சுளுக்கு - இறுதி பகுதி

|


நேரா ராமு காட்டுக்கு வண்டியை விட்டாரு.

நடவுக்கு ஓட்டி போட்டிருந்த வயல் பக்கத்துல நிப்பாட்டிட்டு,

'பிரபு, சுளுக்கின காலை சேத்தில நல்லா அழுத்தி ஊனு' ன்னாரு.

அப்போதான் எனக்கு அந்த விபரீதமே புரிஞ்சது.

தப்பிச்சி ஓடவும் சாரி நடக்க கூடமுடியல.

வலுக்கட்டாயமா என் காலை புடிச்சி சேத்துல அழுத்திட்டு,

'ம், பட்டுனு வெளியே இழு' ன்னாரு.

அசைச்சாவே வலிக்குது, எங்க இழுக்கறது?

ஆண்டவன் புண்ணியத்துல ஆள உட்டா போதும்னுட்டு எப்படியோ கஷ்டப்பட்டு வெளியே இழுத்தேன். அப்போ நினைச்ச்து என்னான்னா, 'என் எதிரிக்கும் இந்த நிலம வரக்கூடாது'

'நீ சொல்லறதயே கேட்க மாட்றே, பட்டுனு இழுத்தாத்தான் சரியாகும், சரி சரி, தண்ணியில கால கழுவிட்டு வரலம்னு தூரத்துல ஓடிக்கிட்டிருந்த மோட்டார் கொட்டாய காட்டினாரு.

இல்ல இல்ல வீட்டுக்கு போயி கழுவிக்கிறேன் மொதல்ல வண்டிய எடுங்கன்னேன்.

வேகமா கிளப்பினாரு, 'அண்ணா பாத்து மெதுவா'ன்னேன்.

'எவ்வளோ போதையில இருந்தாலும் செடியா இருப்பேன்' னாரு..

எதேதோ பேசிட்டு வீட்டுக்கு பக்கமா வரும்போது, ரொட்டோரமா ரோடு போட வெச்சிருந்த ஜல்லியில வண்டிய விட தடுமாறி கீழ விழுந்தோம்.

நல்ல வேலை நான் மணல்ல பேலன்ஸ் பண்ணி விழுந்தால அடி ஒன்னும் இல்ல. ஆனா அவரு மேல டி.வி.எஸ் கவுந்து, சைலன்ஸர்ல கால சுட்டு, காலும் நல்ல பெசகிடுச்சி. போத தெளிஞ்சி கத்த ஆரம்பிச்சிட்டாரு.

அப்புறம் விவரமா ஆஸ்பத்திரிதான் போனருங்கறது தனி கதை.

பாட்டி வெளிய போயிருந்த சமயத்துல நைசா சகாதேவன் வந்தான்.

'பிரபு எப்படி இருக்கே'ன்னான்.

'டேய் பாட்டி'ன்னேன்.

'அந்த கிழவி இப்போதான் அந்த பக்கம் போகுது, பாத்துட்டுதான் வரேர்ன்' அவன் கோவத்த தீத்துகிட்டான்.

'சரி சரி, ரெடியா இரு. அஞ்சரை வாக்கில சுருட்டை கிழவாடிகிட்ட போகனும், உடனே சரியாயிடும்'னு சொல்லிட்டு,

'பிரபு பாட்டி வருது'ன்னுட்டு எஸ்கேப் ஆயிட்டான்.

பக்கத்துல இருந்த மலையடிவரத்துக்கு கூட்டிட்டு போனான்.

95 வயசுக்கு மேல இருக்கும். முறுக்கேறிய உடம்பு. நிறைய சுருக்கம். அதிகம் பேசலை.

வாழை நார் கொண்டு வரச்சொன்னாரு.

உட்கார்ந்து காலை நீட்ட சொல்லி கால் விரலுக்கு கீழே குச்சியை வெச்சி, வாழை நார்ல விரலுக்கு குறுக்கே விட்டு நல்ல இறுக்கி கட்டினாரு. ரெண்டு பக்கமும் குச்சி கொஞ்சம் நீட்டிட்டு இருந்துச்சி.

புதுமையாவும் வலி இல்லாமலும் இருந்துச்சி, ஏன்னா அவர் வலிக்கிற இடத்தை டச் பண்ணவே இல்ல.

சைட்ல சகாதேவன் சின்ன கடப்பாரையில எதோ குழி நோண்டிட்டு இருந்தான்.

'தாத்தா போதுமா'ன்னான்.

கால்ல வெச்சு கட்டின மாதிரியே இன்னொரு குச்சியால ஆழம், பக்கவாடுலன்னு வெச்சி பாத்துட்டு சில கரெக்சன் சொன்னாரு.

அப்புறம் ஒரு துண்டை விரிச்சி அதுல குப்புற படுக்க சொல்லி, என் காலை அந்த குழிக்குள்ள திணிச்சி மண் போட்டு மூடி நல்ல தாணிச்சாங்க. இதுவும் ஒரு சேத்து டைப் வைத்தியம்னு புடிஞ்சிட்டேன்.

கடைசியா சின்னதா ஒரு துண்டை என் கால்ல கட்டி வெருக்குன்னு இழுத்தாங்க. வலி பயங்கரமா  இருந்தாலும், சேத்தளவுக்கு இல்ல.

உப்ப எண்ணையில போட்டு சூடாக்கி கட்ட சொன்னாரு. வெத்தல பாக்குக்கு காசு கொடுத்ததுக்கு கோபமா மறுத்துட்டாரு.

நைசா வீட்டுக்கு பின் பக்கமா வந்து விட்டுட்டு போயிட்டான். கொஞ்சம் நடக்க முடிஞ்சது.

கோயமுத்துர்ல இருது மாமா ஃபோன் பண்ணினாரு.எல்லா விஷயத்தையும் முன்னாடியே தெரிஞ்சிட்டுப்பார் போல.

'ஏன்டா, படிச்சவன் பண்றதாடா இது, ஹேர் பிரக்சரா இருக்க போகுது, எக்ஸ்-ரே எடுத்து பாரு, மொத வேலைய நாளைக்கு ஆஸ்பத்திரி போற வேலையை பாரு'ன்னாரு.

சரின்னு தலையட்டிட்டு, இன்னும் ஒரு நாள் எல்லா வைத்தியத்தையும் செஞ்சிட்டிருந்தேன்.

சாயங்காலம், மாமாவோட கடைக்கு மெதுவா போனேன்.

'என்ன பிரபு ஆளையே காணும்'னாரு.

எல்லாத்தையும் சொன்னேன். அட இதுதானா (இன்னொரு வைத்தியம் வரப்போவுது)

'இந்தா இந்த பிளாஸ்டர போடு'ன்னு அவரே போட்டுவிட்டாரு.

அலைச்சல்ல நல்ல தூக்கம். காலையில எழுந்து பாத்தேன். கால்ல சுத்தமா வலியில்ல, வீக்கமும் இல்ல. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சி. துள்ளி துள்ளி குதிச்சேன். ஆமா எந்த வைத்தியத்துல எனக்கு சரியாச்சுன்னு யோசிச்சேன்.

'என்னா சரியாயிடுச்சா, இனிமே வீடு தங்க மாட்டான்' தாத்தா

'எல்லாம் அந்த மகமாயிதான் காரணம்' பாட்டி.

காலண்டர பாத்தா, ஞாயிற்று கிழமை, ஒரு வாரம் ஆயிடுச்சி. நாள் போனதே தெரியல.

தூரத்துல அதே கோஷ்டி வீட்ட நோக்கி வந்துட்டிருந்தது.

உடனே பதறி, 'சித்தி நான் இல்லன்னு சொல்லிடுங்க'ன்னுட்டு வேகமா வீட்டுக்குள்ள ஓடினேன். கீழ தண்ணி கொட்டி இருந்தத கவனிக்காம சறுக்கி கீழ விழுந்துட்டேன். பலமான அடி, அடுத்த கால்ல அதே மதிரி சுளுக்கிடுச்சி.

மொதல்லயாவது பரவாயில்ல விளையடி, ஆனா இப்போ....,

ஹலோ, எதாச்சும் வைத்தியம் தெரிஞ்சா சொல்லுங்களேன், ப்ளீஸ்...

2 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

வாழவந்தான் said...

பட்ட காலில்தான படும்னு சொல்லுவாங்க உங்களுக்கு வேற காலுல பட்டிருக்கு

பிரபாகர் said...

//பட்ட காலில்தான படும்னு சொல்லுவாங்க உங்களுக்கு வேற காலுல பட்டிருக்கு//

அருமையான Comment..

ஏற்கனவே ரொம்ப நீளம்னு வைத்தய முறைகள் நிறைய விட்டு போச்சு. ஆனால் கிராமத்தில் இன்னமும் இந்த முறைகளை தொடர்கிறார்கள்...

பிரபாகர்.

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB