கரைப் பதிவு.

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB