காந்தி பிறந்த நாள்...காமராஜர் இறந்த நாள்.

|

இன்று அக்டோபர் இரண்டு. பெயரளவில் மது விற்பனையாகாத, விடுமுறை நாட்களில் ஒன்று. ஆனால் எனது பால்ய நாட்களில் மிகவும் விஷேசமான நாள்.

அப்பா தீவிர காங்கிரஸ்காரர். வீட்டில் காந்தி, காமராஜ், நேரு, இந்திரா என எல்லா காங்கிரசைச் சார்ந்த தலைவர்களின் புகைப்படங்களும் வரவேற்பரையில் மாட்டப் பட்டிருக்கும். பெரும்பாலும் எல்லாம் திருமணத்தின்போது அன்பளிப்பாய் வந்தவைகளே.

விடுமுறை என்பதால் அதிகாலையிலேயே குளித்து என்னையும் குளிப்பாட்டி காங்கிரஸ் கொடி இருக்கும் பேருந்து நிறுத்தம் அருகே அழைத்து சென்று விடுவார். அங்கு எங்களின் வீட்டிலிருந்து எடுத்து செல்லப்பட்ட காமராஜின் புகைப்படம் மாலையிடப்பட்டு பொட்டு வைத்து தட்டில் நிறைய மிட்டாய்களுடன் இருக்கும். நைந்து போயிருந்த காங்கிரஸ் கொடி புதிதாய் மாற்றப்பட்டு, ரோஜாப் பூவிதழ்களை உள்ளடக்கி ஏற்றுவதற்கு தயாராய் இருக்கும்.

கோவிந்தன் மாமாவும் காங்கிரஸ் காரர் என்பதால் அவரின் சவுண்ட் சிஸ்டத்திலிருந்து கம்பத்தில் கட்டப்பட்ட ஒலி பெருக்கிகள் சப்தமாய் காங்கிரஸ் பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கும். ’மாமா, சினிமா பாடல்களைப் போடுங்கள்’ எனக் கெஞ்சுவோம், கொடியேற்றியவுடன் எனச் சொல்லி எங்களை சமாதானப்படுத்துவார்.

எல்லோரும் வந்தவுடன், கொடியேற்றி வணக்கம் செலுத்தி சந்தனப்பொட்டினை எல்லோரும் வைத்துக்கொள்ள, மிட்டாய்களை வினியோகிப்பார்கள். அடுத்த அரைமணிநேரம் காத்திருந்து சினிமா ரெக்கார்ட் மாற்றிவிட்டு சந்தோசமாய் வீடு திரும்புவோம்.

இன்று பட்டி தொட்டியெல்லாம் சத்துணவு வழங்கப்படுகிறது என்றாலும் அதற்கு காமராஜ் அவர்களால் கொண்டு வரப்பட்ட மதிய உணவுத்திட்டம் தான் முன்னோடி. நான்காவது படித்த போது கண்டிப்பாய் ஏழைக் குழைந்தைகளுக்குதான் சத்துணவு கிடைக்கும். கோதுமையில் செய்யப்பட்ட சாதம், வெல்லத்தூள் என கொடுப்பார்கள்.

அப்பா அரசாங்க வேலையில் இருந்ததால் எனக்கெல்லாம் கிடைக்காது. ஆனாலும் உணவு இடும் ஆயா எனது சொந்தக்காரர் என்பதால் நான் சாப்பாடு எடுத்துச்செல்லும் தூக்கு போனியில் சாப்பாட்டினை வைத்து பொட்டலமாய் வெல்லம் மடித்து தருவார்கள். வீட்டில் வந்து சாப்பிடுவேன்.

அப்பாவிடம் காமராஜ் ஏன் அக்டோபர் இரண்டில் இறந்தார் என ஒருமுறை நிறையவே வருத்தப்பட்டேன்.  காரணம் கேட்டதற்கு வேறொரு நாளில் இறந்திருந்தால் இன்னொரு நாள் விடுமுறை கூடுதலாய் கிடைத்திருக்குமே எனச் சொன்னேன்.

இந்த இடுகை எழுதும் இந்த காலைப்பொழுதில் அப்பாவை அழைத்தேன். கோவிந்தன் மாமா இந்த வருடம் இல்லை, வழக்கம்போல் கொடியேற்ற கிளம்பிக் கொண்டிருப்பதாய் சொன்னார். இன்னும் சில வருடங்களுக்காவது இது தொடரும் என எண்ணுகிறேன்.

கல்விக்கண் திறந்த கர்மவீரரை நினைவு கூர்வோம், காந்தியின் சத்தியம், அகிம்சை ஆகியவற்றை பின்பற்ற முயற்சிப்போம்.

7 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

vijayan said...

தந்தையையும் ,தலைவரையும் நன்றியுடன் நினைவு கூர்வோம்.

Punnakku Moottai said...

எனக்கு என்னவோ திலகரைபோல், சுபாஸ் போசைபோல், பகத்சிங்கை போல் காந்தியை பிடிக்காமல் போனது. காரணம் சொல்லத்தெரியவில்லை. நான் தவறாக வழி நடத்தவோ அல்லது அறிவுறுத்தப்பட்டு இருக்கலாம். மேலும் அதிக வரலாற்று புத்தகங்களை நான் படிக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது நான் படித்த ஒருசில புத்தகங்கள் அவர் பணிகளை பாராட்ட தவறி இருக்கலாம்.

அதற்காக தேசமே கொண்டாடும் ஒரு தலைவரை நான் புறக்கணிக்க போவதில்லை.

வாழ்க காந்தி புகழ்.

காமராஜரைப் பற்றி நிறைய படித்து இருக்கிறேன். அவரின் 'லீடர்ஷிப்' பண்பு மிகவும் எனக்கு பிடிக்கும். தன்னலமற்ற தலைவன். ஒரு முறை அவரின் தாயார், காமராஜர் தனக்கு மாதமாதம் அனுப்பும் பணத்தை ரூ.100 கூட்டி அனுப்ப சொன்னாராம். வீட்டிற்கு வருபவர்களுக்கு டீ காப்பி கொடுபதற்காக. அதற்கு மறுத்துவிட்டாராம். தன்னை பார்க்க வருகிறவர்களுக்கு அதெல்லாம் தேவை இல்லை என்றாராம்.
ஆனால் இன்று ஹாப் பாட்டில், சிக்கன் பிரியாணி இல்லன்னா கூட்டமே கூடாது.
இப்பிடி இருந்தா காமராஜர் ஆட்சி மீண்டும் எப்பிடி மலரும். கனவு காண எல்லை இல்லை.

தன்னலமற்ற தலைவர் காமராஜர் புகழ் வாழ்க. தற்கால அரசியல் தலைகள் ('தலைவர்' இல்லை) இவரின் பண்புகளில் 10 % கடைபிடித்தால் 'தலைவர்' ஆகலாம்.

பழமைபேசி said...

வாழ்த்துகள்!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

காந்தியின் சத்தியம், அகிம்சை ஆகியவற்றை பின்பற்ற முயற்சிப்போம்.
//

இதப்பற்றி நிறைய எழுதுங்க.. நல்லா பொழுது போகும்....


ஹி..ஹி

..எனக்கு...

ஜெயந்த் கிருஷ்ணா said...

இப்போதெல்லாம் நம் மக்களுக்கு காந்தி ஜெயந்தி போன்ற தினங்கள் வெறும் ஒரு விடுமுறை நாளாகவே படுகிறது...

நல்ல பகிர்வு..

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

தன்னலமற்ற தலைவர்கள் என்றால் இருவர்தான்.

http://sagotharan.wordpress.com/

Unknown said...

மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com/

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB