சுளுக்கு...

|

சற்றே நெடிய சிறுகதை...

அவசரமா ஆத்தூர் கிளம்பிட்டு இருந்தேன். அப்போ ஒரு கோஷ்டியே வீட்டுக்குள்ள வந்துச்சி. 'கிருஷ்ணா, உடனே கிளம்பு, இன்னிக்கி வஞ்சம் தீத்தாகனும்', சகாதேவன்.

என்னடா இது, தெலுங்கு பட வசனம் மாதிரி பேசறான்னு நினைச்சிட்டு, 'ஆமா, எங்க... எதுக்கு?' கேட்டேன். ’இன்னிக்கி நம்மோட பரம எதிரி மல்லியகரை டீமோட மேட்ச் இருக்கு, வின் பண்ணியே ஆகனும், கண்டிப்பா நீ வரனும்', ராஜா.

சுமாரா கிரிக்கெட் விளையாடுவேன், ஆன இந்த அளவிற்கு என்னைக்குமே மரியாதை இருந்ததில்ல. 'நாங்களும் எவ்வளவோ பாத்துட்டோம், யாரும் கிடைக்கல, அந்த நாய் மகேஷ் நம்ப வெச்சி கழுத்தறுத்துட்டு திடீர்னு சேலம் போயிட்டான். உன்னை விட்டா ஆளே இல்ல' ஜனார். அப்போதான் உண்மை தெரிஞ்சது, வழியில்லாம கூப்படறானுங்கன்னு.

'நான் வரலப்பா, மொதல்ல, தாத்தா கரன்ட் பில் கட்ட கடைசி தேதின்னு என் கிட்ட பணம் கொடுத்திருக்காரு. ரெண்டாவது செமெஸ்டருக்கு ஒரு மாசம்தான் இருக்கு, படிக்கனும்' நான்.

'ரொம்ப பிகு பண்ணாதப்பா, காலேஜ்ல படிக்கிற ஆளு, லெக் ஸ்பின் நல்ல போடுவே, பின்ச் ஹிட்டர், சூப்பரா ஃ பீல்டிங் பண்ணுவ' முரளி.

அவன் சொல்றது எந்த அளவுக்கு உண்மைன்னு எனக்கு ஏன் எல்லாத்துக்கும் தெரியும். இருந்தாலும் வாய்ப்ப விட மனசில்ல.

'கரண்ட் பில்லு...', 'என்ன மாம்ஸ், 5 மணி வரைக்கும் டைம் இருக்கு, மேட்ச் 15 ஓவர் தான், 10 மணிக்கு ஆரம்பிச்சாலும் ரெண்டு ரெண்டரைக்கெல்லாம் முடிஞ்சிடும். ஆத்தூர் நானும் உங்க கூட வர்றேன், போதுமா?' மகேந்திரன்.

எல்லோரும் என்னைவிட சின்ன பசங்கதான், ஆனா மகேந்திரனை தவிர எல்லோரும் பேர் சொல்லித்தான் கூப்பிடுவாங்க.

சைக்கிள்ல டபுள்ஸ், ட்ரிப்ள்ஸ்னு போய் சேந்தோம். போனவுடனே ஒரு ஷாக் நியூஸ் கிடைச்சது. யாரோ ராபினாம், அவங்க டீம்ல விளையாட போறானாம். திருச்சி காலேஜ் ஃபாஸ்ட் பவுலராம். சைட்ல அவன் பவுலிங் பிராக்டிஸ் பண்றத பாத்தே எங்களுக்கு டரியல் ஆயிடுச்சி. பவுண்டரி லைன் பக்கத்துல இருந்து பந்து போட ஓடி வந்தான். திடீர்னு மகேந்திரன் என்ன நினைச்சான்னே தெரியல,

'மாம்ஸ் நீதான் இன்னிக்கு கேப்டன்'னான். அதிசயமா எல்லோரும் பேசி வெச்சாப்ல,

'ஆமா கண்டிப்பா நீதான் இருக்கனும், வயசில, அறிவுல, அனுபவத்தில பெரிய ஆளு' முரளி. வழியில்லாம பலிகடா மாதிரி ஒத்துட்டு, டாஸ் வின் பண்ணி எல்லாரும் வழக்கமா எடுக்கிற பேட்டிங் எடுத்தோம்.

கெஞ்சி கேட்டாலும் அஞ்சி டவுன்க்கு முன்னால இறக்காதவனுங்க, அன்னிக்கி ஓப்பனிங் இறங்க சொன்னானுங்க. எல்லாம் ராபின் பயம்னு நல்லா தெரிஞ்சுச்சி.

'இல்லப்பா ஒன் டவுன் ஆடறேன்'னேன். 'என்னப்பா நீ, பயங்கரமான பிளேயர், ராபினும் காலேஜ், நீயும் காலேஜ், காலேஜுக்கு காலேஜ்...' சகா.

நிஜமாவே, நல்ல ஃபாஸ்டா போட்டான். கண்ணை மூடிட்டு சுத்தினேன். நல்லா கனெக்ட் ஆக, மொத பாலே சிக்ஸர், ஸ்கூல் காம்பவுண்ட்க்கு வெளியே போய் விழுந்துச்சி. ஜஸ்ட் தொட்டேன், அவ்வளோதான், அப்போ எவ்வளோ ஸ்பீட்னு பாத்துக்கோங்க.

ரெண்டாவது பால், கனெக்ட் ஆகல பேட்லயும், கீப்பர் கிட்டேயும். பைஸ் ஃபோர். மூனாவது பால் கொஞ்சம் ஸ்லோவா போட, லெக் சைட்ல தட்டிவிட்டேன், நேரா கைக்கு போனத மிஸ் பண்ண லைஃப், நாலு ரன்கள்...

நாலாவது பால் தான் இந்த இடுகைக்கு முக்கியம். ஸ்கொயர் லெக்-ல தட்டிவிட வேண்டாம்னு சொல்லியும் கேட்காமல் வேகமா ஓடி ரன் எடுக்க ட்ரை பண்ணி, தடுமாறி விழுந்தேன். கால் பிசகி கணுக்கால் கிட்ட நல்லா சுளுக்கிடுச்சி.(ரன் அவுட். மொத்தமா அடிச்சது 50 ரன், அவனுங்க 45 ஆல் அவுட், அதப்பத்தி தனியா எழுதலாம், அந்த அளவிற்கு சுவராசியமா இருந்திச்சி)

கால பிடிச்சு நல்லா உறுவி விட்டானுங்க. வலி உயிரே போற மாதிரி இருந்துச்சி. சைக்கிள்ல என்னை ரெண்டு பேர் கைத் தாங்கலா தூக்கி வெச்சி ('என்ன மாம்ஸ் சப்பிடற, இந்த கணம் கணக்குற?') மெதுவா வீட்டுல கொண்டு வந்து விட்டானுங்க.

கணுக்கால் கிட்ட பன்னு மாதிரி உப்ப ஆரம்பிச்சிடுச்சி. கால ஊனவே முடியல. தாங்கலா ரெண்டு பேரை புடிச்சிட்டு ஒத்த கால்ல நொண்டிட்டே உள்ள போனேன்.

'பரதேசி நாயிங்க, சும்மா இருந்த என் பேரனை கூட்டிட்டு போயி கால முறிச்சு கொண்டாந்துட்டானுங்க' அம்மாவொட பாட்டி அது பங்குக்கு மொத ஆளா ஆரம்பிச்சது.

'இது தேவையா, உனக்கு அறிவே கிடையாது' , இது என் சித்தி.

'எத்தனை சொன்னாலும் திருந்த மாட்டே' ஆயா.

'செய்யற வேலை விட்டுட்டு செனை ஆட்டுக்கு... கரன்ட் பில்ல கட்டிட்டு வாடான்னா, கால்ல கட்டிகிட்டு வந்திருக்கான்' தாத்தா.

அதுக்குள்ள பாட்டி, தாசன்ங்ற ஆளை கூட்டிட்டு வந்துச்சி. பாடம் போடறவறாம். வரும்போதே லேசா உந்தி உந்தி வந்தாப்ல. 'ஆயி, ஒரு சீவாங்குச்சி எடுத்துட்டு வாங்க, அப்படியே திரு நீறு'

'எப்படி கண்ணு ஆச்சுன்னு வீங்குன இடத்த புடிச்சி நல்ல அழுத்தி பாக்க, வலியில துடிச்சிட்டேன், கண்ணுல்ல மாலை மாலையா தண்ணி.

'படிச்சவன் இப்படிய அழுவறது?' தாத்தா. 'எனக்குத்தானே வலியெல்லாம்' மனசுக்குள்.

குச்சியால உடம்பெல்லாம் நீவி விட்டாரு, கடைசியா ஒரு பிடி திருநீற வாயில திணிச்சாரு. நெத்தியில கொஞ்சம் வெச்சுட்டு, 'கலையில கப்புனு சரியாயிடும்'னு சொன்னாரு.

'ஆமா ஏன் காலை லேசா நொண்டி வந்தாப்ல தெரிஞ்சது, என்னாச்சுன்னு' கேட்டேன். 'கால் பெசகிடுச்சி, அதான்'னாரு. 'உங்களுக்கேவா' ன்னு கேட்டதுக்கு, ’ஆளானப்பட்ட சிவனையே சனி பிடிச்சிருக்காரு, அதுவும் இல்லாம என் வைத்தியம் எனக்கு பலிக்காதுல்ல' ன்னு ஏதோ சொன்னாரு.

கால் நல்லாவே வீங்கிடுச்சி. பாட்டி புளியந்தழை, ஊணாந்தழையை வேகவெச்சு கட்டிவிட்டுச்சி. விடிய விடிய தூக்கம் வராம காலையே பாத்துட்டு இருந்தேன். காலையில வீக்கம் அவ்வளவா இல்ல, ஆனா கால ஊன முடியல. வீட்டிலேயே இருந்தேன். வழியில்லாம பாட புத்தகத்தை படிச்சேன். 'ஒழுங்கா படிக்கனும்னா இந்த மாதிரி ஏதாச்சும் ஆகனும் போல இருக்கு' தாத்தா.

சாயந்திரமா வள்ளி அக்காவ ஆயா அழச்சுட்டு வந்தாங்க, சுளுக்கு எடுக்கறதுல ஸ்பெசலிஸ்டாம். விளக்கெண்ணையை தொட்டு, கால்ல தடவி மெதுவா அழுத்தி, 'இங்க வலிக்குதா, இங்க வலிக்குதா'ன்னு கேட்டுச்சி.

ஒரு இடத்துல தொடும்போதே உயிர் போற மாதிரி இருந்தது. கத்தவும் அந்த இடத்தயே வசமா புடிச்சுடுச்சி. அழுத்துன அழுத்துல கதறி, நிறைய கூட்டம் கூடி போச்சு. சுத்தி நின்னு வேடிக்கைப்பார்த்த அத்தனை பேரையும் நினைச்சா இப்ப கூட வெட்கமா இருக்கு.

'புளியங்கொட்டை பத்து போடுங்க ரெண்டு நாள்ல சரியாயிடும்'னு சொல்லிட்டு போச்சு. அதையும் செஞ்சோம், எந்த முன்னேற்றமும் இல்ல. காலைல நொண்டி நொண்டி நடந்து வெளியே வந்தேன். பக்கத்துல டீ கடையில பேப்பர் படிக்கலாம்னு போனேன்.

’என்ன கண்ணு நொண்டறே? சுளுக்கா’ சந்திரன் அண்ணன் கேட்டரு. ஆகா அடுத்த வைத்தியம் ஆரம்பிச்சுடுச்சின்னு நினைச்சிட்டு ஆமான்னேன்.

'இது தான் மேட்டரா, உடனே சரி பண்றேன், வண்டியில உட்காரு' ன்னு இழுத்து உட்கார வெச்சி டி.வி.எஸ் - ல சல்லுனு கிளம்பிட்டாரு.

வண்டியை அவர் வளைச்சு வளைச்சு ஓட்டும்போதுதான் அவர் நல்லா போதையில இருக்கார்னு தெரிஞ்சது. திகிலோடு உயிரை பிடிச்சுட்டு போனேன். நேரா பக்கத்துல இருந்த நடவுக்கு ஓட்டி போட்டிருந்த வயல் பக்கத்துல நிப்பாட்டிட்டு,

'சுளுக்கின காலை சேத்தில நல்லா அழுத்தி ஊனு' ன்னாரு.

அப்போதான் எனக்கு அந்த விபரீதமே புரிஞ்சது. தப்பிச்சி ஓடவும், சாரி நடக்க கூடமுடியல. வலுக்கட்டாயமா என் காலை புடிச்சி சேத்துல அழுத்திட்டு, 'ம், பட்டுனு வெளியே இழு' ன்னாரு.

அசைச்சாவே வலிக்குது, எங்க இழுக்கறது? ஆண்டவன் புண்ணியத்துல ஆள உட்டா போதும்னுட்டு எப்படியோ கஷ்டப்பட்டு வெளியே இழுத்தேன். அப்போ நினைச்சது என்னான்னா, 'என் எதிரிக்கும் இந்த நிலம வரக்கூடாது'

'நீ சொல்லறதயே கேட்க மாட்றே, பட்டுனு இழுத்தாத்தான் சரியாகும், சரி சரி, தண்ணியில கால கழுவிட்டு வரலம்னு தூரத்துல ஓடிக்கிட்டிருந்த மோட்டார் கொட்டாய காட்டினாரு. இல்ல இல்ல வீட்டுக்கு போயி கழுவிக்கிறேன் மொதல்ல வண்டிய எடுங்கன்னேன்.

வேகமா கிளப்பினாரு, 'அண்ணா பாத்து மெதுவா'ன்னேன். 'எவ்வளோ போதையில இருந்தாலும் செடியா இருப்பேன்' னாரு..

ஏதேதோ பேசிட்டு வீட்டுக்கு பக்கமா வரும்போது, ரோடு போட வெச்சிருந்த ஜல்லியில வண்டிய விட தடுமாறி கீழ விழுந்தோம். நல்ல வேளை நான் மணல்ல பேலன்ஸ் பண்ணி விழுந்தால அடி ஒன்னும் இல்ல. ஆனா அவரு மேல டி.வி.எஸ் கவுந்து, சைலன்ஸர் கால சுட்டு, காலும் நல்லா பெசகிடுச்சி. போதை தெளிஞ்சி கத்த ஆரம்பிச்சிட்டாரு. அப்புறம் அவரு விவரமா ஆஸ்பத்திரிதான் போனருங்கறது தனி கதை.

பாட்டி வெளிய போயிருந்த சமயத்துல நைசா சகாதேவன் வந்தான். 'கிருஷ்ணா எப்படி இருக்கே'ன்னான். 'டேய் பாட்டி' ன்னேன்.

'அந்த கிழவி இப்போதான் அந்த பக்கம் போகுது, பாத்துட்டுதான் வரேர்ன்' அவன் கோவத்த தீத்துகிட்டான்.

'சரி சரி, ரெடியா இரு. அஞ்சரை வாக்கில சுருட்டை கிழவாடிகிட்ட போகனும், உடனே சரியாயிடும்'னு சொல்லிட்டு, 'பாட்டி வருது' ன்னுட்டு எஸ்கேப் ஆயிட்டான்.

பக்கத்துல இருந்த மலையடிவரத்துக்கு கூட்டிட்டு போனான். தொன்னூறு வயசுக்கு மேல இருக்கும். முறுக்கேறிய உடம்பு. நிறைய சுருக்கம். அதிகம் பேசலை. சகாவ வாழை நார் கொண்டு வரச்சொன்னாரு.

உட்கார்ந்து காலை நீட்ட சொல்லி கால் விரலுக்கு கீழே குச்சியை வெச்சி, வாழை நார்ல விரலுக்கு குறுக்கே விட்டு நல்ல இறுக்கி கட்டினாரு. ரெண்டு பக்கமும் குச்சி கொஞ்சம் நீட்டிட்டு இருந்துச்சி. புதுமையாவும் வலி இல்லாமலும் இருந்துச்சி, ஏன்னா அவர் வலிக்கிற இடத்தை டச் பண்ணவே இல்ல. சைட்ல சகாதேவன் சின்ன கடப்பாரையில எதோ குழி நோண்டிட்டு இருந்தான்.

'தாத்தா போதுமா' ன்னான். கால்ல வெச்சு கட்டின மாதிரியே இன்னொரு குச்சியால ஆழம், பக்கவாடுலன்னு வெச்சி பாத்துட்டு சில கரெக்சன் சொன்னாரு.அப்புறம் ஒரு துண்டை விரிச்சி அதுல குப்புற படுக்க சொல்லி, என் காலை அந்த குழிக்குள்ள திணிச்சி மண் போட்டு மூடி நல்ல தாணிச்சாங்க. இதுவும் ஒரு சேத்து டைப் வைத்தியம்னு புடிஞ்சிட்டேன்.

கடைசியா சின்னதா ஒரு துண்டை என் கால்ல கட்டி வெருக்குன்னு இழுத்தாங்க. வலி பயங்கரமா இருந்தாலும், சேத்தளவுக்கு இல்ல. உப்ப எண்ணையில போட்டு சூடாக்கி கட்ட சொன்னாரு. வெத்தல பாக்குக்கு காசு கொடுத்ததுக்கு கோபமா மறுத்துட்டாரு. நைசா வீட்டுக்கு பின் பக்கமா வந்து விட்டுட்டு போயிட்டான். கொஞ்சம் நடக்க முடிஞ்சது.

கோயமுத்துர்ல இருது மாமா ஃபோன் பண்ணினாரு.எல்லா விஷயத்தையும் முன்னாடியே தெரிஞ்சிட்டுப்பார் போல.

'ஏன்டா, படிச்சவன் பண்றதாடா இது, ஹேர் பிரக்சரா இருக்க போகுது, எக்ஸ்-ரே எடுத்து பாரு, மொத வேலைய நாளைக்கு ஆஸ்பத்திரி போற வேலையை பாரு'ன்னாரு.

சரின்னு தலையட்டிட்டு, இன்னும் ஒரு நாள் எல்லா வைத்தியத்தையும் செஞ்சிட்டிருந்தேன். சாயங்காலம், மாமாவோட கடைக்கு மெதுவா போனேன்.

'என்ன கிருஷ்ணா ஆளையே காணும்'னாரு. எல்லாத்தையும் சொன்னேன். ’அட இதுதானா’ (இன்னொரு வைத்தியம் வரப்போவுது) 'இந்தா, இந்த பிளாஸ்டர போடு' ன்னு அவரே போட்டுவிட்டாரு.

அலைச்சல்ல நல்ல தூக்கம். காலையில எழுந்து பாத்தேன். கால்ல சுத்தமா வலியில்ல, வீக்கமும் இல்ல. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சி. துள்ளி துள்ளி குதிச்சேன். ஆமா எந்த வைத்தியத்துல எனக்கு சரியாச்சுன்னு யோசிச்சேன்.

'என்னா சரியாயிடுச்சா, இனிமே வீடு தங்க மாட்டான்' தாத்தா

'எல்லாம் அந்த மகமாயிதான் காரணம்' பாட்டி.

காலண்டர பாத்தா, ஞாயிற்று கிழமை, ஒரு வாரம் ஆயிடுச்சி. நாள் போனதே தெரியல. தூரத்துல அதே கோஷ்டி வீட்ட நோக்கி வந்துட்டிருந்தது.

உடனே பதறி, 'சித்தி நான் இல்லன்னு சொல்லிடுங்க' ன்னுட்டு வேகமா வீட்டுக்குள்ள ஓடினேன். கீழ தண்ணி கொட்டி இருந்தத கவனிக்காம சறுக்கி கீழ விழ பலமான அடி, அடுத்த கால்ல அதே மதிரி சுளுக்கிடுச்சி.

மொதல்லயாவது பரவாயில்ல விளையாடி, ஆனா இப்போ....,ஹலோ, ஏதாச்சும் வைத்தியம் தெரிஞ்சா சொல்லுங்களேன், ப்ளீஸ்...

மாற்றங்களுடன் கூடிய மீள் இடுகை...

8 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இதுதான் பட்ட கால்லே படும் என்பதா?

//ஏதாச்சும் வைத்தியம் தெரிஞ்சா சொல்லுங்களேன், ப்ளீஸ்...//

ஏதாவது ஹீலியம் தெரபி எடுத்து பாருங்களேன்,.. ஹி..ஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கரண்ட் பில் கட்டுனீங்களா இல்லியா?

//சுள்ளான் சூடானேன் சுளுக்கு எடுத்துடுவேன் //

வேண்ணா நம்ம தனுஷ போய் பாருங்களேன்.

சிங்கை வந்தாச்சா?. விசாக் எப்படி இருக்கார்?

சத்ரியன் said...

//'செய்யற வேலைய விட்டுட்டு செனை ஆட்டுக்கு...

கரன்ட் பில்ல கட்டிட்டு வாடான்னா, கால்ல கட்டிகிட்டு வந்திருக்கான்' தாத்தா.//

தாத்தா நல்லா வெவரமாத்தான் திட்டியிருக்காரு.

யாருகிட்ட டகால்ட்டி விடுற. மொத பால் சிக்ஸ்-ன்னு. ஒங்க ஆட்ட்ட்ட்ட்ட்டத்த பத்தி எங்களுக்கு தெரியாது.?

ஹேமா said...

வாசிச்ச எனக்கும்
உளுக்கிடிச்சு பிரபா !

மீள் பதிவானாலும் சுவாரஸ்யம்.
வீட்டில் பெரியவர்கள் இருப்பதே
ஒரு கலகலப்புத்தான்.

மங்குனி அமைச்சர் said...

ரொம்ப நல்லாருக்கு சார்

vasu balaji said...

திரும்ப சுளுக்கெடுக்கணும் போலிருக்கே:))

பனித்துளி சங்கர் said...
This comment has been removed by the author.
பனித்துளி சங்கர் said...

நல்ல இருக்கு நண்பரே . மீண்டும் பகிர்ந்தமைக்கு நன்றி

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB