வீரண்ணன்...

|

சிறு வயதில், விவரம் புரியாத வயதில் யாரையாவது பார்க்கும்போதெல்லாம் பயந்திருக்கிறீர்களா?... ஆமென்றால் என் இனம(டா)ய்யா நீ(ர்) என நான் சொல்லிக்கொள்ளலாம்.

தளர்ந்த உடல், லேசாய் கூன் விழுந்த முதுகு, மழிக்கப்படாத முகத்தில் காடென மீசை, தாடி, அழுக்கான ஆனால் கிழிந்திருக்காத சட்டை, முழுக்கால் சட்டை, கையில் ஒரு தூக்குவாளி இதுதான் வீரண்ணனின் அடையாளம்.

வீரண்ணனனிடம் பிடித்துக்கொடுத்துவிடுவேன் எனச் சொன்னால் அழும் பிள்ளைகள் கூட வாயை மூடிக்கொள்ளும்; பார்த்தால் சிரிக்கும் குழந்தை கூட அழ ஆரம்பித்துவிடும். அவரைப் பார்த்தால் ஓ....வென எல்லோருமாய் கத்திக்கொண்டு போய் அவரது சட்டையினை பிடித்து இழுப்போம், சிறுசிறு கற்களால் அவரை அடிப்போம். அவரும் பதிலுக்கு  கையில் கிடைத்தவற்றைக் கொண்டு எங்களை நோக்கி வீசுவார்.

சில நாட்களில் விவரமாய் கையில் ஒரு குச்சியுடனே வருவார், முன்னெச்சரிக்கையாய். ஊரில் உள்ள எல்லா வீடுகளிலும் சாப்பாடு கேட்கமாட்டார். ஒரு சில வீடுகளில் மட்டும்தான், அதுவும் வாயைத் திறந்து கேட்கமாட்டார். வாசலிலேயே கவனிக்கும் வரை நின்று கொண்டிருப்பார். போடுவதை வாங்கிக்கொண்டு, எடுத்து சாப்பிட்டவாறே சென்றுவிடுவார்.

காசு கொடுத்தால் வாங்கிக்கொள்ள மாட்டார். அதன் மதிப்பு தெரியாதோ அல்லது அவருக்கு தேவையில்லையோ என்னவோ... அவருக்கென ஒரு கணக்குபோல் வைத்துக்கொண்டார்போல் ஊரில் எல்லாப் புறங்களிலும் திரிந்துகொண்டிருப்பார்.

மூன்று மாதத்திற்கு ஒரு முறை அவரின் கோலம் மாறும். மழித்த முகத்தோடு புதிதாய் சட்டை பேண்ட் எல்லாம் போட்டிருப்பார். வைத்திருக்கும் தூக்குவாளியும் கூட புதிதாய் இருக்கும். அதற்கெல்லாம் அப்போது காரணம் தெரியாது.

ஆரம்பத்தில் அவரைப் பார்த்து மிகப் பயந்த நான் ஒரு சமயம் எங்கள் வீட்டுக்கு சாப்பாடு கெட்க வந்த சமயத்தில் அம்மா சப்பாட்டினைக் கொடுத்து அவரது தட்டில் போட்டுவிட்டு வரச் சொல்ல, மறுத்து... பின் பயந்தவண்ணம்  நடுங்கியவாறு அவரது தட்டில் இட்டேன். சனி ஞாயிறுகளில் எங்கள் வீட்டில் கேட்கும் வழக்கம் வைத்திருந்தார். எங்கள் வீட்டில் எல்லோரும் அன்றுதான் வீட்டில் இருப்போம் என்பதைப் புரிந்து வைத்திருந்திருக்கிறார் என எண்ணுகிறேன்.

அதன்பிறகு சில நாட்களில் பயம் சுத்தமாய் விலகிவிட அவருக்கு சாப்பாட்டினை நான்தான் போடுவேன் என எனது வேலையாக்கிகொண்டேன். நாட்பட நாட்பட இருவருக்குமிடையே சினேகப்பூர்வமான ஒரு மெல்லிய புரிதல் ஏற்பட்டது. மெலிதாய் சிரிப்பார், சைகையில் ஏதோ சொல்ல முயல்வார். கண்களில் ஒரு சந்தோஷம், நன்றி தெரிவதாய் இருக்கும்.

அதுவரை அவரின் சட்டையைப் பிடித்திழுக்க்க ஓடினால் முதல் ஆளாய் ஓடும் நான் 'டேய் வேண்டாம்டா, பாவம்' எனச் சொல்லி எனது நண்பர்களை தடுக்க முயற்சிப்பேன். என்னை அவர்கள் கேலி செய்தாலும் பொருட்படுத்த மாட்டேன். என்னை எங்கு பார்த்தாலும் புன்னகைப்பார். சந்தோஷமாகி 'விலுக் விலுக்' என ஒரு புது மாதியான நடை போட்டு செல்லுவார்.

ஒருமுறை நான் வேகமாய் ஓடும்போது கீழே விழுந்து கால் பிசகி கொண்டது. அழுதபடியே வீட்டுக்கு நொண்டு நொண்டி வர பின்னாலேயே அவர் பதைப்பாய் வர, அதைப் பார்த்து அவரால் தான் அழுகிறேன் என அவரை எல்லோரும் திட்ட ஆரம்பித்தார்கள். திரும்பி அழுதவண்ணம் சைகையால் அவரை போ எனச் சொல்ல ஏதோ புரிந்து தொடர்வதை விட்டு விட்டார். அடுத்த நாள் நான் நன்றாக நடந்து செல்வதைப் பார்த்து சந்தோஷமாய் புன்னகைத்தார்.

இப்படியே தொடர சில நாட்கள் கழித்து என்னைப் பார்க்கும்போதெல்லாம் வாயினைக் குவித்து குழறிய வண்ணம் சப்தம் செய்வார். அப்புறம் பள்ளிப் படிப்பினை முடித்து, கல்லூரி சென்று விட்டேன். அவரை சில நாட்கள் மட்டும் தான் அதன் பிறகு பார்த்தேன்.

சில வருடங்கள் கழித்து அவரைக் காணாது நண்பர்களிடத்தே விசாரிக்க, அவர் எங்கோ கண்காணாத இடத்தில் இறந்துவிட்டதாய் சொன்னார்கள். மனம் பாரமாக, வீட்டிற்கு வந்து அப்போதுதான் அம்மாவிடம் அந்த கேள்வியைக் கேட்டேன், 'அம்மா, அவர் யார் என!'

அவர் எனது ஊரைச் சேர்ந்தவர்தானாம். வீடு, காடு எல்லாம் இருக்கிறதாம். ஒரு முறை பொங்கலன்று நடக்கும் மாடு விரட்டிதலில் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த அவரை ஒரு மாடு இடித்துதள்ள மடாரென கீழே விழுந்தவரின் புத்தி பேதலித்து விட்டதாம். நல்ல வேளை திருமணம் ஏதும் ஆகவில்லை எனச் சொன்னார்கள்.

'உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமா, ஒவ்வொரு மூனு மாசத்துக்கும் அவரின் துணிமணிகள் மாறும், ஆளு குளிச்சி சுத்தமா வருவாரு?' எனக் கேட்க நினைவுக்கு வந்து 'அட, ஆமாம் கவனிச்சிருக்கேன், ஏன்?' எனக் கேட்க, அம்மா சொன்ன பதிலால் என் மனம் கனத்துப்போனது...

ஒவ்வொரு மூன்றாவது மாதமும் அவரை குளிக்க வைத்து நாவிதரை அழைத்து முடியெல்லாம் மழிக்கச் செய்து புதிதாய் துணிகளை மாற்றிவிட்டு சென்றது அவரின் அத்தை மகளாம். அவரையே கல்யாணம் செய்துகொள்வதாய் உறுதியாய் இருந்து அவர் இந்த நிலைக்கு வந்ததும் வேறு ஒருவரை மணந்து கொண்டாலும், வந்து தனது மாமாவைப் பார்த்து விட்டு செல்வாராம், இறந்ததும் கூட அவரின் வீட்டில்தானம்.

2 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

sathishsangkavi.blogspot.com said...

//அவரையே கல்யாணம் செய்துகொள்வதாய் உறுதியாய் இருந்து அவர் இந்த நிலைக்கு வந்ததும் வேறு ஒருவரை மணந்து கொண்டாலும், வந்து தனது மாமாவைப் பார்த்து விட்டு செல்வாராம்//

பாராட்டப்படவேண்டியவர்...

settaikkaran said...

மற்றவர்களுக்குப் புதிராய் இருக்கிற மனிதரின் மீதும் குறையாத காதலோடு இருந்த அந்தப் பெண்மணி பிரமிப்பை ஏற்படுத்தி விட்டார். வீரண்ணனை இங்கு உலா வரச் செய்தமைக்கு நன்றி நண்பரே!

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB