ரங்கு

|

அவரை எல்லோரும் ரங்கு என்றுதான் கூப்பிடுவார்கள், உண்மையான பெயர் ரங்கநாதன். எப்போதும் சிரித்த முகத்தோடுதான் இருப்பார், கோபப்பட்டு எவரும் பார்த்ததே கிடையாது. அந்த ஊரில் எல்லோருக்கும் அவரை கண்டிப்பாகத் தெரியும், குறிப்பாய் குழந்தைகளுக்கு. ஆம் குழந்தைகள் என்றால் அவருக்கு கொள்ளைப் பிரியம். பார்க்கும்போதெல்லாம் கண்டிப்பாய் மிட்டாய் தருவது அவரது வழக்கம்.

குழந்தைகளுக்கு தங்களது அப்பாக்களை விடவும் ரங்கு மாமாவை அதிகம் பிடிக்கக் காரணம் அவரும் ஒரு குழந்தையாய் மாறிப் பழகுவதும், கண்டிப்பை கண்டதில்லை என்பதாலும், அதைவிட அவர் தரும் மிட்டாய்க்காகவும் இருக்கலாம்.

மாநிறம், மீசையில்லாத மழிக்கப்பட்ட முகம், மொச்சை மொச்சையாய் வெண்ணிற பற்கள். சராசரியான உயரத்தில் ஒடிசலான தேகம். எப்போதும் மங்கலான வெள்ளை வேட்டி, கதரில் ஒரு சட்டை... இதுதான் இவரின் அடையாளம்.

அப்பா ஊரில் பெரிய மிராசுதார், நிறைய சம்பாத்து வைத்திருந்தார். ரங்குவின் செலவுக்கென அவரால் முழுமையால் பார்த்துக்கொள்ளப்படும் ஒரு மாவுமில். மூன்று பேஸ் கரண்ட் என்றால் மட்டும் மாவரைத்துக் கொடுத்துவிட்டு மற்ற நேரங்களில் ஊர் வேலை செய்ய கிளம்பிவிடுவார். வசதி குறைவானவர்களுக்கு கொடுக்கும் காசினை வாங்கிகொண்டு மாவினை அரைத்துக்கொடுப்பார். கரண்ட் பில் கட்டியது போக மீதம் அவரின் செலவுக்கு சரியாய் இருக்கும்.

பேசும் பேச்சில், செயல்களில் அவரிடம் பெண்மைத்தனம் மிகுந்து இருக்கும். விழாக்களில் பெண்கள் செய்யும் சடங்குகளை அவர்களைவிட சிறப்பாய் செய்வார்.தண்ணீர் குடத்தினை பெண்கள் போல் அழகாய் சுமந்து வருவார். எவரேனும் கிண்டல் செய்தால் கண்டுகொள்ளவே மாட்டார். அவரை 'போடா பொட்டையா' எனத் திட்டினாலும், 'ஆமாம் இவரு மட்டும் ஆம்பள சிங்கம், தர்மன் கிட்டே உதை வாங்கினது தெரியாது?' என அவர் எப்போதோ நடந்த சம்பவத்தைச் சொல்லி சொன்னவரின் வாயை அடைப்பார்.

ஜாதி பேதமெல்லாம் பார்க்கவே மாட்டார். எல்லோரரையும் மாமா, மச்சான், அண்ணா, அண்ணி, மதனி, அத்தை என உறவுமுறையோடுதான் அழைப்பார். ஊரில் யாருக்கேனும் உடம்புக்கு சுகமில்லை என்றால் சரியாகும் வரை தினமும் சம்மந்தப்பட்டவரின் வீட்டுக்கு சென்று பார்த்து வருவார். அங்கிருப்பவர்களுக்கு ஆறுதல் சொல்லுவது, வியாதிக்கான விளக்கமான தகவல்களைப் பரிமாறி அவர்களை சீக்கிரம் குணமடைய ஆறுதல் சொல்லுவார். முடிந்த அளவுக்கு அவராலான உதவிகளை தயக்கமின்றி செய்வார்.

அதே போல்தான் ஏதேனும் விஷேசமென்றால். வலியச் சென்று, கடைசிவரை பம்பரமாய் சுழன்று எல்லா வேலைகளையும் செய்து தருவார். வயது ஐம்பதுக்கு மேல் என்றாலும் அவர் திருமணமே செய்துகொள்ளவில்லை.கேட்டால் சிரித்துக்கொண்டே 'நமக்கெல்லாம் எதுக்கு? எல்லோரும் நல்லாருந்தா சரி' என சொல்லுவார்.

அவரின் உடன் பிறந்தோரெல்லாம் சொத்தில் பாகத்தினைப் பிரித்துக்கொண்டு அவருக்கு சொற்பமாய் நிலத்தினையும், ஓட்டினால் வேயப்பட்ட ஒரு வீட்டினையும், பார்த்துக்கொண்டிருந்த மாவு மில்லையும் ஒதுக்கிவிட, எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆதரவாய் அவரின் அம்மா இருந்ததார்கள்.

தனது இளைய மகன் திருமணம் செய்துகொள்ளவில்லையே என எல்லோரிடமும் சொல்லிச் சொல்லி அங்கலாய்த்துக்கொண்டிருந்தார், அந்த கவலையோடு கண்மூடியும் விட்டார். அன்றுதான் ரங்குவை சோர்ந்த முகத்தோடு அந்த ஊரில் உள்ள எல்லோரும் பார்த்தார்கள்.

அதன் பின்னும் அவர் அவரின் வழக்கமான வேலைகளை செய்தவண்ணம்தான் இருந்தார், ஆனாலும் அவரின் முகத்தில் முன்பிருந்த மலர்ச்சி இப்போது இல்லை. ஊரில் மற்றொரு நவீன மாவு மில் வந்துவிட அவருக்கான வருமானம் குறைய ஆரம்பித்தது. அவருக்கென ஒதுக்கிய கரம்பு நிலத்தில் ஏதும் விளைவிக்காததால், விளையாததால் அவரின் அன்றாட செலவுக்கே தடுமாற வேண்டியிருந்தது.

ஊரில் எல்லோருக்கும் வந்த ஒரு வித காய்ச்சல் அவரை மட்டும் விட்டு பிரியாமல் ஒட்டிக்கொள்ள, படுக்கையில் வீழ்த்தியது. எல்லோரும் அவரை சென்று பார்த்துவந்தார்கள், முடிந்த அளவுக்கு பார்த்துக்கொண்டார்கள்.

விருந்தும் மருந்தும் மூன்று வேளைக்கு என்பது போல் ஒரு வாரத்திற்கு பிறகு அவரை எவரும் கண்டுகொள்ளவில்லை. அவர் இனிமேல் தேறமாட்டார் என எல்லோரும் கைவிட்டுவிட அவரின் உடல் நிலை இன்னும் மோசமானது. அந்த நிலையில் அவரின் சின்னம்மா(சித்தி) ஒரு வண்டியில் ஏற்றி அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார், எல்லோரும் பெங்களூர் சென்றுவிட்டதாய் பேசிக்கொண்டார்கள்.

அவரைப் பற்றிய எந்த ஒரு தகவலும் சில மாதங்களுக்கு இல்லை. ஒரு வருடத்திற்குப்பின் ரங்கு திருமணக்கோலத்தில் வந்து இறங்கினார். புதிதாய் பெரிதாய் மீசையெல்லாம் வைத்திருந்தார். இந்த வயதிலா என எல்லோரும் ஆச்சர்யப்பட தனது மனைவியின் தோளில் கைபோட்டபடி பாரதியின் கூற்றுப்படி நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை என கம்பீரமாக இருந்தார்.

3 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

settaikkaran said...

ரங்கு மாமா போன்றவர்கள் வசித்த மண்ணில் வசிக்கிற பெருமை நமக்கு இருக்கிறது. வேறென்ன வேண்டும்?

vasu balaji said...

வித்தியாசமான மனுஷன்.

Unknown said...

கதையா கேரக்டரா??

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB